இந்திய நாட்டுப்பற்று வளர்ச்சிக்குச் சாதகமாக இருந்த காரணிகள்
இந்திய விடுதலைப்போரின் நிகழ்ச்சிகளை கால வரிசைப்படி முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக இந்திய நாட்டுப்பற்று வளர்ச்சிக்குச் சாதகமாக இருந்த காரணிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- ஆங்கிலக்கல்வி
- இந்தியர்களின் எதிர்ப்புணர்ச்சி
- விடுதலை உணர்வு
ஆங்கிலக்கல்வி:
ஒற்றுமையே நாட்டுப்பற்று வளர்ச்சி அடைவதற்கான அடிப்படைக்காரணி என்றும் கூறலாம். இந்தியாவில் இருந்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுசிறு அரசுகளை ஆங்கிலேயர்கள் ஒரே அரசின்கீழ்க் கொண்டுவந்தது மிகப்பெரிய சாதனையாகும். இச்சாதனை இந்தியர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி அவர்களிடையே மறைந்திருந்த நாட்டுப்பற்றை வளர்ச்சியடையச் செய்தது. இந்தியாவின் இயற்கை அமைப்பு இந்தியர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் அரணாக விளங்கியது.
நிர்வாகம் நன்கு செயல்படவேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட ஆங்கிலக்கல்வி, இந்தியர்கள் உலகநாடுகளில் நடந்த விடுதலைப் போர்களை அறிய வாய்ப்பாக அமைந்தது. மேல்நாட்டு அறிஞர்களான மில்டன், ஷெல்லி, மில், மாஜினி, கவூர், ஸ்பென்சர், வால்டேர், ரூசா போன்றோர்களின் புரட்சிக் கருத்துக்கள் தாதாபாய் நௌரோஜி, அரவிந்தர், விவேகானந்தர், திலகர், லாலா லஜபதிராய், கோபாலகிருஷ்ண கோகலே, சவார்க்கர், மதன்லால் திங்கரா, வ.வே.சு.ஐயர், சுப்பிரமணியபாரதி ஆகியோர்களின் உள்ளங்களை எழுச்சிபெறச் செய்தன. இவ்வெழுச்சி நாட்டுப்பற்று வளர்ச்சியடைய அடிப்படையாக அமைந்தது என்றும் கூறலாம்.
போக்குவரத்துச் சாதனங்கள் இந்தியாவிற்கு வந்ததால் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லவும், மக்கள் ஒன்றுகூடி சங்கங்களை ஏற்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டது.1854-ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட தபால்தந்தி மக்கள் மறைமுகமாகத் தொடர்பு கொள்ளச் சாதகமாக அமைந்தது.
1780 முதல் செய்திகளை வெளியிடும் சாதனமாகப் பத்திரிக்கை வெளியிடப்பட்டது. பத்திரிக்கையின் வளர்ச்சியால் நாட்டில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளையும் உலகவரலாற்றையும் அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்தியாவில் வெளியான ‘அமிர்தபசார் பத்திரிக்கா’, ‘இந்தியன் மிரர்’, பெங்காலி, வந்தேமாதரம், இந்து, இந்தியா, சுதேசமித்திரன், ஆந்திரபிரகாசிகா, மராட்டா, கேசரி, இந்துஸ்தானி போன்ற தாய்மொழிப் பத்திரிக்கைகள் மக்களிடையே நாட்டுப்பற்று வளர்ச்சியடையத் தூண்டுதலாக இருந்தன.
இந்தியர்களின் எதிர்ப்புணர்ச்சி:
1876, 1883, 1985-ஆம் ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட அதிக வரிப்பளு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை இந்தியர்களிடையே எதிர்ப்புணர்ச்சியை உண்டாக்கின. அயல்நாட்டுப் பொருள்களால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதை அறிந்து தலைவர்கள் சுதேசி இயக்கத்தை ஆரம்பித்தனர். இவ்வியக்கம் பாமர மக்களிடையே நாட்டுப்பற்றைத் தட்டியெழுப்பியது.
ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் செயல்படுத்திய அரசியல் அமைப்பும், இராணுவ அமைப்பும் இந்தியர்களிடையே ஒருமைப்பாட்டை வளர்த்ததால் வேலூர் கலகம், சிப்பாய்க் கலகம் போன்றவை உருவாகின. ஆங்கிலேயர்களுடன் இந்தியாவிற்கு வந்த கிறிஸ்துவ மதகுருமார்கள் கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரப்பினர். இந்நிலையில் இந்துக்களும், முஸ்லீம்களும் தங்கள் மதங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றதால் நாட்டுப்பற்று வளர்ச்சியடையத் தொடங்கியது.
1830-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் நில உடைமையாளர்கள் சங்கம் (1838), பெங்கால் பிரிட்டிஷ் இந்தியன் சங்கம் (1839), பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேஷன் (1851), இந்தியன் லீக் (1875), இந்தியன் அசோசியேசன் (1852), பூனா டெக்கான் அசோசியேசன் (1852), பூனா அசோசியேசன் (1867), பூனா சர்வ சனிக் சபை (1870), இந்து லிட்டரரி சொசைட்டி (1830), மெட்ராஸ் நேடிவ் எடுகேசன் சொசைட்டி (1834), மெட்ராஸ் நேடிவ் அசோசியேசன் (1853), சென்னை மகாஜனசபை (1884), ஆக்ரா அசோசியேசன், இந்து சமாஜ், இந்து சபா, சிங்சபா, பாரதி சபா, சிந்தா சபா, இந்தியன் யூனியன், டாக்கா மக்கள் சங்கம் போன்றவை இந்தியர்களிடையே சீர்திருத்த உணர்வையும், உரிமை உணர்வையும் ஒற்றுமை உணர்வையும் வளரச் செய்தன.
1885-இல் தோற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 1900 வரை படித்தவர்களிடையே நாட்டுப்பற்றையும், உயர்பதவி பெறும் நோக்கத்தையும் உண்டாக்கியது. 1905-இல் ஏற்பட்ட வங்கப் பிரிவினை காங்கிரஸை தீவிர இயக்கமாக வளர்ச்சியடையச் செய்தது. பாமரமக்களும் பங்குகொள்ளும் பாசறையாகவும் காங்கிரஸ் மாற்றமடைந்தது.
விடுதலை உணர்வு:
1891-இல் கொண்டு வரப்பட்ட காட்டிலாகாச் சட்டம், 1795, 1799, 1800, 1823, 1835, 1857, 1878-ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட பத்திரிக்கைத் தடைச்சட்டங்கள், 1878-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட படைக்கலச் சட்டம் (ஆர்மி ஆக்ட்) ஆகியவை இந்தியர்களிடையே வெறுப்பை உண்டாக்கி நாட்டுப்பற்றை வளர்ச்சி அடையச் செய்தன.
ஹோம்ரூல் இயக்கம், ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்கம், ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்றவை பாமர மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்ச்சியடையச் செய்தன. வீரபாண்டிய கட்டபொம்மன், மதன்லால் திங்கரா, பகவத் சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தேசபக்தர்களைத் தூக்கிலிட்ட செயல் இந்தியர்களின் உள்ளங்களையெல்லாம் எரிமலையாக மாற்றியது.
திலகர், லாலா லஜபதிராய், வீரசவார்க்கர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், இராஜாஜி, சத்தியமூர்த்தி போன்ற தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறைத் தண்டனைகள் இந்தியர்களிடையே எழுச்சியை உண்டாக்கியது. முதல் உலகப் போரின் போது நடந்த ரஷ்யப் புரட்சி இந்திய மக்களிடையே தீவிர உணர்வை உண்டாக்கியது.
தாம்ஸ் பெய்னின் ‘பொது அறிவு’ (காமன் சென்ஸ்) காரல் மார்க்ஸின் ‘மூலதனம்’ (தாஸ்காபிடல்), மார்க்ஸ் ஏஞ்சல்ஸ் ஆகியோரின் ‘பொது உடைமைப் பொது அறிக்கை’ (கம்யூனிஸ்ட் மானிபெஸ்ட்டோ) போன்ற நூல்கள் உலக மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டியது போல இந்தியாவில் வீரசவார்க்கரின் ‘எரிமலை’, அசோக் மேத்தாவின் ‘1857’ காந்தியடிகளின் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ லாலா லஜபதிராயின் ‘யங் இந்தியா’, பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’, சுப்பிரமணிய பாரதியாரின் ‘ஸ்வதேசகீதங்கள்’ ஆகிய நூல்கள் இந்தியர்களிடையே நாட்டுப்பற்று வளர்ச்சியடையத் தூண்டுதலாக இருந்தன.
அடுத்த வலைப்பதிவில் உலக நாடுகளில் தோன்றிய நாட்டுப்பற்றில் அமெரிக்க விடுதலைப் போர் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
Sponsorship
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication
0 கருத்துகள்