நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - கவிதையின் உள்ளடக்கம் உருவான நிலை
கவிதை என்பது காலம், இடம், சூழல் போன்ற இயற்கை சக்திகளுக்கு ஏற்ப கவிஞனிடத்தில் தோன்றுவதாகும் என்பது பற்றியும், உண்மைக் கவிஞன் தன் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்த துடித்துக்கொண்டிருப்பான் என்பது பற்றியும், சூழ்நிலை கவிதை தோன்றுவதற்கு அடிப்படைக் காரணியாக அமைகிறது என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக கவிதையின் உள்ளடக்கம் உருவான நிலை பற்றி இந்த வலைப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- வீறுணர்ச்சிக் கவிதைகள்
- தேசபக்திக் கவிதை
- பாரதியார்
வீறுணர்ச்சிக் கவிதைகள்:
“கவிஞன் பெறும் அனுபவங்களே கவிதையின் மூலங்களாகத் திகழ்கின்றன”(1). “உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் கவிக்கு உரிய பொருள்களாம்” கவிதைக்கு உரிய கருப்பொருள் காலந்தோறும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் தன்மையுடையது. சங்ககாலம் முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கவிதையின் உருவம், உள்ளடக்கம், உத்தி போன்றவை மாறிக்கொண்டே இருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை நாட்டுப்பற்றை உள்ளடக்கமாகக் கொண்ட தமிழ்க் கவிதைகள் தோன்றவில்லை என்றே கூறலாம். தோன்றுவதற்கான சூழ்நிலையும் உருவாகவில்லை. தனிமனித உணர்வு, சமுதாய நிலை, அரசர் நிலை, அற உணர்வு, சமய உணர்வு, பக்தியுணர்வு போன்றவைகள் அக்காலங்களில் கவிதைக்குரிய உள்ளடக்கமாக இருந்தன. அக்காலத்தில் முடிமன்னர்களை எதிர்த்துச் சுதந்திரமாக வாழ வழியற்ற நிலை இருந்தது. எனவே முடியாட்சியை எதிர்த்து நாட்டுப்பற்றைப் பாடுபொருளாகக் கொண்ட கவிதைகள் தோன்றவில்லை.
16-ஆம் நூற்றாண்டு தொடங்கி 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை உலக நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளும், இயக்கங்களும் கவிதைகளில் எதிரொலிக்கத் தொடங்கின. இவ்வாறு உருப்பெற்ற கவிதைகளை வீறுணர்ச்சிக் கவிதைகள் என அழைக்கலாம். வீறுணர்ச்சிக் கவிதை இயக்கம் 19-ஆம் நூற்றாண்டில் மேல்நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியது. வில்லியம் பிளேக், வில்லியம் வார்ட்ஸ், கால்ரிட்ஜ், ஷெல்லி, பைரன், கீட்ஸ் போன்றவர்கள் ஆங்கில நாட்டு வீறுணர்ச்சிக் கவிதை இயக்கத்தை உருவாக்கியவர்கள்”(2). வீறுணர்ச்சிக் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் வளரத் தொடங்கின.
தேசபக்திக் கவிதை:
19-ஆம் நூற்றாண்டில் மேலைநாடுகளில் வளர்ந்த வீறுணர்ச்சிக் கவிதை இயக்கம், இருபதாம் நூற்றாண்டில் தேசபக்திக் கவிதை மரபு இந்தியாவில் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது என்றும் கருதமுடியும்.
தாகூர், பங்கிம் சந்திரர், குமரன் ஆசான், வள்ளத்தோள், நாராயண மேனோன், சுப்பிரமணிய பாரதி, பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை, இராமலிங்கம் பிள்ளை போன்றோர் நாட்டுப்பற்றை உள்ளடக்கமாக் கொண்ட கவிதைகளை எழுதுவதற்கு வீறுணர்ச்சிக் கவிதைகள் தூண்டுதலாக இருந்தன என்றும் கருதமுடிகிறது.
சுப்பிரமணிய பாரதியார்:
“பாரதியார் காசியில் இருந்தபோது ஷெல்லி, பைரன், கீட்ஸ், வோர்ட்ஸ் வொர்த் போன்ற கவிஞர்களின் பாடல்களை நன்கு படித்தார்”(5). “அவர்கள் பயன்படுத்தியிருந்த உள்ளடக்கத்தையே தமிழில் கவிதையாக்கி” “நாட்டுப்பற்றை வெளிப்படுத்த முயன்றார். பைரனின் தேசியப் பாடல்கள், பாரதியாரின் தேசியப் பாடல்களுக்கு அடிப்படையாக இருந்தன என்கிறார் கைலாசபதி”.
இத்தாலியில் வாழ்ந்த தேசியக் கவிஞர்களான லியோபார்டி, மாஜினி, கரிபால்டி போன்றவர்களின் கவிதைகளும், பங்கிம் சந்திரரின் ‘வந்தே மாதரம்’ என்ற பாடலும் பாரதியார் நாட்டுப்பற்றை உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகள் எழுதத் தூண்டுதலாக இருந்தன என்பதை அவர் எழுதியுள்ள ‘மாஜினி’ என்ற பாடலும் ‘வந்தே மாதரம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள பாடல்களும் தெளிவாக உணர்த்துகின்றன. பாரதியார் மேனாட்டுக் கவிதைகளின் வாயிலாக புதிய உள்ளடக்கத்தைக் கொண்ட கவிதைகளை எழுதினாலும் அக்கவிதைகளுக்குப் பழைய தமிழ்க் கவிதைகளின் உருவத்தையே கொடுக்க முன்வந்தார். பழைய உருவமும், புதிய உள்ளடக்கமும் மக்களைக் கவரும் தன்மையுடையது என்பதை நன்கு உணர்ந்திருந்தார் என அறியமுடிகிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் நாட்டுப்பற்றை உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளை ‘சுதேசமித்திரன்’ பத்திரிக்கையில் வெளியிட்டார். முதன் முதலில் நாட்டுப்பற்றை உள்ளடக்கமாகக் கொண்ட ‘சுதேசிய விருத்தி விளக்கம்’ என்ற நூலை 1906-ல் வெளியிட்டவர் சின்னையா முதலியாராவார்(6). எனவே பாரதி வாழ்ந்த காலத்திலேயே விடுதலை உணர்வை வெளிப்படுத்தும் கவிஞர்கள் இருந்தார்கள் என்பது தெளிவாகிறது.
பாரதியார் வாழ்ந்த காலத்தில் அப்புசாமி ஐயர் (1907), கிருஷ்ணசாமி ஐயர் (1908), பரமஹம்ச பாலசுப்பிரமணிய பிரம்மஸ்வாமி (1908), கோபால கிருஷ்ணய்யர் (1910), சபாபதிப்பிள்ளை (1914), இராமலிங்கம் பிள்ளை (1914), சுந்தரராஜர் செட்டி (1914), மாதவையா (1914), இராபயேல் படையாச்சி(1915), வேதாசலம் பிள்ளை (1917), சிதம்பரம் பிள்ளை (1915), சுவாமி ஐயர் (1915), நடேச சாஸ்திரி (1917), ஜேசுதாசன் (1915), ஐயர் (1919), வைத்திய லிங்கச் செட்டியார் (1920), சர்மா (1920) போன்ற கவிஞர்களும் நாட்டுப்பற்றை உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளை அக்காலங்களில் எழுதியுள்ளனர். இவர்களைத் தேசியக் கவிதைகளின் முன்னோடிகள் என்றும் கூறலாம்.
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. R.L. Brett, Infancey and Imagination, P.11.
2. ஜி. ஜான்சாமுவேல், ஷெல்லியும் பாரதியும் - ஒரு புதிய பார்வை, ப.3.
3. அ. சீனிவாசராகவன், ஒரு நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை, பக்.71-73.
4. கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம், ப.291.
5. ரா.அ. பத்மனாபன், சித்திர பாரதி, முகவுரை.
6. கே.எஸ்.மகாதேவன், (தொ.ஆ.), தமிழ் நூல் விவர அட்டவணை, தொகுதி-2, பகுதி-3, ப.82.
7. தமிழவன், இருபதில் கவிதை, பக்.1-2.
8. ந.பிச்சமுத்து, பிற்காலக் கவிஞர்களிடத்தில் பாரதியின் தாக்கம், குமரி அனந்தன், (தொகுதி-2), சிந்தனைப் பன்ணையில் பாரதி, தொகுதி-1, ப.224.
Sponsorship
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication




0 கருத்துகள்