இந்திய நாட்டுப்பற்று -பகுதி 13: காந்தியகாலப் பத்திரிக்கைகள்-1 (தேசபக்தன்,பிரபஞ்சமித்திரன்,சுதந்திரன்,கல்கி,தேச சேவகன்,ஆத்ம சக்தி,காந்தி & குமரன்)

காந்தியகாலப் பத்திரிக்கைகள்-1

     பத்திரிகைகள் மூலம் இந்திய நாட்டுப்பற்று வளர்வதற்கு தமிழகத் தலைவர்கள் ஆற்றியப் பணி பற்றி முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக காந்திய காலத்தில் வெளியான பத்திரிகைகள் காந்தியக் கொள்கைகளை விளக்கும் கவிதைகளையும், கட்டுரைகளையும் வெளியிடுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. காந்தியகாலப் பத்திரிக்கைகளான தேசபக்தன், பிரபஞ்சமித்திரன், சுதந்திரன், கல்கி, தேச சேவகன், ஆத்ம சக்தி, காந்தி மற்றும் குமரன் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • தேசபக்தன்
  • பிரபஞ்சமித்திரன்
  • சுதந்திரன்
  • கல்கி
  • தேச சேவகன்
  • ஆத்ம சக்தி
  • காந்தி
  • குமரன்

தேசபக்தன்:

   காந்திய காலத்தில் திரு.வி.க.வால் தொடங்கப்பட்ட ‘தேசபக்தன்’ என்ற பத்திரிக்கை தேசபக்தியை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது என்பதை, ‘தேசபக்தன் சுதந்திரத்தை விரும்புகிறான்’ சுயாட்சி கேட்கிறான் (1என்ற கருத்து தெளிவாக்குகிறது. இப்பத்திரிக்கை கிலாபத் கிளர்ச்சி, சத்தியாக்கிரக இயக்கம், பஞ்சாப் படுகொலை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தபோது மக்களைத் தூண்டும் கட்டுரைகளை வெளியிட்டது (2). தேசபக்தன் பத்திரிக்கையில் வெளியான கட்டுரைகள் புதுவையில் தலைமறைவாய் இருந்த வ.வே.சு.ஐயர், பாரதியார் ஆகியோர் பிரிட்டிஷ் எல்லைக்குள் சுதந்திரமாக வரக் காரணமாக இருந்தது. தேசபக்தன் பத்திரிகைப் பொறுப்பிலிருந்து வெளியேறிய திரு.வி.க. ‘நவசக்தி’ என்ற பத்திரிகையை 1920-இல் தொடங்கினார். இப்பத்திரிகை மக்களிடையே காந்திய பக்தியை வளர்ப்பதில் முனைந்தது.

            காந்தியடிகளின் சத்தியாக்கிரக இயக்கம் தமிழகத்தில் வளர்ச்சியடைவதற்குத் தூண்டுதலாக இருந்தவர் கஸ்தூரி ரங்க ஐயங்கார் ஆவார். இவர் காந்தியடிகள் ஆங்கிலத்தில் வெளியிட்ட ‘சத்தியாக்கிரகி’ என்ற பத்திரிக்கையைத் தமிழில் அரசின் தடையை மீறி வெளியிட்டார். காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதையே இப்பத்திரிகை நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதை உணர முடிகிறது.

பிரபஞ்சமித்திரன்:

                 ‘தென்னாட்டுத் திலகர்’ என்று போற்றப்பட்ட வரதராசுலு நாயுடு ஆரம்ப காலத்தில் திலகரின் தீவிரவாதக் கருத்துக்களை தனது ‘பிரபஞ்சமித்திரன்’ என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். இப்பத்திரிக்கை மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வு அவர் மீது அரசாங்கம் ராஜதுவேச வழக்குத் தொடர காரணமாக அமைந்தது. இவர் 1920 முதல் வெளியிட்ட ‘தமிழ்நாடு’ என்ற பத்திரிகை காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

சுதந்திரன்:

       காந்திய பக்தியில் ஈடுபட்ட வ.ராமசாமி ஐயங்கார் ‘சுதந்திரன்’, ‘சுயராஜ்யம்’ என்ற இரு பத்திரிக்கைகளில் விடுதலை உணர்வைத் தூண்டினார். இவர் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்து கதர் அபிவிருத்தி, தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு போன்றவற்றைப் பத்திரிகைகளில் வெளியிட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட பாரதிதாசனின் தேசியப் பாடல்களைத் தனது ‘சுதந்திரன்’ (3) என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். இவருடைய பத்திரிக்கைத் தொண்டு காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை வெளியிடுவதில் முன்னோடியாக இருந்தது என்று தெரிகிறது. ராஜாஜி நடத்திய ‘விமோசனம்’ என்ற பத்திரிக்கை காந்தியடிகளின் கதர் அபிவிருத்தி, தீண்டாமை விலக்கு, மது விலக்கு போன்ற கொள்கைகளை வெளிப்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றியது.

கல்கி:

         விமோசனம், நவசக்தி, ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகளில் பெற்ற அனுபவத்தால் கிருஷ்ணமூர்த்தி ‘கல்கி’ என்ற புதிய பத்திரிகையை உருவாக்கினார். இப்பத்திரிகை பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இனிய, எளிய நடையில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியது. இவருடைய எழுத்தாற்றல் பீரங்கிக் குண்டுகளைப்போல் தாக்கும் திறன் வாய்ந்தது என்கிறார் டி.கே.சி. ஆங்கில ஆட்சியின் கொடுமைகளையும், முறைகேடுகளையும் வெளிப்படையாகத் தாக்கும் இயல்பு இவரிடம் இருந்ததை நன்கு உணர முடிகிறது.

தேச சேவகன்:

            சைக்கோன் சின்னையா என்பவர் வெளியிட்ட ‘தேச சேவகன்’ என்ற பத்திரிகை பாரதிதாசனின் தேசியப் பாடல்களை வெளிப்படுத்திக் காட்டியது என்கிறார் எஸ்.ஆர்.சுப்பிரமணியம். இப்பத்திரிக்கை காந்தியின் சிறப்புகளை வெளிப்படுத்தும் ‘காந்தி’ என்ற பாடலை 27.05.1924-இல் வெளியிட்டது. பாரதத் தாயின் அடிமையை மீட்க தேசபக்தர்கள் செய்துகொண்ட ‘தேச சேவகர் சபதம்’ என்ற பாடலை 02.09.1924-இல் வெளியிட்டது. ‘மகாத்மா காந்தியின் வாழ்த்தும் பிரார்த்தனையும்’ என்ற பாடல் 1924-இல் வெளியானது. காந்திய பக்தியில் ஈடுபட்ட மகளை எண்ணி வருந்தும் ‘நற்றாய் இரங்கல்’ என்ற பாடல் 22.04.1924-இல் வெளியானது. ராட்டினத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் ‘ராட்டினத்தின் பக்கலிலே’ என்ற பாடல் 05.08.1924-இல் வெளியானது. இப்பத்திரிகை காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாடல்களைப் பரப்புவதில் ஈடுபட்டதை நன்கு உணர முடிகிறது.

ஆத்ம சக்தி:

             சாரங்கபாணி வெளியிட்ட ‘ஆத்ம சக்தி’ என்ற பத்திரிகை நாட்டுப்பற்றைத் தூண்டும் பாடல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டியது. பாரதிதாசன் எழுதிய ‘சுதந்திர தேவியும் கதரும்’ என்ற பாடல் 1923-இல் ஜீலை மாதம் வெளியானது. கி.வா.ஜெகந்நாதன் எழுதிய ‘அடிமைத்தனமும் விடுதலையும்’ என்ற பாடல் 1923-இல் ஜுலை மாதம் வெளியானது. அவர் எழுதிய மற்றொரு பாடலான ‘சுதந்திரதேவி திருப்பள்ளி எழுச்சி’ என்ற பாடல் 1923-இல் செப்டம்பர் மாதம் வெளியானது.

காந்தி:

      ‘தமிழ்நாடு’ என்ற பத்திரிகையில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு தலைசிறந்த பத்திரிகையாசிரியராக உருவாகியவர் டி.எஸ். சொக்கலிங்கமாவார். இவர் காந்தியக் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டதால் ‘காந்தி’ என்ற புதிய பத்திரிகையை ஆரம்பித்தார். இப்பத்திரிகை ‘கதர்ச்சூரியன்’ (4) என்ற பாடலை அறிமுகப்படுத்தியது. 1934-இல் ‘சர்க்கார் எங்கே?’ என்ற தலைப்பில் ஆங்கில ஆட்சியின் அவல நிலையை வெளிப்படுத்தியதால் இவர் மீது ராஜ துவேசக் குற்றம் சாட்டப்பட்டது. இப்பத்திரிகை குறைந்த செலவில் ஏழை மக்களும் பெறும் வகையில் வெளிவந்தது. பொருளைப் பெருக்குவது இப்பத்திரிகையின் நோக்கமல்ல. காந்தியக் கொள்கைகளை கவிதைகளிலும், கட்டுரைகளிலும் வெளிப்படுத்திக் காட்டுவதில் ஆர்வம் காட்டியது.

குமரன்:

            காரைக்குடி சொ. முருகப்பா நடத்தி வந்த ‘குமரன்’ பத்திரிகை காந்திய மணம் கமழும் கருத்துக்களையும், பாடல்களையும் வெளியிட்டது. இப்பத்திரிகை காந்தியடிகள் தனது நிர்மாணத் திட்டங்களைப் பரப்ப 1926-இல் தமிழகத்திற்கு வந்தபோது ‘கதர் அரசர் காந்தியடிகள் வருகிறார்’ (5) என்று புகழ்ந்துரைத்தது. மகாத்மாவைப் புகழ்ந்து திரு.வி.க., சொ. முருகப்பா, பாரதிதாசன் போன்றோர் பாடிய பாடல்கள் இப்பத்திரிகையில் வெளியாயின. காந்தியடிகளின் கொள்கைகளையும், சிறப்புகளையும் வெளிப்படுத்தவதே இப்பத்திரிகையின் நோக்கம் என்பது உறுதியாகிறது.

        அடுத்த வலைப்பதிவில் மேலும் சில காந்தியகாலப் பத்திரிக்கைகளான சுதந்திரச் சங்கு, ஆனந்த விகடன் மற்றும் தமிழ்ப் பத்திரிகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


அடிக்குறிப்புகள்

1. கா. திரவியம், தேசியம் வளர்த்த தமிழ், ப.99.

2. திரு.வி.க. திரு.வி.காவின் வாழ்க்கைக் குறிப்புகள், பக்.272 -273.

3. டி.சி.எஸ். மணி, கவிஞன் கதை, ப.16.

4. டி.எஸ். சொக்கலிங்கம், காந்தி, 28.5.1931.

5. சொ. முருகப்பச்செட்டியார், குமரன், 5.9.1927.




Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication



 

கருத்துரையிடுக

0 கருத்துகள்