இந்திய நாட்டுப்பற்று -பகுதி 9: வட்டமேஜை மாநாடுகள், மாநிலச் சுயாட்சி, கிரிப்ஸ் தூதுக்குழு, வெள்ளையனே வெளியேறு இயக்கம், வேவல் திட்டம், காபினெட் தூதுக் குழு, அட்லியின் அறிக்கை, மவுண்ட்பேட்டனும் இந்தியாவின் விடுதலையும் மற்றும் இந்திய நாட்டுப்பற்றின் விளைவுகள்

இந்திய நாட்டுப்பற்றின் விளைவுகள்

 இந்தியாவில் நாட்டுப்பற்று வளர்ச்சி அடைவதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படை காரணிகளைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கம், சுயராஜ்ஜியக் கட்சி, சைமன் கமிஷன், முழு நிறை விடுதலை மற்றும் சட்டமறுப்பு இயக்கம் பற்றி முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக வட்டமேஜை மாநாடுகள், மாநிலச் சுயாட்சி, கிரிப்ஸ் தூதுக்குழு, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,  வேவல் திட்டம், காபினெட் தூதுக் குழு, அட்லியின் அறிக்கை,  மவுண்ட்பேட்டனும் இந்தியாவின் விடுதலையும் மற்றும் இந்திய நாட்டுப்பற்றின் விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • வட்டமேஜை மாநாடுகள்
  • மாநிலச் சுயாட்சி 
  • கிரிப்ஸ் தூதுக்குழு
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம்  
  • வேவல் திட்டம் 
  • காபினெட் தூதுக் குழு 
  • அட்லியின் அறிக்கை 
  • மவுண்ட்பேட்டனும் இந்தியாவின் விடுதலையும் 
  • இந்திய நாட்டுப்பற்றின் விளைவுகள்

வட்டமேஜை மாநாடுகள்:

      1926-இல் கௌசத்தியில் கூடிய காங்கிரஸ் வட்டமேசை மாநாட்டைக் கூட்டவேண்டும் என்று கோரியதன் அடிப்படையிலும், சைமன் கமிசனின் அறிக்கைகளை விவாதம் செய்யவும் 1930-இல் லண்டனில் முதல் வட்டமேசை மாநாடு கூடியது. சட்டமறுப்பு இயக்கத்தை எதிர்த்துச் செயல்பட்ட முஸ்லீம் லீக்கும், பிற இந்தியக் கட்சிகளும் இம்மாநாட்டில் கலந்துக்கொண்டன. காந்தி-இர்வின் ஒப்பந்தம், சட்டமறுப்பு இயக்கத்திற்குச் சமாதானம் கூறியதால் காந்தியடிகள் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டார். ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் அம்மாநாட்டில் வகுப்பு வாதமும், பிளவு சக்தியும் மீண்டும் வளரத்தொடங்கின. அம்மாநாட்டிலிருந்து தோல்வியுடன் திரும்பிய காந்தியடிகள் மீண்டும் சட்ட மறுப்பையும், நிர்மானத் திட்டங்களையும் செயல்படுத்தினார். வட்டமேஜை மாநாடுகள் இந்தியர்களிடையே பிளவை ஏற்படுத்தினாலும் அப்பிளவு காந்தியடிகளின் உண்ணாவிரதத்தால் நீக்கப்பட்டது. வட்டமேஜை மாநாடுகள் இந்தியர்களிடையே ஏற்படுத்திய கிளர்ச்சி மாநிலச் சுயாட்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்றும் தெரியவருகிறது.

மாநிலச் சுயாட்சி:

         1905-ஆம் ஆண்டு முதல் 1934-ஆம் ஆண்டு வரை ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் படிப்படியாக நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவு மாநிலச் சுயாட்சியை உருவாக்கியது. இதற்குச் சைமன் கமிசனின் எதிர்ப்பும், வட்டமேஜை மாநாடுகளில் ஏற்பட்ட குழப்பமும் தூண்டுதலாக அமைந்தன என்கிறார் பத்மசா(1).

             1935-ஆம் ஆண்டு அரசியல் சட்டப்படி 1937-இல் மாநிலங்களுக்குச் சுயாட்சி வழங்கப்பட்டது. அதே ஆண்டில் நடந்த தேர்தலில் இந்தியாவில் பதினொன்று மாகாணங்களில் காங்கிரஸ் எட்டு மாகாணங்களில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாகாணங்கள் மாநிலச் சுயாட்சியை மேற்கொண்டன. இந்நிகழ்ச்சி ஆங்கிலேயருக்கு வெறுப்பை உண்டாக்கியது. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் முஸ்லீம்கள் மாகாண சுயாட்சியை எதிர்த்தனர். மாகாண சுயாட்சி முஸ்லீம்களுக்குத் தனிநாடு வேண்டும் என்ற நிலை உருவாகச் சாதகமாக அமைந்தது.

கிரிப்ஸ் தூதுக்குழு:

           1939-இல் தொடங்கிய இரண்டாம் உலகப்போர் என்ற இக்கட்டான நிலை ஆங்கிலேயருக்கு வராமல் இருந்திருந்தால், இந்தியா ‘மாகாண சுயாட்சி’ என்ற நிலையிலிருந்து ‘முழுமையான சுதந்திரம்’ என்ற நிலையை அடைய பல போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். சுதந்திரமும் சற்றுத் தாமதமாகவே கிடைத்திருக்கும். எனவே இரண்டாம் உலகப்போர் இந்தியா சுதந்திரமடைவதற்குச் சாதகமாக அமைந்த திருப்பு முனை என ஊகிக்கலாம்.

              1939-இல் இந்தியர்களின் அனுமதியைக் கேட்காமல் இந்தியாவை உலகப்போரில் ஈடுபடுத்தியதால் மாகாணங்கள் சுயாட்சியிலிருந்து விலகி கிளர்ச்சியை உண்டாக்கின. தனிமனித சக்திகள் வன்முறையை ஒடுக்கி சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் என்பதை உண்ணாவிரதத்தின் மூலம் உணர்ந்தார் காந்தியடிகள். போர் எதிர்ப்புக்கு அறிகுறியாக அவர் ‘தனிநபர் சத்தியாக்கிரகத்தை’ தொடங்கினார். இதில் ஈடுபட்ட இந்தியத் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யும் நிலையில் சுபாஷ் சந்திரபோஸ்(2) தப்பிச் சென்றார். காங்கிரஸ் தலைவர்களிடையே இருந்த வேறுபாடுகள் காந்தியின் அகிம்சைப்போருக்குத் தடைகளாக அமைந்தன. இவ்வேறுபாடுகள் ஆங்கிலேயரின் பிளவுச் சக்திக்கு தூண்டுதலாக அமைந்தன. இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பானிலுள்ள இந்தியர்களை ஒன்றுதிரட்டி ‘இந்திய தேசிய ராணுவத்தை’ (Indian National Army) உருவாக்கினார். ஜப்பான், போஷின் துணையுடன் இந்தியாவின்மீது போர்தொடுக்கும் நிலையில் ஆங்கிலேயர் மேற்கொண்ட சமாதான முயற்சி ‘கிரிப்ஸ் தூதுக்குழுவாக’ (Gripps Mission ) உருவெடுத்தது. இக்குழு இந்தியா வருவதற்கு அமெரிக்காவும், தொழிலாளர் கட்சியும் தூண்டுதலாக இருந்தன(3). இக்குழுவின் பரிந்துரைகள் தற்காலிகமாக இந்தியர்களுக்குச் சமாதானம் சொல்வதாகவும், போருக்குப் பிறகு இந்தியர்களிடையே மீண்டும் பிளவை ஏற்படுத்துவதாகவும் இருந்ததால் தலைவர்கள் இப்பரிந்துரைகளை ஏற்க மறுத்தனர். கிரிப்ஸ் திட்டம் ஆங்கிலேயர்களின் இக்கட்டான நிலையை உணர்த்தியதால் இந்திய தலைவர்கள் இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு புதிய போராட்ட முறையை உருவாக்க முயன்றனர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்:

 ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற 1942-இல் ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit Indian Movement) என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். காந்தியடிகள் இப்போராட்டத்தை அகிம்சை முறையில் நடத்த விரும்பினார். ஆனால் போராட்டம் நாடு முழுவதும் வன்முறையாக மாறிவிட்டது. இப்போராட்டத்தை அடக்க ஆங்கிலேயர்கள் பல உத்திமுறைகளைக் கையாண்டும் அவர்கள் வெற்றி பெற முடியவில்லை. மீண்டும் சமரச முயற்சியை மேற்கொள்ள சிறையிலிருந்த தலைவர்களை விடுதலை செய்தனர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தீவிரமாகச் செயல்பட்ட நிலையில் முஸ்லீம்கள் இந்தியாவை இரண்டாகப் பிரிக்கும் முயற்சியில் ‘பிரித்துவிட்டு வெளியேறு’ என்ற கோசத்தை எழுப்பினர். இச்சூழ்நிலை ஆங்கிலேயரின் பிளவு மனப்பான்மைக்கும், முஸ்லீம்களின் பாகிஸ்தான் பிரிவினைக்கும் சாதகமாக அமைந்தது.

வேவல் திட்டம்:

            வெள்ளையனே வெளியேறு இயக்கம், சுபாஷ் சந்திரபோஷின் படையெடுப்பு, போரினால் பிரிட்டனுக்கேற்பட்ட பொருளாதார இழப்பு முதலியன வேவல் திட்டம் உருவாக அடிப்படையாக அமைந்தன.

           இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் 1945-ஆம் ஆண்டு வேவல் என்பவர் இந்திய தலைவர்களுடன் சுதந்திரம் தொடர்பாக பேச்சுக்களைத் தொடங்கினார். இப்பேச்சுக்கள்படி நிர்வாகசபை திருத்தியமைக்கப்பட்டு முஸ்லீம்களும் - இந்துக்களும் சம அளவில் அதில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும், வைசராய், படைத்தலைவர் ஆகிய பதவிகளைத் தவிர ஏனைய அமைச்சர்கள் இந்தியர்களாக இருப்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. வேவல் பேச்சுக்கள் இந்தியாவின் சுயாட்சிக்கான இரண்டாவது படி என்றும் கருதலாம்.

       நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1945-இல் சிம்லாவில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. அம்மாநாட்டிற்குக் காங்கிரஸ் தலைவர்களும் முஸ்லீம் லீக் தலைவர்களும் வரவழைக்கப்பட்டனர்(4). சிம்லா மாநாடும் வேவல் திட்டமும் இந்து–முஸ்லீம் வேறுபாட்டை வலிமை அடையச் செய்தது. இந்தியர்களிடையே இம்மாநாடு இனக் கலவரங்கள் தோன்றவும், ‘பாகிஸ்தான்’ என்ற புதிய நாடு உருவாகவும் காரணமாக அமைந்தது என்று கூறமுடியும்.

காபினெட் தூதுக் குழு:

    இந்திய தேசிய ராணுவப் படையினரின் விசாரணைகளும், 1946-இல் நடந்த கப்பற்படைக் கலகமும், 1857-இல் நடைபெற்ற புரட்சியைவிட தீவிரமான புரட்சி தோன்றும் நிலையை உருவாக்கியது. இந்நிலை இந்தியாவிற்கு உடனே சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறவேண்டும் என்ற உணர்வை ஆங்கிலேயருக்கு ஏற்படுத்தியது. எனவே, 1946-இல் இந்தியாவிற்கு வந்த காபினெட் தூதுக்குழுவின் பரிந்துரைகளின்படி நேருவின் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையை முழுநிறை விடுதலையின் முதற்படி என்று கருதமுடிகிறது.

     இடைக்கால அரசு முஸ்லீம்களை வெறுப்படையச் செய்ததால் ஜின்னா மீண்டும் தனிநாடு கோரி இனக்கலவரங்களை ஏற்படுத்தினார். அதன்படி 1946-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் நாளை போராட்ட நாளாகவும், துக்கநாளாகாவும் அறிவித்தார். இனக்கலவரங்கள் உச்சநிலையை அடைந்ததால் இந்தியாவிற்கு விரைவில் சுதந்திரம் கொடுக்கவேண்டிய சூழ்நிலையை இடைக்கால அரசு உருவாக்கியது என ஊகிக்க முடிகிறது.

அட்லியின் அறிக்கை:

         இடைக்கால அரசு முஸ்லீம்களால் தடை படுத்தப்பட்ட நிலையும், இலண்டன் மாநாட்டின் தோல்வியும் அட்லியின் அறிக்கைக்குக் காரணமாக அமைந்தது. இவ்வறிக்கைப்படி “இந்தியக் கட்சிகள் தம்முள் ஒத்து வந்தாலும் வராவிட்டாலும் பிரிட்டிஷார் எந்த ஒருகுழுவிடமோ அல்லது சிலபல குழுவிடமோ 1948-ஆம் ஆண்டு ஜுன் மாத இறுதிக்குள் அதிகாரத்தை மாற்றிவிட்டு வெளியேற வேண்டும்” என்ற முடிவு செய்தது. இந்த அறிக்கை இந்து-முஸ்லீம்களின் இனக் கலவரத்தால் ஏற்பட்ட உடனடி விளைவு என அறியமுடிகிறது.

மவுண்ட்பேட்டனும் இந்தியாவின் விடுதலையும்:

           மவுண்ட் பேட்டனின் தூண்டுதலால் காந்தியும், ஜின்னாவும் ஒன்று சேர்ந்து இனக்கலவரங்களைத் தடுக்க ஒருகூட்டு வேண்டுகோள் விடுத்தனர். அவ்வேண்டுகோளும் இனக்கலவரங்களைக் கட்டுப்படுத்தாத நிலையில் 1948-இல் கிடைக்க வேண்டிய சுதந்திரம் 1947-இல் கிடைத்தது.

       வங்காளப் பிரிவினை முதல் இந்தியா சுதந்திரம் அடைவது வரை படிப்படியாக தோன்றிய நிகழ்ச்சிகளின் விளைவால் இந்தியர்களிடையே நாட்டுப்பற்று வளர்ச்சி அடைந்தது. அதன் விளைவால் இந்தியா சுதந்திர நாடானது.

இந்திய நாட்டுப்பற்றின் விளைவுகள்:

     1757 முதல் 1857 வரை ஆங்கிலேயருக்குப் படிப்படியாக இந்தியா அடிமையானது. இந்தியாவில் நாட்டுப்பற்று 1905-ஆம் ஆண்டு முதல் வளர்ச்சியடையத் தொடங்கியது. அதன் விளைவாக படிப்படியாக இந்தியர்களுக்கு உரிமைகளையும், மாகாண சுயாட்சிகளையும் வழங்கி வந்த ஆங்கிலேயர்கள் 1947-இல் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினர்.

    சுதந்திரம் கிடைத்தவுடன் கிடைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ‘காங்கிரஸ் கொடி’ சிறிது மாற்றத்துடன் ‘தேசிய கொடியாக மாற்றப்பட்டது. சுதந்திரப்போரில் போர் ஒலியாக முழங்கிய ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. 1950-ஆம் ஆண்டு முதல் இந்தியா குடியரசு நாடாக மாறியது. மொழிப்பிரச்சினைகளையும், வகுப்புவாதப் பிரச்சினைகளையும் அகற்ற மொழி வாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.

   இந்தியாவில் தோன்றிய நாட்டுப்பற்று இந்தியர்களுக்கு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தினாலும் சில தீய விளைவுகளையும் உண்டாக்கியது. இந்தியர்களிடையே வளர்ச்சிப் பெற்ற நாட்டுப்பற்றை ஒடுக்க ஆங்கிலேயர் மேற்கொண்ட பிளவு சக்தி (Divide and Rule) ‘பாகிஸ்தான்’ என்ற தனி நாட்டை உருவாக்கியது.

          பார்ப்பனரின் ஆதிக்க மனப்பான்மை ‘திராவிட நாடு’ என்ற புதிய கோரிக்கை உருவாவதற்கும் அடிப்படையாக அமைந்தது என்று கருத முடிகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் மனத்திலிருந்து வெளிப்படும் ஓர் உயர்ந்த சக்தியே நாட்டுப்பற்று. அச்சக்தி உரிமைப் போர்கள், சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள், அரசியல் அமைப்புகள், இந்திய தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் வெளிப்படத் தொடங்கியது.

          இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டங்களும், அரசியல் சீர்திருத்தங்களும் படிப்படியாக இந்தியர்களிடையே நாட்டுப்பற்று வளர்ச்சியடைவதற்குத் தூண்டுதலாக அமைந்தன.

          திலகர் தலைமையில் வெளிப்பட்ட தீவிரவாதப் போக்கு இந்தியர்களிடையே நாட்டுப்பற்று வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தாலும், தேசபக்தர்கள் பல துன்பங்களை அடைவதற்கும் அப்போக்கு காரணமாக அமைந்தது.

       காந்தியடிகளின் தலைமையில் நிகழ்ந்த ரௌலட் சட்ட எதிர்ப்பும், அதன் விளைவான ஜாலியன் வாலாபாக் படுகொலையும் பாமர மக்களிடையே தீவிரமான நாட்டுப்பற்றை உண்டாக்கின.

              காந்தியடிகள் மேற்கொண்ட இயக்கங்களும், இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையும் இந்தியா விடுதலை அடைவதற்கு தூண்டுதலாக அமைந்தன. 

        ஆங்கிலேயரின் பிளவு சக்தி ‘பாகிஸ்தான்’ என்ற தனி நாடு உருவாவதற்கும் காரணமாக இருந்தது.

      இனிவரும் வலைப்பதிவுகளில் தமிழகம் வளர்த்த இந்திய நாட்டுப்பற்று பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

 அன்பழகி பச்சியப்பன் 



அடிக்குறிப்புகள்

1.Padmasa,Indian National Congress and the Muslims, PP.94-95.

2.Gauthani Chatto Padhyaya, Subhas Chandra Bose and Indian Communist Movement, P.15.

3.Bhimsen Singh,The Cripps Mission, P.95.

4.S.H.Naqui, Readings in Indian History, P.302.


Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துரையிடுக

0 கருத்துகள்