இந்திய நாட்டுப்பற்று -பகுதி 15: மேடைப் பேச்சுகளில் இந்திய நாட்டுப்பற்று மற்றும் நாடகங்களில் இந்திய நாட்டுப்பற்று

மேடைப் பேச்சுகளில் மற்றும் நாடகங்களில் இந்திய நாட்டுப்பற்று

     காந்திய காலத்தில் வெளியான பத்திரிகைகள் காந்தியக் கொள்கைகளை விளக்கும் கவிதைகளையும், கட்டுரைகளையும் வெளியிடுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. அதில் சுதந்திரச் சங்கு, ஆனந்த விகடன் மற்றும் தமிழ்ப் பத்திரிகைகள் ஆகியவை இந்திய நாட்டுப்பற்று வளர்வதற்கு ஆற்றியப் பங்கு பற்றி முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக மேடைப் பேச்சுகளும், நாடகங்களும் இந்திய நாட்டுப்பற்று வளர்வதற்கு எவ்வாறு முக்கிய பங்கு வகித்தன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • மேடைப் பேச்சுகளில் இந்திய நாட்டுப்பற்று
  • நாடகங்களில் இந்திய நாட்டுப்பற்று
  • முதல் நாடகம்
  • வீர உணர்வை வெளிப்படுத்தும் நாடகங்கள்

மேடைப் பேச்சுகளில் இந்திய நாட்டுப்பற்று:

     படித்தவர், பாமரர் அனைவரையும் ஒன்று சேர வைப்பது மேடைப்பேச்சுகள் ஆகும். இந்திய தேசிய காங்கிரசின் தோற்றம், மேடைப் பேச்சுக்கள் இந்தியாவில் வளர்ச்சி அடைவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது. லாலா லஜபதிராய், திலகர் ஆகியோர்களின் தீவிர முயற்சியால் மேடைகளில் ஆங்கிலத்தில் பேசப்படும் நிலை மாறி அவரவர் தாய்மொழியில் பேசும் நிலை உருவாகியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லாலா லஜபதிராய், திலகர், விபின் சந்திரபாலர், வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்றோர்களின் பேச்சாற்றல் இந்தியர்களை நாட்டுப்பற்றுடையவர்களாக மாற்ற முயன்றது எனக் கூறலாம்.

 பேச்சுமேடைகளில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்களும் பாடப்பட்டன. பொதுவாகத் தமிழகத்தில் நடந்த எல்லா பொதுக்கூட்டங்களிலும் பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், பாஸ்கரதாஸ், ஜீவானந்தம் போன்றோர்களின் பாடல்கள் மக்களுடைய உணர்வுகளைத் தூண்டும் வண்ணம் பாடப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் போடப்பட்ட சிறுகூட்டங்களில் அந்தந்த ஊர்களில் இருந்த கவிஞர்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் கவிதைகளை மேடைகளில் பாடினர். பேச்சு மேடைகள் தாய்மொழியில் பாமர மக்களிடையே பேச்சுக்கள் மூலமும் கவிதைகள் மூலமும் நாட்டுப்பற்றைத் தூண்டும் கருவியாக செயல்பட்டதைப் பார்க்க முடிகிறது.

             இருபதாம் நூற்றாண்டில் மேடைப்பேச்சுக்கள் நம் நாட்டை பிரசங்க யுகமாக்கி இருக்கிறது. மேடைப்பேச்சாளரான ஜீவானந்தம் (1) ‘மேடைப் பேச்சாளர்கள் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்களாக இருத்தல்வேண்டும்’ என்கிறார். தமிழகத்தில் தம் பேச்சாற்றலால் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் மக்களைத் தூண்டினர். அதனால் அவர்களுக்குச் சிறைத் தண்டனை கிடைத்தது. இவர்களுடைய பேச்சாற்றலின் திறத்தை,

  “செய்த பிரசங்க உதாரம் கேட்டு

  சேயர்களும் அடைந்தார் வீரம்”

             என்ற பாஸ்கரதாஸின் (2) பாடல் மூலம் அறிய முடிகிறது. விபின் சந்திரபாலரின் விடுதலையை ஒட்டிப் பேசிய பேச்சுக்கள் மேற்கூறிய இருவரின் சிறைத் தண்டனைக்குக் காரணமாக அமைந்தன.

         இத்தகைய பேச்சாற்றல் உடைய அறிஞர்களும், தலைவர்களும் பலர் தமிழகத்தில் இருந்தனர். வ.உ.சிதம்பரம் பிள்ளைக்குப் பிறகு தமிழகத்தில் திரு.வி.கல்யாணசுந்தரம், ஈ.வெ.ராமசாமி, வரதராசுலு நாயுடு, பண்டிதை அசலாம்பிகை அம்மையார், ராஜாஜி, ஜீவானந்தம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், செங்கல்வராயன், கிருஷ்ணசாமி பாரதி, சிதம்பர பாரதி, தண்டபாணிப் பிள்ளை, குப்புசாமி முதலியார், நடராசப் பிள்ளை, சோமயாசுலு, அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையா, மதுரை சுந்தரவரதன், கோவை அய்யாமுத்து, சுப்பிரமணியன், சத்தியமூர்த்தி, வேலூர் உபயதுல்லா, மா.பொ. சிவஞானம், அறிஞர் அண்ணாதுரை போன்றோர்களின் பேச்சாற்றல் தமிழக மக்களிடையே நாட்டுப்பற்றைத் தூண்டியது.

           அவர்களின் பேச்சுக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை. ஏனெனில் அக்காலத்தில் பதிவுக் கருவிகள் இல்லை. சிலரின் பேச்சுக்கள் மட்டுமே புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. பலரின் பேச்சுக்கள் எதிலும் இடம் பெறாமல் மறைந்து விட்டன.

நாடகங்களில் இந்திய நாட்டுப்பற்று:

   நாடகம் என்பதற்கு நாடு முழுவதையும் தன்னகத்தே காட்டுவது என்று கூறப்படுகிறது. பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, தபால்-தந்தி ஆகியவை தோன்றுவதற்கு முன்பு நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நாடகங்கள் வெளிப்படுத்திக் காட்டின.

  ‘நாடக அரங்குகள் பாமர மக்களின் பல்கலைக்கழகம்’ என்கிறார் சரோஜினிதேவி. கல்வியறிவு இல்லாதவர்களும், கற்றவர்களும் நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்ணால் பார்த்து, செவியால் கேட்டு மனத்தில் பதியவைக்கும் நோக்கில் தோன்றியதே நாடகம். இக்கருத்தை கவிமணியின் (3) கவிதையும் தெளிவாக்குகிறது.

            சங்ககாலம் முதல் பதினேழாம் நூற்றாண்டின் இறுதி வரை நாடகங்கள் மக்களிடையே செய்திகளைப் பரப்பவும், இரவு நேரங்களில் மக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கவும் பயன்பட்டன. அதன் பிறகு தான் நாடகங்கள் இலக்கிய வடிவம் பெறத் தொடங்கின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சமுதாயச் சிக்கல்களை (4) அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள் தோன்றின. சமுதாயச் சிக்கல்களையே கருப்பொருளாகக் கொண்டிருந்த நாடக இலக்கியத்தை அரசியல் சீர்திருத்த நாடக இலக்கியமாக மாற்ற முனைந்தவர் கோபாலச்சர் ஆவார். இவருடைய முயற்சி இருபதாம் நூற்றாண்டில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பல நாடகங்கள் தோன்றுவதற்கு தூண்டுதலாக அமைந்தது.

முதல் நாடகம்:

         1885-ஆம் ஆண்டு முதல் 1894-ஆம் ஆண்டு வரை நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் செயல்களையும், ஆங்கிலேயரின் செயல்களையும் நேரில் கண்டுணர்ந்தவர் கோபாலச்சர். இவர் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க ‘ஆரியசபா’ என்ற நாடகத்தை உருவாக்கினார்.

    இந்நாடகம் ஐந்து அங்கங்களைக் கொண்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸின் வளர்ச்சிக்காக இந்நாடகம் எழுதப்பட்டது என்பதை இந்நூலின் முன்பகுதியில் ‘விதுசகன்’ என்ற பாத்திரம் தெளிவாக்குகிறது. நாடகத்தின் இறுதி காங்கிரஸ் சபையின் தீர்மானங்களை நிறைவேற்ற மக்களின் ஆதரவைத் திரட்டுவதாக அமைந்துள்ளது.

வீர உணர்வை வெளிப்படுத்தும் நாடகங்கள்:

       இந்திய நாட்டில் தோன்றிய பழைய தேசபக்தர்களின் வீரச் செயல்களை வெளிப்படுத்திக்காட்டி மக்களைத் தூண்டும்நிலை அக்காலத்தில் நிலவி வந்தது. வீர சிவாஜி, குரு கோவிந்த் சிங் ஆகியோர்களின் வீரச்செயல்களைப் பாரதியார் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். வீரசிவாஜி, செஞ்சி ராஜா தேசிங்கு ஆகிய வீரர்களின் வரலாற்றை நாடகமாக நடத்திக் காட்டினார் சுப்பிரமணிய சிவா. நாடகங்கள் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கும் நிலை இருந்ததைக் காணமுடிகிறது.

                      வெ.சாமிநாதசர்மா எழுதிய ‘பாணபுரத்து வீரன்’ என்ற நாடகம் ஸ்காட்லாந்து நாட்டு தேசபக்தரான ராபர்ட் புரூஸ் என்பவரின் வாழ்க்கையைப் பின்பற்றியதாக இருந்தாலும், இந்தியாவில் தீவிரவாதப் போக்கை மேற்கொண்ட மதன்லால் திங்காரா, வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் வீரச்செயல்களையும், வாக்குமூலங்களையம் வெளிப்படுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்நாடகம் சிறிது மாற்றங்களுடன் ‘தேசபக்தி’ என்ற பெயரில் நாடகமாக நடிக்கப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டது.

                          அடுத்த வலைப்பதிவில் காந்தியத்தை வெளிப்படுத்தும் நாடகங்கள் பற்றியும், நாடகத்திற்கு பாடல்களை இயற்றியவர்கள் பற்றியும், மேலும் அப்பாடல்களைப் பாடியவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்



அடிக்குறிப்புகள்

1. கே.டி. கோசல்ராம், எங்கள் ஜீவா, தியாகி தீர்த்தகிரியார் நூற்றாண்டு விழா மலர்.

2. பாஸ்கரதாஸ், இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம், பாகம் -2, ப.32.

3. தேசிய விநாயகம்பிள்ளை, கவிமணியின் உரைமணிகள், ப.87.

4. சக்திப்பெருமாள், தமிழ் நாடக வரலாறு, பக்.230-231.



Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication


கருத்துரையிடுக

0 கருத்துகள்