இந்திய நாட்டுப்பற்று - பகுதி 39: நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - இரண்டாம் உலகப்போரும் தேசியப் பாடல்களும்

நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி -  இரண்டாம் உலகப்போரும் தேசியப் பாடல்களும்

இரண்டாம் வட்டமேஜை மாநாட்டிலிருந்து காந்தியடிகள் திரும்பி வருகின்ற நிகழ்ச்சியை சுதந்திர திலகம் என்ற பாடலும் ,உண்ணாவிரதம் இருந்த நிகழ்ச்சியை காந்தி நான்மணிமாலை என்ற பாடலும், இந்திய அரசியல் சட்டப்படி 1937-இல் மாநிலங்கள் சுயாட்சியைப் பெற்றன எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் உலகப்போரும் தேசியப் பாடல்களும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம் 

  • தேசிய வாழ்வு
  • போர் நிதி
  • யுத்தக்கொடுமை
  • சிறையில் தடியடி
  • இண்டர்நேஷனல்

தேசிய வாழ்வு:

1939-இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நேரத்தில் காந்தியின் அகிம்சைப் போர் முறையால் இந்தியா சுதந்திரம் அடையாது என்ற நிலை சில தீவிரவாதிகளிடையே உருவாகியது. இவர்கள் காந்தியடிகளின் அகிம்சைப் போர் முறையை எதிர்க்கத் தொடங்கினர். இந்நிலையில் காந்தியடிகளின் போர் முறையை பழைய வழி என்று கருதி புதிய முறையில் விடுதலை காண முயன்றனர். இந்நிலையில் காந்தியின் கொள்கைகளில் ஈடுபட்ட கவிஞர்கள் தீவிர கொள்கையுடையவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அவர்களுடைய கவிதைகள் வழி காணமுடிகிறது. காந்திய வழியை பழையது என்று கருதும் நெஞ்சுக்கு காந்திய நெறியின் சிறப்புக்களை வெளிப்படுத்துவதாக பல உவமைகளுடன் ‘காந்தி வழி பழசா?’(1) என்ற பாடலை நாமக்கல் கவிஞர் படைத்துக் காட்டியுள்ளார்.

ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்யும் போக்கு அறவே கைவிடப்பட வேண்டும். காந்தியால் எதையும் செய்யமுடியும். எனவே, அவருடைய தனித்தலைமையே போதும் என்ற கருத்தோட்டம் ஜனநாயக விரோதமானது என்ற இடதுசாரி ஜனநாயகவாதிகள் கருதினர். இந்நிலையில் ஜனநாயகவாதிகளுக்கு ஆதரவு தரும் ஜீவானந்தம் ‘தேசிய வாழ்வு’(2) என்ற பாடலாக வெளிப்படுத்தியுள்ளார். இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய இக்கட்டானநிலை இந்திய தேசிய காங்கிரஸில், காந்தியவாதிகள், இடதுசாரி ஜனநாயகவாதிகள் என்று இரு பிரிவை உருவாக்கியது. இச்சூழ்நிலையில் காந்தியை ஆதரிக்கும் கவிஞர்கள், இடதுசாரி ஜனநாயகத்தை ஆதரிக்கும் கவிஞர்கள் என்ற இரு பிரிவுகளாகத் தேசியக் கவிஞர்கள் செயல்பட்டதை தெளிவாக உணரமுடிகிறது.

போர் நிதி:

இரண்டாம் உலகப்போரினால் இந்தியாவிற்கு ஏற்படும் அபாயத்தை நன்குணர்ந்த தேசபக்தர்கள் ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கருதினர். இந்நிலையை வெளிப்படுத்திக் காட்டுவதாக ‘வெளியேறுங்கோ, வெளியேறுங்கோ, வெளியேறுங்கோ’ என்ற பாடலை எஸ்.ஜி. ராமசாமி 1938-இல் பாடியுள்ளார். 1942-இல் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பே இவ்வுணர்வு தேசியக் கவிஞர்களிடம் இருந்ததை அவர்களுடைய கவிதைகள் வெளிப்படுத்திக் காட்டியுள்ளன.

இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்ட பொருள் இழப்பு, ‘போர் நிதி’ திரட்ட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. நாட்டின் நிலையை வெளிப்படுத்திக் காட்டி போர் நிதி வசூல் செய்வதை கண்டிக்கும் நிலையும் அக்காலக் கவிஞர்களிடம் நிலவியதை காணமுடிகிறது. உணவின்றி துன்பப்படும் நாங்கள் உங்களுக்குப் போர் செய்ய பணம் தருவது நீதியாகுமா? என மக்கள் கேட்பதாக ‘நாங்கள் பணம் தர ஞாயமென்னவோ?’ என்ற பாடலை வெளிப்படுத்தியுள்ளார் அய்யன் பெருமாள்.

யுத்தக்கொடுமை:

இரண்டாம் உலகப்போரில் மக்கள் அடைந்த துன்ப நிலை கவிஞர்களின் உள்ளங்களில் புயலை உருவாக்கியது. ஜப்பானியர்களால் சிங்கபுரமும், பர்மாவும் பிடிக்கப்பட்டு விட்ட நிலையில் இந்திய மக்கள் பல துன்பங்களை ஏற்க வேண்டிய நிலை உருவானது. போரினால் ஏற்பட்ட பஞ்சம் குடிக்கக் கூழும், உடுக்க உடையும், எரிக்க எண்ணையும், அழும் குழந்தைக்குப் பாலும், நோய்க்கு மருந்தும், இல்லாத நிலையை உண்டாக்கியதை ‘யுத்தக்கொடுமை’ என்ற பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் கவிமணி. நாட்டின் நிலையைக் கவிதைகளால் வெளிப்படுத்தும் நிலை அக்காலத்தில் நிலவியதை அறிந்து கொள்ள முடிகிறது.

கிரிப்ஸ் திட்டத்தின் பிரித்தாளும் தன்மையும், இரண்டாம் உலகப்போரால் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையும் ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து உடனடியாக அகற்றவேண்டும் என்ற நிலையை உருவாக்கியது. இந்நிலையில் தலைவர்கள் ஒன்றுகூடி ‘வெள்ளையனே வெளியே போ’ என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்த நிலையில் தேசிய கவிஞர்களும் இத்தீர்மானத்தை வரவேற்று பாடியிருத்தலை அவர்களின் கவிதைகள் வெளிக்காட்டுகின்றன. ‘வெளியேறு வெளியேறு வெள்ளையப்பா’ என்ற பாடல் மூலம் ந.கந்தசாமியும், அவர்கள் இந்தியாவிலிருந்து உடனே வெளியேற வேண்டும் என்ற கருத்தை சுந்தரவேலனும், அழ.வள்ளியப்பாவும்(3) பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறையில் தடியடி:

போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற தேசிய கவிஞர் ந.கந்தசாமி சிறை வாழ்வை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதாக ‘வெஞ்சிறை நாளும் எனில் இனி சிரிப்போம்’ என்ற பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது. பெல்லாரி, அலிபுரம் சிறைகளில் தேசபக்தர்கள் பட்ட துயரநிலையை ‘சிறையில் தடியடி’ என்ற பாடலாக வெளிப்படுத்தி மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்ட முயன்றுள்ளார்.கவிஞர்கள் கவிதைகளால் மட்டும் விடுதலை உணர்வைத் தூண்டவில்லை. சிறைசெல்லும் தியாகிகளாகச் செயல்பட்டதையும், சிறையில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் தேசியக் கவிதைகளாக மலர்ந்ததையும் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.

இண்டர்நேஷனல்:

1942-இல் சிறையிலிருந்து வெளிவந்த ஜீவா உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அடிமை நீங்கி விடுதலை பெறவேண்டும் எனக் கருதினார். இக்கருத்தை ‘இண்டர்நேஷனல்’(4) என்ற பாடலாக வெளிப்படுத்தி சுதந்திரம் பெற சிறை புகுந்த தோழர்களை மீண்டும் போருக்குச் செல்லத் தயாராக எழுமின் என வேண்டுகோள் விடுக்கிறார்.

‘வெள்ளையர்களே வெளியேறு’ என்று போர் முரசும் கொட்டிவிட்டு, வீட்டிற்குச் சென்றவுடன் மனம் மாறி வெள்ளையர்களுக்கு விருந்து வைப்பவர்களையும், சுபாஷ் சந்திரபோஷின் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களையும், போரில் ஆங்கிலேயர்களுக்குச் சாதகம் செய்ய நினைக்கும் போலிக் காங்கிரஸ்காரர்களையும் பழித்துக் காட்டி அவர்களை மக்களிடையே அறிமுகம் செய்வதாக ‘இது தகுமா?’(5) என்ற பாடலைப் பாடியுள்ளார் ஜீவா. ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும் என்ற நிலையை வெளிப்படுத்திய கவிஞர்கள் அவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்ட இந்தியர்களையும் கடுமையாகப் பழித்துக்காட்டும் நிலை பொதுவுடமைக் கவிஞர்களிடம் இருந்ததைக் காணமுடிகிறது.

அடுத்த வலைப்பதிவில் பாகிஸ்தான் பிரிவினையும் தேசியப் பாடல்களும் பற்றியும், சுதந்திரமும் தேசியப் பாடல்களும் பற்றியும் சிலத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்



அடிக்குறிப்புகள்

1. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.456-457.

2. ப.ஜீவானந்தம், ஜீவாவின் பாடல்கள், பக்.102-103.

3. அழ.வள்ளியப்பா, மலரும் உள்ளம், ப.11.

4. ப.ஜீவானந்தம், ஜீவாவின் பாடல்கள், ப.170.

5. ப.ஜீவானந்தம், ஜீவாவின் பாடல்கள், ப.105.



Sponsorship


This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work

Work Involves:

Content publishing

Content sharing on social media

Time Required: As little as 1 hour a day

Earnings: ₹300 or more daily

Requirements:

Active Facebook and Instagram account

Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob






















கருத்துரையிடுக

0 கருத்துகள்