இந்திய நாட்டுப்பற்று -பகுதி 10: தமிழகம் வளர்த்த இந்திய நாட்டுப்பற்று மற்றும் தமிழகத் தலைவர்களின் பங்கு(ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் & தீவிரவாதத் தலைவர்கள்)

 தமிழகம் வளர்த்த இந்திய நாட்டுப்பற்று

    இந்தியாவில் நாட்டுப்பற்று எவ்வாறு தோன்றியது என்பதையும், அதன் வளர்ச்சியால் இந்தியா எவ்வாறு சுதந்திரம் அடைந்தது என்பதையும் முந்தைய வலைப்பதிவுகளில் ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாக அச்சூழலில் தமிழகத்தில் நிலவிய நாட்டுப் பற்றின் தன்மையை ஆராய்வது தேவையாகிறது.

பொருளடக்கம்

  • வீரத்தின் விளைவிடம்
  • தமிழகத் தலைவர்களின் பங்கு
  • ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள்
  • தீவிரவாதத் தலைவர்கள்

வீரத்தின் விளைவிடம்:

 பழங்காலம் முதல் தமிழகம் வீரத்தின் விளைவிடமாக இருந்தது என்பதனை இலக்கியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. வீர உணர்வும், நாட்டுப்பற்றும் ஒன்றோடொன்று தொடர்புடையன. வீர உணர்வு படைத்த தமிழர்களான பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதிருவர், வேலுத்தம்பி போன்றோர் ஆங்கில ஆட்சி தமிழகத்தில் வேரூன்றுவதை எதிர்த்துப் போர் செய்தனர். ஆங்கிலேயரை எதிர்த்துத் தமிழக மக்கள் செய்த வீரத்தையும் தியாகத்தையும் காந்தியடிகள்(1) புகழ்ந்துள்ளார்.

        பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் தோன்றிய நாட்டுப்பற்று தமிழகம் என்ற எல்லைக்குட்பட்ட நாட்டுப்பற்றாக இருந்தது. தமிழரின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், அரசர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் தோன்றிய உரிமை உணர்வுகள் என்றே கருத முடிகிறது. இருபதாம் நூற்றாண்டில் நாட்டுப்பற்று தமிழகத்தில் வளர்ச்சி அடைவதற்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சேலம் விஜயராகவாச்சாரியார், ஜி. சுப்பிரமணிய ஐயர் போன்றவர்கள் தூண்டுதலாக இருந்தனர்.

          வெளிநாடுகள் சுதந்திரம் பெற பெரும்பாலும் போர் முறைகளையே கையாண்டன. ஆனால் இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போர்முறை புதுமையானது. இந்தியச் சுதந்திரப் போருக்கு தேசபக்தர்களின் தியாக உணர்வு, தாய்மொழிப் பத்திரிகைகள், நாடகங்கள், நாவல்கள், மேடைப்பேச்சுகள், கவிதைகள் போன்றவை படைக்கலன்களாகச் செயல்பட்டன. காந்தியடிகளின் அகிம்சைப்போர் வளர்ச்சி அடைவதற்கும் இப்படைக்கலன்கள் அடிப்படையாக இருந்தன. இருபதாம் நூற்றாண்டில் இப்படைக்கலன்கள் தமிழகத்தில் நாட்டுப்பற்றை வளர்க்கத் தொடங்கின(2).  இவ்வளர்ச்சி அறியாமையில் தூங்கிக் கிடந்த தமிழக மக்களைத் தட்டி எழுப்பி அவர்களுக்கு விடுதலை உணர்வை வளர்த்தது. எனவே, தமிழகத்தில் இந்திய நாட்டுப்பற்று வளர்ச்சி அடைவதற்குத் தமிழகத் தலைவர்களின் பங்கு, பத்திரிக்கைகள், நாடகங்கள், மேடைப்பேச்சுக்கள், நாவல்கள், சிறுகதைகள் ஆகியன எவ்வாறு அடிப்படையாக இருந்தன என்பது பற்றியும், அவைகளால் நாட்டுப்பற்று கவிதைகள் எவ்வாறு பரவின என்பது பற்றியும் ஆராய்வது அவசியமாகிறது.

தமிழகத் தலைவர்களின் பங்கு:

   நாட்டுப்பற்று ஒவ்வொரு மனிதரிடமும் காணப்படுகிறது. தன்னலத்தை மறந்து பிறருக்காக உழைக்க எண்ணுகின்றவர்களிடம் இப்பற்று வெளிப்படுகிறது. அவர்களே நாட்டுப்பற்றுடையவர்களாக மாறுகிறார்கள். நாட்டின்மீது அதிக ஈடுபாடு கொள்பவர்களே நாட்டுத் தலைவர்களாக மாறுகிறார்கள். தமிழகத்தில் நாட்டுப்பற்றைப் பரப்பிய தலைவர்களின் தியாகத்தால் தமிழ்நாடு விழிப்படைந்தது(3).  தமிழகத்தில் நாட்டுப்பற்று வளர்ச்சி அடைவதற்குத் தூண்டுதலாக இருந்த தமிழகத் தலைவர்களை பின்வருமாறு பாகுபாடு செய்யலாம்.

1. ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள்

2. தீவிரவாதத் தலைவர்கள்

3. பயங்கரவாதத் தலைவர்கள்

4. காந்தியத் தலைவர்கள்

இவர்களைப் பற்றி இங்கே ஆராய்வோம்.

ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள்:

          இந்திய விடுதலைப் போருக்குத் தமிழகத் தலைவர்கள் செய்த தொண்டுகள் இந்திய வரலாற்றில் முதன்மையானது; முற்போக்குடையது; மக்களால் மறைக்க முடியாதது; மறுக்க முடியாதது என்றும் கருத முடிகிறது. இந்தியா விடுதலைப் பெறுவதற்குப் போர்பாசறையாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றுவதற்கு ஜி.சுப்பிரமணிய ஐயர், ரகுநாதராவ், சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகியோர் செய்த தொண்டுகள் குறிப்பிடத்தக்கவை எனக் கூறப்படுகிறது.

             ஜி. சுப்பிரமணிய ஐயர் தமிழக மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க இந்து, சுதேசமித்திரன் என்ற இரு பத்திரிகைகளைத் தொடங்கினார். அவருடைய சுதேசமித்தரன் பத்திரிக்கையில் துணையாசிரியராக இருந்த சுப்பிரமணிய பாரதியார் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் கவிதைகளை எழுதுவதற்கும், அக்கவிதைகளைப் பத்திரிகைகளில் வெளியிடுவதற்கும் இவரே அடிப்படை என்றும் கூறவேண்டும்.

தீவிரவாதத் தலைவர்கள்:

   வங்காளப் பிரிவினை இந்தியர்களிடையே சுயராஜ்ய உணர்வு தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தாலும், இந்திய தேசிய காங்கிரஸில் மிதவாதம், தீவிரவாதம் என்ற இருகட்சிகள் உருவாவதற்கும் காரணமாக அமைந்தது. திலகர் தலைமையில் செயல்பட்ட தீவிரவாதத்தைத் தமிழகத்தில் சுப்பிரமணிய பாரதியார், வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் பரப்பினார்கள்.

 சுப்பிரமணிய பாரதியார், திலகரின் தீவிரவாதத்தைப் பரப்ப ‘எங்கள் காங்கிரஸ் யாத்திரை’, ‘புதிய கட்சியின் கொள்கைகள்’ என்ற இரண்டு உரைநடை நூல்களை வெளியிட்டார். ‘ஸ்வதேச கீதங்கள்’, ‘ஜன்ம பூமி’ என்ற இரண்டு கவிதை நூல்களையும் வெளியிட்டார். இந்நூல்களில் இடம் பெற்ற கவிதைகளையும் கட்டுரைகளையும் அவர் வெளியிட்ட ‘இந்தியா’, ‘சக்கரவர்;த்தினி’, ‘பாலபாரதம்’ போன்ற பத்திரிக்கைகளில் வெளியிட்டார். தீவிரவாதியான விபின் சந்திர பாலரை சென்னைக்கு அழைத்து மக்களிடையே தீவிரவாதத்தை வளர்த்தார். பாரதியாரின் தீவிரவாதம் எழுத்தளவில், பேச்சளவில் மட்டுமே செயல்பட்டது. உடலையும், உயிரையும் வருந்தச்செய்யும் செயலளவில் அவர் ஈடுபடவில்லை என்று தெரிகிறது.

   பேச்சளவில், எழுத்தளவில் இருந்த தீவிரவாதத்தை தமிழகத்தில் செயலளவில் பரப்பியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை என்பதனை,

  “அந்நாளில் சிதம்பரன் முன் நட்டவித்தாம்

  விழுதுபல விட்ட பெருமரமாய் இன்று

  வெவ்வேறு கிளைகளுடன் விளங்கக் காண்போம்” 

      என்ற நாமக்கல் கவிஞரின் பாடல் மூலம் சிதம்பரம்பிள்ளையின் தீவிரவாதச் செயல்கள் பல தீவிரவாதிகளை உருவாக்கியது என உணரமுடிகின்றது. தீவிரவாதத்தைப் பரப்புவதற்கு வடநாட்டுக்குத் திலகர் என்றால் தென்னாட்டுக்குச் சிதம்பரம் பிள்ளை என்கிறார் நாமக்கல் கவிஞர்(4).  தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு திலகரே இவருக்கு குருவாக இருந்தார்(5).

     சென்னையில் விவேகானந்த மடத்தைச் சேர்ந்தவரிடம் வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேச அறிவு பெற்றார்(6). அவ்வறிவைக் கொண்டு தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சங்கம், தரும சங்கம், தரும சங்க நெசவுச்சாலை, சுதேசிய நாவாய்ச் சங்கம், சுதேசிய பண்டகச்சாலை ஆகியவற்றை நிறுவி மக்களிடையே சுதேசிய உணர்வைப் பரப்பினார்.

  திலகரின் சுதேசிய கொள்கைப்படி ஆங்கிலேயர்களின் வாணிபத்தை ஒடுக்கி அவர்களை தமிழகத்திலிருந்து விரட்டவேண்டும் என்ற பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்திய வ.உ.சிக்கு பல துன்பங்கள் நேர்ந்தன. சுதேசிய கப்பல் கம்பெனியும், சுதேசிய நெசவுச் சாலையும் லாபம் தராது என்று நன்கொடை தர சிலர் மறுத்தனர். வ.உ.சிதம்பரம்பிள்ளை மனம் தளராமல் சுதேசியக் கப்பல் கம்பெனியை நடத்தி ஆங்கிலேயக் கப்பல் கம்பெனியை ஒடுக்கினார். இந்நிலையில் ஆங்கிலேயர் செய்த சூழ்ச்சி வ.உ.சி. பொருளை இழப்பதற்கும், சுதேசியக் கப்பல் கம்பெனியை விட்டு வெளியேறுவதற்கும் காரணமாக அமைந்தது. இந்நிலையில் மனம் தளராமல் பம்பாய்க்குச் சென்று புதுக்கப்பலை வாங்கி வந்தார். வ.உ.சி.யின் சுதேசிய உணர்வுக்கு வங்காளத்தில் ஏற்பட்ட சுதேசிய இயக்கமும், திலகரின் தீவிரவாதப் போக்கும் அடிப்படையாக அமைந்தன. வ.உ.சி.யின் சுதேசிய உணர்வு தடைபடுத்தப்பட்ட நிலையில் விபின் சந்திரபாலரின் விடுதலை விழா அவரைச் சுயராஜ்ய உணர்வுக்கு மாற்றியது. இவருடைய நாட்டுப்பற்றை பாரதியாரின் கவிதைகள் தெளிவாகக் காட்டுகின்றன.

    1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நிறுவப்பட்ட ‘தேசாபிமான சங்கம்’ வ.உ.சிதம்பரம் பிள்ளையையும், சுப்பிரமணிய சிவாவையும் ஒன்றாக இணைத்தது. அக்கால மக்கள் இவர்களை ‘அரசியல் இரட்டையர்கள்’ என்றும் அழைத்தனர். இவர்கள் செய்த பிரசங்கம் மக்களிடையே நாட்டுப்பற்றைத் தூண்டியதால் கூட்டம் போட இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி விபின் சந்திரபாலரின் விடுதலையைக் கொண்டாடியதால் சிறைத் தண்டனைப் பெற்றனர். சிறையில் இவர்களின் தீவிரவாதப் போக்கை ஒடுக்க கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டன.

      தமிழகத்தில் தீவிரவாதத்தைப் பரப்பிய பாரதிக்குப் புதுவை அடைக்கலம் தந்தது. வ.உ.சி.க்கும், சுப்பிரமணிய சிவாவிற்கும் சிறைத் தண்டனை கிடைத்தது. சிறையில் வ.உ.சி.க்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகள் அவரின் தீவிர வாதப்போக்கை ஒடுக்கியது. சிறைத் தண்டனையால் தொழுநோயுடன் வெளிவந்த சுப்பிரமணிய சிவா(7) மனம் தளராமல் மீண்டும் பத்திரிக்கை மூலமும், பேச்சாற்றல் மூலமும் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க முயன்றார். தொழுநோய் அவரை துன்புறுத்திய நிலையிலும் நாடு விடுதலை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதனை,

  பத்திரிகை புத்தகம் பல வழியாக

  உரிமை வேண்டி உரிமை வேண்டி

  இரவும் பகலும் எழுதி எழுதி

  வரவும் என் கை வலிக்குது ஐயோ

  மனமும் உடைந்தது மார்பும் நோகுது

  இனமும் இல்லை இனியென் செய்கேன்

  கொடியதோர் வியாதி கொல்லுது என்னை”

                 என்று அவர் பாடிய பாடல் மூலம் தெளிவாக உணர முடிகிறது. நாட்டுப்பற்று என்னும் வித்துக்கு ஆத்ம தியாகிகளின் இரத்தமே ஜீவநீர் ஆகிறது என்று கூறிய லாலா லஜபதிராயின்(8) கருத்துக்கு ஏற்ப தமிழகத்தில் ஆத்மத் தியாகியாகச் செயல்பட்டு தொழுநோயைப் பெற்றவர் சுப்பிரமணிய சிவா. இவரைத் தமிழகத் தலைவர்களில் முதன்மையானவர் என்றும் கூறலாம்.

   அடுத்த வலைப்பதிவில் தமிழகத்தில் நாட்டுப்பற்று வளர்ச்சி அடைவதற்குத் தூண்டுதலாக இருந்த தமிழகத் தலைவர்களில் பயங்கரவாதத் தலைவர்கள் மற்றும் காந்தியத் தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


அடிக்குறிப்புகள்

1.M.K.Gandhi,The story of My Experiments with truth, P.347.

2. சங்கு சுப்பிரமணியம், சுதந்திரச் சங்கு, 6.7.1931.

3. சாரங்கபாணி, ஆத்மசக்தி, தொகுதி-1, பகுதி-2, ஆகஸ்ட், 1923, ப.38.

4. நாமக்கல் கவிஞர், கப்பலோட்டிய தமிழன், ப.8.

5. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.228.

6. வ.உ. சிதம்பரபிள்ளை, வ.உ.சி. சுயசரிதை, ப.43.

7. வெ. சாமிநாதசர்மா, நான் கண்ட நால்வர், பக்.190-192.

8. லாலா லஜபதிராய், யங் இந்தியா, கல்வி (பு.பெ.), (பொ.பெ.ஆ.) யுவபாரதம்ப.276.



Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

 





கருத்துரையிடுக

0 கருத்துகள்