இந்திய நாட்டுப்பற்று -பகுதி 4: உரிமைப் போர்கள்- ஐதர் அலி, வீரபாண்டிய கட்டபொம்மன், வேலூர்ப் புரட்சி, சிவில் டிஸ் ஒபிடியன்ஸ்சஸ் (Civil Disobediences), விக்டோரியா மகாராணி

உரிமைப் போர்கள்

     உலகில் தோன்றிய விடுதலைப் போர்கள் இந்திய நாட்டுப்பற்றுக்கு எவ்வாறு அடிப்படையாக இருந்தன என்பது பற்றியும், அமெரிக்காவில் ஏற்பட்ட புரட்சி, பிரெஞ்சில் ஏற்பட்ட புரட்சி  பற்றியும்,  இந்திய நாட்டுப்பற்றின் தோற்றம் பற்றியும், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வருகை பற்றியும், இறுதியாக பிளாசிப்போர் பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்துக்கொண்டோம்.

பொருளடக்கம்

  • உரிமைப் போர்கள்
  • ஐதர் அலி
  • வீரபாண்டிய கட்டபொம்மன்
  • வேலூர்ப் புரட்சி
  • சிவில் டிஸ் ஒபிடியன்ஸ்சஸ் (Civil Disobediences)
  • விக்டோரியா மகாராணி

உரிமைப் போர்கள்:

    பிளாசிப்போருக்கு முன்பே 1750-இல் ஆங்கிலேயரை எதிர்த்து பூலித்தேவன் நடத்தியபோர் இந்திய விடுதலைப்போரின் துவக்கம் என்றும், அவனே விடுதலைப் போரைத் துவக்கிய ‘முதல் வீரன்’ என்றும் கா. அப்பாதுரையும்(1), ந. சஞ்சீவியும்(2) கூறியுள்ளனர். அவன் நடத்திய போர் இந்தியாவில் நாட்டுப்பற்று தோன்றுவதற்கான அடிப்படை என்றும் கருத முடிகிறது.

                உரிமைகள் பறிக்கப்படும்போது அவ்வுரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள போர்கள் தோன்றும். தென்னகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க போர்புரிந்த வீரர்கள் மைசூர் ஐதர் அலி, திப்புசுல்தான், வீரபாண்டியக் கட்டபொம்மன் ஆகியோர்களே என்கிறார் கா. அப்பாதுரை(3). இவர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள ஆங்கிலேயருடன் நடத்திய போர்கள் தென்னக மக்களிடையே நாட்டுப்பற்று தோன்ற அடிப்படையாக அமைந்தன என்றும் ஊகிக்க முடிகிறது.

ஐதர் அலி: 

        இந்தியாவின் சுதந்திரம் சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டு வருவதை முதன் முதலில் அறிந்தவர் ஐதர் அலி என்று சவார்க்கரும்(4), இவராலே தென்னகத்தில் நாட்டுப்பற்று உருவாகத் தொடங்கியது என்று கா.அப்பாதுரையும்(5), தம் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். முதலாம் மைசூர் போரின்போது ஐதர் அலி, ஆபத்துக் காலத்தில் ஒருவருக்கொருவர் உதவிட வேண்டும் என்று ஆங்கிலேயரிடம் செய்துகொண்ட சென்னை உடன்படிக்கையை ஒப்புநோக்கும் போது இவர் நாடுபிடிக்கும் ஆசை கொண்டவர் என்பதும், இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக முயற்சி செய்யவில்லை என்பதும்(6) உறுதியாகிறது. இவர் ஆங்கிலேயர்களிடம் செய்த போர்களால் தென்னக மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறமுடியும்.

வீரபாண்டிய கட்டபொம்மன்: 

        இந்திய விடுதலைப் போரின் தொடக்கம் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய போரே என்ற கருத்தை மா.பொ.சிவஞானம்(7), கா.அப்பாதுரை(8), எஸ்.நடராஜன்(9), சோமையாசுலு(10), நாமக்கல் கவிஞர்(11) ஆகியோர் வெளிப்படுத்தியுள்ளனர். ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு விரட்டும் நோக்கத்துடன் கட்டபொம்மன் எதிர்த்தான் என்று கருத இயலாது. தான் ஆட்சி செய்துவந்த பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டே இவன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டான்(12) என்று கருதமுடிகிறது. கட்டபொம்மன் நடத்திய போரை கால்டுவெல், ‘பாளையக்காரர்கள் போர்-I’ என்று குறிப்பிட்டுள்ளார். கட்டபொம்மன் நடத்திய போரை முதல் சுதந்திரப் போர் என்று கூறுவது தமிழகப் பற்றால் ஏற்பட்ட முடிவு என்று ஊகம் செய்யலாம். இப்போர் ஊமைத்துரை, மருதிருவர், வேலுத்தம்பி போன்றோர்களுக்கு எழுச்சியூட்டவும், தமிழக மக்களிடையே நாட்டுப்பற்றை உண்டாக்கவும் பயன்பட்டது என்று கூறலாம்.

                    கி.பி.1799, 1800, 1801 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற போர்களை ‘தமிழ் விடுதலைப் போராட்டம்’ என்கிறார் ராஜய்யன்(13). வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோர் நடத்திய போர்கள் தமிழ்நாடு, தமிழ் இனம், தமிழ் மொழி என்ற உணர்வால் தோன்றிய போர்களே என்று உணரமுடிகிறது. இப்போர்கள் பிற்காலத்தில் நாட்டுப்பற்று படிப்படியாக வளர்ச்சியடைவதற்கு அடித்தளமிட்டன என்றும் கூறலாம்.

வேலூர்ப் புரட்சி:

            1806-ஆம் ஆண்டு வரை நடந்த போராட்டங்கள் அனைத்தும் குறுகிய எல்லைக்கோட்டிற்குள், சிறிய வட்டத்திற்குள், தங்கள் தங்களின் சொந்த அரசையும், நலனையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டி நடைபெற்றன. ஆனால் வேலூர்க் கலகம் ஆங்கிலேயர்களிடம் மனக்குறையோடு பணியாற்றும் இந்தியச் சிப்பாய்களின் திடீர் எதிர்ப்பால் வெளிப்பட்டது. இனி இந்தியாவில் எந்தவிதப் போராட்டம் உருவாகப்போகிறது என்பதை அறிவிக்கும் முன்னோடியாக அமைந்தது இப்போராட்டம் என்கிறார் கணபதி(14). 1857-இல் நடந்த முதலாவது சுதந்திரப் போருக்கு ஒத்திகையாக வேலூர் சிப்பாய்க் கலகம் அமைந்தது என்ற கருத்தை வீரசவார்க்கர்(15) புலப்படுத்தியுள்ளார். இக்கருத்தையே வி.டி. செல்லமும்(16) தெளிவாக்கியுள்ளார். இந்தியாவில் தோன்றிய முதல் ராணுவப் புரட்சியே வேலூர்ப் புரட்சி(17). இப்புரட்சியில் சிப்பாய்களைத் தவிர பொதுமக்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை(18), இருந்தாலும் இப்புரட்சியால் இந்தியர்களிடையே படிப்படியாக நாட்டுப்பற்று தோன்றத் தொடங்கியது என்று உணர முடிகிறது.

           1857-இல் இந்தியாவில் நடந்த புரட்சியை சிலர் ‘சிப்பாய்க் கலகம்’ என்றும், சிலர் ‘முதல் சுதந்திரப் போர்’ என்றும் கருதுகின்றனர். ஜேம்ஸ் அவுட்ராம், சார்லஸ் ஹென்றி, லாரன்ஸ், டி.எஸ்.ராமலிங்கம்(19), மெக்கார்த்தி(20), ஏர்ல் ஸ்டான்லி, சார்லஸ் பால், ஜி.போஸ்ட், ஜி.டி.ஆர்.ஹெம்ஸ், எம்.இன்னீஸ், எப்.மேக்மென், மாலீசன், மெட்சால்ப், ஏர்ல் ராபர்ட்ஸ்(21), கேஸ்ஸார், கெயின்(22), இல்ட்டன்(23) போன்றோர் இப்போரை சிப்பாய்க்கலகம் என்ற கூறுகின்றனர். சுபாஷ் சந்திரபோஷ், வீரசவார்க்கர் ஆகியோர் ‘முதலாவது சுதந்திரப் போர்’ என்றும், அசோக் மேத்தா ‘இந்தியாவின் முதல் புரட்சி 1857’ என்றும், லாலா லஜபதிராய் ‘முதலாவது தேசிய இயக்கம்’(24) என்றும், பெஞ்சமின் டிஸ்ரோலி தேசியப் புரட்சி’(25) என்றும், இப்போர் குறித்து தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இவர்களுடைய கருத்துக்களை ஒப்புநோக்கும்போது பெரும்பாலான மேல்நாட்டவர்கள் இப்புரட்சியைக் ‘கலகம்’ என்று கருதுகின்றனர். பெரும்பாலான இந்தியர்கள் இப்புரட்சியை ‘முதல் இந்திய சுதந்திரப்போர்’ என்று கருதுகின்றனர். இப்புரட்சியே பெரும்பான்மை இந்தியர்களிடம் நாட்டுப்பற்று வளர்ச்சியடைவதற்குத் தூண்டுதலாக இருந்த சக்தி என்பது புலனாகிறது. 

சிவில் டிஸ் ஒபிடியன்ஸ்சஸ் (Civil Disobediences):

          1757 முதல் 1857 வரை ஒரு நூற்றாண்டுக் காலம் இராணுவச் சண்டைகளும், ராஜதந்திரப் போராட்டமும் இடைவிடாது நிகழ்ந்த காலமாகும். சாம்ராஜ்ஜிய ஸ்தாபனம், பொருளீட்டம் என்னும் நோக்கங்களை இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறக்கவே இல்லை என்கிறார் லாலா லஜபதிராய்(26). 1765 முதல் 1857 வரை நடந்த போர்களை ‘சிவில் டிஸ் ஒபிடியன்ஸ்சஸ்’ (Civil Disobediences) என்று சர்பூசன் சௌத்திரி(27) கூறியுள்ளார். எனவே அக்காலத்தில் நிகழ்ந்த போர்கள் தன் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள எழுந்த போர்கள் என்பதும், இந்தியாவின் விடுதலைக்காகத் தோன்றிய போர்கள் அல்ல என்பதும் தெளிவாகிறது. இப்போர்கள் இந்திய மக்களிடையே நாட்டுப்பற்று படிப்படியாகத் தோன்றுவதற்குச் சாதகமாக அமைந்தன என்று கூறமுடியும்.

               1857-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் சில பகுதிகள் சுதந்திரமாகவே செயல்பட்டு வந்தன. 1849-ஆம் ஆண்டு வரை பஞ்சாப் சுயாதீன நாடாகவே இருந்தது(28). எனவே இந்தியாவின் முழுச்சுதந்திரமும் 1857-ஆம் ஆண்டு வரை பறிக்கப்படவில்லை. அக்காலத்தில் நிகழ்ந்த போர்களைத் தமிழர், கேரளர், கன்னடர், தெலுங்கர், இந்துஸ்தானியர் மற்றும் பல இந்திய மொழியினரும் தங்கள் மொழியின் மீதும், தங்கள் மாநிலத்தின் மீதும், தங்கள் நாட்டின் மீதும் கொண்ட பற்றால் முதன்முதலில் சுதந்திரப்போர் எங்கள் மாநிலத்தில்தான் தோன்றியது. எங்கள் மொழிபேசும் மக்களால்தான் தோற்றுவிக்கப்பட்டது என்று நடுவு நிலையிலிருந்து தவறி நூல்களில் எழுதியுள்ளனர் என்று ஊகிக்கமுடிகிறது.

விக்டோரியா மகாராணி:

              1757 முதல் 1857 வரை இந்தியாவில் நிகழ்ந்த போர்கள் அனைத்தும் ஒன்றின் தொடர்பால் மற்றொன்று வளர்ச்சி பெற்றது. 1857-இல் விக்டோரியா மகாராணியின் பிரகடனத்தால் இந்தியா முழுவதும் அடிமை நிலையை எய்தியது. இந்நிலைக்குப் பிறகுதான் இந்தியா விடுதலையடைய வேண்டுமென்ற நாட்டுணர்வு மக்களிடையே வளர்ச்சி பெறத் தொடங்கியது.

 
               இந்தியச் சுதந்திரப்போர் எதிலிருந்து தொடங்கியது என்பதைத் தீர்மானிப்பது சற்றுக் கடினமாகும். ஏனென்றால் ஒரு நிகழ்ச்சி மற்றொன்றிற்கு அடிப்படையாக இருந்திருக்கிறது.

         இந்தியாவில் நாட்டுப்பற்று தோன்றுவதற்கு சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள், அரசியல் அமைப்புகள், இந்திய தேசிய காங்கிரஸ் ஆகியவை எவ்வாறு தூண்டுதலாக இருந்தன என்பதை அடுத்த வலைப்பதிவில் ஆராய்வோம்.

நன்றி !         

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்

 

அடிக்குறிப்புகள்

1. கா. அப்பாதுரை, தென்னாட்டுப்போர்க் களங்கள், ப.484.

2. ந. சஞ்சீவி, வீரத் தலைவர் பூலித்தேவர், ப.8.

3. கா. அப்பாதுரை, இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு, ப.91.

4. வீர சவார்க்கர், மு.கா.நூ., ப.9.

5. கா. அப்பாதுரை, தென்னாட்டுப்போர்க் களங்கள், ப.454.

6. து. சதாசிவன், இந்திய வரலாறு, ப.51.

7. கா. அப்பாதுரை, இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு, ப.97.

8. மே.கா.நூ., ப.113.

9. எஸ். நடராஜன், சுதந்திரச் சிந்தனைகள், ப.20.

10. மா. பொ. சிவஞானம், விடுதலைப்போரில் தமிழகம், பகுதி 1, ப.22.

11. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.318.

12. து. சதாசிவம், மு.கா.நூ., பக்.266-267.

13. வி.டி. செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், ப.292.

14. அ. கனபதி, காந்தியடிகளின் காலம், ப.20.

15. வீர சவார்க்கர், மு.கா.நூ., ப.9.

16. வி.டி. செல்லம், மு.கா.நூ., ப.316.

17. ந. சஞ்சீவி, 1806, ப.5.

18. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், ப.479.

19. டி.எஸ். இராமலிங்கம், இந்திய வரலாறு, ப.144.

20. எஸ். நடராஜன், மு.கா.நூ., ப.36.

21.  Tarachand, History of Freedom Movement in India, Vol-II, P.40.

22. Gaesar Gaine, Barracks and Battle Fields in India, PP.59-63.

23. Hilton, Indian Mutiny, P.4.

24. லாலா லஜபதி ராய், மு.கா.நூ., ப.126.

25. இளங்கோவன், இந்திய இதழ்கள், ப.232.

26. லாலா லஜபதி ராய், மு.கா.நூ., ப.119.

27. Sashi Bhusan Choundhuri, Civil Rebellion in the Indian Mutines, P.Preface.

28. லாலா லஜபதி ராய், மு.கா.நூ., பக்.26,58.



Sponsorship

This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal















கருத்துரையிடுக

0 கருத்துகள்