இந்திய நாட்டுப்பற்று -பகுதி 11: தமிழகத் தலைவர்களின் பங்கு -பயங்கரவாதத் தலைவர்கள் & காந்தியத் தலைவர்கள் (செண்பகராமன்,காமராசர் & இராஜாஜி)

தமிழகத் தலைவர்களின் பங்கு

 தமிழகத்தில் நிலவிய நாட்டுப்பற்றின் தன்மையையும், தமிழகத் தலைவர்களில் ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தீவிரவாதத் தலைவர்கள் ஆகியோர் நாட்டுப்பற்று வளர்வதற்கு எவ்வாறு முக்கிய பங்கு வகித்தனர் என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக பயங்கரவாதத் தலைவர்கள் மற்றும் காந்தியத் தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • பயங்கரவாதத் தலைவர்கள்
  • செண்பகராமன்
  • காந்தியத் தலைவர்கள்
  • ஈ.வெ.ராமசாமி
  • திரு.வி.க
  • வரதராசுலு நாயுடு
  • காமராசர்
  • இராஜாஜி

பயங்கரவாதத் தலைவர்கள்:

     தமிழகத்தில் தீவிரவாதம் தண்டனைகளால் தடை செய்யப்பட்ட நிலையில் பயங்கரவாதம் உருவானது. பயங்கரவாதம் தமிழகத்தில் வளர்ச்சி அடைவதற்கு வ.வே.சு. ஐயர், செண்பகராமன், நெல்லையப்பர், நீலகண்ட பிரம்மாச்சாரி, திருமாலாச்சாரியார் போன்றோர்கள் அடிப்படையாக இருந்தனர்.

     பாரிஸ்டர் படிக்க லண்டனுக்குச் சென்ற வ.வே.சு. ஐயர் வீர சவார்க்கரால் நாட்டுப்பற்றுடையவராக மாறினார். அங்கு பெற்ற பாரிஸ்டர் பட்டத்தையும் துறந்து விட்டு தாய்நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டார் (1). ஜாக்சன் என்ற ஆங்கில அதிகாரியின் கொலைக்கு லண்டனில் இருந்த பயங்கரவாதிகளின் செயல்களே தூண்டுதலாக இருந்தன என்பதை உணர்ந்த ஆங்கில அரசாங்கம் அவர்களைக் கைது செய்ய முயன்றது. அந்நிலையில் வ.வே.சு. ஐயர் மாறுவேடத்தில் புதுவையை அடைந்தார் (2). லண்டனில் போர்ப் பயிற்சி பெற்ற இவர் புதுவையில் ‘அபிநவபாரத்சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து அதில் சேர்ந்த தேசபக்தர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்தார். இவரிடம் போர்ப் பயிற்சி பெற்ற வாஞ்சிநாதன், வ.உ.சி.யின் சிறைத்தண்டனைக்குக் காரணமான ‘ஆஷ்’ என்பவரைச் சுட்டுக் கொன்றான் (3). தீவிரவாதத்தை ஒடுக்கிய ஆங்கிலேயர்களை பழிவாங்கும் எண்ணம் பயங்கரவாதிகளிடையே உருவானது என்பதைத் தெளிவாக உணர முடிகின்றது.

செண்பகராமன்:

     ஆங்கிலேயரின் பிடியிலிருந்தத் தப்பிச் சென்ற தீவிரவாதியான செண்பகராமன் ஜெர்மனிக்குச் சென்று பயங்கரவாதியாக மாறினார். போர் மூலம் இந்தியாவை விடுவிக்கக் கருதிய செண்பகராமன் ஜெர்மனியிலுள்ள இந்தியர்களை ஒன்று திரட்டி ‘இந்திய தேசியத் தொண்டர்ப்படை’ (I.N.V.Co.) ஒன்றை உருவாக்கினார். முதல் உலகப்போரின் போது இவர் ஜெர்மனியின் உதவியுடன் ‘எம்டன்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலில் வந்து சென்னையிலுள்ள ஜார்ஜ் கோட்டையைத் தாக்கினார் (4). இவர் செய்த இந்த முயற்சி பயனளிக்கவில்லை என்றாலும் இரண்டாம் உலகப்போரின்போது சுபாஷ் சந்திரபோஷ் பயங்கரவாதியாக மாறுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது என்றும் கருத முடிகிறது.

காந்தியத் தலைவர்கள்:

    திலகர், அன்னிபெசண்ட் ஆகியோரின் தன்னாட்சி இயக்கம் வளர்ச்சி பெற்ற நிலையில் தமிழகத்தில் புதிய தலைவர்கள் உருவாகினர். ஆரம்பத்தில் அன்னிபெசண்ட்டின் தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்ட சிலர் காலப்போக்கில் காந்தியவாதிகளாக மாறினர். அதற்குத் தமிழகத்தில் நிலவிய பிராமணர்களின் ஆதிக்கம் காரணம் என அறியமுடிகிறது (5). காந்தியம் தமிழகத்தில் வளர்ச்சியடையத் தொடங்கிய நிலையில், திலகரின் தீவரவாதத்தைச் சேர்ந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றோர் காந்தியத்தை எதிர்த்துச் செயல்பட்டனர்.

  அன்னிபெசண்ட்டின் தன்னாட்சி இயக்கத்தால் நாட்டுப்பற்றுடையவர்களாக மாறிய ஜி.வரதராஜீலு நாயுடு, எஸ்.சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்தால் காந்தியக் கொள்கைகளில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கஸ்தூரி ரங்க ஐயங்காரின் முயற்சியால் சத்யாக்கிரக இயக்கம் மக்களின் பேராதரவைப் பெறத் தொடங்கியது.

     தமிழகத்தில் காந்திய இயக்கம் வளர்ச்சியடையத் தொடங்கிய நிலையில் காந்திய இயக்கத் தலைவர்கள், காந்திய எதிர்ப்பு இயக்கத் தலைவர்கள் என்ற இருபிரிவினராகச் செயல்பட்டனர். இராஜாஜி, திரு.வி.க., ஈ.வெ.ராமசாமி, வரதராசுலு நாயுடு, காமராசர், சேலம் விஜயராகவாச்சாரியார் போன்றோர் காந்தியத்தைப் பரப்புவதில் முன்னோடிகளாக இருந்தனர். எஸ்.சத்தியமூர்த்தி, சீனிவாச ஐயங்கார், வ.உ.சிதம்பரம்பிள்ளை போன்றோர் காந்தியத்தை எதிர்த்துச் செயல்பட்டனர். இவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை வன்முறையாகவும் மாற்றினர். ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்த நிலையில் காந்திய எதிர்ப்புத் தலைவர்கள் புதியதாகத் தோன்றிய ‘சுயராஜ்யக் கட்சியை’ ஆதரித்தனர்.

 1920-இல் விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நாகபுரியில் கூடிய காங்கிரஸ் ஒத்துழையாமை தீர்மானத்தை நிறைவேற்றியது. விஜயராகவாச்சாரியாரின் தலைமை தமிழகத்தில் காந்தியத்திற்கு இருந்த வலிமையைக் காட்டுகிறது.

ஈ.வெ.ராமசாமி:

 ஆரம்ப காலத்தி;ல் பரமபக்தராக இருந்த ஈ.வெ.ராமசாமிக்கு அரசியல் உலகைக் காண்பித்தவர்கள் வரதராசுலு நாயுடு, இராஜாஜி போன்றவர்களாவர் (6). ரௌலட்சட்ட எதிர்ப்புப் போருக்குப் பிறகு இவர் காங்கிரஸில் சேர்ந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொண்டில் முதன்மையாகத் திகழ்ந்தார் (7). காங்கிரஸ் என்ற புதியக் கோட்டையை தமிழகத்தில் வலுப்படுத்தியவர் இவரே என்கிறார் நெ.து.சுந்தரவடிவேலு (8). தமிழகத்தில் ஒத்துழையாமை இயக்கம் செயல்படத் தொடங்கிய நிலையில் இவர் ஒத்துழையாமை இயக்கத்தின் கொள்கைகளான கோர்ட்டுகளை பகிஷ்கரித்தல் என்ற தீர்மானத்தின்படி ரூ.28,000 மதிப்புள்ள பணப்பத்திரங்களை விட்டுவிட்டார்(9).  இருபத்தொன்பது பொதுநிலையங்களில் வகித்து வந்த பதவிகளைத் துறந்தார். ஆண்டுக்கு இருபதாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் வாணிபத்தையும் துறந்தார். அன்னிய ஆடைகளை அகற்றி விட்டுக் கதராடையை உடுத்தினார். கதர் உற்பத்தியைப் பெருக்க ராட்டினத்தைத் தூக்கிக்கொண்டு ஊர்ஊராகச் சொற்பொழிவாற்றி மக்களைத் தூண்டினார். திருச்செங்கோட்டில் கதர் ஆசிரமத்தைத் திறந்து வைத்துத் தமிழ் நாட்டில் கதர் பரவுவதற்குக் காரணமாக இருந்தார் (10).  மதுவிலக்குப் பிரச்சாரத்தில் தான் ஈடுபட்டது மட்டுமல்லாமல் தன் மனைவியையும், தங்கையையும் ஈடுபடுத்தினார். இவ்விருவரது முயற்சியால் தமிழகம் மதுவிலக்குப் பிரச்சாரத்தில் இந்தியாவிலேயே முன்னோடியாகத் திகழ்ந்தது(11). 

 காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் ஈ.வெ.ராவுக்கு சமுதாயச் சீர்கேடுகளை அறிய வாய்ப்பாக அமைந்தது. பிராமணர் என்ற இனமே சமுதாயச் சீர்கேடுகளுக்குக் காரணம் என்பதை உணர்ந்த இவர் சமுதாயச் சீர்திருத்தப் பணியில் ஈடுபடலாயினார். சமுதாயம் சீர்திருத்தம் அடைய ‘வகுப்புரிமை’ என்ற தீர்மானத்தைக் காங்கிரஸில் இணைக்க முயன்றார். இத்தீர்மானம் காங்கிரஸால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் இவர் காங்கிரஸை விட்டு விலகினார்.

   சமுதாயச் சீர்திருத்தமே இந்தியா விடுதலை அடைவதற்கான அடிப்படை என்பதை மக்களிடையே உணர்த்த ‘சுயமரியாதை’ இயக்கத்தைத் தொடங்கினார். காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்கள் இவர் புதிய வழிமுறைகளைப் பின்பற்றுவதற்குத் தூண்டுதலாக அமைந்திருக்க வேண்டும்.

திரு.வி.க:

      வங்கப் பிரிவினையின்போது அரசியல் உணர்வு பெற்ற திரு.வி.க. 1914-ஆம் ஆண்டு முதல் அன்னிபெசண்ட் அம்மையார் நடத்திய கிளர்ச்சிகளில் ஈடுபட்டார்.  ஆரம்பத்தில் தீவிரவாதியாகச் செயல்பட்ட இவர், போலக் என்பவர் சென்னையில் காந்தியடிகளைப் பற்றி பேசியதைக் கேட்டார். அப்பேச்சால் இவர் காந்திய பக்தராக மாறினார். காந்தியடிகளை நேரில் கண்டபிறகு அவர் நடத்திய இயக்கங்களிலும் ஈடுபடலானார் (12). தன் அரசு பெறுவதற்கு நெப்போலியனும், கெய்சரும் மேற்கொண்ட கொலைமுறை இனி வேண்டாம். காந்தியடிகள் வலியுறுத்திய அறப்போர் முறையே இனிவேண்டும் என மாணாக்கர்களிடம் முழக்கம் செய்தார் (13). காந்தியடிகளின் தீண்டாமை விலக்கு, மது விலக்கு, அரிஜன சேவை, கதர் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்த திரு.வி.க. 1925-இல் பெரியார் கொண்டுவந்த வகுப்புவாதத் தீர்மானத்தை நிராகரித்தார். சாதி வேறுபாடற்ற காந்தியத்தை உருவாக்குவதையே தனது நோக்கமாகக் கொண்டிருந்தார் என அறியமுடிகிறது. வகுப்பு வாதத்தைக் கண்டித்து இவர் தனது ‘தேசபக்தன்’ பத்திரிக்கையில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் (14).

வரதராசுலு நாயுடு:

     ஆரம்பத்தில் தீவிரவாதத்தில் ஈடுபட்ட வரதராசுலு நாயுடு தன் பேச்சாற்றலால் மக்களிடையே நாட்டுப்பற்றைத் தூண்டினார். இவருடைய பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்ட மக்கள் இவரைத் ‘துப்பாக்கி நாயுடு’ என அழைத்தனர். இவருடைய பேச்சாற்றல் திரு.வி.க., ஈ.வெ.ரா., சத்தியமூர்த்தி, காமராசர் போன்ற தலைவர்களைத் தூண்டியது என உணரமுடிகிறது. ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்திற்குப் பிறகு காந்தியடிகளால் கவரப்பட்ட இவர் ‘தமிழ்நாடு’ என்ற பத்திரிக்கையின் மூலம் காந்தியக் கொள்கைகளைப் பரப்பி வந்தார். காந்தியடிகள் சிறைசென்றது முதல் விடுதலையாகும் வரை எவ்வித வரியும் அரசாங்கத்திற்குத் தராமல் பல துன்பங்களை அனுபவித்தார்.

காமராசர்:

   திரு.வி.க., வரதராசுலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப், சத்தியமூர்த்தி, காந்தியடிகள் ஆகியோர்களது செயல்கள் காமராசரை நாட்டுப்பற்றுடையவராக மாற்றியது (15). சத்தியமூர்த்தியின் பிரதானச் சீடராக காமராசர் செயல்பட்டாலும்  காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் இவரைக் கவர்ந்தது. 1924-இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலை முன்னின்று நடத்தி வெற்றி கண்டார். இவருடைய நாட்டுப்பற்றை, 

  திருவிருக்கும் காந்திமகான் கொள்கை தாங்கும்

  தேசபக்தன், ‘உழைப்பதனால் உயர்ந்த செம்மல்”

என்ற பாடல் மூலம் நாமக்கல் கவிஞர் (16) வெளிப்படுத்தியுள்ளார்.

 காமராசர், காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகம், தனிநபர் சத்தியாக்கிரகம் போன்ற இயக்கங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றார். எந்தத் துன்பம் வந்தாலும் தாங்கிக்கொள்ளும் மனம் படைத்த இவர் தனது கடின உழைப்பால் 1940-இல் தமிழ்நாடு காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். சிறந்த ராஜதந்திரம் உடைய காங்கிரஸ் தலைவர் என இந்தியா முழுவதும் பாராட்டும் நிலையை அடைந்தார் (17).

இராஜாஜி:

           1897-இல் திலகரின் தீவிரவாதத்தை எதிர்க்கும் தன்மையால் நாட்டுப்பற்றாளராக மாறிய ராஜாஜி சூரத் காங்கிரஸின்போது திலகரின் தீவிரவாதத்திற்கு ஆதரவாக வ.உ.சி.யுடன் சென்றார். தீவிரவாதம் மட்டும் அரசியல் விடுதலையைத் தராது அதனுடன் சமுதாயச் சீர்திருத்தமும் இணைந்து செயல்பட்டால் அரசியல் விடுதலை விரைவில் கிடைக்கும் என்பதை நன்குணர்ந்த இராஜாஜி சேலத்தில் தீண்டாமையையும், மதுவையும் ஒழிக்க முயன்றார் (18). இவரே காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்களுக்கு வழிகாட்டியவர் என்றும் கருத முடிகிறது.

   ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்தின்போது காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இராஜாஜி 1919-இல் காந்தியடிகள் சத்தியாக்கிரகம் பற்றி ஆலோசனை செய்ய தமிழகம் வருவதற்குக் காரணமாக இருந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாகத் தன் வக்கீல் தொழிலைத் துறந்தார். தன் பிள்ளைகளைக் கலா சாலையைவிட்டு வெளியேறச் செய்தார். காந்தியடிகளின் கொள்கையை நன்கு புரிந்துகொண்ட மக்கள் இவரைத் ‘தென்னாட்டு காந்தி’ என அழைத்தனர். ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்த நிலையில் இவர் சட்டசபை நுழைவுத் தீர்மானத்தை எதிர்த்தார்.

            காந்தியடிகளின் கொள்கைகளால் கவரப்பட்ட இராஜாஜி, அவர் மேற்கொண்ட உப்புச் சத்தியாக்கிரகம், தனிநபர் சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவை தமிழ்நாட்டில் வளர்ச்சியடைய முதன்மையாகச் செயலாற்றினார். இவருடைய நாட்டுப்பற்று இவரைச் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆக்கியது என்றும் கருத முடிகிறது.

    மேலே சொல்லப்பட்ட கருத்துக்களிலிருந்து தமிழகத் தலைவர்கள் சூழ்நிலைக்கு ஏற்பக் கொள்கைகளை மாற்றிக்கொண்டு நாட்டுப்பற்றை வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. ஆரம்பகால மிதவாதத் தலைவர்கள் தீவிரவாதம் தீவிரமடைந்த நிலையில் தீவிரவாதிகளாக மாறினர். தீவிரவாதம் வலுவிழந்த நிலையில் காந்தியத் தலைவர்கள் தோன்ற ஏதுவான சூழ்நிலையை உருவாக்கினர் என அறிய முடிகிறது.

     அடுத்த வலைப்பதிவில் பத்திரிகைகளில் இந்திய நாட்டுப்பற்று பற்றியும், ஆரம்பகாலப் பத்திரிகைகள் பற்றியும், திலகர் காலப் பத்திரிகைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


அடிக்குறிப்புகள்

1.  எஸ். சங்கரன், தமிழகப் பெரியார்கள், ப.21.

2.  மா.பொ. சிவஞானம், சுதந்திரப் போர்க்களம், ப.111.

3. Mahajan,The Nationalist Movement in India, P.198.

4. பாரத நாட்டு விடுதலை இயக்க வீரர்கள், பள்ளிக்கல்வி இயக்குநர் குழு தொகுத்தது, பக்.54-60.

5. பி.யோகீஸ்ரவன், தமிழ்க்கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள், பக்.60-61.

6. வ.ரா. தமிழ்ப் பெரியார்கள், ப.15.

7. திரு.வி.க., திரு.வி.காவின் வாழ்க்கைக் குறிப்புகள், ப.433.

8.  நெ. து, சுந்தரவடிவேலு, புரட்சியாளர் பெரியார், ப.127.

9. வே. ஆணைமுத்து, (ப.ஆ.), பெரியார் ஈ.வே. ராவின் சிந்தனைகள் முதல் தொகுதி, ப.627.

10. எஸ். நடராஜன், சுதந்திரச் சிந்தனைகள், ப.188.

11. சாமி சிதம்பரனார், தமிழர் தலைவர் பெரியார், பக்.68-69.

12. திரு.வி.க. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், முன்னுரை.

13. திரு.வி.க. இளமை விருந்து அல்லது சீர்திருத்தம், ப.76.

14. திரு.வி.க. திரு.வி.காவின் வாழ்க்கைக் குறிப்புகள், ப.269.

15.  நாக. சண்முகம், காமராசர், ப.49.

16. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.49.

17.  நெ. து. சுந்தரவடிவேலு, நினைவில் நின்றவர்கள், ப.79.

18.  நாரணதுரைக்கண்ணன், இராஜாஜி, பக்.15-18.


Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication


கருத்துரையிடுக

0 கருத்துகள்