நாட்டுப்பற்று தோன்றுவதற்கான சூழ்நிலை காரணிகள்
இந்தியாவில் நாட்டுப்பற்று தோன்றுவதற்கு உரிமைப் போர்கள்,வேலூர்ப் புரட்சி எவ்வாறு முக்கிய பங்கு வகித்தன என்பது பற்றியும், ஐதர் அலி, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் பற்றியும், விக்டோரியா மகாராணியின் அறிக்கை பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்துக்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்று தோன்றுவதற்கான காரணிகள் பற்றி மேலும் காண்போம்.
பொருளடக்கம்
- சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள்
- அரசியல் அமைப்புக்கள்
- இந்திய தேசிய காங்கிரஸ்
சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள்:
கி.பி.14-ஆம் நூற்றாண்டு தொடங்கி 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை ஐரோப்பிய நாடுகளில் கல்வி, கலை, கலாச்சாரம், பொருளாதாரம் போன்றவற்றில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அந்நாட்டு மக்களிடையே நாட்டுப்பறறு வளர்வதற்குத் தூண்டுதலாக இருந்தது. அதை நன்குணர்ந்த ஆங்கிலக் கல்வி கற்ற இந்தியர்களில் சிலர் இந்தியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த சமுதாயச் சீர்திருத்த இயக்கங்களைத் தொடங்கினர்.
1828-இல் ராஜாராம் மோகன்ராயால் ஏற்படுத்தப்பட்ட பிரம்மசமாஜம், 1886-இல் விவேகானந்தரால் ஏற்படுத்தப்பட்ட இராமகிருஷ்ண மடம், 1875-இல் அன்னிபெசண்ட் அம்மையாரால் ஏற்படுத்தப்பட்ட தியாசபிகள் சொசைட்டி,1865இல் இராமலிங்க அடிகளால் ஏற்படுத்தப்பட்ட சமரச சுத்த சன்மார்கச் சங்கம் போன்றவை ஆரம்ப காலத்தில் சமுதாய முன்னேற்றத்தையும், இந்துமத வளர்ச்சியையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. அவ்வியக்கங்களால் மக்களிடையே நாட்டுப்பற்றும் படிப்படியாக வளரத் தொடங்கியது.
இவ்வியக்கங்களில் பணியாற்றிய தலைவர்களான ராஜாராம் மோகன்ராய், தேவேந்திரநாத் தாகூர், ஈஸ்வர சந்திர வித்தியாசாகர், தயானந்த சரஸ்வதி, அன்னிபெசண்ட், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோர் இந்தியர்களின் உள்ளங்களில் பக்தியுணர்வு, பிறர் நலஉணர்வு, தியாக உணர்வு, தாய்நாட்டுப்பற்று போன்றவற்றை உண்டாக்கினர். ஆரம்ப காலத்தில் இவ்வியக்கங்களில் சேர்ந்து சீர்திருத்தவாதிகளாகப் பணியாற்றிய ஆனந்த மோகன் போஸ், விவேகானந்தர், சிரத்தானந்தர், லாலா லஜபதிராய், அன்னிபெசண்ட் ஆகியோர் 1885-ஆம் ஆண்டிற்குப் பிறகு தேச பக்தர்களாக மாறினர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை நோக்கும்போது சுதந்திரத்திற்கான அரசியல் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்திய பண்பாடு பற்றிய விழிப்புணர்வும், இந்திய பாரம்பரியத்தின் புத்துயிர்ப்பும் தேவை என்ற உணர்வு தோன்றியது(1). இவ்வுணர்வே இந்தியாவில் நாட்டுப்பற்றைத் தூண்டவும், காலத்திற்கு ஏற்றவாறு இந்தியாவைப் புதுமைப்படுத்தவும் இடைப்பட்ட அடிக்கற்கள் எனக் கூறமுடியும் என்கிறார் யோகிஸ்வரன்(2). எனவே சீர்திருத்த இயக்கங்கள் மக்களிடையே அறியாமையை அகற்றி அரசியல் உணர்வையும், நாட்டுப்பற்றையும் உருவாக்கப் பயன்பட்டன என்று தெரிகிறது.அரசியல் அமைப்புக்கள்:
ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் சுயநலத்திற்காகக் கொண்டு வரப்பட்ட பத்திரிக்கை, தபால் தந்தி, ரயில்வே, ஆங்கிலக் கல்வி போன்றவை இந்தியர்களிடையே இணைப்பையும், ஒருமைப்பாட்டையும் உருவாக்கின. அச்சூழ்நிலையில் இந்திய அறிஞர்கள் சிலர் அரசியல் அமைப்புக்களை ஏற்படுத்தி அரசியல் உணர்வை மக்களிடையே வளர்க்க முயன்றனர்.
1837-இல் தோன்றிய ‘நிலவுடைமையாளர் சங்கம்’ ஜமீன்தாரர்களின் வர்க்க நலன்களைப் பாதுகாத்தது. 1839-இல் தோன்றிய ‘பிரிட்டிஷ் இந்திய சொசைட்டி’ இந்திய மக்களின் நலன்களைக் காக்கவும் அதிக வரிவிதிப்பு, அதிக செலவு, ஊழல் போன்றவற்றைக் கண்டிக்கவும் ஏற்படுத்தப்பட்டது. 1852-இல் தோன்றிய ‘பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேசன்’ கம்பெனி ஆட்சியிலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தது. அதே ஆண்டில் தோன்றிய ‘பம்பாய் அசோசியேசன்’ முதலாளித்துவத்தின் நலன்களைக் காப்பாற்றிக்கொள்ளவும், ‘சென்னை நேட்டிவ் அசோசியேசன்’ கிறிஸ்துவர்களின் மதப்பிரச்சாரத்தை எதிர்த்து இந்து மதத்தை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டது. 1866-இல் தோன்றிய ‘கிழக்கிந்தியச் சங்கம்’ மக்களிடையே நாட்டுப்பற்றைத் தூண்டியது. 1870-இல் தோன்றிய ‘பூனா சர்வ சனிக்சபை’ ஆங்கில ஆட்சியரின் குறைகளைச் சுட்டிக்காட்டியது. 1876-இல் தோன்றிய ‘இந்தியன் அசோசியேசன்’ மாணவர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க முயன்றது. 1884-இல் தோன்றிய ‘சென்னை மாகாண சபை’ மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 1885-இல் தோன்றிய ‘பம்பாய் மாகாண சங்கம்’ மக்களிடையே விடுதலை உணர்வை வளர்க்க முயன்றது.இவ்வமைப்புக்கள் புதிய அரசியல் கருத்துக்களை உருவாக்க இந்தியர்களிடையே புதிய இணைப்பை ஏற்படுத்தியது. சமூக, பொருளாதார அரசியல் நிலைகளை உணரச் செய்து, புதிய போராட்ட முறைகளையும், புதிய மறுமலர்ச்சியையும் உருவாக்கின. மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு உரிமைகளைக் கேட்கும் நிலையை இவ்வியக்கங்கள் உண்டாக்கின. எனவே இவ்வியக்கங்கள் இந்தியர்களிடையே நாட்டுப்பற்று உருவாவதற்கு அடிப்படையாக இருந்த தூண்கள் என்றும் கூறமுடியும்.
இந்திய தேசிய காங்கிரஸ்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய அரசியல் அமைப்புக்கள் பெரும்பாலும் அந்தந்த பகுதியில் வாழ்ந்த மக்களிடையே நாட்டுப்பற்றைத் தூண்டும் அமைப்புகளாகவே இருந்தன. முதன்முதலில் ஐ.சி.எஸ். தேறிய இந்தியரான சுரேந்திரநாத் பானர்ஜி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்(3). அந்நிலையில் 1876-இல் ‘இந்தியன் அசோசியேசன்’ என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கினர். அவ்வியக்கம் இந்தியா முழுவதையும் ஒருமைப்படுத்தும் இயக்கமாகச் செயல்படத் தொடங்கியது(4).
1883-இல் இவ்வியக்கம் தேசிய நிதிதிரட்டும் திட்டத்தை உருவாக்கி தேசிய நிதியைத் திரட்டியது. கல்கத்தாவில் தேசிய பொருட்காட்சி ஒன்றையும் ஆரம்பித்தது. அப்பொருட்காட்சியைக் காண வந்தவர்களிடையே நாட்டு ஒற்றுமையை வளர்க்க மாநாடு கூட்டவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார் பானர்ஜி(5). அதன்படி 1883-இல் கல்கத்தாவில் முதல்மாநாடு கூடியது. இம்மாநாடு இந்திய மக்கள் ஒன்றுசேரும் வாய்ப்பை உருவாக்கியது. இம்மாநாட்டில் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்ப்பதற்கானத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1885-இல் இரண்டாவது தேசிய மாநாடு கல்கத்தாவில் கூடியது.
ஆலன் ஆக்டேவியன் ஹீயூம் 1885-இல் இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவிக்காமல் இருந்திருந்தாலும், பானர்ஜி நடத்திய தேசிய மாநாடுகள் இந்தியர்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்து ஒரு புதிய காங்கிரசை உருவாக்கி இருக்கும் என்று ஊகிக்கலாம். பானர்ஜி நடத்திய தேசிய மாநாடுகள் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றுவதற்கு முன்னோடியாக அமைந்தன. எனவே சுரேந்திரநாத் பானர்ஜியை இந்திய தேசிய காங்கிரசின் தந்தை என்றும் கூறலாம். இந்தியர்களிடையே நாட்டுப்பற்று தோன்றுவதற்கும், இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றுவதற்கும் ‘இந்தியன் அசோசியேசன்’ அடிப்படையாக இருந்திருக்கிறது.அரசியல் இயக்கங்களே காங்கிரஸின் தோற்றத்திற்கு அடிப்படை என்கிறார் மகஜன். ஆங்கில ஆட்சியை இந்தியாவில் நிலைபெறச் செய்ய ஹியூம் செய்த சூழ்ச்சியின் விளைவ காங்கிரஸ் என்று வெட்டர்ன் பர்ன்(6) கூறுகிறார். ஆங்கில ஆட்சியை எதிர்க்கும் எதிர்க்கட்சியின் கடமையை செய்யத் தோன்றியதே காங்கிரஸ் என்கிறார் டவ்ரின் பிரபு(7). பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை அபாயத்திலிருந்து காப்பதே காங்கிரஸ் ஸ்தாபனத்தின் தலையாய நோக்கம் என்று லாலா லஜபதிராய்(8) உணர்த்துகிறார். இக்கருத்தையே பிரசாத்தும்(9) வெளிப்படுத்தியுள்ளார். இந்தியர்களின் துயரங்களை ஆங்கிலேயர்களுக்கு எடுத்துரைக்கவே ஹியூம் காங்கிரசை ஏற்படுத்தினார் என்கிறார் பட்டாபி சீதாராமையா(10). பொதுமக்களிடையே அரசியல் உணர்வை ஏற்படுத்த தோன்றியதே இந்திய தேசிய பேராயம் என்று பிபின் சந்திரா(11) கூறுகிறார். தியாசபிகள் சொசைட்டியின் செயல்களே இந்திய தேசிய காங்கிரஸ் தோன்ற அடிப்படையாக அமைந்தன என்கிறார் அன்னிபெசண்ட்(12). இவ்வாறு இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்த பல்வேறு காரணங்களை பல்வேறு வரலாற்று அறிஞர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். இவர்கள் கூறும் காரணங்களின் ஒட்டுமொத்த விளைவே இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றுவதற்குச் சாதகமாக அமைந்த காரணிகள் என்றும் கூறமுடியும்.
காங்கிரஸ் வரலாற்றின் தொடக்கமே இந்திய விடுதலைப்போரின் தொடக்கம் என்ற கருத்தும் நிலவி வருகிறது(13). சுயாட்சி என்பதற்கான ஆரம்ப ருசியை உண்டாக்கியது காங்கிரசே என்ற கருத்தை காந்தியடிகள்(14) வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் ஸ்தாபனம் இந்தியாவில் விடுதலைப்போர் தோன்றுவதற்கான அடிப்படை என்றும் கூறமுடியும். தமிழகத்தில் காங்கிரசின் மூலம் விடுதலை உணர்வை பரப்ப முயன்றவர் சேலம் விஜயராகவாச்சாரியார்(15). இவர் 1885-இல் காங்கிரஸ் ஸ்தாபனத்திற்கு விதிமுறைகளைத் தயாரித்தார். அவ்விதிகளின் முதல் தீர்மானத்தை நிறைவேற்றியவர் ஜி.சுப்பிரமணிய ஐயார்(16) என்பவராவார். தமிழகம் காங்கிரஸ் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்ப்பதில் முன்னோடியாக இருந்தது என்பதும் தெளிவாகிறது.
தொடக்கத்தில் ஆங்கிலேயரிடம் விண்ணப்பங்கள் போடுவதன் மூலம் உரிமையைக் கேட்கும் ஸ்தாபனமாகவே காங்கிரஸ் செயல்பட்டது. திலகர், லாலா லஜபதிராய் போன்றோர் காங்கிரசில் சேர்ந்த பிறகு அந்நிலை மாறத் தொடங்கியது. காங்கிரஸ் இயக்கமானது மக்கள் இயக்கமாக மாறுவதற்கு ஒத்துழைப்பு காட்டியவர் லாலா லஜபதிராய்(17) ஆவார்.
1757 முதல் 1857 வரை நடந்த உரிமைப்போர்கள், சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள், அரசியல் அமைப்புகள், இந்திய தேசிய காங்கிரஸ் ஆகியவை மக்களிடையே நாட்டுப்பற்று தோன்றுவதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிய காரணிகள் என்று கருத முடிகிறது.
அடுத்த வலைப்பதிவில் இந்திய நாட்டுப்பற்றின் வளர்ச்சி, வங்காளப் பிரிவினை, சுதேசி இயக்கம் மற்றும் வந்தே மாதர இயக்கம் பற்றி தெரிந்து கொள்வோம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. கா.சிவத்தம்பி, தனித்தமிழ் இயக்கத்தின் அரசியற் பின்னணி, ப.48.
2. யோகீஸ்வரன், தமிழ்க் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள், ப.14.
3. து. சதாசிவம், மு.கா.நூ., பக்.266-267.
4. S.K.Bose, Builders of Modern India, P.29.
5. John Maliekal, The Independence Movement, P.14.
6. பெ.சு.மணி, இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், ப.526.
7. கா. அப்பாதுரை, மு.கா.நூ., ப.169.
8. லாலா லஜபதி ராய், மு.கா.நூ., பக்.155-156.
9. மா. பொ. சிவஞானம், விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, ப.59.
10. மே.கா.நூ., ப64.
11. பிபென்சந்திரா (ம.பி.), சுதந்திரப் போராட்டம், பக்.64-65.
12. Annie Besant, How India wrought for freedom, PP.1-3.
13. P.R.Srinivasan, (Ed) , March to Freedom, P.4.
14. மகாத்மா காந்தி, மு.கா.நூ., ப.39.
15. சங்கரன், தமிழகப் பெரியார்கள், பக்.36-38.
16. பொன். சிவஞானம், சுதந்திரப்போரில் தமிழகம், ப.13.
17. D.S.Sahota, Lala Lajpatraj,His life and thought, P.47.
Sponsorship
This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal
0 கருத்துகள்