நீதி நூல்கள் - ஆசாரக்கோவை மற்றும் முதுமொழிக்காஞ்சி
இன்னது இன்னது துன்பம் பயக்கும் எனக்கூறும் 40 வெண்பாக்களைக் கொண்டிருப்பதால் இந்நூல் இன்னா நாற்பது என்றும், இந்நூல் அமைப்பில் இனியவை நாற்பதிலும் இது செவ்விய முறையை மேற்கொண்டுள்ளது என்பது பற்றியும், ஒவ்வொருபாடலிலும் நான்கு மணிகள் போன்று, சிறந்த கருத்துக்கள் நான்கினை தருகிறது நான்மணிக்கடிகை என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில அறநூல்களில் இருந்து ஆசாரக்கோவை பற்றியும், முதுமொழிக்காஞ்சி பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- ஆசாரக்கோவை
- கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்
- முதுமொழிக்காஞ்சி
- மதுரைக் கூடலூர் கிழார்
ஆசாரக்கோவை:
ஆசாரம் என்பது வடசொல். தமிழில் ஒழுக்கம், நெறி, முறை, வழி என்ற சொற்கள் கூறும் பொருளை வடமொழி ஆசாரம் என்று கூறுகிறது. .வழிமுறைகளைத் தொகுத்துத் தருவது கோவை என்று கூறப்பெறுகிறது. இந்நூல், வடமொழி ஸ்மிருதிக் கருத்துக்களைப் பின்பற்றி எடுக்கப்பட்டது.
ஆசாரக்கோவையை ஒரு பொதுச் சுகாதார நூல் என்றே சொல்லிவிடலாம். எல்லா மக்களும் நோயற்ற வாழ்வு வாழ்வது எப்படி? ஊரும், நாடும், பொது இடங்களும் சுகாதாரக் கேடின்றி இருப்பது எப்படி? என்பவற்றை இந்நூலிலேயே காணலாம். புறத்திலே தூய்மையுடன் வாழ்வதற்கு வழி கூறுவதோடு மட்டும் நின்று விடவில்லை. அகத்திலே அழுக்கின்றி வாழ்வதற்கும் வழி காட்டுகின்றது இந்நூல். இது இந்நூலுக்குள்ள பெருமை.
கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்:
ஆசாரக்கோவை என்ற நூலின் ஆசிரியரின் முழுப்பெயர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாய் என்பது இவருடைய தந்தையார் பெயராக இருக்கலாம் அல்லது கயத்தூர் என்ற ஊரின் பகுதியாகிய பெருவாயிலில் வாழ்ந்த முள்ளியார் என்று கூறுவதற்கும் இடம் உண்டு. இவர் வடமொழியிலும் புலமையுள்ளவர்.ஆயினும் இவர் பாடல்களிலே வடமொழிச் சொற்கள் அதிகமாக கலக்கவில்லை. இந்நூலுள் சிறப்புப் பாயிரம் நீங்கலாக நூறு செய்யுட்கள் உள்ளன.
"நன்றி அறிதல், பொறை உடமை, இன்சொல்லோடு,
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து".
என்ற செய்யுளால் அறியலாம்.
முதுமொழிக்காஞ்சி:
முதுமொழி, முதுசொல் என்பன பழமொழியைக் குறிக்கும். காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும். நியதிப்படி முதுமொழிக்காஞ்சி என்பது நிலையாமையைப் பற்றி பழமொழிகளாக அமைந்திருத்தல் வேண்டும்.
புறப்பொருள் வெண்பா மாலையில், முதுமொழிக்காஞ்சி என்று ஒரு துறை அமைந்துள்ளது. இதனை, மூதுரை பொருந்திய முதுமொழிக்காஞ்சி என்று தொகைச் சூத்திரத்தில் சுட்டியதோடு, பின்னர்
"பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள்முடிவு உணரக்கூறின்று".
என்ற விளக்கியும் ஆசிரியர் உரைத்துள்ளார்.
உலகியல் உண்மைகளைத் தெள்ளத்தெளிந்த புலவர் பெருமக்கள் எடுத்து இயம்புவது என்னும் இவ்விலக்கணம், முதுமொழிக்காஞ்சி என்னும் நூற்பொருளுக்குப் பொருந்துவதாகும்.
மதுரைக் கூடலூர் கிழார்:
முதுமொழிக்காஞ்சி என்ற நூலை ஆக்கியவர் மதுரைக் கூடலூர் கிழார். கூடலூர் இவர் பிறந்த ஊராயும், மதுரை பின்பு புகுந்து வாழ்ந்த ஊராயும் இருத்தல் கூடும்.கிழார் என்னும் குறிப்பினால், இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம்.
"நூறாதாம் சிறுபஞ்ச மூலம்; நூறு
சேர் முதுமொழிக் காஞ்சி".
எனவரும் பிரபந்த தீபிகைக் குறிப்பினால் முதுமொழிக்காஞ்சி நூறு எண்ணிக்கை உடையதாகக் கருதப் பெறுதலும் விளங்கும். இந்நூலை நச்சினார்க்கினியர் முதலிய பழைய உரையாசிரியர்கள் மேற்கோளாக எடுத்து ஆண்டுள்ளார்கள்.
தமிழில் நீதிப் பாடல்கள், திணைப் பாடல்களான சங்க இலக்கியத்திற்குப் பிறகு மிகுதியாக தோன்றியுள்ளன. சங்க காலம் தமிழகத்தின் வீரயுகம் என்று போற்றப்படுகிறது. இந்த வீரயுகம் தோன்றியதை அடுத்துதான் அறநெறி இலக்கிய காலம் அரும்பியதைப் பார்த்தோம். இந்த அறநெறி இலக்கிய காலத்தில்தான் நீதி இலக்கியங்கள் தோன்றியுள்ளன.
அடுத்த வலைப்பதிவுகளில் அறத்துப்பால் காட்டும் இல்லற நெறி பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
Sponsorship
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication
0 கருத்துகள்