இந்திய நாட்டுப்பற்று - பகுதி 38: நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - வட்டமேஜை மாநாடுகளும் தேசியப் பாடல்களின் தோற்றமும், மாநில சுயாட்சியும் தேசியப் பாடல்களும்

நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - வட்டமேஜை மாநாடுகளும் தேசியப் பாடல்களின் தோற்றமும், மாநில சுயாட்சியும் தேசியப் பாடல்களும்

சட்டமறுப்புப் போரை சத்தியப் போராகவே நடத்தவேண்டும் என்பது காந்தியடிகளின் எண்ணம் என்பது பற்றியும், பாரதப் போருக்கு கண்ணன் தூது சென்றதைப் போல காந்தியடிகள் தூது சென்றுள்ளார் என்பதைப் பல மெட்டுகளுடன், ராக, தாள பல்லவியுடன் மகாத்மா காந்தி லண்டன் தூது என்ற பாடல் கூறுகிறது என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக வட்டமேஜை மாநாடுகளும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றியும், மாநில சுயாட்சியும் தேசியப் பாடல்களும் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம் 

  • சுதந்திர திலகம்
  • காந்தி நான்மணிமாலை
  • மாநில சுயாட்சி

சுதந்திர திலகம்:

இரண்டாம் வட்டமேஜை மாநாட்டிலிருந்து தோல்வியுடன் காந்தியடிகள் திரும்பி வருகின்ற நிகழ்ச்சியை ‘சுதந்திர திலகம்’(1) என்ற பாடலாக வேல்சாமி வெளியிட்டுள்ளதை நோக்கும்போது காந்தியடிகளின் நிலையை மக்களிடையே வெளிப்படுத்திக் காட்டி மக்களை விழிப்படையச் செய்வது அவரின் நோக்கமாக இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது.

இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் ஏற்பட்ட தோல்வி காந்தியடிகளை மீண்டும் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபடுத்தியது. சட்டமறுப்பு இயக்கம் தொடங்கிய நிலையில் கதர் உற்பத்தி, மதுவிலக்கு, தீண்டாமை, இந்து-முஸ்லீம் ஒற்றுமை போன்ற நிர்மானத் திட்டங்கள் மீண்டும் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டங்களைப் பரப்புவதில் தேசியக் கவிஞர்களும் கவிதைகளால் மக்களைத் தூண்டும் நிலை உருவாகியது. கதரின் சிறப்பை வெளிப்படுத்த ‘அன்னியராடையை அகற்ற வந்த ஆனந்தக் கதர்ப்பாட்டு’ என்ற நூலை தியாகராச செட்டியாரும், ‘நாட்டு திலகமெனும் ராட்டுப்பாட்டு’(2) என்ற நூலை கவிக்குஞ்சரமும், கதர்த் துணிகளை வாங்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக ‘மகாத்மா காந்தி சிங்காரப்பாட்டு’ என்ற நூலை சிங்காரவேல் நாயக்கரும் வெளிப்படுத்தியுள்ளனர். கதர் இயக்கத்தை காந்தியடிகள் மேற்கொள்ளும் போதெல்லாம் கவிஞர்களும் அதை கவிதைகளால் பாடி மக்களைத் தூண்ட முன்வந்தனர் என்பது தெளிவாகிறது.

மதுவினை ஒழிக்கவேண்டும் என்ற உணர்வு வளர்ந்த நிலையில் ‘மதுவிலக்கு’ என்ற பாடலை பாலகதாசும், ‘மதுவிலக்குச் சிந்து’ என்ற பாடலை ராமசாமிப் பிள்ளையும் வெளியிட்டுள்ளதை அறியமுடிகிறது.

காந்தி நான்மணிமாலை:

வட்டமேஜை மாநாட்டின் தோல்விக்கு சாதி, மத வேறுபாடுகளும் தீண்டாமையும் தடையாக இருப்பதை உணர்ந்த காந்தியடிகள் இவற்றை நீக்க மக்களை பக்குவப்படுத்த முயன்ற நிலையில் கவிஞர்களும் இம்முயற்சியில் ஈடுபட்டதை அவர்களுடைய கவிதைகள் உணர்த்துகின்றன. ‘தீண்டாமை விலக்குப் பாடல்கள்’ என்ற நூலை பரமசிவம் என்பவரும், ‘அரிஜன சேவைக் கீதம்’ என்ற நூலை ஆறுமுகம் என்பவரும் வெளியிட்டுள்ளதைக் காணமுடிகிறது.

இரண்டாவது சட்டமறுப்பு இயக்கம் வளர்ச்சியடைவதைக் கண்ட ஆங்கிலேயர்கள் மீண்டும் பிளவு சக்தியைப் பயன்படுத்தி அதை தடுக்க முயன்றனர். 1932-ஆம் ஆண்டு வரை காந்தி, ஜின்னா, அம்பேத்கார் போன்ற தலைவர்களிடையே வகுப்புவாதச் சமரசம் ஏற்படாதது அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. 1932-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் பிரதம மந்திரி இராம்சே மாக்டோனால்டு வகுப்புவாதத்தை வகுப்புகளுக்கு ஏற்ப தனித்தனி தொகுதிகளை உருவாக்கினார். இதை கண்டிக்கும் வகையில் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த நிகழ்ச்சியை மக்களுக்கு உணர்த்திக் காட்டுவதாக ‘காந்தி நான்மணிமாலை’ என்ற பாடலை ராய சொக்கலிங்கமும், ‘காந்தி கண்டன கீதம்’(3) என்ற பாடலை மணிநீலனும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தனித்தொகுதி தீர்மானத்தைக் கண்டிக்கும் வகையில் காந்தியடிகள் ஏர்வாடாச் சிறையில் இருந்த நிலையை, ‘ஏர்வாடாக் கோயில்’ என்ற பாடலாகவும், இத்தீர்மானத்தைக் கண்டிக்கும் வகையில் உண்ணாவிரதம் இருக்கும் காந்தியடிகளைக் காக்குமாறு கடவுளை வேண்டுவதாக, ‘கடவுளை வேண்டல்’ என்ற பாடலாகவும், தனித்தொகுதி தீர்மானம் நீக்கப்பட்டதால் காந்தியடிகள் உண்ணாவிரதத்தை முடித்த நிகழ்ச்சியை ‘உண்ணாவிரத முடிவு’ என்ற பாடலாகவும் ராய சொக்கலிங்கம் சிறையில் இருந்து கொண்டே வெளிப்படுத்தியுள்ளார். காந்திய இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்ற ராய.சொக்கலிங்கம் சிறையிலும் காந்தியக் கொள்கைகளைப் பரப்பும் காந்தியக் கவிஞராகச் செயல்பட்டதை எண்ணும்போது நமக்குப் பூரிப்பை உண்டாக்குகிறது.

மாநில சுயாட்சியும் தேசியப் பாடல்களும்:

1935-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய அரசியல் சட்டப்படி 1937-இல் மாநிலங்கள் சுயாட்சியைப் பெற்றன. ஆங்கில அரசுடன் இணைந்து செயல்படும் இந்நிலையை மாற்றிப் பூரண சுயாட்சி பெறவேண்டும் என்ற நிலை சில தீவிரவாதிகளிடம் தோன்றியது. அவர்களின் வழியைப் பின்பற்றிய கவிஞர்களும் இக்கொள்கையை வலியுறுத்திக் கவிதைகளைப் படைத்துள்ளனர். ‘பூரண சுயேச்சை’(4) என்ற பாடலை, தேசிய முன்னணி மூலம் பூரண சுயேட்சை அடையலாம் என்ற எண்ணம் பொதுமக்களிடம் பரவியிருந்த காலத்தில் கவிஞர்(5) வெளிப்படுத்தியுள்ளார்.

காந்தியக் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் முன்னோடியாக இருந்த ராஜாஜி 1937-இல் சென்னை மாகாண கவர்னராக பொறுப்பேற்றவுடன் மதுவிலக்குச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்நிலையை வரவேற்று கவிஞர்கள் கவிதைகளை வெளிப்படுத்தியுள்ளனர். மக்கள் கள் உண்பதனால் அடைந்த துன்பங்களை வெளிப்படுத்திக் காட்டி இன்றுடன் அந்தச் சனியன் தொலைந்தது என்று கூறுவதாக ‘விட்டது சனியன்’(6) என்ற பாடலை நாமக்கல் கவிஞரும், மன்னன் இராஜாஜி செய்த மதுவிலக்கு இந்தப் பூதலத்தில் புதுமையானது என்பதைப் ‘பாதுகையே பாதுகையே’ என்ற பாடல் மெட்டிலும், இந்திய தேசத்தில் இணையில்லாமல் வாழ்ந்த கள்ளரக்கன் தமிழகத்தின் எட்டு ஜில்லாக்களில் இன்றுடன் ஒழிந்தான் என்பதை ‘ஐந்து வயதினிலே’ என்ற பாடல் சந்தத்தில் எஸ்.ஜி. ராமசாமியும் வெளிப்படுத்தியுள்ளனர். மதுவிலக்கை கவிதைகளால் பாட முன்வந்த கவிஞர்கள், மதுவிலக்குச் சட்டம் செயல்பட்ட நிலையில் அதனை வரவேற்றுப் பாடியிருத்தலைக் காண முடிகிறது.

அடுத்த வலைப்பதிவில் இரண்டாம் உலகப்போரும் தேசியப் பாடல்களும் பற்றியத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்



அடிக்குறிப்புகள்

1. வேல்சாமி, சுதந்திரத் திலகம், பக்.1-5.

2. கவிக்குஞ்சரம், நாட்டுத் திலகமென்னும் ராட்டுப்பாட்டு, பக்.1-32.

3. ஏ.மணிநீலன், காந்திக் கண்டன கீதம், பக்.1-5.

4. ப.ஜீவானந்தம், ஜீவாவின் பாடல்கள், ப.196.

5. ப.ஜீவானந்தம்,ஜீவாவின் பாடல்கள், ப.196 .

6. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.171-172.


Sponsorship


This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work

Work Involves:

Content publishing

Content sharing on social media

Time Required: As little as 1 hour a day

Earnings: ₹300 or more daily

Requirements:

Active Facebook and Instagram account

Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob










கருத்துரையிடுக

0 கருத்துகள்