நாட்டுப்பற்று மற்றும் அதன் வகைகள்
நாட்டுப்பற்று தோன்றியது பற்றியும், நாடு, நாட்டினம், நாட்டுணர்வு ஆகியவை பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்துக்கொண்டோம்.
பொருளடக்கம்
- நாட்டுப்பற்று
- நாட்டுப்பற்று -விளக்கம்
- நாட்டுப்பற்றின் வகைகள்
நாட்டுப்பற்று:
நாடு, நாட்டினம், நாட்டுணர்வு, நாட்டுப்பற்று போன்றவை ஒன்றோடொன்று பிரிக்க முடியாதன, நெருங்கியத் தொடர்புடையது. ஒன்றின் வளர்ச்சி மற்றொன்றின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. நாட்டுப்பற்று என்பது நவீன உலகத்தில் ஊக்கப்படுத்தும் காரணிகளில் தலைச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பாவில் ஆரம்ப வளர்ச்சியைப் பெற்றது. பதினெட்டாம் நூற்றாண்டில் வேகமாகவும், தீவிரமாகவும் மற்ற ஐந்து கண்டங்களிலும் பரவியது. இருபதாம் நூற்றாண்டில் ஆசியாவில் தீவிர விளைவை ஏற்படுத்தியது(1).
நாட்டுப்பற்று -விளக்கம்:
நாட்டுப்பற்று குறித்து பல்வேறு அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளனர். நாட்டின் மேல்கொள்ளும் பக்தியே நாட்டுப்பற்று(5), இன்றைய உலகில் அது பெருஞ்சக்தியாக விளங்கி வருகிறது(6), இதைவிட நெருக்கமான அன்பு வேறில்லை என்று பிளாட்டோ கூறுகிறார். ஆண்டவர்க்கு உரிய என் கடமைக்கு அடுத்தபடியாக என் தாயகத்திற்குரிய அன்பும் மரியாதையும் முதன்மையானவை என்று பி.தௌ என்பவர் நாட்டுப்பற்று குறித்து விளக்கம் தந்துள்ளார்(7).
நாட்டுப்பற்று சமயம் போன்றது; புனிதமானது; சமயங்கள் காலந்தோறும் சிற்சில மாற்றங்கள் பெற்றே வளர்கின்றன. நாட்டுப்பற்று ஒன்றே என்றும் மாறாத சமயமாக விளங்குகிறது(8). நாட்டுப்பற்று ஒரு மதம் போன்றது. அது கடவுளிடமிருந்து வந்தது, அதற்கு அழிவு இல்லை(9). தெய்வபக்திக்கும், ராஜபக்திக்கும் அடிப்படையாக இருப்பது நாட்டுப்பற்று, அது உயிர்களிடத்து அன்பு செலுத்துவதாகும். உயிர்களிடத்து அன்பு செலுத்துவது கடவுளிடத்து அன்பு செலுத்துவதாகும்(10). சமயங்களும், மதங்களும் சூழ்நிலைக்கு ஏற்பட மாறுபடும் தன்மை உடையது. ஆனால் நாட்டுப்பற்று எச்சூழ்நிலையிலும் மாறுபடாதத் தன்மையுடையது என்ற உண்மை தெளிவாகிறது. அது மக்களிடமிருந்து எப்போதும் பிரிக்கமுடியாத ஒன்றாக அமைகிறது.
நாட்டுப்பற்று நுட்பமான ஓர் உள்ளுணர்வு. அதை இதுதான் என்று சுட்டி உணர்த்த சொற்களுக்கு ஆற்றல் இல்லை. அது மனதில் ஏற்படும் ஓர் அனுபவம்(11). அது பல்வேறு தொழில்களையும், வகுப்புகளையும் உடைய ஒரு கூட்டத்தைச் சேர்ந்த மக்கள், நாகரிகத்தில் தாங்கள் இதர தேசத்தில் வாழும் மக்களுக்கு வேறுபட்டவர்கள் என்றும், தாங்கள் ஒரு தனிப்பட்ட இனத்தினர் என்றும், தங்களது நாகரிகத்தையும் இனத்தையும் பாதுகாக்க எத்தகைய தியாகமும் செய்வோம் என்றும்கொள்ளும் உணர்ச்சியே நாட்டுப்பற்றாகும்(12). அவ்வுணர்ச்சி தான் பிறந்து வளர்ந்த ஊர். அது இடம் பெற்றுள்ள மாவட்டம், அம்மாவட்டம் நிலைப்பெற்றுள்ள மாநிலம், அம்மாநிலம் இருக்கும் நாடு என்ற விரிந்த முறையில் வெளிப்படுவது நாட்டுப்பற்றாகும்(13).
மேற்கூறிய சான்றுகளலிருந்து நாட்டுப்பற்று என்பது இடம், இனம், தொழில், சமயம், மதம், நாகரிகம், பண்பாடு, மொழி முதலியவற்றின் அடிப்படையில் தோன்றுவதாகும் என்ற உண்மை தெளிவாகிறது.
மனித உரிமைகள் பறிக்கப்படும் போதும், இழந்த உரிமையைப் பெற நினைக்கும்போதும், மக்கள் மீது தேவையற்ற சட்டங்களையும் தடைகளையும் தண்டனைகளையும் விதிக்கும்போதும், சமய கலாச்சார பொருளாதார சமூகப் பண்பாடுகள் பாதிக்கப்படும்போதும் அடிமை நிலையிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வு தோன்றும்போதும் சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் மனத்தில் பொங்கியெழும் ஓர் உயர்ந்த சக்தியே நாட்டுப்பற்றாகும். அத்தகைய சக்தி பெற்ற மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் தன் உடல், பொருள், உயிர் அனைத்தையும் துறக்கத் தயாராக இருப்பார்கள். அத்தகைய நாட்டுப்பற்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காளப் பிரிவினையின்போது இந்தியாவில் வளர்ச்சியடையத் தொடங்கியது என்று கூறமுடியும்.
நாட்டுப்பற்றின் வகைகள்:
நாட்டுப்பற்று பல்வேறு காரணங்களால் மக்களிடையே வெளிப்படுகிறது. அக்காரணங்களின் அடிப்படையில் அது பாகுபாடு செய்யப்படுகிறது. அடிமையிலுள்ள மக்கள் விடுதலை பெறுவதற்கு தோன்றுகின்ற சக்தி மட்டுமே நாட்டுப்பற்று என்று கூறமுடியாது. சமயம், மதம், இனம், மொழி, நாடு, பொருளாதாரம், சமுதாயப் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், பூகோளம் அமைப்பு போன்றவற்றால் ஏற்படும் சிக்கல்களாலும், ஏற்றத்தாழ்வுகளாலும் அதை பூர்த்தி செய்யும் வகையில் மக்களிடத்தில் அவ்வப்போது தோன்றும் சக்திகளையும் நாட்டுப்பற்றாகக் கருதலாம். அவ்வாறு தோன்றும் சக்தியை அது தோன்றும் சூழ்நிலைக்கேற்ப அறிஞர்கள் பலவகையாகப் பாகுபடுத்தி உள்ளனர். 1.பூகோள வழி அமைந்த தன் நாட்டின் இயற்கை வளங்களான ஆறு, மலை, கடல், நிலம், நாடு, நகரம் முதலியவற்றின் பால் கொள்ளும் எல்லையில்லா அன்பு. 2.தன் நாட்டின் அரசன் முதல் ஆண்டி வரையுள்ள பலதரப்பட்ட மக்களின் வாழ்வு, வரலாறு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் கொள்ளும் களிவெறி. 3.தன் இனத்திற்கே உரிய அரசியல் சமூகப் பொருளாதாரச் சமய பண்பாடுகள் பற்றி கொள்ளுகின்ற பெருங்காதல் என மூன்று வகையாகப் பிரித்துக் காட்டுகிறார் சஞ்சீவி(16). வரலாற்று அடிப்படையில் தோன்றிய பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் ஹெய்ஸ் என்பவர், 1.அன்பு வழிப்பட்ட நாட்டுப்பற்று (Humanitarian Nationalism), 2.ஜேகோபின் நாட்டுப்பற்று (Jacobin Nationalism), 3.தலைமுறைத் தத்துவ வழிப்பட்ட நாட்டுப்பற்று (Traditional Nationalism), 4.தாராள மனப்பான்மையுள்ள நாட்டுப்பற்று (Liberal Nationalism), 5.பூரண நாட்டுப்பற்று (Integral Nationalism) என ஐந்தாகப் பாகுபடுத்தியுள்ளார்(17). நவீன மக்களின் நாகரிகப் பண்பாடு அடிப்படையில், 1.பண்பாட்டியல் நாட்டுப்பற்று (Cultural Nationalism), 2.தெய்வீக நாட்டுப்பற்று (Spiritual Nationalism), 3.பொருளியல் நாட்டுப்பற்று (Economical Nationalism), 4.அரசியல் நாட்டுப்பற்று (Political Nationalism) என நான்காகப் பாகுபடுத்திக் காட்டுகிறார் கனகசபாபதி(18). நாட்டுப்பற்று எந்தெந்த காரணங்களால் எந்தெந்த சூழ்நிலையில் மக்களிடையே தோன்றுகிறதோ அதன் அடிப்படையில் பாகுபாடு பல செய்துள்ளனர் என்பது புலனாகிறது.This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal
0 கருத்துகள்