உலகப் பொதுமறை பகுதி 4: திரிகடுகம்: சுக்கு, மிளகு & திப்பிலி , சிறுபஞ்சமூலம்:5 வேர்கள் & ஏலாதி: சூர்ணம்

 நீதி நூல்கள்- திரிகடுகம், சிறுபஞ்சமூலம் மற்றும் ஏலாதி

 கற்பனை வளமும் கலையழகும் நீதி இலக்கியத்தில் கணிசமான இடத்தையும் பெறுகின்றன. உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் சொற்கள் ஒலிநயம் பொருந்திய சொல்லாட்சிச் சிறப்புடையனவாக இவை விளங்குகின்றன. முந்தைய வலைப்பதிவில் நாலடியார் பற்றியும், பழமொழி நானூறு பற்றியும் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில அறநூல்களான திரிகடுகம் பற்றியும், சிறுபஞ்சமூலம் பற்றியும், ஏலாதி பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • திரிகடுகம்
  • சிறுபஞ்சமூலம்
  • ஏலாதி

திரிகடுகம்:

  திரி என்ற சொல்லுக்குத் திரித்தலாகிய முறுக்குகை, விளக்குத்திரி, தீப்பந்தம், தீக்குச்சி, காதுக்கு இடும் திரி, எந்திரம், மெழுகுவர்த்தி, புண்ணுக்கு இடும் திரி, பெண், மூன்று எனப்பல பொருட்கள் உள்ளன.இங்கு மூன்று என்ற பொருளில் பயன்பெறுகிறது. இப்பொருள் நிலையில் இது வடமொழிச் சொல்.

    கடுகம் என்ற சொல்லுக்கு கார்ப்பு, கடுகுரோகினி, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் திரிகடுகங்களுள் ஒன்று. மோதிரம், குடம் போன்ற பொருட்கள் உள்ளன. இங்கு சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் இணைத்துக் கடுகம் என்று கூறியுள்ளனர். 

  உடல் நோயைப் போக்குவது திரிகடுகம் என்ற மருந்து. உளநோயை போக்குவது திரிகடுகம் என்ற பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் இதனைப் பாயிரச் செய்யுள் கூறுகிறது. 

"உலகில், கடுகம் உடலின் நோய் மாற்றும்; 

அலகுஇல் அகநோய் அகற்றும் - நிலைகொள் 

திரிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம் 

மருவு நல்லாதன் மருந்து." 

இதனை இயற்றியவர் நல்லாதனார். ஆதன் என்பது இயற்பெயர். 

     வாழ்க்கையில் செய்யப் பெறுவனவற்றுள் மிக முக்கியமானதாக மூன்றினை இவர் தருகிறார். வறியவர்களுக்கும் தேவையானவர்களுக்கும் கொடுப்பது பெருமையுடையது. செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, இவற்றை உணர்ந்து நன்மை செய்வது நல்ல வழி. 

     பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் மிகப்பெருமை தரும் இதனை ஒரு பாடல் தருகிறது: 

"இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ்வுலகில் 

நில்லாமை உள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும் 

துன்புறுவ செய்யாத தூய்மையும், இம்முன்றும் 

நன்று அறியும் மாந்தர்க்கு உள."

சிறுபஞ்சமூலம்: 

      மூலம் என்பது வேரைக் குறிக்கும். பஞ்சம் என்பது ஐந்தைக் குறிக்கும். வேர்கள் சிறிதாக இருப்பதால் சிறியன எனக் குறிக்கும். சிறிய ஐந்து வேர்களால் தயாரிக்கப்பெற்ற மருந்து வகைகளுள் ஒன்று சிறுபஞ்சமூலம் என்பது. வேர்கள் ஐந்திணைப் பற்றிப் பதார்த்த குண சிந்தாமணி என்ற நூல் கீழ்க்கண்ட பாடலைத் தருகிறது: 

"சிறிய வழுதுணைவேர், சின்னெருஞ்சி மூலம்,

சிறுமலி, கண்டங்கத்திரிவேர், நறிய

பெருமலி, ஓர் ஐந்தாம் பேசு பல் நோய் தீர்க்கும் 

அரிய சிறுபஞ்சமூலம்."

    சிறுபஞ்சமூலம் போன்று பெரும்பஞ்சமூலம் என்று பெரிய மரங்களின் வேர்களை எடுத்துப் பொடித்து மருந்தாக்குவதைப் பெரும்பஞ்சமூலம் என்று பதார்த்த குண சிந்தாமணியும், பொருட்தொகை நிகண்டும் கூறுகின்றன.


 
சிறுபஞ்சமூல வேர்களின் பொடியை உட்கொண்டால், உடல்நோய்கள் நீக்கும் அதே போன்று சிறுபஞ்சமூலம் என்ற நூலைக் கற்றால் மனநோய் நீங்கி உயிர் நலம் பெறும் என்பது கருத்து. 

    இந்நூலை இயற்றியவர் காரியாசான். இவருடைய இயற்பெயர் காரி. ஆசான் என்பது தொழிற்பெயர். இன்றும் மருத்துவத்தொழில் வல்லவர்களைக் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசான் என்று கூறுவர். இவர் மருத்துவத் தொழிலும், சோதிட நூல்களிலும் வல்லவர் என்பதை பல பாடல்கள் உணர்த்துகின்றன.

ஏலாதி:

           ஏலம் என்பது மருந்து, மணப்பொருள்களுள் ஒன்று. ஏலம் ஆதியாக என்பது ஏலம் முதலாக என்பது பொருள். ஏலம் முதலாகப் பல மருந்துப் பொருட்களை இணைத்துச் செய்யப்பெறும் மருந்தின் பெயர் ஏலாதி. 

     ஏலம் ஆதியான ஆறுபொருட்கள் சேர்ந்த ஒருவகைச் சூர்ணம். ஏலாதி ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசுரம் மூன்று பங்கு, மிளகு நான்கு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம்மருந்தை ஆக்குவர். ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறுதுணையான அறநெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீர்மையால் இப்பெயரைப் பெற்றுள்ளது. 

        ஏலாதியின் தன்மை குறித்துத் தமிழ் நூல்களில் விளக்கம் காணப்பெறவில்லை. வடமொழியில், ஏலாதி கிருதம், ஏலாதி சூர்ணம், ஏலாதி கணம் என மூவகை ஏலாதிகள் பேச பெறுகின்றன. 

     இவற்றுள் ஏலாதி சூர்ணம் என்பதுவே இந்நூற் பொருளுக்கு மிகவும் இயைந்ததாகும். 

    மருந்துப் பெயர் பெற்ற கீழ்க்கணக்கு நூல் ஏலாதி. சிறுபஞ்சமூலத்தோடு பெரிதும் ஒற்றுமையுடையது. சிறுபஞ்சமூலம் ஐந்து பொருள்களை உரைக்க, இது ஆறு பொருள்களைச் சுட்டுகின்றது. 

  இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். கணிமேதை என்றும் இவர் வழங்கப்பெறுவர். கணிமேதை என்பது கொண்டு, சோதிட நூற்புலமை மிக்கார் இவர் என்று கொள்வாரும் உண்டு. நூலின் முதற்கண் அருகக் கடவுளுக்கு இவர் வாழ்த்துக் கூறியுள்ளமையினாலும், நூலுள் சமண சமயத்தின் சிறப்பு அறங்கள் சுட்டப் பெறுதலினாலும், இவரைச் சைன சமயத்தவர் என்று கொள்ளலாம். இவர் சைனரில் ஒரு சிலரைப் போலத் துறவறத்தையே வற்புறுத்தாது, 

"மனைவாழ்க்கை மாதவம் என்றிரண்டும் மாண்ட 

வினைவாழ்க்கை யாக விழைப."

என இல்லற துறவங்களை ஒரு நிகராப் போற்றியுள்ளமையும் நோக்கத்தக்கது. இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர். 

           பண்பாட்டுடன், மாட்சிமையுடன் ஆராய்ந்த மதி வேண்டும். அழகு வேண்டும். உறுதி வேண்டும். பரந்த கல்வி வேண்டும். சொல்லாற்றல் வேண்டும். காலம் அறிதல் வேண்டும். இவற்றால் தூதுவன் எல்லாநிலைகளிலும் வெற்றிபெற முடியும் என்பதை ஏலாதி பாடல் தருகிறது:

"மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி, வனப்பே, வன்கண்மை,

ஆண்டு அமைந்த கல்வியே, சொல்லாற்றல் - பூண்டு அமைந்த 

காலம் அறிதல், கருதுங்கால் தூதுவர்க்கு

ஞாலம் அறிந்த புகழ்."

என்ற பாடல் வழி அறியலாம். 

  அடுத்த வலைப்பதிவில் மேலும் சில அறநூல்களில் இருந்து இன்னா நாற்பது பற்றியும், இனியவை நாற்பது பற்றியும், நான்மணிக்கடிகை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்



Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

கருத்துரையிடுக

0 கருத்துகள்