இந்திய நாட்டுப்பற்று -பகுதி 22: உலகில் தோன்றிய நாட்டுப்பற்று ( அமெரிக்க விடுதலைப் போர் & பிரெஞ்சுப் புரட்சி )

உலக நாடுகளில் தோன்றிய நாட்டுப்பற்று

          இந்திய நாட்டுப்பற்று வளர்ச்சிக்குச் சாதகமாக இருந்த காரணிகள் பற்றி முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக உலக நாடுகளில் தோன்றிய நாட்டுப்பற்றில் அமெரிக்க விடுதலைப் போர் பற்றியும், பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • உலக நாடுகளில் தோன்றிய நாட்டுப்பற்று
  • அமெரிக்க விடுதலைப் போர்
  • பிரெஞ்சுப் புரட்சி

உலக நாடுகளில் தோன்றிய நாட்டுப்பற்று:

   14-ஆம் நூற்றாண்டுத் தொடங்கி 19-ஆம் நூற்றாண்டு வரை உலக நாடுகளான இத்தாலி, ஜெர்மனி, துருக்கி, பிரெஞ்சு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இலத்தீன், அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களிடையே ஏற்பட்ட நாட்டுப்பற்று அந்நாடுகளில் சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்றவற்றில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தின. இம்மறுமலர்ச்சி இருபதாம் நூற்றாண்டில் நாட்டுப்பற்று வளர்ச்சி அடைவதற்கும் அடிப்படையாக அமைந்தது. அந்நாடுகளில் தோன்றிய நாட்டுப்பற்றின் தன்மையை அறிவது தேவையான ஒன்றாகிறது.

அமெரிக்க விடுதலைப் போர்:

     ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ் கி.பி.1492-இல் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அதன் விளைவாக 1607 தொடங்கி 1732 வரை பதிமூன்று குடியேற்றங்களை ஆங்கிலேயர்கள் வடஅமெரிக்காவின் கிழக்குக்கரையில் அமைத்தனர். இங்கிலாந்து, அமெரிக்காவில் உள்ள குடியேற்றங்களைக் கட்டுப்படுத்த 1750-ஆம் ஆண்டிற்குப் பிறகு பல சட்டங்களைக் கொண்டு வந்ததால் குடியேற்ற நாடுகள் விடுதலைப் போரைத் தொடங்கின.

             அமெரிக்காவில் வாழ்ந்த மக்கள் ஜான்லாக், ஹாரிங்டன் போன்ற அறிஞர்களின் அரசியல் கருத்துக்களையும், மான்டெஸ்கியு, வால்டேர், ரூசோ போன்றோர்களின் புரட்சிக் கருத்துக்களையும் அறிந்திருந்ததால் அவர்களிடம் விடுதலையுணர்வு தீவிரமாக வளர்ச்சியடைந்தது. அந்நிலையில் ஆங்கிலப் பாராளுமன்றம் 1765-இல் கொண்டு வந்த முத்திரைக் காகிதச் சட்டத்தை மக்கள் எதிர்த்துச் செயல்பட்டதால் அச்சட்டம் 1766-இல் நீக்கப்பட்டது. 1767-இல் ‘சார்லஸ் டவுன்சென்ட் சட்டம்’ வெளியானது. அதனை எதிர்த்து மக்கள் எதிர்ப்புக்கூட்டங்களையும், ஊர்வலங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். 1770-இல் பாஸ்டன் என்ற நகரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் மீது ஆங்கில வீரர்கள் சுட்டதால் கூட்டத்திலிருந்த மக்கள் சிலர் மாண்டனர். இப்படுகொலையே ‘பாஸ்டன் படுகொலை’ என அழைக்கப்படுகிறது. இப்படுகொலை அமெரிக்க மக்களிடத்தில் மேலும் புரட்சிக்கனலை உருவாக்கி ஒற்றுமையை உண்டாக்கியது.

        ஒற்றுமையடைந்த அமெரிக்க மக்கள் போர் செய்வதற்காக ஒரு படையை அமைத்தனர். இப்படை 1775-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘லெக்கிங் டன்னில்’ தொடங்கிய போர் 1981-இல் அக்டோபர் மாதம் யார்க் டவினில் வெற்றியுடன் நிறுத்தப்பட்டது. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தாமஸ் ஜேப்பர்சன் என்பவரால் எழுதப்பட்ட ‘விடுதலை அறிக்கை’ ( Declaration of Independence ) 1776-இல் வெளியிடப்பட்டது. போருக்குப் பின்னர் செய்து கொள்ளப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின்படி, 1783-இல் இங்கிலாந்து, அமெரிக்காவின் விடுதலையை அங்கீகரித்தது. முதன்முதலாக அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு மக்களாட்சியை அமைத்த நாடு அமெரிக்கா என அறியமுடிகிறது.

    அமெரிக்காவில் உருவான சட்ட எதிர்ப்பு முறையும், விடுதலை அறிக்கை வெளியிடும் முறையும் இந்தியாவில் தாக்கம் பெற்றிருப்பதையும் காணமுடிகிறது.

பிரெஞ்சுப் புரட்சி:

    அமெரிக்காவின் விடுதலைப்போர் மற்ற நாடுகளில் வாழ்ந்த மக்களிடையே நாட்டுப்பற்றையும், உரிமை வேட்கையையும் தட்டியெழுப்பியது. அமெரிக்க விடுதலைப்போரில் ஈடுபட்ட பிரெஞ்சு வீரர்கள் தன் தாயகத்திற்குத் திரும்பிச் சென்று 1789-இல் பிரெஞ்சுப் புரட்சியைத் தொடங்கினர். இப்புரட்சிக்குப் பிரெஞ்சை ஆட்சி செய்துவந்த பூர்பன் வம்சத்து அரசர்களின் சர்வாதிகாரப் போக்கும், ஏற்றத்தாழ்வு மனப்பான்மையும் காரணங்களாக அமைந்தன. வால்டேர், ரூசோ போன்ற அறிஞர்களின் அரசியல் கருத்துக்கள் பிரெஞ்சு மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கத் துணையாக இருந்தன. விடுதலை உணர்வு பெற்ற மக்கள் இப்புரட்சியின் முதல் கட்டமாக 1789-இல் தேசியப் பேரவை ( National Assembly ) ஒன்றை அமைத்து முடியாட்சிக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றினர். தேசியப் பேரவையின் தீர்மானங்களை முடியரசர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினர். வேறுவழியின்றி முடியரசர் பதினான்காம் லூயி இத்தீர்மானங்களை ஏற்றுக்கொண்டார். இது பேரவையின் முதல் வெற்றியாகும்.

            1789-ஆம் ஆண்டு ஜீலை மாதம் முடியரசர், நிதியமைச்சர் நெக்கரை நீக்கியதால் ஆத்திரமடைந்த பாரீஸ் நகர மக்கள் பாஸ்டீஸ் சிறைச்சாலையின் கதவுகளை உடைத்துக் கைதிகளை விடுவித்து ‘சுதந்திரம்’, ‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’ என்ற முழக்கத்தை முழங்கினர். இது பிரெஞ்சு மக்களின் இரண்டாவது வெற்றியாகும்.

            பிரெஞ்சில் ஏற்பட்ட பெண்கள் புரட்சியும், அரசு குடும்பத்தைச் சிறையில் அடைத்த செயலும் விடுதலையுணர்வின் உச்சநிலையைக் காட்டுவனவாக அமைகின்றன. இந்நிலையில் தேசியப் பேரவை 1791-இல் ஒரு புதிய சட்டசபையை உருவாக்கியது. அச்சபையின் தீர்மானங்களை முடியரசர் ஏற்க மறுத்ததால் மக்கள் வெறுப்படைந்தனர். அந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முடியரசர் மறைமுகமாக ஆஸ்திரியா, பிரஷ்யா போன்ற நாடுகளின் உதவியுடன் 1792-இல் பிரெஞ்சு மக்கள் படையைத் தாக்கினார். மக்கள்படை பல இடங்களில் தோல்வி கண்டன. தோல்வி கண்ட மக்கள் மீண்டும் வீரத்துடன் டான்டன், மாரட் ஆகியோர் தலைமையில் சென்று அரசு குடும்பத்தினரையும், பிரபுக்களையும் 1792-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கிப் படுகொலை செய்தனர். இந்நிகழ்ச்சி ‘செப்டம்பர்ப் படுகொலை’ என அழைக்கப்படுகிறது. போர் தொடர்ந்து நடைபெற்று முடிவில் பிரெஞ்சு மக்கள் படை வெற்றி பெற்றது. 1792-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டசபை கலைக்கப்பட்டு முடியாட்சி ஒழிக்கப்பட்டு பிரெஞ்சில் குடியாட்சி தோற்றுவிக்கப்பட்டது.

        அடுத்த வலைப்பதிவில் உலக நாடுகளில் தோன்றிய நாட்டுப்பற்றில் இத்தாலி இணைப்பு பற்றியும், ஜெர்மனி இணைப்பு பற்றியும், மேலும் இலத்தீன் - அமெரிக்கா விடுதலைப் போர் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

கருத்துரையிடுக

0 கருத்துகள்