இந்திய நாட்டுப்பற்று -பகுதி 16: காந்தியத்தை வெளிப்படுத்தும் நாடகங்கள் மற்றும் நாடகத்திற்குப் பாடல்களை இயற்றியவர்களும், பாடியவர்களும்

காந்தியத்தை வெளிப்படுத்தும் நாடகங்கள் மற்றும் நாடகத்திற்குப் பாடல்களை இயற்றியவர்களும், பாடியவர்களும்

     மேடைப் பேச்சுகளும், நாடகங்களும் இந்திய நாட்டுப்பற்று வளர்வதற்கு எவ்வாறு முக்கிய பங்கு வகித்தன என்பது பற்றி முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக காந்தியத்தை வெளிப்படுத்தும் நாடகங்கள் பற்றியும், நாடகத்திற்கு பாடல்களை இயற்றியவர்கள் பற்றியும், மேலும் அப்பாடல்களைப் பாடியவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • காந்தியத்தை வெளிப்படுத்தும் நாடகங்கள்
  • நாடகத்திற்குப் பாடல்களை இயற்றியவர்களும், பாடியவர்களும்
  • விஸ்வநாததாஸ்
  • சிறுவர் பாய்ஸ் கம்பெனி
  • ஆர்மோனியக்காரர்கள்
  • கே.பி. சுந்தராம்பாள்
  • எஸ்.ஜி.ராமசாமி

காந்தியத்தை வெளிப்படுத்தும் நாடகங்கள்:

  காந்தியப் போராட்டங்களும், காந்தியக் கொள்கைகளும் இந்திய விடுதலைப் போரின் தீவிரவாதப் போக்கை மாற்றி, அகிம்சையை மக்களிடையே புகுத்தியநிலையில் நாடக ஆசிரியர்களின் உணர்வுகளும் காந்தியத்தை பிரதிபலித்துக் காட்ட விரும்பின. காந்தியடிகளின் கதர்க்கொள்கையும், மதுவிலக்குக் கொள்கையும் தமிழகத்தில் நன்கு செயல்பட்ட சூழ்நிலையில் ‘கதரின் வெற்றி’, ‘பதிபக்தி’ என்ற இரண்டு நாடகங்களை வெளிப்படுத்தி மக்களை நாடக உணர்வு மூலம் தூண்டமுயன்றார் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்.

   வெள்ளையர்களை இந்தியாவிலிருந்து விரட்டவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுந்த போராட்டம் பலரைச் சிறைத் துன்பத்திற்கு உள்ளாக்கியது. இவ்வியக்கத்தின்போது சிறைப்பட்ட எஸ்.டி. சுந்தரம் சிறையின் கொடுமையையும், ஆங்கிலேயர்களால் தேசியக் கவிஞர்கள் அடையும் துன்பங்களையும் வெளிப்படுத்த தன் உள்ள உணர்வை கனவாகக் காட்ட முயல்கிறார். அக்கனவே ‘கவியின் கனவு’ (1) என்ற இந்நாடகமாக 1943-இல் எழுதப்பட்டு மக்களிடையே நாட்டுப்பற்றைத் தூண்டும் வண்ணம் தமிழகமெங்கும் நடித்துக் காட்டப்பட்டது. காந்திய இயக்கம் தேசிய நாடகங்கள் பல தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்ததை தெளிவாக உணர முடிகிறது.

நாடகத்திற்குப் பாடல்களை இயற்றியவர்களும், பாடியவர்களும்:

      நாடகம் மக்களிடையே நாட்டுப்பற்றைத் தூண்டும் கருவியாகச் செயல்படத் தொடங்கிய நிலையில் சில கவிஞர்கள் நாடகங்களில் பாடுவதற்கென்றே பாடல்களை எழுதினர். அவ்வாறு எழுதிய பாடல்களை நாடக மேடைகளில் பாடி மக்களைத் தூண்டினர். மதுர பாஸ்கரதாஸ் எழுதிய பாடல்கள் எஸ். விஜயாள் லட்சுமிபாய், கே.பி. சுந்தராம்பாள், கே.எஸ். தேவுடு ஐயர், சுந்தரம் அம்மையார், எம்.சாரதாம்பாள் போன்ற இசை மேதைகளால் பாடப்பட்டன (2). லட்சுமண ஐயர், சுப்பையா பாகவதர், சுப்பிரமணிய பாகவதர், ஜி.கிட்டப்பா, டி.ஆர். முத்துலட்சுமி போன்ற நடிகர்களும் இவருடைய பாடல்களை நாடகங்களில் பாடிக்காட்டி மக்களிடையே நாட்டுப்பற்றைத் தூண்டினர். பாஸ்கரதாஸ் எழுதிய ‘பஞ்சாப் படுகொலை பாரிற்கொடியது’, ‘செல்வம் மிகுந்த நீலன்’ என்ற இரண்டு பாடல்களும் அக்காலத்தில் எல்லா நாடக மேடைகளிலும் மக்களைத் தூண்டும் வண்ணம் அடிக்கடி பாடப்பட்டதால் அப்பாடல்களுக்கு ஆங்கில அரசு தடை விதித்தது. தடையை மீறியும் பாடியவர்கள் அரசின் அடக்குமுறையால் அல்லல்பட்டனர்.

விஸ்வநாததாஸ்:

     அக்காலத் தேசிய நடிகராக விளங்கிய விஸ்வநாததாஸ் (3) என்பவர் ஆர்.பி.எஸ்.மணி எழுதிய தேசியப் பாடல்களை ‘ஜெகத்குருபர சண்முகா’ என்ற மெட்டில் ‘கொடுப்பதெப்போ சொல்வீர் சுயராஜ்யம்’ போன்ற பல பாடல்களைப் பாடி மக்களை நாட்டுப்பற்றுடையவர்களாக மாற்றினார். பூமி பாலகதாஸ் எழுதிய ‘கொக்குப் பறக்குதடி பாப்பா’ என்ற பாடலை நாடக மேடைகளில் அரசின் தடையைமீறிப் பாடியதால் தண்டனைக்கு உள்ளானார். இவர் ‘சர்தார் பகவத்சிங் உயிர்விடுத்த சுதந்திர நாதம்’ என்ற நூலில் உள்ள அனைத்துப் பாடல்களையும் நாடகமேடைகளில் பாடி மக்களிடையே சோக உணர்வை உண்டாக்கி எழுச்சி பெறச் செய்தார் (4). இவர் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்களை எழுதும் கவிஞராகவும் திகழ்ந்தார். இவர் எழுதியுள்ள ‘தேசபக்தர் கீதம்’ (5) என்ற நூலிலுள்ள பாடல்கள் ஈ.சு.சங்கரலிங்கக் கவிராயர், டி.ஆர்.வெங்கடேசன் போன்றோர்களால் நாடகமேடைகளில் பாடப்பட்டன. எனவே விசுவநாததாஸ் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்களைப்பாடும் கவிஞராகவும் அப்பாடல்களை நாடகங்களில் பாடும் நடிகராகவும் விளங்கினார் என்ற உண்மை தெளிவாகிறது.

சிறுவர் பாய்ஸ் கம்பெனி:

       விடுதலைப் போராட்டம் காந்தியப் போராட்டமாக மாறிய சூழ்நிலையில் நாடகக்குழுக்கள் காந்தியக் கருத்துக்களைப் பரப்புவதில் முன்னோடியாக இருந்தன. சிறுவர் பாய்ஸ் கம்பெனியும் பல தேசிய நாடகங்களை எழுதி அதிலே இடையிடையே பாரதியின் தேசியப்பாடல்களையும் பாடி மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்தது என்கிறார் சகஸ்ரநாமம் (6).

ஆர்மோனியக்காரர்கள்:

    டி.கே.எஸ். சகோதரர்களால் நடத்தப்பட்ட ‘தேசபக்தி’, ‘கதரின் வெற்றி’ போன்ற நாடகங்களில் கவி ஆறுமுகனாரின் தேசியப்பாடல்கள் பாடப்பட்டன. இவர் நாட்டின் விடுதலைக்காகப் பாடல்களையும், உரையாடல்களையும் எழுதி அவற்றை நாடகமேடைகளில் பரப்பி வந்தார். ராஜா சண்முகதாஸ், லட்சுமணதாஸ், பாஸ்கரதாஸ், சுந்தர வாத்தியார், ஆறுமுகனார் போன்ற கவிஞர்களின் பாடல்கள் பெரும்பாலான நாடகங்களில் பாடப்பட்டு வந்தன. நாடகத்தில் ஒரு காட்சிக்கும், மற்றொரு காட்சிக்கும் இடையில் ஆர்மோனியக்காரர்களும் இக்கவிஞர்களின் பாடல்களை இடையிடையே பாடுவர். 

கே.பி. சுந்தராம்பாள்:

         நாடக மேடைகளில் கே.பி. சுந்தராம்பாள், ஜி.கிட்டப்பா, எஸ்.வி. சுப்பையா பாகவதர், எஸ்.எஸ்.சண்முகம் போன்ற நடிகர்கள் பாடிய பாடல்கள் தொகுக்கப்பட்டு அக்காலத்தில் நூல்களாக வெளியிடப்பட்டன (7). அந்நூல்கள் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்ப்பதாக அமைந்திருந்தன.

எஸ்.ஜி.ராமசாமி:

    நாடகநடிகர் எஸ்.ஜி.ராமசாமி என்பவர் தாம்எழுதியுள்ள ‘தேசிய கீதங்கள்’, ‘தேச முன்னேற்ற கீதங்கள்’ என்ற இரு நூல்களிலுள்ள பாடல்களை அடிக்கடி மேடைகளில் பாடி மக்களைத் தூண்டினர். இப்பாடல்களை தர்மபுரி மாவட்டத்திலுள்ள அன்னசாகரம், முக்கல்நாய்க்கன்பட்டி, நூலஹள்ளி, வெங்கட்டம்பட்டி, லளிகம், நார்த்தம்பட்டி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, சேசம்பட்டி, இலக்கியம்பட்டி போன்ற இடங்களில் நடந்த நாடகமேடைகளில் பாடி மக்களிடையே எழுச்சியை உண்டாக்கினார் (8). இவ்வாறு நாடகங்கள் பாமர மக்களின் உள்ளத்தைக் கவரும் நிலையில் தேசிய கவிஞர்களும், தேசிய நடிகர்களும், நாடக ஆசிரியர்களும் நாட்டுப்பற்றை வளர்க்க நாடகத்தை ஒரு தூண்டு கருவியாகச் செயல்படுத்தினர் என்பது புலனாகிறது.

   அடுத்த வலைப்பதிவில் நடிகர்களின் நாட்டுப்பற்று பற்றியும், சிறுகதைகளில் இந்திய நாட்டுப்பற்று பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


அடிக்குறிப்புகள்

1. எஸ்.டி. சுந்தரம், கவியின் கனவு, முன்னுரை.

2.கே.எஸ். கருப்பையா (ப.ஆ), மதுரபாஸ்கரதாஸ் நினைவுச் சிறப்பு மலர்.

3.ஆர்.பி.எஸ். மணி, நாட்டின் நிலைமை விளக்கும் தேசபக்தி கீதங்கள், பக்.5-6.

4.ஆர்.பி.எஸ். மணி, சர்தார் பகவத்சிங் உயிர் விடுத்த சுதந்திர நாதம், பாகம்-1, ப.1.

5. விசுவநாததாஸ், தேசபக்தர் கீதம், பக்.1-15.

6.சகஸ்ரநாமம், பாரதியின் கவிதைகளில் நாடகப் பங்கு, குமரி ஆனந்தன் (தொ.ஆ), சிந்தனைப் பண்ணையில் பாரதி, தொகுதி-4, ப.1.

7.வி.ஏ. தியாகராய செட்டியார் (தொ.ஆ.), நியூ மாடல் கிராம போன், கொளம்பியா ரிகார்ட், மேலட்டை, ப.1.

8. பேட்டி : தேசிய கவிஞர் நடிகர் எஸ்.ஜி. இராமசாமி, சேசம்பட்டி, தர்மபுரி மாவட்டம், நாள்:25.6.1986.



                  


Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

கருத்துரையிடுக

0 கருத்துகள்