இந்திய நாட்டுப்பற்றின் வளர்ச்சி
1757 முதல் 1857 வரை நடந்த சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள், அரசியல் அமைப்புகள், இந்திய தேசிய காங்கிரஸ் ஆகியவை மக்களிடையே நாட்டுப்பற்று தோன்றுவதற்குச் சாதகமான சூழ்நிலையை எவ்வாறு உருவாக்கின என்பது பற்றி முந்தைய வலைப்பதிவில் தெரிந்துக்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் நாட்டுப்பற்று வளர்ச்சியடைவதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படை காரணியான வங்காளப் பிரிவினை பற்றியும், மேலும் சுதேசி இயக்கம் மற்றும் வந்தே மாதர இயக்கம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- இந்திய நாட்டுப்பற்றின் வளர்ச்சி
- வங்காளப் பிரிவினை
- சுதேசி இயக்கம்
- வந்தே மாதர இயக்கம்
இந்திய நாட்டுப்பற்றின் வளர்ச்சி:
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தோன்றிய இந்திய நாட்டுப்பற்று, இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சிபெறத் தொடங்கியது. சுதந்திரப் போராட்டத்திற்னகான முதல் அலை முன்நூற்றாண்டில் தோன்றியது என்கிறார் ஜான் மாலிகல். இருபதாம் நூற்றாண்டில் சுதந்திரப் போராட்டம் வளர்ச்சி பெறுவதற்குப் பல காரணிகள் தூண்டுதலாக இருந்தன.
1905-ஆம் ஆண்டு கர்சான் பிரபுவால் கொண்டுவரப்பட்ட வங்காளப் பிரிவினை இந்தியாவில் நாட்டுப்பற்று வளர்ச்சியடைவதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படை காரணி என்றும் ஊகிக்க முடிகிறது. 1905-ஆம் ஆண்டு வரை உரிமைகளைப் பெறும் நோக்கத்துடன் செயல்பட்ட இந்தியர்கள் வங்காளப் பிரிவினைக்குப் பிறகு சுயராஜ்யம் பெறவேண்டுமென்ற கருத்துடன் செயல்பட்டனர். அதற்கு ஏற்ப 1906-ஆம் ஆண்டு நடந்த காங்கிரசில் ‘சுயராஜ்யம் வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வங்காளப் பிரிவினையே சுயாட்சி வேண்டும் என்ற உணர்வுக்கு அடிக்கால் போட்ட முதற்புரட்சி என்கிறார் காந்தியடிகள். வங்காளப் பிரிவினை, ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நோக்கத்துடன் உருவாகிய முதல் விடுதலைப்போர் (National Liberation Struggle) என்ற கருத்தை சாந்தி மோராய்(1) என்பவர் வெளிப்படுத்திக் காட்டுகிறார். மேற்கூறிய சான்றுகளிலிருந்து இந்தியாவில் நாட்டுப்பற்று வளர்ச்சியடைவதற்கு வங்காளப் பிரிவினையே அடிப்படையாக இருந்தது என்ற உண்மை புலனாகிறது. இனி நாட்டுப்பற்று வளர்ச்சி அடைவதற்கு சாதகமாக இருந்த வங்காளப் பிரிவினை முதல் இந்தியா சுதந்திரம் அடைவது வரை நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி ஆராய்வோம்.வங்காளப் பிரிவினை:
இந்திய மக்களை சமுதாயச் சீர்திருத்தப் பணிகளுக்கும், உற்பத்திப் பணிகளுக்கும் திசை திருப்பிவிடும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட காங்கிரஸ், லாலா லஜபதிராய், திலகர் போன்ற தீவிரவாதிகளால் மாற்றமடைந்து அரசியல் விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கும் நிலையை அடைந்தது. இந்நிலையை நன்கு உணர்ந்த ஆங்கில அரசாங்கம் இந்திய மக்களை மீண்டும் திசை திருப்ப புதிய அடக்குமுறைகளைக் கையாளத் தொடங்கியது. 1898-இல் கொண்டு வரப்பட்ட காட்டிலாக்காச் சட்டம், உயர்தரக் கல்வி பரப்புவதைத் தடுக்கக் கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழகத் தடைச்சட்டம், கர்சன் பிரபுவின் திபெத் படையெடுப்பு, தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களின் அவலநிலை, திலகருக்குக் கொடுக்கப்பட்ட சிறைத்தண்டனை போன்ற அடக்குமுறைச் செயல்கள் இந்தியர்களிடையே நாட்டுப்பற்று வளர்வதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. இந்நிலையில் வங்காளத்தில் வாழ்ந்த சுரேந்திரநாத் பானர்ஜி, விபின் சந்திரபாலர், அரவிந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஈஸ்வர சந்திர வித்தியாசாகரர் போன்ற தலைவர்கள் இந்திய மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க பத்திரிக்கைகள், மேடைகள் ஆகியவற்றை வாயிலாகப் பயன்படுத்தினர். இதனால் வங்காள மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்தனர்.
வங்காளமே இந்தியாவில் ஏற்படும் கிளர்ச்சிகளுக்குக் காரணம் என்பதை நன்குணர்ந்த கர்சன் பிரபு அவர்களிடையே பிளவினை (Divide and rule) உண்டாக்க விரும்பினார். வங்காள மக்களிடையே உள்நாட்டு குழப்பங்களையும், மதப் பிளவுகளையும் உண்டாக்கி மக்களை திசை திருப்பவே வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இப்பிளவு அவர் நினைத்ததற்கு மாறாக மக்களிடையே ஒற்றுமையுணர்வை உண்டாக்கியது. இந்நிலையில் வங்காளப் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்துடன் வந்தே மாதர இயக்கம், சுதேசிய இயக்கம், தேசியக் கல்வி இயக்கம், சுயராஜ்ய தீர்மானம், அன்னிய பொருள் பகிஸ்காரம் போன்ற இயக்கங்கள் உருவாகின. வங்காளப் பிரிவினை என்ற ராஜாங்க சதுரங்க ஆட்டத்தால் உருவானவையே பகிஸ்காரம், தேசியக்கல்வி போன்றவை என்கிறார் பாரதியார்(2). வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன்பே 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வங்காளத் தலைவர்கள் கல்கத்தா நகரமண்டலத்தில் ஒன்றுகூடி வங்காளப் பிரிவினையைக் கண்டிக்கும் பொருட்டாக அன்னியப் பொருட்களை பகிஸ்கரிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள்.1906-ஆம் ஆண்டில் தாதாபாய் நௌரோஜி தலைமையில் கூடிய காங்கிரஸ் சுதேசியம், சுயராஜ்யம், தேசியக் கல்வி போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியது.
சுதேசி இயக்கம்:
சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு தோன்றிய “முதல் இந்திய சுதந்திரப் போர்” (First Struggle for National Independence) சுதேசிய இயக்கமாகும். இவ்வியக்கமே நாட்டுப்பற்று வளர்ச்சியடைவதற்கும், நாடு விடுதலை அடைவதற்கும் ஆதாரமாக இருந்தது என்கிறார் ஜியோட்டின் சந்திரராய்(3). பிரிட்டிஷ் தொழிற்சாலை முதலாளிகளுக்கு நட்டத்தை உண்டாக்கி அதன் மூலம் வங்காளப் பிரிவினையே ரத்து செய்வது இவ்வியக்கத்தின் ஆரம்பகால நோக்கமாக இருந்தது. ஆனால் பகிஷ்காரம் விரைவிலேயே சிறந்ததொரு பொருளாதார ஆயுதம் என்று மக்களை உணரச்செய்தது. ஆயுதம் தரித்த புரட்சியைவிட பகிஷ்கார இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அழிவை உண்டாக்கும்(4) என்றநிலை நாட்டில் உருவானது. சுயராஜ்யம் என்பது சுதேசிய முகையினின்று அரும்புவதாகும்(5). பொருளாதார விடுதலை இந்தியாவிற்கு சுயராஜ்யம் கிடைப்பதற்கான சிறந்தகருவி என்பதை நன்குணர்ந்த மக்கள் அன்னியப் பொருள்களை அகற்ற முன்வந்தனர். நாடு முழுவதும் அன்னியத் துணிகளைக் கொளுத்தினர். அரவிந்தர் தனது ‘வந்தே மாதரம்’ பத்திரிக்கை மூலம் அன்னியப்பொருள்களை அகற்றிவிட்டு சுதேசியப் பொருள்களை வாங்குமாறு விளம்பரம் செய்தார். 1906-இல் தாதாபாய் தலைமையில் கூடிய காங்கிரஸ் அன்னியப் பொருள்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
தமிழகத்தில் சுதேசிய இயக்கம் வ.உ.சிதம்பரம் பிள்ளையால் தீவிரமடைந்தது. ஆங்கிலேயர்களுக்குப் பொருளாதார இழப்பை உண்டாக்கி அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற சுதேசக் கப்பல் கம்பெனி, சுதேசப் பண்டகச் சாலை, சுதேசப் பிரச்சாரக் சபை போன்றவற்றைத் தொடங்கினார்.சுதேசிய இயக்கம் முழுவெற்றியைத் தரவில்லை. அதற்குக் காரணம் இந்தியர்களின் ஒற்றுமையின்மையும், ஏழ்மைநிலையும், அரசாங்கத்தின் தடைகளும் இவ்வியக்கத்தை வளரவிடாமல் தடைசெய்தன. இவ்வியக்கம் தடைப்பட்டாலும் இந்தியர்களிடையே சுயமரியாதை, தன்னம்பிக்கை, பிறர் உதவியை நாடாமை, ஒற்றுமை உணர்வு போன்றவற்றை வளரச் செய்தது. அன்னியரின் அரசியல் ஆதிக்கத்தையும், பொருளாதாரச் சுரண்டலையும் எதிர்க்கும் வகையில் மக்களிடையே உணர்ச்சியை உண்டாக்கியது என்றும் தெரிகிறது.
வந்தே மாதர இயக்கம்:
வங்காளப் பிரிவினையால் மக்களிடையே மலர்ந்த மற்றொரு இயக்கம் வந்தே மாதர இயக்கமாகும். இந்த இயக்கத்திற்குக் காரணமான பாடல் ‘வந்தே மாதரம்’ என்ற பாடலாகும். இப்பாடல் பங்கிம் சந்திரரால் 1874-இல் இயற்றப்பட்டு 1883-இல் வெளியான ‘ஆனந்தமடம்’(6) என்ற அவருடைய நாவலில் இணைக்கப்பட்டது. இவை இரண்டும் தோன்றிய வரலாற்றை பாரதியார் இவ்வியக்கம் நடைபெற்றபோது தனது ‘சக்கரவர்த்தினி’(7) என்ற பத்திரிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரை எதிர்த்து சந்நியாசிகள் செய்த கலகமும், அப்போது அவர்கள் பாடிய ‘வந்தேமாதரம்’ என்ற பாடலும் பங்கிம் சந்திரர் நாட்டுப்பற்றை மக்களிடையே பரப்புவதற்கு உறுதுணையாக அமைந்தன.
பங்கிம் சந்திரரின் படைப்புக்கள் மக்களிடையே விடுதலை உணர்வை உண்டாக்குவதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. 1906-இல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் ‘வந்தே மாதரம்’(8) என்ற பாடலை தேசியகீதமாக ஏற்றுக் கொண்டது. 1906-இல் வங்காளத்தில் உள்ள ‘பாரிசால்’ என்ற இடத்தில் நடந்த மொழி மாநாட்டில் இப்பாடல் தடையை மீறி பாடப்பட்டது. மாநாடு அரசினரால் கலைக்கப்பட்டு, சுரேந்திரநாத் பானர்ஜி கைது செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இப்பாடல் இந்தியா முழுவதிலும் போர் ஒலியாக முழங்கியது. ‘வந்தே மாதரம்’ என்ற பெயரில் விபின் சந்திர பாலரும், அரவிந்தரும் பத்திரிகைகளை நடத்தி மக்களை இவ்வியக்கத்தில் ஈடுபடச் செய்தனர். தேச பக்தர்களால் நடத்தப்பட்ட கூட்டங்கள், ஊர்வலங்கள், நாடகங்கள் போன்றவற்றில் இப்பாடல் பாடப்பட்டது. இப்பாடலை முஸ்லீம்களும் விரும்பும் வகையில் இப்பாடலுடன் ‘அல்லாஹீ அக்பர்’ என்ற கோசமும் சேர்த்து முழங்கப்பட்டது. இப்பாடல் இந்து-முஸ்லீம் வேறுபாட்டை தவிர்க்க முயன்றது என்பது புலனாகிறது.இப்பாடல் முதலில் வங்காள மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்தது. பின்பு படிப்படியாக இந்தியா முழுவதிலும் உள்ள மக்களிடையே ஒருமைப்பாட்டு உணர்வை வளர்த்தது. இப்பாடல் இந்தியா விடுதலை அடைவதற்கான புதிய வழியை உருவாக்கியது(9). இப்பாடலால் இந்தியர்கள் அனைவரும் நாட்டுப்பற்று என்ற புதிய மதத்திற்கு மாற்றப்பட்டார்கள்(10). இப்பாடல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அதிதேவதையாகவும் (God), போர் ஒலியாகவும் செயல்பட்டது(11) என்றும் சொல்லப்படுகிறது.
அடுத்த வலைப்பதிவில் மிதவாதிகள்,தீவிரவாதிகள் பற்றியும், மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் பற்றியும், அயல் நாடுகளில் இந்திய நாட்டுப்பற்று பற்றியும், தன்னாட்சி இயக்கம்,மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் பற்றியும் மற்றும் ரௌலட் சட்டமும், ஜாலியன் வாலாபாக் படுகொலை ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. Santimony Ray, Role of Indian Muslims in the Freedom Movement, P.4.
2. சி. சுப்பிரமணியபாரதி, இந்தியா, 27.4.1907, ரா. அ.பத்மனாபன், (தொ.ஆ), பாரதி புதையல் -III, ப.73.
3. Jyotish Chandra Roy, The Historic Swadeshi Movement, P.1.
4. மே.கா.நூ., ப.206.
5. திரு.வி. கல்யாணசுந்தரம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், ப.312.
6. Amarandra Laxman Gadgil, Vandemataram, P.7.
7. சி. சுப்பிரமணியபாரதி, சக்கரவர்த்தினி, 28.12.1905, பெ.தூரன், (தொ.ஆ.), பாரதித் தமிழ், பக்.8-9.
8. மா.பொ. சிவஞானம், வந்தேமாதரம், ப.9.
9. Ibid, P.22.
10. Amaranda Laxman Gadgil, Op.cit. P. Foreward.
“The Mantra had been given and in a single day, a whole people had been converted to the religion of Patriotism”.
11. Ibid, P. Introduction.
Sponsorship
This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal
0 கருத்துகள்