இந்திய நாட்டுப்பற்று -பகுதி 26: சுதந்திரம் பெற தேசபக்தர்கள் கையாண்ட உத்திகள்-மிதவாதம்,தீவிரவாதம்,பயங்கரவாதம்,அகிம்சை,ஹோம் ரூல் இயக்கம்,சட்டசபை நுழைவு & சீர்திருத்த இயக்கம்

சுதந்திரம் பெற தேசபக்தர்கள் கையாண்ட உத்திகள்

     நாட்டுப்பற்று வளரத் தடையாக இருந்த சக்திகளான பிரித்தாளும் சூழ்ச்சி பற்றியும், பத்திரிக்கைத் தணிக்கைச் சட்டம் பற்றியும், மேலும் அடக்குமுறை சட்டம் பற்றியும், சிறைத் தண்டனை பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக சுதந்திரம் பெற தேசபக்தர்கள் கையாண்ட உத்திகளான மிதவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம், அகிம்சை, ஹோம் ரூல் இயக்கம், சட்டசபை நுழைவு இயக்கம், சீர்திருத்த இயக்கம், தேசியக் கவிதை இயக்கம், தேசியப் பத்திரிக்கை இயக்கம் ஆகியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • மிதவாதம்
  • தீவிரவாதம்
  • பயங்கரவாதம் 
  • அகிம்சை
  • ஹோம் ரூல் இயக்கம்
  • சட்டசபை நுழைவு இயக்கம்
  • சீர்திருத்த இயக்கம்
  • தேசியக் கவிதை இயக்கம்
  • தேசியப் பத்திரிக்கை இயக்கம்

மிதவாதம்:

     ஆங்கிலேயரிடமிருந்து உரிமையைப் படிப்படியாக விண்ணப்பங்கள் போடுதல் மூலமும், அவர்களிடம் பணிவாகச் சமாதானமாக நடந்து கொள்ளுதல் மூலமும் பெற எண்ணியவர்கள் மிதவாதிகள் ( Moderates ) எனப்பட்டனர். கோபாலகிருஷ்ண கோகலே, பிரேஷ்சா மேத்தா, சுரேந்திரநாத் பானர்ஜி, ஜி.சுப்பிரமணிய ஐயர் போன்றோர் மிதவாதப் போக்கின் மூலம் தீவிரவாதப் போக்கினை எதிர்த்தும் செயல்படத் தொடங்கினர்.

தீவிரவாதம்:

                      ஆங்கிலேயர்களின் சட்டங்களை மறுப்பதன் மூலமும் அன்னியப் பொருள்களை அகற்றுதல், ஆங்கிலக் கல்வியை அகற்றி தேசியக் கல்வியைப் புகட்டுதல், ஆங்கிலேயரை எதிர்த்துக் கூட்டங்கள் ஊர்வலங்கள் நடத்துதல், ஆங்கிலேயரின் வாணிகத்தை அழிக்க சுதேசப் பண்டகசாலை, சுதேச கப்பல் கம்பெனி போன்றவற்றை அமைத்தல் ஆகிய செயல்கள் செய்வதன் மூலம் ஆங்கிலேயரிடமிருந்து வன்முறையில் சுதந்திரத்தைப் பெற எண்ணியவர்கள் தீவிரவாதிகள் ( Extremists ) எனப்பட்டனர். திலகர்,  லாலா லஜபதிராய், விபின் சந்திரபாலர், தாதாபாய் நௌரோஜி, வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதியார் போன்றோர் தீவிரவாதப் போக்கில் ஈடுபட்டவர்களாவர்.

பயங்கரவாதம்:

                     வன்முறைச் செயல்களான போர், கொலை, கொள்ளை ஆகியவற்றின் வழியாக ஆங்கிலேயர்களை அழித்துச் சுதந்திரத்தை நிலைநாட்ட எண்ணியவர்கள் பயங்கரவாதிகள் ( Terrorists ) எனப்பட்டனர். அயல்நாடுகளில் தங்கியிருந்த வீரசவார்க்கர், சியாம்ஜி கிருஷ்ணவர்மா, மேடம் காமா, வ.வே.சு.ஐயர், மதன்லால் திங்கரா போன்றவர்களும் இந்தியாவிலிருந்த அரவிந்தர், வாஞ்சிநாதன், பகவத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களும் அயல்நாடுகளின் உதவியுடன் ஆங்கில ஆட்சியை அகற்றப் போரை மேற்கொண்ட செண்பகராமன் பிள்ளை, ராஷ்பிகாரி போஷ், சுபாஷ்சந்திரபோஸ் போன்றவர்களும் பயங்கரவாதப் போக்கின் மூலம் ஆங்கில ஆட்சியை இந்தியாவிலிருந்து அகற்ற மக்களைத் தூண்டினர்.

அகிம்சை:

           வன்முறையை அகற்றிவிட்டு அன்புமுறையில் (அகிம்சை) அழிவை உண்டாக்காமல் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற எண்ணியவர்கள் ‘சத்தியாக்கிரகிகள்’ எனப்பட்டனர். காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, இராமலிங்கம் பிள்ளை போன்றோராவர். இவர்கள் சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், நிர்மான இயக்கம், சமுதாயச் சீர்திருத்த இயக்கம் போன்றவைகளால் சுதந்திரம் பெற எண்ணியவர்களாவர்.

ஹோம் ரூல் இயக்கம்:

         திலகர், அன்னிபெசண்ட் ஆகியோர் தன்னாட்சி பெறவேண்டும் என்ற உணர்வை மக்களிடையே பரப்பியவர்களாவர்.

சட்டசபை நுழைவு இயக்கம்:

                 சட்டசபைக்குச் சென்று சட்டங்களை எதிர்ப்பதன் மூலம் சுயராஜ்யம் பெறலாம் என்று சுயராஜ்யக் கட்சியை அமைத்தவர்கள் ‘சட்டசபை மிதவாதிகள்’ எனப்பட்டனர். சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு, வித்தல்பாய் பட்டேல், சத்தியமூர்த்தி போன்றோர் சட்டசபை நுழைவை மேற்கொண்டவர்களாவர்.

சீர்திருத்த இயக்கம்:

        சமுதாயத்தில் காணப்படும் சீர்கேடுகளை நீக்குவதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை உண்டாக்கி சுதந்திர உணர்வைத் தூண்ட முயன்றவர்கள் ‘சீர்திருத்தவாதிகள்’ ( Reformers ) எனப்பட்டனர். ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், இராமலிங்க அடிகள், அன்னிபெசண்ட், ம.சிங்காரவேலர், திரு.வி.கல்யாண சுந்தரம், ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜீவானந்தம் போன்றோர் சீர்திருத்தவாதிகளாகச் செயல்பட்டனர்.

தேசியக் கவிதை இயக்கம்:

    மக்களிடையே கவிதைகள் மூலம் நாட்டுப்பற்றைத் தூண்டியவர்கள் ‘தேசியக் கவிஞர்கள்’ எனப்பட்டனர். பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர், சுப்பிரமணிய சிவா, நாமக்கல் கவிஞர் போன்றோரின் கவிதைகள் நாட்டுப்பற்றைத் தூண்டுவதில் முன்னோடியாக இருந்தனர்.

தேசியப் பத்திரிக்கை இயக்கம்:

         பத்திரிக்கைகள் மூலம் நாட்டுப்பற்றைத் தூண்டியவர்களில் அரவிந்தர், விபின் சந்திரபாலர், லாலா லஜபதிராய், திலகர், சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, திரு.வி.கல்யாண சுந்தரம், சி.சுப்பிரமணிய ஐயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

         மேற்கண்ட உத்திமுறைகளின் கூட்டுமுயற்சியே இந்தியா விடுதலைப் பெற சாதகமாக அமைந்த சக்திகள் என்றும் கருத முடிகிறது.

      இனிவரும் வலைப்பதிவுகளில் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்



Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication




கருத்துரையிடுக

0 கருத்துகள்