இந்திய நாட்டுப்பற்று பகுதி -8: ஒத்துழையாமை இயக்கம், சுயராஜ்ஜியக் கட்சி, சைமன் கமிஷன், முழு நிறை விடுதலை மற்றும் சட்டமறுப்பு இயக்கம்

ஒத்துழையாமை இயக்கம்

 இந்தியாவில் நாட்டுப்பற்று வளர்ச்சி அடைவதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படை காரணிகளைத் தொடர்ந்து மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பற்றியும், மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் பற்றியும், அயல் நாடுகளில் இந்திய நாட்டுப்பற்று பற்றியும், தன்னாட்சி இயக்கம், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் மற்றும் ரௌலட் சட்டமும், ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக ஒத்துழையாமை இயக்கம், சுயராஜ்ஜியக் கட்சி, சைமன் கமிஷன், முழு நிறை விடுதலை மற்றும் சட்டமறுப்பு இயக்கம் ஆகியவை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • ஒத்துழையாமை இயக்கம்
  • சுயராஜ்ஜியக் கட்சி
  • சைமன் கமிஷன்
  • முழு நிறை விடுதலை
  • சட்டமறுப்பு இயக்கம்

ஒத்துழையாமை இயக்கம்:

      தென்ஆப்பிரிக்காவில் சாத்வீகப் போர்முறையில் கண்ட வெற்றியும், 1914இல் கத்தியவார் சுங்கச்சாவடி போராட்டத்திலும், 1917-இல் சாம்பரான் நீலித் தோட்டத் தொழிலாளர் இயக்கத்திலும், 1918-இல் அகமதாபாத் நெசவாளர் போராட்டத்திலும், குஜராத் வரி மறுப்பு இயக்கத்திலும், 1919-இல் ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்திலும் காந்தியடிகளுக்குக் கிடைத்த வெற்றிகளும் மக்கள் அவரைப் பெரிதும் விரும்புவதற்குக் காரணங்களாக அமைந்தன. 1920-இல் திலகர் இறந்ததால், அவர் ஆரம்பித்து வைத்துள்ள அகண்ட சுயராஜ்ஜிய ஜெபத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இந்த வீரச்சிங்கம் தாங்கியிருந்த சுயராஜ்யக் கொடியை ஒரு கணமும் தாழ விடக்கூடாது என்று காந்தியடிகள்(1) எண்ணினார். இவர் திலகரின் தீவிர வாதப்போக்கை விரும்பாவிட்டாலும் அவரால் நடத்தப்பட்ட சுயராஜ்யக் கிளர்ச்சியை ஏற்று நடத்த வேண்டிய சூழ்நிலை காந்தியடிகளுக்கு ஏற்பட்டது. ஆங்கில ஆட்சியிடம் நல்லெண்ணம் கொண்டிருந்த காந்தியடிகளுக்கு ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ பெரும் அதிர்ச்சியைத் தந்தது. இந்நிலையில் சாத்வீகப் போர்முறையே இந்தியர்களை அழிவிலிருந்து காத்து சுயராஜ்யம் பெற வழி என்பதை உணர்ந்தார். இக்கருத்தை பின்வரும் சான்று தெளிவாக்குகிறது. ‘நமக்கிருக்கின்ற ஒரேவழி ஒத்துழையாமையாகும். இதுதான் நம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் தெளிவான வழி. பலாத்காரத்திலிருந்து முழுமையாக நீங்கி நிற்கும் பொழுது ஒத்துழையாமை முழுமையான வலுவுடையதாகிறது’ என்கிறார் காந்தியடிகள்(2). ஒத்துழையாமை இயக்கம் தோன்றுவதற்கான அடிப்படை ரௌலட் சட்டமே என்கிறார் சுரேந்திரநாத் பானர்ஜி(3).

   காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை வலுப்படுத்த கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவு தந்தார். இதனால் முஸ்லீம்களும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு தந்தனர். முஸ்லீம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய அலி சகோதரர்கள் காந்தியடிகளுக்குத் துணையாக இருந்தனர். 1920-இல் அகமதாபாத்தில் நடந்த இந்து முஸ்லீம் சட்டம் ஒத்துழையாமையை ஆதரித்தது.

  பஞ்சாப் படுகொலை, கிலாபத் அநியாயம் போன்றவைகளுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளும் நோக்கத்துடன் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை காந்தியடிகள் கொண்டு வந்தார். வன்முறையை அன்புமுறையால் அகற்ற வேண்டும் என்று அவர் விரும்பியதன் விளைவே ஒத்துழையாமை இயக்கம் தோன்றுவதற்கான அடிப்படை என அறியமுடிகிறது. 1920-ல் விஜயராகவாச்சாரியார் தலைமையில் கூடிய காங்கிரஸ் ஒத்துழையாமைத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ‘சுயராஜ்யம்’ என்ற புதிய தீர்மானத்தை ஒத்துழையாமைத் தீர்மானத்துடன் இவர் இணைத்தார். இத்தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டுச் சென்னைக்கு வரும் வழியில் ரயிலை நிறுத்தி ஒத்துழையாமையை முதன்முதலாகச் செயல்படுத்திக் காட்டினார்(4).  காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதிலும், செயல்படுத்துவதிலும் தமிழர்கள் முன்னோடியாக இருந்தனர் என்பது தெளிவாகிறது.

   ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாக்கப்பட்ட நிலையில் அந்நியப் பொருள்கள் அகற்றப்பட்டன. அந்நியத் துணிகள் தீயிடப்பட்டன. அரசு நீதிமன்றங்கள் புறக்கணிக்கப்பட்டன. 1920-இல் நடந்த தேர்தல் புறக்கணிக்கப்பட்டது. 1920-இல் வேல்ஸ் இளவரசரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோதிலால் நேரு, ராஜேந்திர பிரசாத், சி.ஆர்.தாஸ், வல்லபாய் பட்டேல் ஆகியோர் வக்கீல் தொழிலைத் துறந்தனர். சுபாஷ் சந்திரபோஷ் தனது ஐ.சி.எஸ். பட்டத்தைத் துறந்தார். மாணவர்கள் கல்விக்கூடங்களை விட்டு வெளியேறினர். அவர்களுக்காகப் புதிய தேசியக்கல்வி நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. வங்க தேசியப் பல்கலைக்கழகம், முஸ்லீம் அலிகார் பல்கலைக்கழகம், லாகூர் தேசியக் கல்லூரி, திலகர் மகாராஷ்டிர வித்யா பீடம், குஜராத் வித்யா பீடம், பீகார் வித்யா பீடம் போன்ற கல்வி நிலையங்களில் தாய்மொழிக் கல்வி கற்பிக்கப்பட்டது.

 ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாகச் செயல்பட்டதால் சுமார் முப்பதாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 1922-இல் ‘சவுரி சௌரா’ என்ற இடத்தில் இவ்வியக்கம் வன்முறையாக மாறியதால் நிறுத்தப்பட்டது. இவ்வியக்கம் பெரும்பாலான இந்தியர்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலும் சிலருக்கு வெறுப்பையும் தந்தது. இவ்வியக்கம் வெற்றியடையவில்லை என்றாலும் இந்திய மக்களிடையே நாட்டுப்பற்று வளர்வதற்குத் தூண்டுதலாக அமைந்தது.

சுயராஜ்ஜியக் கட்சி:

     ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தியடிகள் நிறுத்தியதும் இவ்வியக்கத்தை எதிர்த்துச் செயல்பட்டவர்களால் மக்கள் திசை திருப்பப்பட்டனர். 1922-இல் கயாவில் நடந்த காங்கிரஸில் சட்டசபை நுழைவின் மூலம் சுயாட்சி பெறலாம் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தை காந்தியவாதிகள் எதிர்த்தனர். இந்நிலையில் சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு போன்றோர் ‘காங்கிரஸ் கிலாபத் சுயராஜ்யக் கட்சி’ என்ற புதுக்கட்சியைத் தோற்றுவித்தனர்(5). இக்கட்சியின் தோற்றம் காங்கிரஸில் மீண்டும் பிளவை ஏற்படுத்தியது. இப்பிளவினால் மாறுதல் வேண்டுவோர் (Prochangers) மாறுதல் வேண்டாதார் (No changers) என்ற இருபிரிவினர் தோன்றினர். இந்நிலையில் இந்து-முஸ்லீம் மக்களிடையே வேற்றுமை வளர்ந்தது. ஆங்கிலேயர்களுக்கு இச்சூழ்நிலை சாதகமாக அமைந்தது.

    சுயராஜ்யக் கட்சியின் தோற்றமும், இந்து-முஸ்லீம் பிளவும் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் ஏற்பட்ட செயல்களே என்றும் ஊகிக்கலாம். ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்த நிலையில் மக்களிடையே விடுதலை உணர்வு வளர்ச்சிக் குறையத் தொடங்கியது. இந்நிலையில் காந்தியடிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிறைத்தண்டனை மக்களுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. பின்பு சிறையிலிருந்து விடுதலையான காந்தியடிகள் சமுதாயச் சீர்திருத்த இயக்கங்களே இந்தியாவின் விடுதலைக்கு அடிப்படையாகும் என்று உணர்ந்தார். அச்சிக்கல்களைத் தீர்க்க நிர்மானத் திட்டங்களை மேற்கொள்ளுவதே சிறந்தவழி என்று தெளிந்து கொண்டார்.

சைமன் கமிஷன்:

       1919-இல் கொண்டு வரப்பட்ட மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தத்தின் விளைவை அறியவும், 1919-ஆம் ஆண்டில் வெளியான பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ‘சீர்திருத்தப் பங்கீடு’ என்ற சட்டப்படியும், இந்தியாவின் நிலையை அறிய 1928-இல் சைமன் தலைமையிலான குழு வந்தது. இக்குழுவில் இந்தியர் எவரும் இடம் பெறாததால் இக்குழு கொண்டு வரும் தீர்மானங்களை மக்கள் எதிர்த்தனர். இந்தியாவிற்கு ‘முழுநிறை விடுதலை’ தேவை என்பதை உணர்த்த ‘சைமனே திரும்பிப்போ!’ என்ற முழக்கம் இந்தியா முழுவதிலும் எதிரொலித்தது. இக்குழுவின் வருகையால் இந்தியர்களிடையே மீண்டும் எழுச்சி உருவானது. சைமன் கமிசன் எதிர்ப்பு இயக்கத்திற்குத் தலைமை வகித்த லாலா லஜபதிராய் சாண்டர்ஸ் என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டார். பகவத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் தூக்குத்தண்டனைப் பெற்றனர். இந்த வன்முறைச் செயல்கள் காந்தியடிகளை மீண்டும் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்க வழி வகுத்தது.

முழு நிறை விடுதலை:

    காங்கிரஸ் 1918-இல் குடியேற்ற நாட்டுரிமை கோரியும், 1928-ஆம் ஆண்டு வரை நிறைவேற்றப்படாததால் காங்கிரஸ் கட்சியில், வலது சாரி, இடது சாரி என்ற இருபிளவுகள் தோன்றின. இடதுசாரி கட்சியைச் சேர்ந்த சீனிவாச ஐய்யங்கார் 1927-இல் ‘முழுநிறை விடுதலைக் கழகம்’ (Complete Independence League) ஒன்றை அமைத்தார். இக்கழகம் 1928-இல் மோதிலால் நேரு வெளியிட்ட குடியேற்ற நாட்டுரிமைக் (Dominion Status) கோரிக்கையை எதிர்த்துச் செயல்பட்டது. இதற்குமுன்பே சென்னையில் கூடிய காங்கிரஸ் பூரண சுயராஜ்யம் கோரிய தீர்மானத்தை நிறைவேற்றியது(6).

    காங்கிரஸில் ஏற்பட்டிருந்த பிளவைநீக்க 1929-இல் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் கூடிய காங்கிரஸ் காந்தியடிகளின் ஆலோசனைப்படி பூரண சுதந்திரத் தீர்மானத்தையும், சட்ட மறுப்புத் தீர்மானத்தையும் செயல்படுத்த முன் வந்தது. இந்நிலையில் காந்தியடிகளின் சாத்வீகப் போர்முறையே இந்தியாவின் முழுநிறை விடுதலைக்கான நல்லவழி என்பதை இந்தியர் அனைவரும் உணர்ந்தனர். அதனால் மீண்டும் காந்தியின் சட்டமறுப்புப் போருக்கு ஆதரவு தர முன்வந்தனர்.

சட்டமறுப்பு இயக்கம்:

          ஹென்றி டேவிட் தோரோ என்பவர் 1849-இல் வெளியிட்ட ‘சட்ட மறுப்பு இயக்கம்’ என்ற நூல் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் சட்ட மறுப்பு இயக்கத்தை மேற்கொள்ளுவதற்கு அடிப்படையாக அமைந்தது என்றும் ஊகிக்கமுடிகிறது. தென்னாப்பிரிக்காவில் இவர் பெற்ற சட்டமறுப்பு இயக்க அனுபவம், ஒத்துழையாமை இயக்கத்தின்போதும், உப்புச்சத்தியாக்கிரக இயக்கத்தின்போதும் பயனுள்ளதாக அமைந்தது.

   காந்தியடிகள் இர்வின் பிரபுவிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் கேட்காத நிலையில் 1930-இல் சபர்மதியில் கூடிய காங்கிரஸ் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்க தீர்மானித்தது. காந்தியடிகள் மக்களுக்கு அதிக தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த உப்புச் சட்டத்தை மீறி தண்டியில் உப்பை எடுத்தார். அதே சமயத்தில் சென்னையில் டி.பிரகாசம் தலைமையிலும், வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையிலும், உப்புச் சட்டங்கள் மீறப்பட்டன. அகிம்சைப் போர் முறையில் தோல்வி கண்ட காந்தியடிகள் அகிம்சைப் போர் முறையை எதிர்ப்புப் போர் முறையாக மாற்றினால்தான் வெற்றியடைய முடியும் என்பதை உணர்ந்தார். இவ்வுணர்வின் விளைவே உப்புச் சத்தியாக்கிரகமாக உருப்பெற்றது என்று கருத முடிகிறது.

       சட்ட மறுப்பு இயக்கத்தை அடக்க ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சி மீண்டும் மக்களைத் தீவிரப்புரட்சியில் ஈடுபடச் செய்ததால் அவர்கள் மேற்கொண்ட சமாதானச் சூழ்ச்சி காந்தி-இர்வின் ஒப்பந்தமாக மலர்ந்தது. இவ்வொப்பந்தம் ஆரம்பத்தில் சமாதானத்தை ஏற்படுத்தினாலும் பின்பு அதுவே கிளர்ச்சிகள் தோன்ற ஏதுவாகவும் அமைந்தது.

      அடுத்த வலைப்பதிவில் வட்டமேஜை மாநாடுகள், மாநிலச் சுயாட்சி, கிரிப்ஸ் தூதுக்குழு, வெள்ளையனே வெளியேறு இயக்கம், வேவல் திட்டம், காபினெட் தூதுக் குழு, அட்லியின் அறிக்கை, மவுண்ட்பேட்டனும் இந்தியாவின் விடுதலையும் மற்றும்இந்திய நாட்டுப்பற்றின் விளைவுகள் போன்றவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


அடிக்குறிப்புகள்

1. காகாகாலேல்கர், காந்திக் காட்சிகள், (மொ.பெ.நூ.), ப.62.

2. காந்தியடிகள், மகாத்மாகாந்தி நூல்கள், தொகுதி-7, ப.48.

3. Guha,The story of Revolution, P.117.

4. சங்கரன், தமிழகத் தலைவர்கள், பக்.33-34.

5. Chittaranjan Das, Out line Scheme of Swaraj, P.13.

6. Pattabi Sitarammayya, History of Indian National Congress,Vol-I, PP.317-319.


Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication



கருத்துரையிடுக

0 கருத்துகள்