உலகப் பொதுமறை பகுதி 2: நீதி இலக்கியம், தமிழ் இலக்கிய நூற்கள், திருக்குறள்

 நீதி இலக்கியம் 

     தமிழ் இலக்கியங்களில் நீதி நூல்களுக்கு ஒரு தனியிடம் உண்டு. முந்தையை வலைப்பதிவில் அற இலக்கியங்களின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி தெரிந்து கொண்டோம் மேலும் அற நூல்களின் வகைகள் பற்றியும், அதில் முதல் வகையான மூதுரை பற்றியும் மேலும் இரண்டாவது வகையான குறும்பாடல்கள் பற்றியும் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக அறநூல்களில் மூன்றாவது வகையான நீதி இலக்கியம் பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம் 

  • நீதி இலக்கியம் 
  • தமிழ் இலக்கிய நூற்கள் 
  • திருக்குறள் 

நீதி இலக்கியம்: 

     முதல் இருவகை நீதி நூல்களான மூதுரை மற்றும் குறும்பாடல்களில் இருந்து, நீதி இலக்கியம் வேறுபடுகிறது. கற்பனை வளமும் கலையழகும் நீதி இலக்கியத்தில் கணிசமான இடத்தையும் பெறுகின்றன. உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் சொற்கள் ஒலிநயம் பொருந்திய சொல்லாட்சிச் சிறப்புடையனவாக இவை விளங்குகின்றன. நீதிக் கருத்துக்களை அறிவுறுத்துவதையே முதன்மையான நோக்கமாக நீதி இலக்கிய ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். பொதுவாக வாசகரை இன்புறுத்தும் இயல்பை காட்டிலும், அறிவுறுத்தும் இயல்பே இவற்றில் மேலோங்கி நிற்கின்றன.

    படைப்பு இலக்கியத்துள், நீதி இலக்கியம் கற்பனையும் கலையழகும் வாய்ந்த இலக்கியங்களுக்கு காப்பியம், நாடகம் போன்றவற்றிற்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுகின்றன. தமிழில் உள்ள "நாலடியாரும்" குமரகுருபரரின் "நீதி" நெறி விளக்கமும், மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நீதிநூலும், நீதி இலக்கிய வகைப்பாட்டிற்குள் அடங்குவன. இவற்றிற்கு எல்லாம் முடி மணியாக விளங்குவது திருவள்ளுவருடைய பொன்றாப் புகழ் வாய்ந்த திருக்குறளாகும். இது மூதுரை வடிவில் அமைந்த நீதி இலக்கியமாகும்.

தமிழ் இலக்கிய நூற்கள்:

      பண்டைத் தமிழ் இலக்கிய நூற்கள் மேற்கணக்கு நூற்கள், கீழ்க்கணக்கு நூற்கள் என இரு பெரும் பிரிவாக வகுக்கப்பட்டன. இப்பிரிவிற்குரிய இலக்கணத்தினைக் கி.பி. 12ம் நூற்றாண்டில் தோன்றிய பன்னிரு பாட்டியலில் காணலாம்.

" அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி

அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வகைத்

திறம்பட வுரைப்பது கீழ்க்கணக்கு".

என்பது கீழ்க்கணக்கு நூற்களின் இயல்பாம்.

       பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, ஏலாதி, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி எனும் பதினொன்றும் அறநூல்களாம்.

திருக்குறள்: 

     இன்று தமிழகத்தில் திருக்குறளைப் பற்றி அறியாத தமிழர் இல்லை எனலாம். தமிழ் மொழியில் ஒப்புயர்வற்ற இந்நூல் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. திருவள்ளுவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் என பல பெயர்கள் உண்டு. 

      திரு - என்ற சொல் தொல்காப்பியத்தில் உள்ளது. நமக்கு இன்று கிடைக்கின்ற நூல்களில், தொல்காப்பியம் முதல் நூலாக அமைகின்றன.

 "நிறையே அருளே உணர்வோடு திருஎன" 

        இங்கு திரு என்பதற்கு செல்வம் என்று பொருள் கொள்ளலாம். திரு என்ற சொல்லுக்குச் செல்வம், சிறப்பு, இலக்குமி, அழகு, ஒளி, பொலிவு, பாக்கியம, தெய்வத்தன்மை, நல்வினை, சோதிடங் கூறுவான், மாங்கலியம், பழைய தலையணி வகை, மகளிர் கொங்கை மேல் தோன்றும் வீற்றுத் தெய்வம் போன்ற பல பொருள்கள் உள்ளன.திருக்குறள் என்ற தொடரில் திரு என்ற சொல்லுக்குச் சிறந்த பொலிவுடைய, ஒளியுடைய போன்ற பொருள்களைக் கொள்ளலாம்.

     குறள் என்ற சொல்லும் தொல்காப்பியத்தில் உள்ளது.

" நாலெழுத்து ஆதியாகி ஆறெழுத்து

ஏறிய நிலத்தே குறளடி என்ப".

     ஏழு சீர்களை உடைய இரண்டடி வெண்பாவிற்குக் குறள் என்று பெயர். தமிழ்நூல்களில் திரு என்ற அடைமொழியோடு வருகின்ற முதல்நூல் திருக்குறள்.திருக்குறள் இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் ஏறத்தாழ 100 மொழிகளுக்கு மேல் மொழியாக்கம் பெற்று இருக்கலாம் என்பது கருத்து.

    மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி, அது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப் பெற்ற நூல் திருக்குறள். இதுபோன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை. திருக்குறள் உலகப்பொது நூல். மனிதரை முழு நிலையில் உருவாக்க எழுதப் பெற்ற நூல்.

 திருவள்ளுவரின் நலத்தைப் பற்றி தமிழறிஞர்களிடத்துப் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.திருவள்ளுவர் காலம் கிபி முதல் நூற்றாண்டாகலாம் என்று எண்ணுகின்றனர். திருவள்ளுவரைப் பற்றி பல்வேறு கதைகள் உலவுகின்றன . சென்னையில் உள்ள மயிலையில் பிறந்து மதுரை வந்து சங்கப் புலவர்களின் செருக்கை அடக்கினார் என்றும், அவர் மனைவி வாசுகி என்றும் விநோதரச மஞ்சரிக் கதை விளம்புகிறது.

    திருக்குறள் 1330 குறட்பாக்களைக் கொண்ட நூல்.இது பத்து பத்துக் குறள்கள் அடங்கிய 133 அதிகாரங்களைக் கொண்டது. இது அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும், பொருட்களில் 70 அதிகாரங்களும், காமத்துப்பாலில் 25 அதிகாரங்களும் உள்ளன .

          திருவள்ளுவமாலை என்ற செய்யுளில்

 "அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து

 உருவல் அரணிரன் டொன்றொன்கூழ்! இருவியல்

திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்று".

என்ற பாடல் அதிகாரங்களைக் கூறுகிறது.

"ஆண்பா லேழ் ஆறிரண்டு பெண்பால் அடுத்தன்பு

பூண்பால் இருபால் ஓர் ஆறாக - காண்பாய

காமத்தின் பக்கம் ஒரு மூன்றாகக் கட்டுரைத்தாக்

நாமத்தின் வள்ளுவனார் நான்கு ".

  என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுட்படி அதிகாரங்களின் பகுப்பைக் காணலாம் .திருக்குறள் நாடு, இனம், மொழி, சமயம் என்பவற்றையெல்லாம் கடந்து மக்களாய்ப் பிறந்த அனைவருக்கும் எக்காலத்திற்கும் இயைந்த நீதிகளைக் கூறுகிறது.

       அடுத்த வலைப்பதிவில் உலக பொதுமறையான திருக்குறளுக்கு அடுத்த நிலையில் உள்ள நாலடியார் பற்றியும், பழமொழி நானூறு பற்றியும் மேலும் சில நீதி நூல்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்



Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication


கருத்துரையிடுக

0 கருத்துகள்