இந்திய நாட்டுப்பற்று -பகுதி 25: நாட்டுப்பற்று வளரத் தடையாக இருந்த சக்திகள்-பிரித்தாளும் சூழ்ச்சி, பத்திரிக்கைச் சட்டம், அடக்குமுறை & சிறைத் தண்டனை

நாட்டுப்பற்று வளரத் தடையாக இருந்த சக்திகள்

     உலக நாடுகளில் தோன்றிய நாட்டுப்பற்றில் சீனப்புரட்சி பற்றியும் மேலும் ரஷ்யப் புரட்சி பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்று வளரத் தடையாக இருந்த சக்திகளான பிரித்தாளும் சூழ்ச்சி பற்றியும், பத்திரிக்கைத் தணிக்கைச் சட்டம் பற்றியும், மேலும் அடக்குமுறை சட்டம் பற்றியும், சிறைத் தண்டனை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • பிரித்தாளும் சூழ்ச்சி
  • பத்திரிக்கைத் தணிக்கைச் சட்டம்
  • அடக்குமுறை சட்டங்களும், சிறைத் தண்டனையும்

பிரித்தாளும் சூழ்ச்சி:

  இந்தியாவில் வாழ்ந்த சிற்றரசர்களின் ஒற்றுமையின்மையும், அவர்களின் நாடு பிடிக்கும் ஆசையும், பகைவர்களுக்குத் தம்மவர்களைக் காட்டிக் கொடுக்கும் பண்பும் நாட்டுப்பற்று வளரத் தடையாக இருந்தன.

    ஆங்கில ஆட்சியின் பிரித்தாளும் ( Divide and Rule) சூழ்ச்சியால் ஏற்பட்ட இந்து–முஸ்லீம் வேற்றுமையும், அதனால் ஏற்பட்ட கலவரங்களும், 1932-இல் ‘ராம்சே மாக்டோனால்டு’ வெளியிட்ட வகுப்புவாரி திட்டமும், ( Communal Award ) முஸ்லீம் தலைவர் ஜின்னாவின் ‘பாகிஸ்தான்’ கோரிக்கையும் இந்தியர்களிடையே வேற்றுமை உணர்வை வளரச் செய்தன.

        இந்தியர்களின் கல்வியறிவின்மை, மூடப்பழக்க வழக்கங்கள், தீண்டாமை, சாதிவேறுபாடு, சமய வேறுபாடு போன்றவை ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குச் சாதகமாக அமைந்தன.

பத்திரிக்கைத் தணிக்கைச் சட்டம்:

 பத்திரிக்கைத் தடைச்சட்டங்களால் பல பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டன. முதன்முதலில் 1780-இல் வெளியான ‘பெங்கால் கெஜட்’ அரசுக்கு விரோதமான செய்திகளை வெளியிட்டதால் அப்பத்திரிக்கையின் ஆசிரியர் ‘ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி’ 1782-இல் சிறையிலிடப்பட்டார். அவரின் பத்திரிக்கையும் தடை செய்யப்பட்டது. ‘துவேன்’ என்பவர் தான் நடத்திய இந்தியன் ஓல்டு ( Indian World ) என்ற பத்திரிக்கையில் காரன் வாலிஸ் பிரபுவைத் தாக்கி எழுதியதால் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஐரோப்பாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

     பிரெஞ்சுப் புரட்சியின்போது இந்தியாவின் இரகசியங்கள் பிரெஞ்சுக்குப் போகாமல் தடைசெய்ய 1799-இல் வெல்லெஸ்லி பிரபு பத்திரிக்கைத் தணிக்கைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.1823-இல் வெளியான பத்திரிகை லைசென்ஸ் சட்டம்,1857-இல் வெளியான தடைச்சட்டம்,1878-ஆம் ஆண்டு வெளியான நாட்டுமொழிப் பத்திரிகைத் தடைச்சட்டம், ( The Vernacular Press Act ) 1908-இல் வெளியான பத்திரிக்கைகளின் சட்டம், ( The Newspapers Incitement to Offences Act ) 1910-இல் வெளியான இந்தியப் பத்திரிக்கைகள் சட்டம், 1931-இல் வெளியான இந்தியப் பத்திரிக்கை,நெருக்கடி கால அதிகாரங்கள் சட்டம், ( Indian Press Emergency Powers Act ) 1932-இல் வெளியான அயல்உறவுச் சட்டம், 1934-இல் வெளியான இந்திய அரசுகள் பாதுகாப்புச் சட்டம் போன்றவை பத்திரிக்கைகளின் வளர்ச்சியைத் தடை செய்தது மட்டுமில்லாமல் பத்திரிக்கையாசிரியர்களையும் துன்பத்திற்கு உள்ளாக்கியது.

அடக்குமுறை சட்டங்களும், சிறைத் தண்டனையும்:

      வேலூர்ப் புரட்சி, சிப்பாய்க் கலகம், வங்கப்புரட்சி, மாண்டேகு செம்ஸ்போர்டுச் சீர்திருத்தம், ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரக இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றை அடக்க கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தேசபக்தர்களின் வலிமையைச் சிதறச் செய்தது.

 தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறைத்தண்டனை அவர்கள் மீண்டும் தீவிர இயக்கத்தில் ஈடுபடாமல் தடையை ஏற்படுத்தியது. வீரசவார்க்கர், வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா, விபின் சந்திரபாலர், லாலா லஜபதிராய், திலகர் போன்றோர் சிறைத் தண்டனைக்குப் பிறகு தீவிரமாகச் செயல்படத் தயங்கினர் என்றும் கருதலாம்.

  சூரத் காங்கிரஸில் தலைவர்களிடையே ஏற்பட்ட மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற பிளவு, 1922-இல் காங்கிரசில் ஏற்பட்ட ‘சட்டசபை நுழைவை எதிர்ப்போர்’ ( No Changers ) என்ற பிளவு, 1927-இல் காங்கிரசில் ஏற்பட்ட இடதுசாரி, வலதுசாரி என்ற பிளவு, 1939-இல் சுபாஷ்சந்திரபோஷால் ஏற்பட்ட இடதுசாரி, வலதுசாரி என்ற பிளவு ஆகியவை இந்திய தேசிய காங்கிரஸை வலுவிழக்கச் செய்தன. பிராமணர், பிராமணரல்லாதார் வேறுபாட்டால் தோன்றிய ‘தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்’ ‘நீதிக்கட்சி’, ‘சுயமரியாதை இயக்கம்’, ‘திராவிடக் கழகம்’, ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ போன்றவை திராவிடர் விடுதலை பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தன.

 அடுத்த வலைப்பதிவில் சுதந்திரம் பெற தேசபக்தர்கள் கையாண்ட உத்திகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்




Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication






கருத்துரையிடுக

0 கருத்துகள்