இந்திய நாட்டுப்பற்று -பகுதி 17: நடிகர்களின் நாட்டுப்பற்று (கோவிந்தசாமிராவ், கிருஷ்ணசாமி பாவலர், சுந்தராம்பாள்....) மற்றும் சிறுகதைகளில் இந்திய நாட்டுப்பற்று

நடிகர்களின் நாட்டுப்பற்று மற்றும் சிறுகதைகளில் இந்திய நாட்டுப்பற்று

     காந்தியத்தை வெளிப்படுத்தும் நாடகங்கள் பற்றியும், நாடகத்திற்கு பாடல்களை இயற்றியவர்கள் பற்றியும், மேலும் அப்பாடல்களைப் பாடியவர்கள் பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக நடிகர்களின் நாட்டுப்பற்று பற்றியும், சிறுகதைகளில் இந்திய நாட்டுப்பற்று பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • நடிகர்களின் நாட்டுப்பற்று
  • தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர்
  • மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி
  • பெண்ணடிமை
  • தேசிய நாடகங்களின் பங்கு
  • சிறுகதைகளில் இந்திய நாட்டுப்பற்று
  • ஜோன் ஆப் ஆர்க்

நடிகர்களின் நாட்டுப்பற்று:

   இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெருக்கூத்து என்ற பெயருடன் விளங்கியிருந்த நாடகக்கலை மறுமலர்ச்சி அடைவதற்குக் காரணமாக இருந்தவர்கள் சிலர். நாற்சந்திகளிலும், வெட்டவெளியிலும் நடத்தப்பட்டு வந்த நாடகக்கலையே நான்கு சுவர்களுக்கிடையே உள்ள நாடகமேடைகளில் நடிக்கச் செய்தவர் கோவிந்தசாமிராவ் ஆவார். இவரை ‘நாடகமேடைகளின் தந்தை’ என்றும் கூறமுடியும். இவருடைய முயற்சியால் நாடகக்கலை புதுமையடைந்தது.

தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர்:

              புராண நாடகங்களையே நாடக மேடைகளில் நடிக்கப்பட்ட நிலை மாறி நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் நாடகங்களையும் நடிக்கும் நிலை உருவாகியது. தேசிய நாடகங்களை எழுதுவதிலும், நடிப்பதிலும், நடத்துவதிலும் முன்னோடியாக செயல்பட்டவர் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர் ஆவார். இவர் சென்னையில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். நாட்டுப்பற்றினால் உந்தப்பட்டு பணியிலிருந்து விலகி 1922-இல் ‘பால மனோகரா’ என்ற நாடக சபையை நிறுவினார். இவர் காந்தியக்கொள்கைகளைப் பரப்ப ‘கதரின் வெற்றி’, ‘பதி பக்தி’, ‘தேசியக்கொடி’ போன்ற நாடகங்களை எழுதி அதை மேடைகளில் நடிக்கச் செய்தார். இவருடைய ‘கதரின் வெற்றி’ என்ற நாடகத்தைப் பார்த்தவர்களில் பெரும்பாலோர் கதரை அணிய முன்வந்தனர். ஈ.வெ.ராமசாமி, ராஜாஜி ஆகியோர் கதரை பரப்ப இந்நாடகம் உறுதுணையாக இருந்தது. இந்நாடகம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் நடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி:

        1924-ஆம் ஆண்டிற்குப் பிறகு ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின்’ பொறுப்பை தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர் ஏற்றுக் கொண்டார். இந்நாடகக் கம்பெனியின் மூலம் ‘கதரின் வெற்றி’ ‘பதிபக்தி’, ‘பம்பாய் மெயில்’, ‘கவர்னர் ஸ்கப்’ ‘வள்ளித் திருமணம்’ போன்ற நாடங்களைத் தமிழகத்திலும், பிரிட்டனிலும் நடத்தி மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க முயன்றார். அரசாங்கம் இந்நாடகங்களுக்குத் தடைவிதித்த நிலையிலும், தடையை மீறி பல இடங்களில் நடத்தினார். அக்கால நடிகர்கள் அரசின் தடையை மீறியும் எத்தகைய சூழ்நிலையிலும் மக்களிடையே சுதந்திர உணர்வை உண்டாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. படித்த இளைஞர்களிடையே ஏற்பட்ட நாட்டுப்பற்று சென்னையில் ‘சுகுணவிலாச சபை’ என்ற அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தது. இச்சபையில் பல்வேறு மொழியினைச் சார்ந்தவர்கள் இருந்ததால் பல்வேறு மொழியில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் நாடகங்களை நடிக்கும் நிலை உருவானது. இச்சபையில் தீரர் சத்தியமூர்த்தி, ஈ.கிருஷ்ண ஐயர், ஜி.நடேச ஐயர் போன்றோர் சிறந்த நடிகர்களாகத் திகழ்ந்தனர்.

 பேச்சாற்றலால் தமிழக மக்களிடையே நாட்டுப்பற்றைத் தூண்டிய சுப்பிரமணிய சிவா நாடக நடிகராகவும் திகழ்ந்தார். அதன் மூலம் கிடைத்த பணத்தை தேசவிடுதலைக்குப் பயன்படுத்தினார். ஜி.கிட்டப்பாவும் பல நாடகங்களை நடத்தி அதனால் கிடைத்த பணத்தை ‘பஞ்சாப் படுகொலை நிதி’, ‘திலகர் சுயராஜ்ய நிதி’ போன்றவற்றிற்கு உதவியுள்ளார் (1).

பெண்ணடிமை:

      பெண்ணடிமை தலைதூக்கியிருந்த காலத்தில் சில பெண்களும் நடிகர்களாக மாறி மேடைகளில் தேசியப்பாடல்களைப் பாடி மக்களிடையே சுதந்திர உணர்வை உண்டாக்கினர். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு கே.பி. சுந்தராம்பாள் பாடிய பாட்டுக்கள் காரணமாக அமைந்தன.அக்காலத்தில் கே.பி.ஜானகி அம்மாள், பி.எஸ்.தாணு அம்மாள், எம்.ஆர்.கமலவேணி போன்றோர் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடியதால் அவர்கள் சிறை செல்ல நேர்ந்தது. இந்நிகழ்ச்சி அக்காலத்தில் பெண்களுக்கிருந்த நாட்டுப்பற்றை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

தேசிய நாடகங்களின் பங்கு:

   மேற்கூறிய கருத்துக்களிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இலக்கிய வடிவம் பெறத்தொடங்கிய நாடக இலக்கியம் இருபதாம் நூற்றாண்டில் காந்தியப் போராட்டத்தின் போது வளர்ச்சியடையத் தொடங்கியது. அக்கால நாடக நடிகர்களும், நடிகைகளும், ஆர்மோனியக்காரர்களும், நாடகப் பாடலாசிரியர்களும் உண்டாக்கிய நாட்டுப்பற்று படித்தவர்களையும், பாமரர்களையும் காந்திய பக்தியில் ஈடுபடச் செய்தது என்பது தெரிகிறது. அக்கால தேசிய நாடகங்கள் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியை ‘தேசிய நாடகங்களின் பங்கு’ என்ற தலைப்பில் ‘சுதந்திரச் சங்கு’ (2) என்ற பத்திரிகை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட நாடக வளர்ச்சி பாமர மக்களிடையே நாட்டுப்பற்று வளர்வதற்கு அடிப்படையாக இருந்தது என்பது புலனாகிறது.

சிறுகதைகளில் இந்திய நாட்டுப்பற்று:

      பழங்காலம் முதல் இந்தியர்களிடையே கதை கூறும் இயல்பு இருந்து வருகிறது. இந்தியர்களிடையே மரபு வழியாக வழங்கி வரும் வாய்மொழிக் கதைகள் வரலாற்றுக் கதைகளாகவும், சமுதாயக் கதைகளாகவும், தேசபக்திக் கதைகளாகவும் இருக்கின்றன. ஐரோப்பியரின் வருகையால் வாய்மொழிக் கதைகள் மாற்றமடைந்து சிறுகதைகளாக மாறின.

          பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய சிறுகதை இலக்கியம் இருபதாம் நூற்றாண்டில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் சிறுகதை இலக்கியமாக மாறியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகள் வரை நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் சிறுகதைகள் தமிழில் தோன்றவில்லை என்று கூறமுடியும். நாட்டுப்பற்று கொண்ட தமிழருக்கு இது சற்று ஏமாற்றத்தையே தந்தது. விடுதலை உணர்வைத்தூண்டும் சிறுகதைகளை வெளியிட சஞ்சிகைகள் தயங்கி இருக்கக்கூடும். அதையொட்டி கலைஞனுக்கு தேசியகதைகள் எழுதும் ஆர்வமும் குன்றி இருக்கலாம் எனக் கருத முடிகிறது.

ஜோன் ஆப் ஆர்க்:

     இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தன் படிப்பைத் துறந்துப் புதுச்சேரிக்குத் தப்பி வந்த வ.வே.சு.ஐயர் கதைகள் மூலமாகவும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்திக் காட்டினார். பிரான்ஸ் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய ‘ஜோன் ஆப் ஆர்க்’ என்ற வீரப்பெண்மணியின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு ‘மங்கையர்க்கரசியின் காதல்’ என்ற சிறுகதையை எழுதினார். இக்கதையே தமிழில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் முதல் சிறுகதை என்று கருதலாம்.

      அடுத்த வலைப்பதிவில் தீவிரவாதத்தை வெளிப்படுத்தும் சிறுகதைகள் பற்றியும், காந்தியத்தை வெளிப்படுத்தும் சிறுகதைகள் பற்றியும், தேசபக்தர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் சிறுகதைகள் பற்றியும், நாவல்களில் இந்திய நாட்டுப்பற்று பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


அடிக்குறிப்புகள்

1. சோமலே, திருநெல்வேலி மாவட்டம், ப.111.

2. சங்கு சுப்பிரமணியம், சுதந்திரச் சங்கு, 6.7.1931.


Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

கருத்துரையிடுக

0 கருத்துகள்