உலகப் பொதுமறை பகுதி 3: நீதி நூல்கள்- நாலடியார் மற்றும் பழமொழி நானூறு

நீதி நூல்கள்- நாலடியார் மற்றும் பழமொழி நானூறு  

     முதல் இருவகை நீதி நூல்களான மூதுரை மற்றும் குறும்பாடல்களில் இருந்து, நீதி இலக்கியம் வேறுபடுகிறது.முந்தைய வலைப்பதிவில் நீதி இலக்கியம் பற்றியும், தமிழ் இலக்கிய நூற்கள் பற்றியும், நீதி இலக்கியத்தில் முடி மணியாக விளங்கும் திருவள்ளுவருடைய பொன்றாப் புகழ் வாய்ந்த திருக்குறள் பற்றியும் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாலடியார் பற்றியும், பழமொழி நானூறு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம் 

  • நாலடியார் 
  • சமண முனிவர்கள்
  • பழமொழி நானூறு 
  • முன்றுறை அரையனார்

நாலடியார்:

      உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு அடுத்த நிலையில் உள்ள அறநூல் நாலடியார்.

          நாலடி நானூறு என்ற பெயரும் இதற்கு உண்டு. இது நானூறு வெண்பாக்களைக் கொண்டது. அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாற் பிரிவால் நானூறு வெண்பாக்களைக் கொண்டது. இந்நூலுக்குப் பால், இயல் அதிகாரங்களைப் புதுமனார் எனும் புலவர் வகுத்துள்ளார். 

"ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி 

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி "

என்பது, தமிழ்நாட்டில் வழங்கி வருகின்ற வழக்கு மொழிகளில் ஒன்று. ஆல் என்பது ஆலம் விழுதைக் குறிக்கும். வேல் என்பது வேம்பைக் குறிக்கும் என்று கூறுவர். ஆலம் விழுதையும் கருவேலங்குச்சியையும் வைத்து பல் தேய்த்தால், பல்லுக்கு உறுதி என்பது பொருள். அதேபோன்று நால் என்பது நான்கு அடிகளை உடைய நாலடியார் என்ற நூலையும், இரண்டு என்பது இரண்டு அடிகளை உடைய திருக்குறள் என்ற நூலையும் குறிக்கின்றது. இவை சொல்லுக்கு உறுதியாக அமைகின்றன. 

சமண முனிவர்கள்:

           பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே இந்நூல் என்று ஒரு சாராரும், ஒரு புலவரால் இயற்றப்ப‌‌ட்டது என மற்றொரு சாராரும் கூறுவர். பழம் பாடல்களின் அடிப்படையில் 8000 சமண முனிவர்கள் பாடிய பாடல்கள், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி ஆணையால் வைகையாற்றில் இடப்பட்ட பொழுது நானூறு மட்டும் நீரோட்டத்தை எதிர்த்து கரையேறின என்ற கதை வழங்கப்படுகிறது. இக்கதையின் மூலம் 8000 சமண முனிவர்கள் எழுதிய பாடல்களில் 400 பாடல்களே நாலடியாரில் இடம்பெறுகின்றன. 

     களவியலுரையுள் நாலடியார் பற்றிய குறிப்பு காணப்படவில்லை. எனவே நாலடியார் சங்க காலத்திற்குப் பிற்பட்டதேயாகும். நாலடியாரும் திருக்குறளைப் போன்றே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

 திருக்குறளில் ஒவ்வொரு திறத்திலும் பொருளோடு தொடர்புடைய கருத்து ஒவ்வொன்றை ஒவ்வொரு குறளும் கூறும். நாலடியாரில் பல அதிகாரங்கள் ஒரே கருத்தை வெவ்வேறு உவமைகளோடு கூறும் பாடல்கள் உள்ளன. ஒரே கருத்துடைய பாடல்கள் பல்வேறு திறங்களில் அமைக்கப்பட்டுள்ளன. நாலடியாரும் திருக்குறளோடு இணைத்து நோக்கும் பெருமை கொண்டது.

       செல்வத்தின் நிலையாமையை பற்றி நாலடியார் கூறுவதாவது: ஆறு சுவையுடன் கூடிய உணவை மனைவி உண்பிக்க, மறுகவளத்தை "வேண்டா" எனத்தள்ளி நீக்கி உண்ட பெருஞ்செல்வம் உடையவரும், செல்வத்தை இழந்து வறியவராக வேறொரிடத்தில் சென்று உணவை பிச்சை எடுப்பர் .எனவே, செல்வம் என்ற ஒரு பொருள் நிலைத்தது என்று எண்ணி மனதில் வைத்து என்ன கூடியது அன்று என்பதை 

"அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட 

மறுசிகை நீக்கியுண் பாரும் - வறிஞராய்ச்

 சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின் செல்வம் ஒன்று 

உண்டாக வைக்கற்பாற் றன்று". 

என்ற செய்யுள் தெளிவுபடுத்துகிறது.

பழமொழி நானூறு: 

 நானூறு பழமொழிகளை விளக்கும் கருத்துக்களைக் கொண்டுள்ள பாடல்களால் ஆகிய நூல் என்பதே இந்நூலின் பெயர்க்குரிய விளக்கமாகும். திருக்குறளும் நாலடியாரும் தந்துள்ள தாக்கத்தால் இந்நூல் தோன்றியது என்பது சான்றோர் கருத்து. இந்நூலில், பழமொழிகள் பாடலின் இறுதி வரியாகவும், பழமொழிகளின் விளக்கம் முதல் இரு வரிகளாகவும் அமைக்கப் பெற்றுள்ளன .திரு. ஆறுமுக நயினார் என்பவர் தாம் பழமொழி நானூறு என்ற நூலினை 1904ஆம் ஆண்டில் பிரதிகளில் உள்ளபடியே அச்சேற்றினார். இந்நூல் பத்துப் பத்துப் பாடல்களாக 39 அதிகாரங்களைக் கொண்டது. 

முன்றுறை அரையனார்:

          நூல்களில் பயின்று வரும் பழமொழிகளில் பல பழமொழிகள் இந்நூலில் எதுகை, மோனைகளுக்காக மாறுதலைப் பெற்றுள்ளன.இந்நூலை முன்றுறை அரையனார் என்னும் புலவர் பெருந்தகை படைத்தளித்துள்ளார். முன்றுறை என்னும் இடத்தில் ஆட்சி செய்த அரசர் என்பதே இப்பெயரின் பொருளாகும். "அரையர்" என்பது சிறப்புப் பெயராகவும் இருக்கலாம், அல்லது மரபுப் பெயராகவும் இருக்கலாம், அல்லது குடிப் பெயராகவும் இருக்கலாம் என்பாரும் உளர்.இந்நூல் ஆசிரியர் சமண நெறிச் சார்பாளர் என்பது இந்நூலின் தற்சிறப்புப் பாயிரத்தால் விளங்குகிறது. 

           மக்களை நல்வழிப்படுத்தும் காலத்திற்கு ஏற்ற அறச்சிந்தனைகளைப் பரப்பிடத் தோன்றியமையாலேயே இந்நூல் காலங்கடந்தும் வாழும் தகுதியைப் பெற்றுள்ளது.

" பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப் 

பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டு இனிதா

முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்

இன்றுறை வெண்பா இவை".

இது தற்சிறப்புப் பாயிரப் பாடல் எனலாம்..

  அடுத்த வலைப்பதிவில் மேலும் சில அறநூல்களான திரிகடுகம் பற்றியும், சிறுபஞ்சமூலம் பற்றியும், ஏலாதி பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication





கருத்துரையிடுக

0 கருத்துகள்