இந்திய நாட்டுப்பற்று -பகுதி 2: ஆரம்பகாலத்தில் நாட்டுப்பற்றின் வளர்ச்சி, நாட்டுப்பற்று குறித்து பல அறிஞர்களின் விளக்கம், பரிணாம வளர்ச்சி மற்றும் பண்பாடு அடிப்படையில் நாட்டுப்பற்றின் வகைகள்

 நாட்டுப்பற்று மற்றும் அதன் வகைகள்

             நாட்டுப்பற்று தோன்றியது  பற்றியும், நாடு, நாட்டினம், நாட்டுணர்வு ஆகியவை பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்துக்கொண்டோம்.

பொருளடக்கம் 

    • நாட்டுப்பற்று
    • நாட்டுப்பற்று -விளக்கம்
    • நாட்டுப்பற்றின் வகைகள்                 

நாட்டுப்பற்று:

        நாடு, நாட்டினம், நாட்டுணர்வு, நாட்டுப்பற்று போன்றவை ஒன்றோடொன்று பிரிக்க முடியாதன, நெருங்கியத் தொடர்புடையது. ஒன்றின் வளர்ச்சி மற்றொன்றின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. நாட்டுப்பற்று என்பது நவீன உலகத்தில் ஊக்கப்படுத்தும் காரணிகளில் தலைச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.  பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பாவில் ஆரம்ப வளர்ச்சியைப் பெற்றது. பதினெட்டாம் நூற்றாண்டில் வேகமாகவும், தீவிரமாகவும் மற்ற ஐந்து கண்டங்களிலும் பரவியது. இருபதாம் நூற்றாண்டில் ஆசியாவில் தீவிர விளைவை ஏற்படுத்தியது(1).


         பிரெஞ்சு புரட்சி 

           நாட்டுப்பற்று என்பது தற்காலத்தைச் சார்ந்த ஒரு சமுதாய இயக்கமாகும்.  இதன் தோற்றம் முதன்முதலில் பிரெஞ்சுப் புரட்சியுடன்  பிணைந்தது.  பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாம்பகுதி முதல் இதன் தோற்றத்தை மதிப்பிட முடிகிறது. ஆனாலும், நாட்டுப்பற்றின் வேர்கள் உலக வரலாற்றில் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகின்றன என்பது உண்மைதான். தாய்நாட்டின் அரசுதான் எங்கள் குறிக்கோள். அரசியல் அமைப்பிலும் சட்டதிட்டமான வடிவத்திலும் ஒருமித்த கருத்துறுதிகொள்வதுதான் நாட்டுப்பற்று என்று ஹேன்ஸ் கோன்(2) கூறியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பே தோன்றிய அமெரிக்க சுதந்திரப்போர் நாட்டுப்பற்றின் வளர்ச்சியால் ஏற்பட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது. நாட்டுப்பற்று என்ற கொள்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவில் வளர்ச்சியடைத் தொடங்கியது என்ற கருத்தும் சிலரிடையே நிலவி வருகிறது(3). நாட்டுப்பற்று தெளிவானதும், தூண்டக்கூடியதுமான இயக்கமாக நவீன உலகத்தில் இருக்கிறது(4). நாட்டுப்பற்றின் தோற்றம் குறித்து பலரிடையே பல கருத்துக்கள் நிலவியபோதிலும் இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சி இயக்கம் நாட்டுப்பற்று வளர்ச்சியடைவதற்கான அடிப்படை என்றும் கூறமுடியும். காலப்போக்கில் ஏற்பட்ட புரட்சிப் போக்குகளால் இருபதாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் வளர்ச்சிபெறத் தொடங்கியது.

நாட்டுப்பற்று -விளக்கம்:

         நாட்டுப்பற்று குறித்து பல்வேறு அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளனர். நாட்டின் மேல்கொள்ளும் பக்தியே நாட்டுப்பற்று(5), இன்றைய உலகில் அது பெருஞ்சக்தியாக விளங்கி வருகிறது(6), இதைவிட நெருக்கமான அன்பு வேறில்லை என்று பிளாட்டோ கூறுகிறார். ஆண்டவர்க்கு உரிய என் கடமைக்கு அடுத்தபடியாக என் தாயகத்திற்குரிய அன்பும் மரியாதையும் முதன்மையானவை என்று பி.தௌ என்பவர் நாட்டுப்பற்று குறித்து விளக்கம் தந்துள்ளார்(7).

  நாட்டுப்பற்று சமயம் போன்றது; புனிதமானது; சமயங்கள் காலந்தோறும் சிற்சில மாற்றங்கள் பெற்றே வளர்கின்றன.  நாட்டுப்பற்று ஒன்றே என்றும் மாறாத சமயமாக விளங்குகிறது(8). நாட்டுப்பற்று ஒரு மதம் போன்றது. அது கடவுளிடமிருந்து வந்தது, அதற்கு அழிவு இல்லை(9). தெய்வபக்திக்கும், ராஜபக்திக்கும் அடிப்படையாக இருப்பது நாட்டுப்பற்று, அது உயிர்களிடத்து அன்பு செலுத்துவதாகும். உயிர்களிடத்து அன்பு செலுத்துவது கடவுளிடத்து அன்பு செலுத்துவதாகும்(10). சமயங்களும், மதங்களும் சூழ்நிலைக்கு ஏற்பட மாறுபடும் தன்மை உடையது. ஆனால் நாட்டுப்பற்று எச்சூழ்நிலையிலும் மாறுபடாதத் தன்மையுடையது என்ற உண்மை தெளிவாகிறது. அது மக்களிடமிருந்து எப்போதும் பிரிக்கமுடியாத ஒன்றாக அமைகிறது.

  நாட்டுப்பற்று நுட்பமான ஓர் உள்ளுணர்வு. அதை இதுதான் என்று சுட்டி உணர்த்த சொற்களுக்கு ஆற்றல் இல்லை. அது மனதில் ஏற்படும் ஓர் அனுபவம்(11). அது பல்வேறு தொழில்களையும், வகுப்புகளையும் உடைய ஒரு கூட்டத்தைச் சேர்ந்த மக்கள், நாகரிகத்தில் தாங்கள் இதர தேசத்தில் வாழும் மக்களுக்கு வேறுபட்டவர்கள் என்றும், தாங்கள் ஒரு தனிப்பட்ட இனத்தினர் என்றும், தங்களது நாகரிகத்தையும் இனத்தையும் பாதுகாக்க எத்தகைய தியாகமும் செய்வோம் என்றும்கொள்ளும் உணர்ச்சியே நாட்டுப்பற்றாகும்(12).  அவ்வுணர்ச்சி தான் பிறந்து வளர்ந்த ஊர். அது இடம் பெற்றுள்ள மாவட்டம், அம்மாவட்டம் நிலைப்பெற்றுள்ள மாநிலம், அம்மாநிலம் இருக்கும் நாடு என்ற விரிந்த முறையில் வெளிப்படுவது நாட்டுப்பற்றாகும்(13).


பாரதியார் 
          

             நாட்டின் மீது கொள்ளும் அன்பு நற்றவத்தால் கிடைக்கும் வானுலகத்தை விடச் சிறந்தது என்று பாரதியாரும்(14), அத்தகைய அன்பு இல்லாதவன் உலகில் எந்நாட்டவன் ஆயினும் இழிந்தவன் என்று பாரதிதாசனும்(15) நாட்டுப்பற்றின் தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

  மேற்கூறிய சான்றுகளலிருந்து நாட்டுப்பற்று என்பது இடம், இனம், தொழில், சமயம், மதம், நாகரிகம், பண்பாடு, மொழி முதலியவற்றின் அடிப்படையில் தோன்றுவதாகும் என்ற உண்மை தெளிவாகிறது.

  மனித உரிமைகள் பறிக்கப்படும் போதும், இழந்த உரிமையைப் பெற நினைக்கும்போதும், மக்கள் மீது தேவையற்ற சட்டங்களையும் தடைகளையும் தண்டனைகளையும் விதிக்கும்போதும், சமய கலாச்சார பொருளாதார சமூகப் பண்பாடுகள் பாதிக்கப்படும்போதும் அடிமை நிலையிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வு தோன்றும்போதும் சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் மனத்தில் பொங்கியெழும் ஓர் உயர்ந்த சக்தியே நாட்டுப்பற்றாகும். அத்தகைய சக்தி பெற்ற மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் தன் உடல், பொருள், உயிர் அனைத்தையும் துறக்கத் தயாராக இருப்பார்கள். அத்தகைய நாட்டுப்பற்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காளப் பிரிவினையின்போது இந்தியாவில் வளர்ச்சியடையத் தொடங்கியது என்று கூறமுடியும்.

நாட்டுப்பற்றின் வகைகள்:

  நாட்டுப்பற்று பல்வேறு காரணங்களால் மக்களிடையே வெளிப்படுகிறது.  அக்காரணங்களின் அடிப்படையில் அது பாகுபாடு செய்யப்படுகிறது.  அடிமையிலுள்ள மக்கள் விடுதலை பெறுவதற்கு தோன்றுகின்ற சக்தி மட்டுமே நாட்டுப்பற்று என்று கூறமுடியாது. சமயம், மதம், இனம், மொழி, நாடு, பொருளாதாரம், சமுதாயப் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், பூகோளம் அமைப்பு போன்றவற்றால் ஏற்படும் சிக்கல்களாலும், ஏற்றத்தாழ்வுகளாலும் அதை பூர்த்தி செய்யும் வகையில் மக்களிடத்தில் அவ்வப்போது தோன்றும் சக்திகளையும் நாட்டுப்பற்றாகக் கருதலாம். அவ்வாறு தோன்றும் சக்தியை அது தோன்றும் சூழ்நிலைக்கேற்ப அறிஞர்கள் பலவகையாகப் பாகுபடுத்தி உள்ளனர். 1.பூகோள வழி அமைந்த தன் நாட்டின் இயற்கை வளங்களான ஆறு, மலை, கடல், நிலம், நாடு, நகரம் முதலியவற்றின் பால் கொள்ளும் எல்லையில்லா அன்பு. 2.தன் நாட்டின் அரசன் முதல் ஆண்டி வரையுள்ள பலதரப்பட்ட மக்களின் வாழ்வு, வரலாறு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் கொள்ளும் களிவெறி. 3.தன் இனத்திற்கே உரிய அரசியல் சமூகப் பொருளாதாரச் சமய பண்பாடுகள் பற்றி கொள்ளுகின்ற பெருங்காதல் என மூன்று வகையாகப் பிரித்துக் காட்டுகிறார் சஞ்சீவி(16). வரலாற்று அடிப்படையில் தோன்றிய பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் ஹெய்ஸ் என்பவர், 1.அன்பு வழிப்பட்ட நாட்டுப்பற்று (Humanitarian Nationalism), 2.ஜேகோபின் நாட்டுப்பற்று (Jacobin Nationalism), 3.தலைமுறைத் தத்துவ வழிப்பட்ட நாட்டுப்பற்று (Traditional Nationalism), 4.தாராள மனப்பான்மையுள்ள நாட்டுப்பற்று (Liberal Nationalism), 5.பூரண நாட்டுப்பற்று (Integral Nationalism) என ஐந்தாகப் பாகுபடுத்தியுள்ளார்(17). நவீன மக்களின் நாகரிகப் பண்பாடு அடிப்படையில், 1.பண்பாட்டியல் நாட்டுப்பற்று (Cultural Nationalism), 2.தெய்வீக நாட்டுப்பற்று (Spiritual Nationalism), 3.பொருளியல் நாட்டுப்பற்று (Economical Nationalism), 4.அரசியல் நாட்டுப்பற்று (Political Nationalism) என நான்காகப் பாகுபடுத்திக் காட்டுகிறார் கனகசபாபதி(18). நாட்டுப்பற்று எந்தெந்த காரணங்களால் எந்தெந்த சூழ்நிலையில் மக்களிடையே தோன்றுகிறதோ அதன் அடிப்படையில் பாகுபாடு பல செய்துள்ளனர் என்பது புலனாகிறது. 

          
          இந்தியாவில் பல்வேறு காரணங்களால் பல்வேறு விதமான நாட்டுப்பற்று தோன்றியிருக்கிறது. எனினும் அடிமையிலிருந்து விடுபடவேண்டும் என்று இந்தியர்களிடையே ஏற்பட்ட நாட்டுப்பற்றின் தன்மையை மட்டும் இங்கு இனி வரும் அடுத்தடுத்த வலைப்பதிவில் ஆராய்வோம்.
நன்றி !         
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்

அடிக்குறிப்புகள் 

1.J.Kennedy, Asian Nationalism in the twentieth century,P.3.
          Nationalism has been one of the great motivating factors of the modern world.Yet it defies any precise definitions.
           Its earlier developments may be traced in Western Europe from the sixteenth centuries.On words and especially from the late eighteenth century subsequently some times quickly through the continents of the world.It has been immensely significant in twentieth century Asia.
3.Elikedourie, Nationalism,P.9.
          "Nationalism is a Doctrine invented in Europe of the beginning of the Nineteenth century".  
4.Carlton J.H.Hayes, Nationalism:A Religion,P.1.
          "Nationalism is an obvious and impelling movement in the modern and contemporary world.It is so obvious,in deed and so frequently mentioned in the news,that it is apt to be taken for granted like the rising and setting at the sun and it's importance other looked ".
5.Jean L.Mekechine,(Pubs) Webster's New Twentieth Century Dictionary of English Language,P.1196.
"Nationalism (n) Devotion to one's nation patriotism".  
8.John Drinkwater, Patriotism in literature.மா.இராமலிங்கம்,(மொ.பெ.ஆ.) விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள், ப.113.
9.Mahajan,The Nationalist Movement in India,P.191.
" Nationalism is a religion,that has come from and......
Nationalism is a not going to be crushed it cannot die because
...........God cannot to be killed.God cannot be sent to goal".
10.திரு.வி. கல்யாணசுந்தரம், தேசபக்தாமிர்தம், ப.6, தேசபக்தர், 7.12.1917.
11.அரங்கசீனிவாசன், சங்க நூல்களில் தேசியம், பக்.9-10.
12.பொன்னுசாமிப்பிள்ளை, தேசீய வளர்ச்சி, ப.3-4.
14.ரா.அ. பத்மனாபன், (ப.ஆ), பாரதி புதையல்-I, ப.12.
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனலே”
“தன் நாட்டைத் தாய் பெறான் உலகில் எந்நாட்டானாயினும் இழிந்தவன்”

Sponsorship 


This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal

கருத்துரையிடுக

0 கருத்துகள்