இந்திய நாட்டுப்பற்று -பகுதி 23: இத்தாலி இணைப்பு, ஜெர்மனி இணைப்பு மற்றும் இலத்தீன் - அமெரிக்கா விடுதலைப் போர்

இத்தாலி இணைப்பு, ஜெர்மனி இணைப்பு மற்றும் இலத்தீன் - அமெரிக்கா விடுதலைப் போர் 

     உலக நாடுகளில் தோன்றிய நாட்டுப்பற்றில் அமெரிக்க விடுதலைப் போர் பற்றியும், பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக இத்தாலி இணைப்பு பற்றியும், ஜெர்மனி இணைப்பு பற்றியும் மேலும் இலத்தீன் - அமெரிக்கா விடுதலைப் போர் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • இத்தாலி இணைப்பு
  • ஜெர்மனி இணைப்பு 
  • இலத்தீன் - அமெரிக்கா விடுதலைப் போர் 

இத்தாலி இணைப்பு:

        1815-இல் கூடிய வியன்னா மாநாட்டில் (  Congress of Vienna ) இத்தாலி பல நாடுகளால் பிரித்து ஆளும் நிலை ஏற்பட்டது. இத்தாலியின் பகுதிகளான வெனிஷியாவும் லம்பார்டியும் ஆஸ்திரியாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. பார்மா, மொடினா, டஸ்கலி ஆகியவை ஹாப்ஸ்பர்க் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் ஆளப்பட்டன. லூக்கா, சிசிலி, நோபிள்சு போன்றன ஸ்பானிய பூர்பன் வம்ச அரசு குடும்பத்தினரால் ஆளப்பட்டன. ரோமக்னா மார்செங், அம்பிரியா, ரோம் ஆகியவை போபினால் ஆட்சி செய்யப்பட்டன. சார்டினியா, பீட்மான்ட், நீஸ், சவாய் போன்றவற்றை இத்தாலிய அரச வம்சத்தினரான இரண்டாம் விக்டர் இம்மானுவேல் ஆட்சி செய்தார்.

                இவ்வாறு இத்தாலி பல நாடுகளால் பிரித்து ஆளப்பட்டு வருவதையறிந்த இத்தாலிய மக்கள் தீவிர விடுதலையுணர்வு பெற்றுச் சிதறுண்ட பகுதிகளை இணைத்து ஒரே குடியரசாக்க முன்வந்தனர்.

     இத்தாலியை இணைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ஜோசப் மாஜினி என்பவர் 1831-இல் ‘இணைய இத்தாலி’ ( Young Italy ) என்ற இயக்கத்தைத் தொடங்கி, இத்தாலிய மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டினார். மாஜினியின் தொண்டரான கரிபால்டி 1833-இல் செய்யப்பட்ட புரட்சியில் பங்கு கொண்டதால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்நிலையில் கரிபால்டி அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றார். அங்குக் கொரில்லாப் போர்ப் பயிற்சி பெற்று இத்தாலிக்குத் திரும்பி வந்து 1848-இல் நடந்த புரட்சியில் கலந்து கொண்டார். அதே ஆண்டில் ‘செஞ்சட்டை வீரர்ப்படையை’ அமைத்து நாட்டுப்பற்றுமிக்க இளைஞர்களை அதில் சேர்த்தார். இவர் தலைமையில் சென்ற ஆயிரக்கணக்கான செஞ்சட்டை வீரர்கள் பூர்பன் அரசை விரட்டியடித்து விட்டுச் சிசிலி தீவிற்குச் சென்று அதையும் கைப்பற்றினர். பின்னர் தென் இத்தாலி வழியாக நோபிள்சுக்குச் சென்றனர். அப்போது அவர்கள்,

   “இத்தாலியை விட்டுப் போய்விடு

   தாயகத்தை விட்டுப் போய்விடு

   இத்தாலியை விட்டுப் போய்விடு

   ஓ! அயலவனே போய்விடு”

                   என்ற கரிபால்டியின் எழுச்சிமிக்க பாடலைப் பாடிச் சென்றனர். இவர் இத்தாலிய இணைப்பின் ‘போர்வாள்’ என்றும் அழைக்கப்படுகிறார். கவுண்ட் கவூர் என்பவர் இளமையிலேயே இராணுவப் பயிற்சி பெற்றுத் திறமைமிக்க இராணுவ வீரராக விளங்கினார். இவர் ‘ரிசார்ஜிமெண்டோ’ என்ற பத்திரிக்கையின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

                 மேலே கூறப்பட்ட பெரியோர்களின் அயராத உழைப்பாலும், இத்தாலிய அரச வம்சத்தினரான இரண்டாம் விக்டர் இம்மானுவேலுவின் பெரு முயற்சியாலும் 1870-இல் இத்தாலி முழுமையாக இணைக்கப்பட்டது. இணைந்த இத்தாலியின் மன்னராக இரண்டாம் விக்டர் இம்மானுவேல் அமர்த்தப்பட்டார்.

ஜெர்மனி இணைப்பு:

              நெப்போலியனின் தோல்விக்குப் பிறகு 1815-இல் வியன்னாவில் கூடிய மாநாடு ஜெர்மனியில் 39 அரசுகளையும், நான்கு சுதந்திர நகரங்களையும் கொண்ட கூட்டாட்சியை உருவாக்கியது. அந்த அரசுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆஸ்திரியாவிடம் இருந்தது. 39 அரசுகளில் ஒன்றான ஹனோவர் இங்கிலாந்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதேபோல் ஹால்ஸ்டைன் டென்மார்க்கின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டிருந்தது. ஜெர்மனி ஒன்றாக இணைவதற்கு ஆஸ்திரியா, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய நாடுகள் தடையாக இருந்தன. 39 ஜெர்மானிய அரசுகளில் மிகப்பெரியதான பிரஷ்யா ஜெர்மனியை இணைப்பதற்கு நல்ல சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

           பிரஷ்யாவின் மன்னரான முதலாம் வில்லியம் நாட்டுப்பற்று மிகுந்த சிறந்த போர் வீரர். இவர் ஜெர்மனியை இணைக்க ஒரு படை வேண்டுமென்று விரும்பினார். இவருடைய முயற்சியால் வான்மாலிட்கே என்பவர் பிரஷ்யாவிற்குத் தேவையான படையை உருவாக்கினார். 1862-இல் ‘பிஸ்மார்க்’ முதலாம் வில்லியமின் அமைச்சராக நியமிக்கப்பட்டவர். இவர் ஜெர்மனியை இணைப்பதில் பெரும் பங்கு கொண்டதால் ‘இரும்பு மனிதர்’ என அழைக்கப்பட்டார். இம்மூன்று பெரியோர்கள் நடத்திய ‘டென்மார்க்போர்’ (1864) ஆஸ்திரியா – பிரஷியப் போர் (1866), பிரெஞ்சு – பிரஷியப் போர் (1870-71) ஆகியவைகளால் ஜெர்மனி முழுமையாக இணைக்கப்பட்டது. பிரஷிய அரசரான முதலாம் வில்லியம் 1871-இல் இணைந்த ஜெர்மனியின் பேரரசராக நியமிக்கப்பட்டார்.

இலத்தீன் - அமெரிக்கா விடுதலைப் போர்:

         தென் அமெரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகள், மத்திய அமெரிக்காவில் உள்ள நாடுகள், கரிபியன் கடலிலுள்ள மேற்கிந்திய தீவுகள் ஆகியவை ‘இலத்தீன் அமெரிக்கா’ என அழைக்கப்பட்டது. தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் போர்ச்சுக்கல் தன் அரசை நிலைநாட்டியது.

         கயானாவில் இங்கிலாந்து, ஹாலந்து, பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் ஆட்சியை நிலைநாட்டியது. மத்திய அமெரிக்காவையும், தென் அமெரிக்காவிலுள்ள மற்றப் பகுதிகளையும் ஸ்பெயின் ஆட்சி செய்தது. இவ்வாறு இலத்தீன், அமெரிக்கா சில நாடுகளால் பிரித்து ஆளப்பட்டு வந்தது.

       ஸ்பெயின், தன் கட்டுப்பாட்டில் இருந்த குடியேற்ற நாடுகள் வேறு நாடுகளுடன் வாணிகம் செய்வதைத் தடை செய்தது. அங்குள்ள செல்வங்களைச் சுரண்டிச் சென்றது. இந்நிலையை அறிந்த மக்கள் ஸ்பெயினின் பிடியிலிருந்து விடுபட முன்வந்தனர். குடியரசு நாடாக இருந்த ஐக்கிய அமெரிக்காவின் வளர்ச்சி இலத்தீன் அமெரிக்க மக்களுக்கு விடுதலையுணர்வைத் தூண்டியது என்றும் கூறலாம்.

     அமெரிக்கப் புரட்சியிலும், பிரெஞ்சுப் புரட்சியிலும் பங்கு கொண்ட இலத்தீன் அமெரிக்க வீரர்கள் தன் தாய்நாடு விடுதலை பெறவும் விருப்பம் கொண்டனர். அவர்களுக்கு ‘பிரான்சிஸ்கோ மிராண்டா’, சைமன் பொலிவர், ஜான் மார்டின் ஆகிய மூவரின் போர் முயற்சியால், இலத்தீன் அமெரிக்கா 1830-இல் விடுதலை அடைந்தது. விடுதலை அடைந்த இலத்தீன் அமெரிக்காவிற்குச் சைமன் பொலிவர் அரசராக நியமிக்கப்பட்டார்.

                    அடுத்த வலைப்பதிவில் உலக நாடுகளில் தோன்றிய நாட்டுப்பற்றில் சீனப்புரட்சி பற்றியும் மேலும் ரஷ்யப் புரட்சி பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்




Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

கருத்துரையிடுக

0 கருத்துகள்