உலகப் பொதுமறை பகுதி 5: நீதி நூல்கள் - இன்னா நாற்பது, இனியவை நாற்பது & நான்மணிக்கடிகை (நான்கு கருத்துக்கள்)

நீதி நூல்கள் - இன்னா நாற்பது, இனியவை நாற்பது மற்றும் நான்மணிக்கடிகை 

     உடல் நோயைப் போக்குவது திரிகடுகம் என்ற மருந்து. உளநோயை போக்குவது திரிகடுகம் என்ற பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் பற்றியும், ,சிறுபஞ்சமூலம் ஐந்து பொருள்களை உரைக்க, ஏலாதி ஆறு பொருள்களைச் சுட்டுகின்றது என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம்.மேலும் அதன் தொடர்ச்சியாக இன்னா நாற்பது பற்றியும், இனியவை நாற்பது பற்றியும், நான்மணிக்கடிகை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம் 

  • இன்னா நாற்பது 
  • இனியவை நாற்பது 
  • நான்மணிக்கடிகை 

இன்னா நாற்பது:

      இன்னது இன்னது துன்பம் பயக்கும் எனக்கூறும் 40 பாடல்களைக் (வெண்பாக்களைக்) கொண்டிருப்பதால் இந்நூல் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றது. இந்நூற் பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்தோடு நாற்பத்தொன்றாகும். இந்நூல் அமைப்பில் இனியவை நாற்பதிலும் இது செவ்விய முறையை மேற்கொண்டுள்ளது எனலாம். 

 ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு கருத்துக்களைக் கொண்டு, நான்மணிக்கடிகையைப் போன்று இந்நூல் அமைந்த போதிலும், ஒவ்வொன்றையும் இன்னா என எடுத்துக் கூறுதலின், இது இன்னா நாற்பது என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது. 

   இந்நூலை இயற்றியவர் கபில தேவர். தமிழுலகில் கபிலர் என்ற பெயருடையர் பலர் உள்ளனர். இவர்களில் முக்கியமாக ஐவரைக் குறிப்பிடலாம். முதலாமவராகக் கூறத்தக்கவர், சங்ககாலத்தில் பாரிக்கு உற்ற நண்பராய் விளங்கிய அந்தணராகிய கபிலர். 

 இருளில் தனிவழிச்செல்லக்கூடாது. இரக்கமில்லாதவர்களிடம் ஒன்றைக் கேட்கக் கூடாது. வறுமையுடையவன் பிறருக்குக் கொடுத்தலை நினைக்கக் கூடாது. இக்கருத்தை,

"பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா; 

இருள்கூர் சிறுநெறி தாம்தனிப் போக்கு இன்னா;

இருள்இல்லார் தம்கண் செலவு இன்னா; இன்னா 

பொருள்இல்லார் வண்மை புரிவு."

என்ற செய்யுள் அடிகள் தெளிவுபடுத்துகிறது. 

இனியவை நாற்பது:

 வாழ்க்கையில் தேவையற்றவற்றைச் செய்யாதிருப்பதோடு, தேவையானவற்றையும் செய்தல் வேண்டும். தேவையற்றவற்றை இன்னாமை என்றும், தேவையானவற்றை இனியவை என்றும் அமைத்துப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்று இரண்டு பகுதிகள் அமைந்துள்ளன.

           இன்னது இன்னது வாழ்விற்கு இனியது எனக் கூறுவதாக அமைந்த பாடல்களைக் கொண்டது இவ்வறநூல். இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். இப்பெயரில் சேந்தனார் என்பது இயற்பெயர். பூதன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் தந்தையார் மதுரையில் தமிழாசிரியராகச் சிறந்து விளங்கியமை குறித்து மதுரைத் தமிழாசிரியர் என்னும் சிறப்புப் பெயருடன் வழங்கப் பெற்றார்.

    வாழ்க்கையில் துன்பங்கள் அனைத்திற்கும் அடிப்படை ஐம்பொறிகளால் அல்லது மெய்,  வாய், கண், மூக்கு, செவி இவற்றால் ஏற்படுகின்ற ஆசைகள் அல்லது விருப்பங்கள். ஐம்புலன் ஆசைகள் அடக்குதல் இனியது. கைப்பொருட்கள் கிடைப்பதாயினும், கல்லாதவரோடு இணையாதிருத்தல் இனியது. நிலையில்லாத அறிவும், நெஞ்சில் உறுதியில்லாத மனிதரையும் சேராமலிருப்பது இனியது என்பது இனியவை நாற்பது பாடல் கூறும் கருத்து: 

"ஐவாய வேட்கை அவாஅடக்கல் முன்இனிதே;

கைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு இனிதே;

நில்லாத காட்சி நிறையில் மனிதரைப் 

புல்லா விடுதல் இனிது."

என்ற பாடலால் அறியலாம். 

நான்மணிக்கடிகை: 

    நான்கு மணிகள் உள்ள ஆபரணம் என்று பொருள். கடிகை என்ற சொல்லுக்குத் துன்பம், நாழிகை, கரகம், உண்கலம், குத்துக்கோல், தோள்வளை அதாவது தோளில் அணிகின்ற ஆபரணம், ஊர்ச்சபை, மங்கலப்பாடகன், முகூர்த்தம் பார்ப்பவன், கேடகம் போன்ற பல பொருள்கள் உள்ளன. இங்குக் கடிகை என்பது ஆபரணத்தைக் குறிக்கும். நான்கு நவமணிகளால் ஆகிய ஆபரணம் என்று பொருள்படும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணிகள் போன்று, சிறந்த கருத்துக்கள் நான்கினை தருகிறது நான்மணிக்கடிகை. 

    இதனை இயற்றியவர் விளம்பிநாகனார் என்பவர். நாகனார் என்பது இவரது இயற்பெயராகவும், விளம்பி என்பது இவரின் ஊர்ப்பெயராகக் கொள்ளலாம். நாகனார் என்ற பெயர் தமிழ்நாட்டில் பழங்காலத்தில் பலருக்கும் இருந்த பெயராகத் தோன்றுகிறது. விளம்பி என்பது ஊர்ப் பெயராக இருக்க வேண்டும். 

       இந்நூலில் கடவுள் வாழ்த்துப் பாடல் இரண்டுடன் மொத்தம் 103 செய்யுள்கள் உள்ளன. இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் மணிபோன்ற நான்கு கருத்துக்கள் வெளியிடப்படுவதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர்பெற்றது. இந்நூல் திருக்குறள் போன்று பால், திறம் முறைப்படாமல் இருப்பினும் சிறந்த உலகியல் அறங்களைக் கொண்டுள்ளது.

          நல்லார் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற வழக்கு மொழி ஒன்று உண்டு. சமுதாயத்தில் நல்லவர்கள் மிகுதியாக இருந்தால், உரிய காலத்தில், மழை பெய்யும். மழை இல்லையென்றால் வளம் இல்லை. மக்கள் நன்மை இல்லை. நீரின்றி அமையாது உலகம் என்பது வள்ளுவர் வாக்கு. மழைக்கு அடிப்படையாக அமைவது தவம். அதற்கும் அடிப்படை நல்ல அரசன், நல்ல அரசன் இருப்பதற்கும் அடிப்படை சிறந்த குடிமக்கள். இந்த நான்கையும் நான்கு மணிகளாக தரும் பாடல்,

"மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை; மழையும் 

தவம்இலார் இல்வழியில்லை; தவமும் 

அரசுஇலார் இல்வழி யில்லை; அரசனும் 

இல்வாழ்வார் இல்வழி இல்."

என்ற பாடல் அடிகளால் அறியலாம்.

  அடுத்த வலைப்பதிவில் மேலும் சில அறநூல்களில் இருந்து ஆசாரக்கோவை பற்றியும், முதுமொழிக்காஞ்சி பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

கருத்துரையிடுக

0 கருத்துகள்