இந்திய நாட்டுப்பற்று -பகுதி 14: காந்தியகாலப் பத்திரிக்கைகள் -2 (சுதந்திரச் சங்கு, ஆனந்த விகடன் மற்றும் தமிழ்ப் பத்திரிகைகள்)

காந்தியகாலப் பத்திரிக்கைகள்-2

     காந்திய காலத்தில் வெளியான பத்திரிகைகள் காந்தியக் கொள்கைகளை விளக்கும் கவிதைகளையும், கட்டுரைகளையும் வெளியிடுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. தேசபக்தன், பிரபஞ்சமித்திரன், சுதந்திரன், கல்கி, தேச சேவகன்,ஆத்ம சக்தி,காந்தி மற்றும் குமரன் போன்ற சில காந்தியகாலப் பத்திரிக்கைகள் பற்றி முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக சுதந்திரச் சங்கு, ஆனந்த விகடன் மற்றும் தமிழ்ப் பத்திரிகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • சுதந்திரச் சங்கு
  • ஆனந்த விகடன்
  • ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்
  • கவி. ஆறுமுகனார் & ந. கந்தசாமி
  • தமிழ்ப் பத்திரிகைகள்

சுதந்திரச் சங்கு:

 காந்தியடிகள் நடத்திய ‘அரிஜன்’ என்ற பத்திரிகையின் பிரதிபலிப்பாகச் ‘சுதந்திரச் சங்கு’ என்ற பத்திரிகை உருப்பெற்றது. இப்பத்திரிகை விளம்பரம் இல்லாமல் குறைந்த விலையில் சுப்பிரமணியம் என்பவரால் வெளியிடப்பட்டது. சுதந்திரத்தைப் பெற சங்குபோல் முழக்கம் செய்யவேண்டும் என்பதை இவர் இப்பத்திரிகை வைத்துள்ள பெயரே தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவு தரும் நாமக்கல் கவிஞரின் ‘சத்தியப்போர்’ என்ற தலைப்பில் வெளியான ‘கத்தியின்றி ரத்தமின்றி’ என்ற பாடல் இப்பத்திரிகையில் வெளியிடப்பட்டு மக்களிடையே நாட்டுப்பற்றைத் தூண்டியது (1). வட்டமேஜை மாநாடுகளின் அவல நிலையை வெளிப்படுத்தும்,

 “முள்ள முனையிலே

    மூன்று குளம் வெட்டினேன்

    ரெண்டு குளம் பாழ் ஒன்றில்

    தண்ணியே யில்லை”

என்ற பாடல் இப்பத்திரிகையில் வெளியானது. காந்தியடிகளின் கதர்க் கொள்கையை வெளிப்படுத்த சங்கு சுப்பிரமணியன் எழுதிய, ‘முந்நிறமும் ராட்டையும்’ என்ற பாடலும், சுதந்திர உணர்வுக்குத் தடையாக இருக்கும் கள்ளினை ஒட்டவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் நாமக்கல் கவிஞர் எழுதிய ‘ஓட்டடா ஓட்டடா நாட்டைவிட்டு ஓட்டடா’ என்ற பாடலும், அனுமந்தன்பட்டி சு.கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய ‘பாரதத் தாய்க்கு முறையீடு’ என்ற பாடலும், இராமலிங்கம்பட்டி க.அ. ஆறுமுகம் எழுதிய ‘சுதந்திர வாழ்வு’ என்ற பாடலும் இப்பத்திரிகையில் வெளியிடப்பட்டன. இப்பத்திரிகையாசிரியருக்கு வைத்துள்ள ‘சங்கு சுப்பிரமணியன்’ என்ற பெயரே அவருடைய சுதந்திர உணர்வை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

ஆனந்த விகடன்:

           நகைச்சுவை, பழித்;தல், கேலிச்சித்திரங்களை வெளியிடுதல், கிண்டல் உரைநடை, எதிர்மறையாகக் கருத்துக்களை வெளியிடுதல் போன்ற புதிய உத்திமுறைகள் மூலம் மக்களிடையே சுதந்திர உணர்வைப் பரப்ப முயன்றது. ‘ஆனந்த விகடன்’ என்ற பத்திரிகை. கவிமணியின் ‘கதர் விற்பனை’ என்ற பாடலும், நாமக்கல் கவிஞரின் ‘காந்தி சரித்திர நொண்டிச் சிந்து’ என்ற பாடலும் இப்பத்திரிகையில் வெளிவந்தது. ‘காந்தி சரித்திர நொண்டிச் சிந்து’ என்ற பாடலுக்குப் பரிசும் வழங்கியது. காந்தியத்தைப் பரப்புவதில் இப்பத்திரிகை பொருளையும் உதவத் தயாராக இருந்தது என்பது தெளிவாகிறது.

ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்:

     பாரதிதாசன் வெளியிட்ட ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்’ என்ற பத்திரிகை பாரதியின் புகழை வெளிப்படுத்தும் கவிதைகளையும், நாட்டுப்பற்றைத் தூண்டும் வேறு சில கவிஞர்களின் கவிதைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. பாரதியின் புகழை வெளிப்படுத்தும் ‘பாரதி நாமம் வாழ்க’ என்ற பாடலும், பாரதியாரின் ‘திருப்பள்ளியெழுச்சி’ என்ற பாடல் தோன்றிய சூழலும், கவிமணி எழுதிய ‘ஒற்றுமையின் உயர்நிலை’ என்ற பாடலும், ஜி.எஸ்.அழகர்ஸ்வாமி எழுதிய ‘ஒற்றுமை’ என்ற பாடலும், ந.பழனிவேலு எழுதிய ‘பாரதத் தாயின் முற்காலத் தற்கால நிலைமை’ என்ற பாடலும் இப்பத்திரிகையில் வெளியாகியுள்ளன (2). 

கவி. ஆறுமுகனார் & ந. கந்தசாமி:

       1925-ஆம் ஆண்டு முதல், காந்திய பக்தியில் ஈடுபட்டுக் காந்திய தொண்டராகி தாயகத்தின் விடுதலைக்கும், தீண்டாதார் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் தேசியப் பாடல்களைப் பாடியவர் கவி. ஆறுமுகனார் (3). இவர் எழுதிய தேசியப்பாடல்கள் ‘சுதந்திரச் சங்கு’, ‘லோகோபகாரி’, ‘பாரதி’ போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன (4). நாட்டுப்பற்றை வெளிப்படுத்த ந. கந்தசாமி எழுதிய தேசியப் பாடல்கள் ‘ஜீவரட்சகன்’, ‘குடிநூல்’, ‘பாரததேவி’ போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தன (5).

தமிழ்ப் பத்திரிகைகள்:

 பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே தமிழ்ப் பத்திரிகைகள் மக்களிடையே அரசின் கொடுமைகளை வெளிப்படுத்திக்காட்டி உரிமையுணர்வை ஊட்டி வந்தன. பெரும்பாலான தேசபக்தர்கள் பத்திரிகையாசிரியர்களாக இருந்தமையால் தேசபக்தியை வெளிப்படுத்தத் தோன்றியதே பத்திரிகைகள் என உணர முடிகிறது. தேசபக்தர்கள் தங்களின் உணர்வைக் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், நாவல்களாகவும், சிறுகதைகளாகவும், நாடகங்களாகவும் வெளிப்படுத்த பத்திரிகைகள் தூண்டுகோலாக இருந்தன. தாய்மொழிப் பத்திரிகைகளின் வளர்ச்சி ஆங்கிலம் அறியாத மக்களுக்கு புத்துணர்வை வளர்க்கும் கருவியாகச் செயல்பட்டது. திலகர் காலத்தில் வெளியான தேசியப் பத்திரிகைகள் தீவிரவாதத்தை வெளிப்படுத்துவதாகவும், காந்தியக் காலத்தில் வெளியான தேசியப் பத்திரிகைகள் அகிம்சையை வெளிப்படுத்துவதாகவும் இருந்தன.

            அடுத்த வலைப்பதிவில் மேடைப் பேச்சுகளும், நாடகங்களும் இந்திய நாட்டுப்பற்று வளர்வதற்கு எவ்வாறு முக்கிய பங்காற்றின என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்




அடிக்குறிப்புகள்

1. சங்கு சுப்பிரமணியம், சுதந்திரச் சங்கு, 26.3.1930.

2. பாரதிதாசன், ஸ்ரீ சுப்பிரமணியபாரதி, கவிதா மண்டலம், புத்தகம் -1வெளியீடு, 6, பக்.3-19.

3. கு. சா. கிருஷ்ணமூர்த்தி, வணக்கமுடன் வாழ்த்துரைத்தேன், வலவன்  (தொ.ஆ.), வண்ணச்சிறகு, 17.

4. க. பரமசிவம், தேசியகவி க.ஆ. ஆறுமுகனாரின் வாழ்வும் பணியும், வலவன் (தொ.ஆ.), மு.கா.நூ., ப.22.

5. ந. கந்தசாமி, கந்தசாமியின் கவிதைகள், முன்னுரை.



Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication






 

கருத்துரையிடுக

0 கருத்துகள்