நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் - 1
உலக நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளும், இயக்கங்களும் கவிதைகளில் எதிரொலிக்கத் தொடங்கின. இவ்வாறு உருப்பெற்ற கவிதைகளே வீறுணர்ச்சிக் கவிதைகள் என்பது பற்றியும், இவை இருபதாம் நூற்றாண்டில் தேசபக்திக் கவிதை மரபு இந்தியாவில் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது என்பது பற்றியும், பைரனின் தேசியப் பாடல்கள், பாரதியாரின் தேசியப் பாடல்களுக்கு அடிப்படை என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றிய சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- தாதாபாய் நௌரோஜி
- பங்கிம் சந்திர சட்டர்ஜி
- வி.கிருஷ்ணசாமி ஐயர்
தாதாபாய் நௌரோஜி:
1905-ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் பிளவு மனப்பான்மையால் உருவான வங்காளப் பிரிவினை இந்தியாவில் விடுதலை உணர்வு வளர்வதற்கு சாதகமாக இருந்தது. இப்பிரிவினையை எதிர்த்து ஒரு இயக்கம் உருவானது. இவ்வியக்கம் தாதாபாய் நௌரோஜி, பிபின் சந்திரபாலர், லாலா லஜபதிராய், லோகமான்ய திலகர், வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றவர்களால் தீவிரமாக வளர்ச்சியடைத் தொடங்கியது.
தேசபக்தர்களின் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் இவ்வியக்கம் வளர்ச்சியடையத் தூண்டுதலாக இருந்தன. கவிஞர்களும் இவ்வியக்கம் வளர்ச்சியடை கவிதைகளைப் படைக்க முன்வந்தனர். தமிழகத்தில் பாரதியார் தேசிய கவிதைகளை எழுதியதில் முன்னோடியாகத் திகழ்கிறார்.
பங்கிம் சந்திர சட்டர்ஜி:
வங்காளம் பிரிக்கப்படும் சூழ்நிலையில் அதனைக் கண்டிக்கும் வகையில் எதிர்ப்புகளும் தோன்றின. வங்காளத்தின் வீர உணர்வையும், பழமைச் சிறப்பையும் வெளிப்படுத்தி வங்க மக்களுக்கு ஊக்கமூட்டுவதாக ‘வங்கமே வாழிய’ என்ற பாடலைப் பாரதியார் சென்னையில் 14.9.1905-ஆம் ஆண்டு நடந்த கண்டனக் கூட்டத்தில் பாடினார்(3). வங்கத்தில் ஏற்பட்ட விடுதலை உணர்வு தமிழ் மக்களிடையேயும் ஏற்படவேண்டும் என்பது பாரதியாரின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
வங்காளப் பிரிவினைக்கு முன்பே அன்னியப் பொருள்கள் அகற்ற வேண்டும் என்ற எண்ணம் முளைத்திருந்தது. 1906-இல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் சுதேசிய இயக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானத்தை மிதவாதிகளில் சிலர் எதிர்த்தனர். சிலர் சுதேசியத்தைப் பின்பற்றுவதைப் போல போலியாக ஏமாற்றிக் கொண்டிருந்தனர். சிலர் உயர்பதவி ஆசையால் அடிமைகளாக மாறினர். தீபாவளி தினத்தில் கூட அன்னியத் துணிகளை வாங்கும் நடிப்புச் சுதேசிகள் இருந்தால் நரகாசுரன் எவ்வாறு ஒழிவான்? எனக் கேட்கிறார் பாரதியார்(7).
அக்காலத்தில் வாய்ச்சொல்லில் வீரர்களைப் போல் பேசித்திரிபவர்களையும், சுதேசியம் என்று வாயில் சொல்லித் திரிபவர்களையும் கொடுமைகளைக் கண்டும் ஊமையாக இருப்பவர்களையும், ‘வந்தே மாதரம்’ என்று வாயில் சொல்லித் திரிபவர்களையும் வெளிப்படுத்திக் காட்டி அவர்களைத் தேசபக்தியில் ஈடுபடுமாறு சொல்ல ‘நடிப்புச் சுதேசிகள்’(8) என்ற பாடலைப் பாடியுள்ளார் பாரதியார்.
வி.கிருஷ்ணசாமி ஐயர்:
“அதிகார மென்றுமோர் அற்பப்பொருளை
அதிகப் பெரியதாய் நினைத்து மிக
மதிமோசம் போனதோர் தேசபக்தரின்
மகிமையைப் பென்காள் நீர் பாடுங்கடி.”
என்ற பாடல் 12.10.1906-இல் சேலத்திலிருந்து வெளியானது. பதவி ஆசைக்கு அடிமையாகும் தேசபக்தர்களைப் பழித்துக் காட்டும் நிலை அந்நாளில் இருந்ததை அறிய முடிகிறது(9).
சுதேசியம் தமிழ்நாட்டில் பரவவேண்டும் என்பது அக்காலக் கவிஞர்களின் கொள்கையாக இருந்தது. 1906-இல் சின்னையா முதலி என்பவர் வெளியிட்ட ‘சுதேசிய விருத்தி விளக்கம்’(10) என்ற கவிதை நூல் அன்னியப் பொருள்களை அகற்றிவிட்டு சுதேசியப் பொருட்களை வாங்குமாறு தமிழர்களுக்குக் கட்டளையிடுவதாக அமைந்துள்ளது.
அடுத்த வலைப்பதிவில் வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றி மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. Mahajan, Leaders of the Nationalist Movement, P.31.
2. சி.சுப்பிரமணிய பாரதி, சக்கரவர்த்தினி, தொகுதி-1, பகுதி-2. செப்டம்பர், 1905, சீனிவிசுவநாதன், (தொ.ஆ.), சக்கரவர்த்தினிக் கட்டுரைகள், பக்.17-26.
3. ஜி. சுப்பிரமணிய ஐயர், சுதேசமித்திரன், 15.19.1905, பெ.தூரன், (தொ.ஆ.), பாரதித் தமிழ், பக்.1-2.
4. சி.சுப்பிரமணிய பாரதியார், பாரதி நூல்கள், தொகுதி-4, ப.116.
5. சி.சுப்பிரமணியபாரதி, சக்கரவர்த்தினி, 25.12.1905. ஜி. சுப்பிரமணியஐயர், சுதேசமித்திரன், 27.03.1906. கோ. கேசவன், (தொ.ஆ.), பாரதியாரின் படைப்புகளில் அரசியற் பின்னணி - ஓர் ஆய்வு. ப.74.
6. பாரதியார் கவிதைகள், பக்.134-135.
7. சி.சுப்பிரமணிய பாரதி, இந்தியா, 20.10.1906, ரா.அ. பத்மனாபன், (தொ.ஆ.), பாரதி புதையல்-1, பக்.72-73.
8. பாரதியார் கவிதைகள், பக்.196-198.
9. சி.சுப்பிரமணியபாரதி, இந்தியா, 16.10.1909.
10. கே.எஸ். மகாதேவன் (ப.ஆ.), தமிழ் நூல் விவர அட்டவணை, தொகுதி-2, பகுதி-3, ப.82.
Sponsorship
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication



0 கருத்துகள்