இந்திய நாட்டுப்பற்று-பகுதி 1:நாட்டுப்பற்றின் தோற்றமும், வளர்ச்சியும்

     நாட்டுப்பற்றின் தோற்றமும் வளர்ச்சியும் 

      இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளில் நாட்டுப்பற்று வெளிப்பட்டுள்ள முறையை ஆராய்வது அவசியமான ஒன்றாகும்.

                     பொருளடக்கம் 

  •         நாட்டுப்பற்றின் தோற்றம் 
  •          நாடு
  •          நாட்டினம்
  •          நாட்டுணர்வு 

         

நாட்டுப்பற்றின் தோற்றம்:

         மனித இனம் தோன்றிய ஆரம்ப காலம் முதல் பல நூற்றாண்டுகள் வரை அவன் காடுகளில் அலைந்து திரிந்துக் கொண்டு இருந்தான்.காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களால் குடும்பம், சமூகம் என்ற அமைப்புகள் உருவாகத் தொடங்கின. பல குடும்பங்கள் ஓரிடத்தில் சேர்ந்து வாழ்ந்திருந்த நிலையில் அவை 'சமூகம்' என்ற அமைப்பாக மாறத்தொடங்கின. அவ்வாறு தோன்றிய சமூகங்களிடையே ஏற்பட்ட பிணைப்புச் சமுதாயமாக மாறியது.

   

        எனவே இவைகள் பரிணாம வளர்ச்சியால் (Evolution) ஏற்பட்ட நிலைகள் என உணர முடிகிறது. இந்நிலைகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு ஆரம்பகாலத்தில் உடலிலும், உள்ளத்திலும், பொருளிலும் வலிமை பெற்ற ஒருவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இக்கருத்தைப் பின்வரும் சான்று தெளிவாக்குகிறது. குடும்பத்தலைவன் வழித் தோன்றியவனே கோன்(1) என்ற டாக்டர் வில்சனின் கருத்திற்கு ஏற்ப பல குடும்பங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசனிடம் இருந்ததாகத் தெரிகிறது. ஆரம்பகால அரசியல்முறைகள் இடத்திற்கு இடம் வேறூபாடுடையதாக இருந்தன. அவ்வேறூபாடு "நாடு" என்ற நிலை உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது என்று கருதமுடிகிறது.

 நாடு:

         ஆரம்ப காலத்தில் ஓர் அரசனின் கீழ் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த மக்கள் எண்ணத்திலும், செயலிலும், பண்பாட்டிலும் ஒருமித்து வாழ்ந்தனர். இவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு காலப்போக்கில் 'நாடு' என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இயற்கைச் சூழ்நிலை 'நாடு' என்ற அமைப்புத் தோன்றவும் சாதகமாக அமைகிறது. இந்தியாவின் இயற்கை அமைப்பு நாடு என்ற நிலை உருவாவதற்குச் சாதகமாக அமைகிறது. பொதுநோக்கம், பொதப்பற்றுறுதி, உடம்படுப்புச் சுதந்திரம், பொருளாதாரப் பிணைப்பு ஆகியவை இருக்கும்போது நாடு வலுவுடையதாக உருப்பெறுகிறது(2) .

         ஒரு பொதுவான விதியைக் கொண்ட சமூகமே ' நாடு ' என்கிறார் போர். மக்கள் பண்பாடுகளுக்கு உறைவிடமாக விளங்குவதுவே 'நாடு' என்கிறார் மு.வ(3) . இனம், வகுப்பு, மக்கள், சமூகம், குலம்,சாதி போன்ற சொற்கள் ஆரம்ப காலத்தில் தொடர்புடைய ஒரே பொருளைக் குறிப்பதாக இருந்தன. இவையே 'நாடு' என்ற அமைப்பை ஆரம்ப காலத்தில் தோற்றுவித்தது என்கிறார் மினேகுவ்(4) .

        மேற்கூறிய சான்றுகளிலிருந்து நாடு என்பது ஒரு குறிப்பிட்ட மண் பரப்பில், குறிப்பிட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட மக்களால் ஒரு பொதுவான பண்பாட்டையும், சிறிதளவு மாறுபட்ட பண்பாட்டையும் பெற்று ஒரு தலைவனின் ஆட்சிக்குட்பட்ட மக்களமைப்பே நாடாக உருவாகியது என்பது புலனாகிறது.

நாட்டினம்:

      ஒரு குறிப்பிட்ட தலைவனின் அதிகாரத்திற்கு அடங்கியிருந்த மக்கள் காலப்போக்கில் உரிமை உணர்வால் ஒன்றுபடத் தொடங்கினர். அவ்வாறு ஒன்று படும் நிலையில் சாதி, இனம், மொழி, பண்பாடு என்ற பாகுபாட்டை மறந்து உரிமையை ப் பெற முயன்றனர். இவ்வுணர்வு பெற்ற மக்களின் கூட்டமே  'நாட்டினம்' என்று கருதப்படுகிறது.

      ஆரம்ப காலத்தில் நாட்டினர் தோன்றுவதற்கு அரசர்களின் ஆட்சிமுறையும்,, சுயநலப்போக்கும், பொருளாதாரச் சீரழிவும், மக்களிடையே தோன்றிய வெறுப்புணர்வும் காரணமாக அமைந்தன என்று கூறமுடியும். ஓர் இனத் தொகுதியே நாட்டினமாக அமையவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.நாட்டினம் பல இனத் தொகுதிகளின் இணைப்பாகவும் இருக்கலாம்(5) . சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்படும் ஒருமைப்பாட்டுணர்வு இனவேறுபாடுகளை மறைத்து நாட்டினத்தை உருவாக்குகின்றது.

      நாட்டினமாவது பொதுவாக மொழி, இனம், நாடு, பண்பாடு என்ற அடிப்படைக் கூறுகளால் உருவாக்கப்படுகிறது. சில பொதுக்கொள்கையை நோக்கி முன்னேறிச் செல்லும் ஒரு கூட்டமே நாட்டினத்தை உருப்பெறச் செய்யும்(6). ஆரம்ப காலத்தில் முடியாட்சியை எதிர்க்கும் நோக்கில் உருவாகிய நாட்டினர், பிற்காலத்தில் குடியாட்சி அமைக்கவும் முயன்றது. இந்தியாவில் பல இனமக்கள் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஆங்கில ஆட்சியிலிருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கில் ஒரே நாட்டின் மாக் மாறினர்.

நாட்டுணர்வு:

         நாட்டினத் தோற்றமே நாட்டுணர்வு வளர்வதற்கு அடிப்படையாக அமைகிறது. நாட்டுணர்வு இல்லாமல் நாட்டுப்பற்று தோன்ற இயலாது. நாடும் நாட்டுணர்வும் உடலும் உயிரும் போன்றன. நாட்டுப்பற்று என்பது மனிதன் கூடிவாழக் கற்றுக்கொண்டபோதே தோன்றிய உணர்வாகும். இவ்வுணர்வு சில நேரங்களில் மட்டும் வெளிப்படையாகத் தோன்றும். சாதி, சமயம், மொழி, இனம், பொருளாதாரம், சமூகப் பழக்க வழக்கங்கள் போன்றவற்றால் ஏற்படும் ஒற்றுமை வேற்றுமைகளால் தோன்றும் நாட்டுணர்வு சில சமயங்களில் சாதகமாகவும், சில சமயங்களில் பாதகமாகவும் அமைகிறது. நாட்டுணர்வு பெற்ற மக்களை அடக்கி முயன்றாலும், அது அடங்காதத் தன்மையை உருவாக்குகிறது.



           நாட்டுணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மனநிலையை, உள்ளுணர்வோடு ஆற்றும் செயல்திறத்தைக் குறிக்கிறது.  ஒரு தனிமனிதன் தம்முடைய கூட்டமென்று என்னோடு பற்று வைத்திருக்கின்றான் ஓ அதனோடு தன்னை இனங்காட்டிக் கொள்வதைக் குறிக்கும் என்கிறார் ஹேன்ஸ்கான். நாட்டுப்பற்றும் நாட்டினம் பற்றிய உள்ளுணர்வும் இணைதலே நாட்டுணர்வு. இது பொது மொழி அல்லது பொது மொழிக்கு அணுக்களால் இருக்கும் திசை மொழிகள், வரலாற்று மரபுகள் போன்றவற்றின் கூட்டு விளைவால் பிறக்கிறது என்று ஜே.எச்.ஹெய்ஸ் என்பவர் கூறுகிறார். ஒரு நாட்டில் மரபொழுங்கு வாய்ந்த அரசியல், பொருளியல், பண்பாட்டுக் கூறுகளில் ஏதேனும் ஒன்று தேக்கமடையும் பொழுது அதைப்பற்றி தத்தம் மக்களிடம் எடுத்துக்கூறி உணர்ச்சிகொள்ளச் செய்வதில் வெளிப்படுத்தவே நாட்டுணர்வு என்கிறார் கார்ல் டச்(7). நாட்டுணர்வு ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்ப்பதற்கு குறிப்பிட்ட சூழ்நிலையில் மக்களிடையே ஏற்படும் உணர்வாகும். இவ்வுணர்வு பதினான்காம் நூற்றாண்டு முதல் உலக மக்களிடையே தீவிரமாக வளர்ச்சிப் பெறத் தொடங்கியது. இவ்வுணர்வு இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் வெளிப்படத் தொடங்கியது என்றும் கூறமுடியும். இவ்வுணர்வு பெற்ற மக்களே நாட்டுப்பற்று உடையவர்களாக மாறுகிறார்கள்.

           அடுத்த வலைப்பதிவில் இதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்று, நாட்டு பற்றின் வகைகள் பற்றி தகவல் தெரிந்துக்கொள்ளலாம்.

         நன்றி !            

                                                                          நேசமுடன், 

                                                       அன்பழகி பச்சியப்பன்


அடிக்குறிப்புகள்


  1. சோ.இலட்சுமிரதன் பாரதி, இறை மாட்சி அல்லது அரசியல், பக்.16-41.
  2. ப.கிருட்டிணன், தமிழ் நூல்களில் தமிழ்மொழி, தமிழ் இனம் தமிழ்நாடு, முன்னுரை.
  3. மு.வரதராசன், நாட்டுப்பற்று, ப.10.
  4. K.R.Minogue, Nationalism,P.i.                                                                        "First we must Inspect the word 'Nation' has had a variety of adventures before arriving at its present eminence.It is perhaps the most successful member a family of words which all refer to a collection of human beings, and are to this limited extend synonyms. Other such words are race, class, people, community,tribe, state, clan and society. They have all at times been more at less quality available describe something similar, though each has at all time had additional conatations and associations which limited this available.
  5. ப.கிருட்டிணன், மு.கா.நூ., முன்னுரை, ப.XXV.
  6. இராஜேந்திர பிரசாத், இந்தியா பிரிக்கப்பட்டால், ரா.நடராஜன்( மொ.பெ.ஆ), ப.9.
  7. .ப.கிருட்டிணன், மு.கா.நூ., முன்னுரை, ப.XXVII.




கருத்துரையிடுக

2 கருத்துகள்