அயல் நாடுகளில் இந்திய நாட்டுப்பற்று
இந்தியாவில் நாட்டுப்பற்று வளர்ச்சி அடைவதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படை காரணியான வங்காளப் பிரிவினை பற்றியும், மேலும் சுதேசி இயக்கம் மற்றும் வந்தே மாதர இயக்கம் பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பற்றியும், மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் பற்றியும், அயல் நாடுகளில் இந்திய நாட்டுப்பற்று பற்றியும், தன்னாட்சி இயக்கம், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் மற்றும் ரௌலட் சட்டமும், ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றியும் மேலும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள்
- மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள்
- அயல் நாடுகளில் இந்திய நாட்டுப்பற்று
- தன்னாட்சி இயக்கம்
- மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
- ரௌலட் சட்டமும், ஜாலியன் வாலாபாக் படுகொலையும்
மிதவாதிகள், தீவிரவாதிகள்:
வந்தே மாதர இயக்கமும், சுதேசிய இயக்கமும் இந்திய மக்களிடையே ஏற்படுத்திய தீவிர நாட்டுப்பற்று ஆங்கிலேயருக்கு வெறுப்பை உண்டாக்கியது. இந்நிலையில் தேசபக்தர்களின் போர்ப் பாசறையாக இருந்த காங்கிரசை ஆங்கிலேயர்கள் பிளவுப்படுத்த முயன்றனர். அதன் விளைவாக மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற பாகுபாடு காங்கிரஸில் உருப்பெற்றது. படிப்படியாக டொமினியன் அந்தஸ்து பெற எண்ணியவர்கள் மிதவாதிகளாகவும், முழுநிறை விடுதலை பெறவேண்டும் என்று எண்ணியவர்கள் தீவிரவாதிகளாகவும் மாறினர். இக்கருத்து வேறுபாடு 1906-இல் தாதாபாய் நௌரோஜியால் சமாதானப்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் 1907-ஆம் ஆண்டில் ‘சூரத்’ என்ற இடத்தில் நடந்த காங்கிரசில் மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் மோதல் உண்டாகியது. இந்நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தீவிரவாதிகள் தீவிரமாகச் செயல்பட்டதால் பலர் சிறைத் தண்டனைப் பெற்றனர். தீவிரவாதத்தை ஒடுக்க ஆட்சி எதிர்ப்புக்கூட்டத் தடைச்சட்டம், வெடிமருந்து தடுப்புச் சட்டம், பத்திரிகைத் தடைச்சட்டம் போன்ற சட்டங்களை அரசு கொண்டு வந்தது.
மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள்:
அயல் நாடுகளில் இந்திய நாட்டுப்பற்று:
ஆங்கில ஆட்சியின் கடுமையான தண்டனைகளும் சட்டங்களும் தீவிரவாதத்தைச் செயலிழக்கச் செய்தது. 1909-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் மிதவாதிகளால் செயல்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் விடுதலை உணர்வு ஒடுக்கப்பட்டதை மேலைநாடுகளில் கல்வி கற்ற இந்தியர் உணரத் தொடங்கினர். தீவிரவாதம் ஒடுக்கப்பட்ட நிலையில் அயல்நாடுகளில் தங்கியிருந்த சியாம்ஜி கிருஷ்ண வர்மா, மேடம் காமா, செண்பகராமன், அரிதயாள், மகாராஜா பிரதாப், வீரேந்திர சட்டோ பாத்தியாயா, பர்க்துல்லா, மண்டயம் திருமாலாச்சாரியார், என்.ராய், அபனி முகர்ஜி, வீர சவார்க்கார், மதன்லால் திங்கரா, வ.வே.சு. ஐயர் முதலியோர் பயங்கரவாதத்தின் மூலம் இந்தியா விடுதலை அடையவேண்டும் என்று கருதினர். இதற்காக அவர்கள் போர் செய்யும் பயிற்சியைக் கற்றனர். இப்போர்ப்பயிற்சி லண்டனில் இந்திய விடுதியைச் பாதுகாத்திருந்த கர்சான் வைலி என்பவர் கொலை செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்தது(2). 1911-இல் திருநெல்வேலியில் நடந்த “ஆஷ்துரை” என்பவரின் கொலைக்கும் இப்பயிற்சியே காரணம் என அறியமுடிகிறது. 1914-ஆம் ஆண்டில் ‘எம்டன்’ என்ற ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் செண்பகராமன்(3) இந்தியாவைத் தாக்குவதற்கும் இப்பயிற்சியே காரணமாக அமைந்தது. ஆங்கிலேயரால் ஒடுக்கப்பட்ட தீவிரவாதம் அயல்நாடுகளில் இருந்த இந்தியர்களிடையே பயங்கரவாதம் தோன்ற அடிப்படையாக இருந்தது என்றும் ஊகிக்க முடிகிறது.
தன்னாட்சி இயக்கம் (Home Rule Movement):
1915-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் மிதவாதிகளின்கீழ் செயல்பட்டு வந்தது. தீவிரவாதியான திலகர் சிறையிலிருந்து விடுபட்டநிலையில், மிதவாதத் தலைவர்களான கோகலே, மேத்தா ஆகியோர் இறந்தனர். இந்நிலையில் மீண்டும் காங்கிரசின் பொறுப்பைத் தீவிரவாதிகள் ஏற்றனர். இந்தியா தன்னாட்சியை அடைதவற்கான புதியநிலையை உருவாக்கவேண்டும் என்ற உணர்வு திலகரிடம் தோன்றியது. அதற்கு லண்டனில் 1905-இல் சியாம்ஜி கிருஷ்ண வர்மாவால் தொடங்கப்பட்ட ‘இந்திய சுயராஜ்யச் சங்கம்’(4) (Indian Home Rule Society) அடிப்படையாக இருந்தது என்றும் உணர முடிகிறது.
அன்னிபெசண்ட் அம்மையாரின் பேச்சும், எழுத்தும், அவருக்குக்; கொடுக்கப்பட்ட சிறைத் தண்டனையும் இந்திய மக்களை ஒருமைப்படுத்தின. தன்னாட்சி இயக்கத்தின் விளைவு இங்கிலாந்து பார்லிமெண்டில், ‘இந்தியாவிற்கு ஜனப் பொறுப்பாட்சி நல்கப்படும்’ என்ற அறிக்கையை 1917-இல் பிறப்பிக்கச் செய்தது(6). சுயராஜ்ஜியத்தின் முதல்நிலை தோன்றுவதற்கு தன்னாட்சி இயக்கம் அடிப்படையாக அமைந்ததை அறிய முடிகிறது.
அன்னிபெசண்ட்டின் தன்னாட்சி இயக்கம் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்தாலும், அவர் கூட்டங்களில் பார்ப்பனர்களின் சிறப்புக்களை புகழ்ந்து பேசி வந்ததால் அவரின் தன்னாட்சி இயக்கம் பார்ப்பனரல்லாதாரின் ஆதரவினை இழந்தது. இச்சூழ்நிலை பார்ப்பனரல்லாதார் புதிய இயக்கத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்தது. பார்ப்பனரல்லாதாரின் நலன்களைக்காக்க ‘தென் இந்திய நல உரிமைச் சங்கம்’, ‘நீதிக்கட்சி’, ‘சுயமரியாதை இயக்கம்’, ‘திராவிடர்க் கழகம்’ போன்ற இயக்கங்கள் தோன்றவும் அன்னிபெசண்ட் அம்மையார் காரணமாக இருந்தார் என்று கூறமுடியும். இந்தியா விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட தன்னாட்சி இயக்கம் ‘திராவிட நாடு’ என்ற தனிக்கோரிக்கை திராவிட மக்களிடையே உருவாவதற்கும் காரணமாக அமைந்தது.
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்:
முதல் உலகப்போரில் இந்தியா பிரிட்டனுக்குச் செய்த உதவி, தன்னாட்சி இயக்கத்தால் மக்களிடையே ஏற்பட்ட எழுச்சி, 1917-இல் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சி, மிண்டோ-மார்லிச் சீர்திருத்தம் இந்தியர்களிடையே ஏற்படுத்திய அதிருப்தி, 1916-இல் ஏற்பட்ட இந்து-முஸ்லீம் ஒற்றுமை, போருக்குப்பின் சுயாட்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பு போன்றவை 1918-இல் ‘மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்’ வெளியிடத் தூண்டுதலாக இருந்தன என்றும் கருத முடிகிறது.
இச்சீர்திருத்தங்கள் சுயாட்சிக்கு அடிப்படையாக அமைந்ததே தவிர, இந்தியாவின் சுயாட்சிக்குரிய காலவரையறையைக் குறிக்கவில்லை. இச்சீர்திருத்தங்கள் மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்ததால் மீண்டும் நாடு முழுவதும் கிளர்ச்சிகள் தோன்றின. இச்சீர்திருத்தங்களை தீவிரவாதிகள் எதிர்த்ததால், மிதவாதிகளில் சிலர் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று ‘லிபரல் கட்சியை’த் தொடங்கினர். தன்னாட்சி வேண்டும் என்று விரும்பிய இந்தியருக்கு இச்சீர்திருத்தங்கள் மேலும் ஒருபுதிய போராட்டமுறை தோன்ற முதல் நிலையாக அமைந்தது.
ரௌலட் சட்டமும், ஜாலியன் வாலாபாக் படுகொலையும்:
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தால் மக்களிடையே உண்டாகிய தீவிரப்புரட்சியை அடக்க ‘ரௌலட் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி யாரையும், எக்காரணமின்றியும், கைது செய்யலாம் என்ற நிலையில் மீண்டும் கிளர்ச்சி வளர்ச்சியடைந்தது. இந்தியர்களிடையே தோன்றிய விடுதலை உணர்வை அடக்க முயன்ற இச்சட்டம் இந்திய விடுதலைப்போரில் ஒரு திருப்பு முனையை உருவாக்கியது என்று கருதமுடிகிறது.
இச்சட்டங்களைக் காந்தியடிகள் ‘கருப்புச் சட்டங்கள்’ (Black Acts) என வெறுத்தார்(7). இச்சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்யவேண்டும் என்ற உணர்வை காந்தியடிகளுக்கு உணர்த்தியவர் கஸ்தூரி ரங்க அய்யங்கார் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் ரௌலட் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. அதன்படி 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் நாள் ‘சத்தியாகிரக தினம்’ கொண்டாட முடிவு செய்யப்பட்டது(8). ஏப்ரல் 6 முதல் 13 வரையுள்ள ஒரு வாரத்தை ‘சத்தியாக்கிரக வாரமாகக்’ கொண்டாடினார்கள்.
காந்தியடிகளின் சத்தியாக்கிரக இயக்கத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் தடையைமீறிக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தினர். ஏப்ரல் 13-ஆம் தேதி ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ரௌலட் சட்ட எதிர்ப்புக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தை கலைக்க டையர் என்பவர் கூட்டத்தை நோக்கிச் சுட்டார். அதனால் பலர் இறந்தனர். இந்நிகழ்ச்சி ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ என அழைக்கப்படுகிறது. பஞ்சாபில் நடந்த இத்தீச் செயல்களே இந்தியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் கடும் பகையை உருவாக்கியது என்கிறார் ஜான் மாலிக்கல். இக்கொலையை கண்டிக்கும் வகையில் சரோஜினிதேவி அரசு தனக்குக் கொடுத்திருந்த ‘கெய்சர் ஹிந்த்’ என்ற மெடலையும், தாகூர் ‘சர்’ பட்டத்தையும் திருப்பி அனுப்பினர்.
அடுத்த வலைப்பதிவில் ஒத்துழையாமை இயக்கம், சுயராஜ்ஜியக் கட்சி, சைமன் கமிஷன், முழு நிறை விடுதலை மற்றும் சட்டமறுப்பு இயக்கம் ஆகியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1.மஜீண்டர் (ம.பி), இந்தியாவின் சிறப்பு வரலாறு, பகுதி -3, ப.553.
2. சி. சுப்பிரமணியபாரதி, இந்தியா, 7.8.1909.
3. பாரதநாட்டு விடுதலைப்போர் வீரர்கள், பள்ளிக்கல்வி குழு (தொ.ஆ), ப.60.
4. சி.சுப்பிரமணியபாரதி, இந்தியா, 23.3.1907, இளசைமணியன்,பாரதி தரிசனம், 2, ப.64.
5.K.R. Shirsat, Kaka Joshep Baptista father of the Home rule movement in India,P.39.
6. திரு.வி. கல்யாணசுந்தரம், திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், ப.299.
7.P.M.Joshi,Students Revolts in India,P.18.
8.M.K.Gandhi,The story of My Experiments with truth,Maha Dev.Desai (Trans), PP.347-349.
Sponsorship
This Content Sponsored by Genreviews.
Online Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal
0 கருத்துகள்