உலகில் தோன்றிய விடுதலைப் போர்களே இந்திய நாட்டுப்பற்றுக்கு அடிப்படை
நாட்டுப்பற்று என்றால் என்ன என்பது பற்றியும், நாட்டுப்பற்றினைக் குறித்து பல்வேறு அறிஞர்கள் கூறிய விளக்கத்தைப் பற்றியும், பரிணாம வளர்ச்சி மற்றும் பண்பாடு அடிப்படையில் நாட்டுப்பற்றின் வகைகள் பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்துக்கொண்டோம்.
பொருளடக்கம்
- உலகில் தோன்றிய விடுதலைப் போர்கள்
- அமெரிக்காவில் புரட்சி
- பிரெஞ்சில் புரட்சி
- இந்திய நாட்டுப்பற்றின் தோற்றம்
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி
- பிளாசிப்போர்
உலகில் தோன்றிய விடுதலைப் போர்கள்:
18-ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் நாட்டுப்பற்று தோன்றவதற்குப் பல நிகழ்ச்சிகள் காரணிகளாக இருந்தன. அந்நிகழ்ச்சிகளுள் முதன்மையான இடம் பெறத்தக்கது உலகநாடுகளில் நடந்த விடுதலைப் போர்களாகும். இப்போர்கள் இந்தியாவில் நாட்டுப்பற்று வளர்ச்சியடைவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளதைப் பின்வரும் சான்றுகள் தெளிவாக்குகின்றன.
உலகில் தோன்றிய புரட்சிகளும் இயக்கங்களும் இந்தியா சுயாட்சி பெறுவதற்குரிய தகுதியை உண்டாக்கின என்று அன்னிபெசண்ட் கூறுகிறார்(1). இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் இந்திய நாட்டுப்பற்று வளர்ச்சியடைவதற்கு உலக நிகழ்ச்சிகள் தூண்டுதலாக இருந்தன என்று நாகேந்திர மோகன் ஸ்ரீவாஸ்ட்டவா கூறியிருக்கிறார்(2). இந்தியாவிற்கு வெளியில் இயங்கி வரும் சுதந்திரப் போர்களினால் இந்திய நாட்டுப்பற்று வளர்ச்சியடைந்து வருகிறது என்று வீரசவார்க்கரும்(3), கே.கே.சர்மாவும்(4) வெளிப்படுத்தியுள்ளனர். இக்கருத்துக்களைக் கூறியுள்ளவர்கள் விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை சென்றவர்களாவர். எனவே, உலக நாடுகளின் விடுதலைப் போர் நிகழ்ச்சிகள் இந்திய விடுதலைப் போருக்குத் தூண்டுதலாக இருந்த உயர்ந்த சக்தி என்பது தெளிவாகிறது.
உலக நாடுகளில் தோன்றிய விடுதலைப் போர் நிகழ்ச்சிகளின் தாக்கம் இந்திய விடுதலைப் போரில் இடம் பெற்றிருக்கின்றன. அமெரிக்காவின் விடுதலைப் போர் நிகழ்ச்சிகளும், மற்ற நிகழ்ச்சிகளும் இந்தியாவில் விடுதலைப்போர் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தனவென்று திவாகர் பிரசாத்சிங்கும்(5), கே.ஒப்பும்(6) கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் புரட்சி:
1767-இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட சார்லஸ் டவுன்ஷென்ட் சட்டத்தை எதிர்த்து அமெரிக்க மக்கள் செய்த புரட்சியால் ‘பாஸ்டன் படுகொலை’ நிகழ்ந்தது.இந்திய மக்கள் 1917-இல் வெளியான ரௌலட் சட்டத்தை எதிர்ப்பதற்கும், அதனால் ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ தோன்றுவதற்கும் அமெரிக்கப் போரே அடிப்படை என்றும் கருத முடிகிறது.
அமெரிக்காவில் 1776-இல் வெளியிடப்பட்ட விடுதலை அறிக்கை [Declaration of Independence(6அ)] இந்தியாவில் 1929-இல் நேரு வெளியிட்ட ‘பூரண சுதந்திர அறிக்கைக்கு’ ஆதாரமாக இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.
பிரெஞ்சில் புரட்சி :
1789-இல் பிரெஞ்சு மக்கள் முடியாட்சியை எதிர்க்க நிறுவிய தேசியப் பேரவையும் (National Assembly) 1831-ல் மாஜினியால் ஏற்படுத்தப்பட்ட ‘யங் இத்தாலி (Young Italy) என்ற சங்கமும், 1885-இல் இந்தியாவில் தோன்றிய ‘இந்திய தேசிய காங்கிரசுக்கு’ (Indian National Congress) அடிப்படை என்றும் கருத முடிகிறது.
1789-இல் பிரெஞ்சில் ஏற்பட்ட பாஸ்டில் சிறைச்சாலைப் புரட்சி(6ஆ), இந்தியாவில் 1806-இல் வேலூரில் நடந்த சிப்பாய்க் கலகத்திற்கும், 1857-இல் நடந்த சிப்பாய்க் கலகத்திற்கும் தூண்டுதலாக இருந்தது என்றும் கருத முடிகிறது. 1848-இல் இத்தாலியில் கரிபால்டியால் ஏற்படுத்தப்பட்ட ‘செஞ்சட்டை வீரர்ப்படை’, செம்பகராமன் ஜெர்மனியில் 1915-இல் அமைத்த ‘இந்திய தேசிய தொண்டர்ப் படைக்கும் (I.N.V CO) சுபாஷ் சந்திரபோஷ் 1942-இல் அமைத்த ‘இந்திய தேசிய படைக்கும் (I.N.A.) அடிப்படை என்று கருத முடியும்.
இத்தாலிய விடுதலை வீரரான கரிபால்டியின்,
“இத்தாலியை விட்டுப் போய்விடு
தாயகத்தை விட்டுப் போய்விடு
ஓ! அயலவனே போய்விடு”
என்ற வீர உரையே இந்தியாவில் 1906-இல் வ.உ.சி.யால் முழங்கப்பட்ட ‘வெள்ளையனே உன் கப்பல்களுடன் வெளியே போ’ என்ற வீர உரைக்கும், 1942-இல் காந்தியடிகளால் வெளியிடப்பட்ட ‘வெள்ளையனே வெளியே போ’ என்ற போர்முறை தோன்றுவதற்கும் சாதகமாக இருந்தது எனலாம்.
மேற்கூறிய சான்றுகளிலிருந்து உலக விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளை நன்கு அறிந்த இந்திய தேசபக்தர்கள் அதன் வழியைப் பின்பற்றியே இந்தியாவில் விடுதலைப் போராட்டம் நடத்தினர் என்று ஊகிக்க முடிகிறது. எனவே இந்தியாவில் நாட்டுப்பற்று வளர்ச்சியடைய உலக நிகழ்ச்சிகள் அடித்தளமாக அமைந்தன எனக் கருத முடிகிறது. இந்தியாவில் நடந்த மற்ற நிகழ்ச்சிகளும் நாட்டுப்பற்று தோன்றுவதற்கு காரணிகளாகச் செயல்பட்டன என்றும் ஊகிக்க முடிகிறது.
இந்திய நாட்டுப்பற்றின் தோற்றம்:
இந்தியாவில் பதினாறாம் நூற்றாண்டில் பல சிற்றரசுகள் இருந்தன. அவ்வரசுகள் எவ்வாறு ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்குச் சென்றது என்பதையும், அவ்வாதிக்கத்தை எதிர்த்து இந்தியர்களிடையே ஏற்பட்ட நாட்டுப்பற்றையும் இப்பகுதியில் சுருக்கமாகக் காண்போம்.
1498-ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டு வாஸ்கோடகாமா கடல் வழியாக முதன் முதலில் இந்தியாவை அடைந்தார். அதனைத் தொடர்ந்து கி.பி.1500-இல் போர்ச்சுக்களும், 1600-இல் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியும், 1602-இல் டச்சுக் கம்பெனியும், 1664-இல் பிரெஞ்சுக் கம்பெனியும் வாணிகம் செய்யும் நோக்குடன் இந்தியாவை வந்தடைந்தன. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆற்றலால் மற்ற கம்பெனிகள் ஒடுக்கப்பட்டன. இக்கம்பெனி மட்டும் இந்தியாவில் நிலைபெற்று வாணிகம் செய்யத் தொடங்கியது.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி:
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1757-க்கு முன்பு வாணிகம் செய்யும் நோக்கத்துடனேயே இந்தியாவிற்கு வந்தது(7). ஆரம்பத்தில் சென்னை, பம்பாய், கல்கத்தா போன்ற இடங்களில் தலைமைப்பீடத்தை வைத்துக்கொண்டு நாட்டின் நிலையை நன்கு கவனித்து வந்தது. ஆரம்பத்தில் நட்புமுறையில் பழகி இந்தியர்களின் அறியாமையைக் கண்டுணர்ந்து படிப்படியாக இந்தியாவைக் கைப்பற்ற எண்ணியது(7அ). ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மீது ஆதிக்கம்; செய்யும் வாய்ப்பை நாமே கொடுத்தோம்(8) என்று காந்தியடிகள் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறுவதற்கு பின்வரும் கருத்துக்கள் காரணங்களாக அமைகின்றன. வாணிகம் செய்ய வந்த கம்பெனிகளிடையே ஏற்பட்ட போரைக் கட்டுப்படுத்தாதநிலை, இந்தியா சுமார் 500-க்கு மேற்பட்ட சிறுசிறு இராஜ்ஜியங்களாகப் பிரித்தாளப்பட்ட நிலை, சிற்றரசர்களிடையே ஏற்பட்ட மோதல்கள், இந்தியர்களிடையே இருந்த சாதி வேறுபாடு, தீண்டாமை, மூடப்பழக்கவழக்கங்கள், கல்வியறிவின்மை, தொழில்வளர்ச்சியின்மை போன்றவை இந்தியா அடிமை நிலையை அடைவதற்கு முக்கிய காரணங்களாகும். இந்தியாவின் இச்சூழலை நன்குணர்ந்த இராபர்ட் கிளைவ் இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைக் காண சூழ்ச்சிப் போர்களைத் தொடங்கினார். அவற்றுள் ஒன்று ஆர்க்காட்டுப் போர், மற்றொன்று பிளாசிப்போர். இவ்விரு போர்களுமே இந்தியாவில் முதன்முதலில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் தோன்றுவதற்கு அடிப்படைகளாக இருந்தன(9). இப்போர்கள் இந்தியர்களின் வலிமையின்மையை வெளிப்படுத்திக் காட்டியதால் ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியா முழுவதையும் போரினால் அடிமைப்படுத்தினர்.
பிளாசிப்போர்:
இந்தியா படிப்படியாக ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் அடிமையாகிக் கொண்டிருக்கும் போதே, அவ்வடிமை நிலையை அகற்றவேண்டும் என்ற நாட்டுப்பற்று இந்தியர்களிடையே வெளிப்படத் தொடங்கியது. இந்தியாவில் நாட்டுப்பற்று தோன்றுவதற்கு 1757-இல் நடந்த பிளாசிப்போர் அடிப்படையாக அமைந்தது. ஏனென்றால், எங்கே முதன்முதலில் உரிமையை இழந்து அடிமையாக வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதோ அங்கே தான் நாட்டுப்பற்றும் தோன்றும். இக்கருத்துக்கு ஆதாரமாக 1757-ஆம் ஆண்டு நடந்த பிளாசிப் போரிலே இந்தியா இந்தியருக்கா அல்லது ஆங்கிலேயருக்கா? என்ற கேள்வி போர்களத்திலேயே வாள்முனையில் விவாதிக்கப்பட்டது. உண்மையில் அன்றே முதலாவது சுதந்திர யுத்தத்திற்கு விதை விதைத்தாகி விட்டது(10) என்ற சவார்க்கரின் கருத்தைச் சொல்லலாம். இந்தியாவில் நாட்டுப்பற்று தோன்றுவதற்கு இந்தியத் தரகு முதலாளித்துவம் மேற்கொண்ட சூழ்ச்சியும் காரணம் என்கிறார் குணா(11).
இந்தியாவில் நாட்டுப்பற்று தோன்றுவதற்கு 1. உரிமைப் போர்கள், 2. சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள், 3.அரசியல் அமைப்புகள், 4.இந்திய தேசிய காங்கிரஸ் ஆகியவை எவ்வாறு தூண்டுதலாக இருந்தன என்பதை அடுத்த வலைப்பதிவில் ஆராய்வோம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. Annie Besant,India A Nation,PP.XXI–XXII.
2.Nagendra Mohan Srivastava,Growth of Nationalsim in India.P.166.
3.லாலா லஜபதிராய், யங் இந்தியா, கல்கி, (பு.பெ.) (மொ.பெ.ஆ.) யுவபாரதம், ப.264.
4.K.K.Sharma,Life and times of Lala Lajpatrai,P.241.
5.Divakar Prasad Singh,American Attitude towards the Indian Nationalist movement,P.Preface.
6.A.Guy Hope,America and Swaraj the U.S.Role in Indian Independence,P.Foreward.
6. அ.Jawaharlal Nehru,Glimpses of the World History, PP.371-372.
6. ஆ.Ibid, PP.372-377.
7. Bipan Chandra,Freedom Struggle, P.3.
7. அ.Edward Thompson,The Reconstruction of India, P.16.
8. மகாத்மாகாந்தி, இந்து ஸ்வராஜ்,
ரா. வேங்கடராசுலு, (மொ.பெ.ஆ.), பக்.65-66.
9. திரு.வி. கல்யாணசுந்தரம், இந்தியாவும் விடுதலையும், ப.126.
10. வீரசவார்க்கர், எரிமலை அல்லது முதலாவது சுதந்திரப்போர், ஜெயமணி, ம.பி. (மொ.பெ.ஆ.), ப.8.
11. குணா, இந்தியத் தேசியமும் திராவிடத்தேசியமும், ப.23-24.
This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal
0 கருத்துகள்