இந்திய நாட்டுப்பற்று -பகுதி 24: சீனப்புரட்சி (சன்யாட்சென்,மாசேதுங்) , ரஷ்யப் புரட்சி (மகாபீட்டர்) மற்றும் காரல் மார்க்ஸ்

சீனப்புரட்சி,ரஷ்யப் புரட்சி மற்றும் காரல் மார்க்ஸ் 

     இத்தாலி இணைப்பு பற்றியும், ஜெர்மனி இணைப்பு பற்றியும் மேலும் இலத்தீன் - அமெரிக்கா விடுதலைப் போர் பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக உலக நாடுகளில் தோன்றிய நாட்டுப்பற்றில் சீனப்புரட்சி பற்றியும் மேலும் ரஷ்யப் புரட்சி பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • சீனப்புரட்சி
  • ரஷ்யப் புரட்சி
  • காரல் மார்க்ஸ்

சீனப்புரட்சி:

              மஞ்சு அரசர்களின் திறமையற்ற ஆட்சிமுறை சீன மக்களிடையே புரட்சியுணர்வை உண்டாக்கியது. 1894-95-இல் நடந்த சீன-ஜப்பானியப் போரில் சீனாவின் தோல்வி மஞ்சு அரசர்களின் திறமையற்ற செயலை மெய்ப்பித்து விட்டதால் சீனமக்கள் மஞ்சு அரசர்களின் ஆட்சியை ஒழித்து புதிய அரசை நிறுவ முயன்றனர். அதற்காகச் சீனாவில் பல இயக்கங்கள் தோன்றின. டாக்டர் ‘சன்யாட்சென்’ சீனாவின் விடுதலை இயக்கத்திற்குத் தலைவரானார். இவர் சீனா முன்னேற வேண்டுமானால் மக்கள் குடியரசை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 1894-இல் ‘சீனப் புத்துயிர்ச் சங்கத்தை’ ஏற்படுத்தினார். இச்சங்கத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஒன்று சேர்த்துப் புரட்சி செய்தார். புரட்சியை ஒடுக்க சன்யாட்சென் நாடு கடத்தப்பட்டார். இவர் அமெரிக்காவில் தம் கொள்கைகளுக்கு ஆதரவு தேடினார்.

           1911-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சீனாவிலும், தென் சீனாவிலும் புரட்சி வெடித்தது. மூன்று மாதங்கள் மஞ்சு அரசுப் படைகளுக்கும், புரட்சியாளர் படைகளுக்கும் இடையே போர் கடுமையாக நடந்தது. இறுதியில் புரட்சியாளர் படை வெற்றி பெற்றதால் 1912-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று சீனா ‘மக்கள் குடியரசாக’ மாற்றப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. டாக்டர் சன்யாட்சென் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            1912-ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்களால் சீனா முடியரசை இழந்து குடியரசாக மாறியது. அதன் பின்னர் பொதுவுடைமைக் கட்சியினர் செய்த புரட்சியால் 1949-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் சீனா ‘மக்கள் குடியரசு’ நாடாக மாறியது. அதன் தலைவராக மாசேதுங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரஷ்யப் புரட்சி:

               ‘ரோமனோவ்’ வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் ரஷ்யாவில் 1613 முதல் 1917-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்கள். அவர்களுள் ‘மகாபீட்டர்’ திறமையுடன் ஆட்சி செய்தார். மகாபீட்டருக்குப்பின் ஆட்சி செய்தவர்கள் கொடுங்கோலர்களாகவும், திறமையற்றவர்களாகவும் இருந்ததால் ரஷ்ய மக்களிடையே புரட்சியுணர்வு வளர்ச்சியடைந்தது.

             1861-ஆம் ஆண்டு இரண்டாம் அலெக்சாண்டர் அடிமையில் வாழ்ந்த உழவர்களை விடுதலை செய்தார். இருப்பினும் அக்காலத்தில் செயல்பட்டு வந்த ‘நிஹிலிசம்’ ( Nihilism ) என்ற இயக்கத்தை அவர் ஒடுக்க முற்பட்டதால் மக்களால் கொல்லப்பட்டார். அவருக்குப் பின் வந்த மூன்றாம் அலெக்சாண்டர் நிஷிலிச இயக்கத் தலைவர்களைக் கொடுமைப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்த நிக்கோலஸ் கொடுங்கோல் மன்னராகச் செயல்பட்டதால் மக்கள் முடியாட்சியை ஒழிக்கக் கொதித்து எழுந்தனர். இந்நிலையில் மக்களிடையே தோன்றிய வறுமையும், தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையும் மக்களிடையே தீவிர புரட்சியை வளர்ச்சியடையச் செய்தன.

காரல் மார்க்ஸ்:

          ‘காரல் மார்க்ஸின்’ மூலதனம் ( Das Capital ) மார்க்ஸ், ஏஞ்சல்ஸ் என்ற இருவரும் சேர்ந்து வெளியிட்ட ‘பொதுவுடைமைப் பொது அறிக்கை’ லியோடாலீஸ் ஸ்டாய், மார்க்கிம் கார்க்கி ஆகியோரின் நூல்கள் ரஷ்ய மக்களிடையே அரசியல் உணர்வையும், ஒற்றுமையையும் உண்டாக்கின. 1904-1905-ம் ஆண்டுகளில் நடந்த போரில் ஜப்பானிடம் ரஷ்யா தோல்வியடைந்த நிலையும், 1905-ஆம் ஆண்டு ரஷ்ய மக்களின் புரட்சியை அடக்க இரண்டாம் நிக்கோலஸ் தன் படைகளை ஏவிச் செய்த செஞ்ஞாயிற்றுப் படுகொலையும் ( The Massacre of Red Sunday ) முதல் உலகப்போரில் ரஷ்யப் படைகள் ஜெர்மானியப் படைகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையும், ரஷ்ய மக்களிடையே முடியாட்சியை அகற்றவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தின.

            விடுதலை உணர்வு பெற்ற ரஷ்ய மக்கள் 1917-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பீட்டர்கிரேடு ( Petrograd ) என்ற நகரத்தை நோக்கி அணிவகுத்துச் சென்று அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தனர். புரட்சியை ஒடுக்க அரசரால் அனுப்பப்பட்ட படைகளும் புரட்சிக்காரர்களுடன் சேர்ந்து மேலும் புரட்சியைத் தீவிரப்படுத்தியது. இந்நிலையில் இரண்டாம் நிக்கோலஸ் முடி துறந்தார். உடனே தொழிலாளர் மக்களாட்சிக் கட்சியலிருந்து ( Workers Social Democratic Party) பிரிந்து சென்ற மிதவாதிகளாகிய ‘மென்றிவிக்குகள்’ ஒரு தற்காலிக அரசை உருவாக்கினர். மக்கள் இவ்வரசை விரும்பாதநிலையில் ‘லெனின்’ தலைமையில் இயங்கிய ‘போல்ஷிவிக்குகள்’ 1917-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்யாவின் பொதுவுடைமை ஆட்சியை அமைத்தனர்.

          17-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை உலகநாடுகளில் தோன்றிய புரட்சிகளும், போர்களும் இந்தியர்களுக்கு நாட்டுப்பற்றைத் தூண்டியது. ஆனால் உலகநாடுகளில் விடுதலைக்காகச் செய்யப்பட்ட புரட்சிகளுக்கும், போர்களுக்கும் மாறுபட்ட ஒரு புதிய அகிம்சைப்போர் முறை இந்தியாவில் உருவானது. இப்போர் முறை உலகத்திற்குப் புதுமையான ஒன்றாகவும், அழிவை அகற்ற வல்லதாகவும் இருந்தது.

       அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்று வளரத் தடையாக இருந்த சக்திகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்



Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

கருத்துரையிடுக

0 கருத்துகள்