இந்திய நாட்டுப்பற்று -பகுதி 18: தீவிரவாதம், காந்தியம், தேசபக்தர்களின் சிறப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் சிறுகதைகள் மற்றும் நாவல்களில் இந்திய நாட்டுப்பற்று

தீவிரவாதம், காந்தியம், தேசபக்தர்களின் சிறப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் சிறுகதைகள் மற்றும் நாவல்களில் இந்திய நாட்டுப்பற்று 

  நடிகர்களின் நாட்டுப்பற்று பற்றியும், சிறுகதைகளில் இந்திய நாட்டுப்பற்று பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக தீவிரவாதத்தை வெளிப்படுத்தும் சிறுகதைகள் பற்றியும், காந்தியத்தை வெளிப்படுத்தும் சிறுகதைகள் பற்றியும், தேசபக்தர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் சிறுகதைகள் பற்றியும், நாவல்களில் இந்திய நாட்டுப்பற்று பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • தீவிரவாதத்தை வெளிப்படுத்தும் சிறுகதைகள்
  • காந்தியத்தை வெளிப்படுத்தும் சிறுகதைகள்
  • தேசபக்தர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் சிறுகதைகள்
  • நாவல்களில் இந்திய நாட்டுப்பற்று

தீவிரவாதத்தை வெளிப்படுத்தும் சிறுகதைகள்:

       காந்தியடிகளின் போராட்ட காலத்தில் தோன்றிய சிறுகதைகளும், திலகரின் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களை வெளிப்படுத்திக் காட்டுவனவாக இருந்தன. அகிலன் எழுதிய ‘பொங்குமாக்கடல்’ என்ற சிறுதை வ.உ.சிதம்பரம்பிள்ளை, வாஞ்சிநாதன் போன்றோர்களின் வீர உணர்வையும், தியாகச் செயல்களையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. இந்திய விடுதலைப் போரில் மந்திரமாக ஒலித்த ‘வந்தே மாதரம்’ என்ற பாடலைப் பாடியதால் ஒரு தேசபக்தன் அடைந்த துன்பநிலையை சி.சு. செல்லப்பா எழுதிய ‘வந்தே மாதரம்’ என்ற சிறுகதை தெளிவாக உணர்த்துகிறது.

        காந்தியடிகளின் அகிம்சைப்போருக்கு எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு தாய்நாட்டின் விடுதலைக்குப் போர் முறையே சிறந்தது என்று அயல்நாட்டிற்குத் தப்பிச் சென்றவர் சுபாஷ் சந்திரபோஸ். அயல்நாட்டில் இருக்கும்போது அங்குள்ள இந்தியர்களை ஒன்றுதிரட்டி ‘இந்திய தேசிய ராணுவம்’ ஒன்றை அமைத்தார். இவருடைய தீவிரவாதச் செயல்களையும், வீர உணர்வையும் வெளிப்படுத்துவதாக கல்கி எழுதிய ‘அமரவாழ்வு’ என்ற கதையும், அகிலன் எழுதிய ‘காணிக்கை’, ‘ரத்தக்கலப்பு’ என்ற இரு கதைகளும் அமைந்துள்ளன.

காந்தியத்தை வெளிப்படுத்தும் சிறுகதைகள்:

                       காந்தியப் போராட்டம் வளர்ச்சி அடைந்த நிலையில் அப்போராட்டத்தில் பங்கு கொண்டிருந்த சிறுகதை ஆசிரியர்கள் சிறுகதைகள் மூலம் மக்களைத் தூண்ட முனைந்தனர். கல்கி எழுதிய ‘பவானி பி.ஏ., பி.எஸ்.’ என்ற கதை அன்னியர் துணிக்கடைமுன் மறியல் செய்யும் தேசபக்தர்களின் இயல்பை வெளிப்படுத்துகிறது. அவர் எழுதிய ‘கணையாழியின் கனவு’ என்ற மற்றொரு சிறுகதை மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வதற்குத் தன்னுடைய அழகால் தொண்டர்களை ஒன்று சேர்த்த ஒருதேச சேவகியின் திறமையை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

                      புதுமைப்பித்தன் எழுதிய ‘புதியநந்தன்’ என்ற சிறுகதை சாதி வேறுபாடு, மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, அரிஜன சேவை ஆகியவற்றைப் புதிய முறையில் வெளிப்படுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளது. ராஜாஜி எழுதிய ‘முகுந்தன்’ என்ற கதை தீண்டாமையால் சமுதாயத்தில் ஏற்படும் சிக்கல்களை வெளிப்படுத்திக் காட்டுகிறது. பி.எஸ். ராமையா எழுதிய ‘பதச்சோறு’ என்ற கதை அரிஜன சேவை, ஆடம்பரச் செலவு ஆகியவற்றை எடுத்துக் காட்டுகிறது.

                 ராஜாஜியின் ‘திக்கற்ற பார்வதி’ கல்கியின் ‘தெய்வ யானை’, நாரண துரைக்கண்ணனின் ‘இராவணாகாரம்’ போன்ற கதைகள் மதுவினால் ஏற்படும் அவலத்தையும், அதனைப்போக்க தேசத்தொண்டர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் தெளிவாக உணர்த்துகின்றன. காந்தியக் கொள்கைகள் மக்களின் விடுதலைப் போராட்டக் கொள்கையாக மாற இக்கதையாசிரியர்கள் விரும்பினார்கள் என்பது தெளிவாகிறது.

தேசபக்தர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் சிறுகதைகள்:

    தேசபக்தர்கள் தங்களிடையே ஏற்பட்ட நாட்டுப்பற்றால் செய்த செயல்கள் ஆங்கில ஆட்சியின் அடக்குமுறைக்கும், சிறைத் தண்டனைக்கும் உள்ளாக்கிய நிலையைச் சில சிறுகதைகள் வெளிப்படுத்திக் காட்டியுள்ளன. கல்கி எழுதிய ‘தூக்குத் தண்டனை’ ஒரு தேசபக்தனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையின் கொடுமையை வெளிப்படுத்துகிறது. ஆங்கில ஆட்சிக்கு அகப்படாமல் மறைந்து வாழும் தேசபக்தனின் இயல்பை அகிலன் எழுதிய ‘தலைமறைவில்’ என்ற சிறுகதை உணர்த்துகிறது. தன் தாய் இறந்த செய்தி கேட்டு வருத்தப்படும் தேசபக்தனுக்கு ஆறுதல் கூறுவதாக சி.சு. செல்லப்பா எழுதிய ‘பிரார்த்தனை’ என்ற கதை அமைந்துள்ளது.

               கல்கி எழுதிய ‘ஸ்ரீகாந்தன்’, ‘புனர் ஜென்மம்’ போன்ற கதைகளும் சி.சு. செல்லப்பா எழுதிய ‘சிப்பாய் இதயம்’, ‘சட்டத்துக்குக் கிட்டாத ஜெயில்’ ஆகிய கதைகளும், கு.வா.எழுதிய ‘சேர்ந்து வந்து கேட்டால்’, வாணிதாசன் எழுதிய ‘தேவநாதன்’, பி.எஸ்.ராமையா எழுதிய ‘குங்குமப் பரணி’ போன்ற கதைகளும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

நாவல்களில் இந்திய நாட்டுப்பற்று:

          நாவல் என்ற இலக்கியவகை மேல்நாட்டினரின் தொடர்பால் இந்தியாவில் தோன்றிய ஒன்றாகும். நாவல்கள் கல்வியறிவில் குறைந்த மக்களையும் எளிதில் கவரும் தன்மை வாய்ந்தது. நாட்டுப்பற்றுடைய நாவலாசிரியர்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் நாவல்களையும் எழுத முன்வந்தனர்.

                     பத்தொன்பதாம் நூற்றாண்டில் பங்கிம் சந்திர சட்டர்ஜி சுதந்திர உணர்வைத் தூண்டும் ‘ஆனந்தமடம்’, ‘தேவிசாதுராணி’, ‘சீதாராம்’ என்ற நாவல்களை எழுதினார் (1). ஆனந்த மடம் என்ற நாவலும், அதில் இடம் பெற்றிருந்த ‘வந்தே மாதரம்’ என்ற பாடலும் இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் நாட்டுப்பற்று வளர்ச்சியடைவதற்கும், இந்திய மொழிகளில் தேசியக் கவிதைகளும், தேசிய நாவல்களும் தோன்றுவதற்கும் அடிப்படையாக அமைந்தது என்று கருத முடிகிறது.

       திலகர் தலைமையில் நடந்த விடுதலைப் போராட்டத்தில் தேசியக் கவிதைகளின் ஆற்றல் சக்தி வாய்ந்ததாகச் செயல்பட்டதால் தேசிய நாவல்கள் தோன்றும் வாய்ப்பு இல்லை என்றும் கருதலாம். தேசிய நாவல்களின் வளர்ச்சி காந்தியடிகளின் இயக்கத்தால் மலரத் தொடங்கியது. 

  அடுத்த வலைப்பதிவில் காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் நாவல்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


அடிக்குறிப்பு

1.S.K.Bose, Bankim Chandra Chatterjee, P.69.



Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication


கருத்துரையிடுக

0 கருத்துகள்