பத்திரிகைகளில் இந்திய நாட்டுப்பற்று
தமிழகத் தலைவர்களில் பயங்கரவாதத் தலைவர்கள் மற்றும் காந்தியத் தலைவர்கள் ஆகியோர் நாட்டுப்பற்று வளர்வதற்கு எவ்வாறு முக்கிய பங்கு வகித்தனர் என்பது பற்றி முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக பத்திரிகைகள் மூலம் இந்திய நாட்டுப்பற்று வளர்வதற்கு தமிழகத் தலைவர்கள் ஆற்றியப் பணி பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- பத்திரிகைகளில் இந்திய நாட்டுப்பற்று
- ஆரம்ப காலப் பத்திரிக்கைகள்
- திலகர் காலப் பத்திரிக்கைகள்
பத்திரிகைகளில் இந்திய நாட்டுப்பற்று:
தமிழகத் தலைவர்கள் நாட்டுப்பற்றை வளர்ப்பதற்கு பெரும்பாலும் பத்திரிக்கைகளையும் பயன்படுத்தியுள்ளனர். பத்திரிக்கை வாயிலாகச் செய்திகளைப் பரப்பும் புதுமுறை கி.பி.எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றியது என்றும், அதன்படி வெளியான முதல் பத்திரிக்கை ‘பீகிங் கெஜட்’ (Peking Gazettee) என்றும் (1) அறிய முடிகிறது. ஆங்கிலேயரின் வருகையால் 1780-இல் ‘பெங்கால் கெஜட்’ என்ற பத்திரிக்கை இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்டது. அப்பத்திரிக்கை ஆங்கிலேயர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டியது (2). ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட அப்பத்திரிக்கை அவர்களுக்கே எதிர்ப்பாகச் செயல்பட்டதால் தடை செய்யப்பட்டது. முதல் பத்திரிக்கை தடை செய்யப்பட்டாலும் அதனைத் தொடர்ந்து வெளியான பத்திரிக்கைகள் ஆங்கிலேயரின் குறைகளைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. பத்திரிக்கை வளர்ச்சி தடைப்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் தடையை எதிர்த்துச் செயல்படத் தொடங்கினர். சென்னை, பம்பாய், கல்கத்தா போன்ற இடங்களில் தாய்மொழிப் பத்திரிக்கைகள் பல தோன்றின. தாய்மொழிப் பத்திரிக்கைகளின் வளர்ச்சி இந்திய மக்களிடையே புத்துணர்வை ஏற்படுத்தியது. ஆரம்ப காலத்தில் சமுதாயத்தில் காணப்படும் சீர்கேடுகளை வெளிப்படுத்தி வந்த தாய்மொழிப் பத்திரிக்கைகள் 1857-இல் நடைபெற்ற சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பிறகு நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் நிலையை அடைந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்மொழியில் நாட்டுப்பற்றைத் தூண்டும் பத்திரிக்கைகள் தோன்றின. அக்காலப் பத்திரிக்கைகள் நாட்டுப்பற்றைத் தூண்டும் கவிதைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டன. அதற்குத் தமிழகத்தில் வாழ்ந்த தேசபக்தர்களும், தமிழகத் தலைவர்களும் தூண்டுதலாக இருந்தனர். தமிழகத்தில் 1882-ஆம் ஆண்டு முதல் 1950-ஆம் ஆண்டு வரை வெளியான சுமார் 300-க்கும் மேற்பட்ட பத்திரிக்கைளில் ஒரு சில பத்திரிக்கைகளே ஆங்கிலேயரை எதிர்த்துச் செயல்பட்டன. அவைகளைப் பற்றி அறிந்து கொள்வது இவ்வாய்விற்குத் தேவையான ஒன்றாகும்.
ஆரம்ப காலப் பத்திரிக்கைகள்:
தமிழகத்தில் பதினெட்டாம் நூற்றாண்டு முதல் தேசபக்தர்கள் பலர் தோன்றினாலும் அவர்கள் தீவிரமாகச் செயல்படவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஜி.சுப்பிரமணிய ஐயர் நாட்டுப்பற்றை வளர்க்க ‘சுதேசமித்திரன்’ என்ற பத்திரிக்கையை 1882-இல் தொடங்கினார் (3). இவரே நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் தமிழ்ப் பத்திரிக்கைகள் தோன்றுவதற்கு வித்திட்டவர் எனத் தெரிகிறது.
திலகர் காலப் பத்திரிக்கைகள் (1900 முதல் 1920 வரை):
திலகரின் தீவிரவாதப்போக்கு பத்திரிக்கைகளையும், பத்திரிகை ஆசிரியர்களையும் நாட்டுப்பற்றுடையவர்களாக மாற்றியது. பாரதியார் தனது சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் தேசபக்தர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் வெளிப்படுத்தினார்.
பாரதியாரின் தூண்டுதலால் செயல்பட்டு வந்த ‘இந்தியா’ என்ற மற்றொரு பத்திரிக்கை நாட்டுப்பற்றை வளர்ப்பதில் பல உத்திமுறைகளைக் கையாண்டது. இப்பத்திரிக்கையில் வெளியான கட்டுரைகள், கவிதைகள் அக்கால மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்ப்பதாக அமைந்துள்ளன. மிதவாதியான வி. கிருஷ்ணசாமி ஐயர் சென்னை ஐகோர்ட் ஜட்ஜாக உயர்த்தப்பட்டதை 16.10.1909-இல் வெளியான இந்தியா பத்திரிக்கை கிண்டல் செய்து காட்டுகிறது. சிவாஜி தனது சைதன்யத்தாரிடம் கூறிய வீரஉரையையும் அது குறித்து கற்பனைப் பாடலையும் 17.11.1906-இல் வெளியான இந்தியா பத்திரிக்கையில் காணமுடிகிறது. மதன்லால் திங்காராவின் வீரச்செயல், அவருடைய இறுதி வாக்கு மூலம், வீரசவார்க்கரின் ‘எரிமலை’ என்ற நூல் தடைசெய்யப்பட்டதற்கான காரணம் போன்ற செய்திகள் 07.08.1909-இல் வெளியான இந்தியா இதழ் தெரியப்படுத்துகிறது. பழித்துக் கூறுதல், வீரஉணர்வை உண்டாக்குதல், நாட்டுப்பற்றைத் தூண்டும் புத்தகங்களை விளம்பரம் செய்தல், தேசபக்தர்களின் தியாக உணர்வை வெளிப்படுத்துதல் போன்ற உத்திகளின் மூலம் இந்தியா பத்திரிக்கை நாட்டுப்பற்றை வளர்க்க முயன்றது.
திலகரின் தீவிரவாதத்தைப் பின்பற்றிய வ.உ.சி. உலகம் முழுவதும் இந்துஸ்தானத்தின் பெருமையை வெளிப்படுத்த 21 பாஷைகளில் பத்திரிக்கைகளை நடத்த எண்ணி இருந்தார். ‘விவேகபானு’, ‘பாரதி’ என்ற இரு பத்திரிக்கைகள் மட்டுமே அவரால் நடத்த முடிந்தது. நடத்துவதாக இருந்த ‘சுயராஜ்யம்’ என்ற பத்திரிக்கை தடை செய்யப்பட்டது.
உறங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சாதியினை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி அச்சாதிக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் உண்டு பண்ண விரும்பியவர் சுப்பிரமணிய சிவா. இவர் ‘ஞானபானு’, ‘பிரபஞ்சமித்திரன்’, ‘இந்திய தேசாந்திரி’ போன்ற பத்திரிக்கைளின் மூலம் நாட்டுப்பற்றை வளர்த்தார்.
திலகர் காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த தலைவர்கள் பத்திரிக்கையை நடத்துவதிலும், அவற்றில் கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிடுவதன் வாயிலாகவும் நாட்டுப்பற்றை வளர்க்க முயன்றனர்.
அடுத்த வலைப்பதிவில் காந்தியகாலப் பத்திரிக்கைகள் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. ச.வே. சுப்பிரமணியம் (ப.ஆ), இளவேணில் தொகுதி -3, ப.308.
2. மா. இளங்கோவன், இந்திய இதழ்கள், ப.78.
3. மா.பொ. சிவஞானம், விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, ப.224.
4. சக்திதாசன் சுப்பிரமணியம், மகாகவி பாரதியார், பக்.41-42.
5. ரா. அ. பத்மநாபன் (தொ.ஆ.), பாரதியின் கடிதங்கள், ப.44.
Sponsorship
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication
0 கருத்துகள்