நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - பாகிஸ்தான் பிரிவினையும் தேசியப் பாடல்களும், சுதந்திரமும் தேசியப் பாடல்களும்
இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய இக்கட்டான நிலை இந்திய தேசிய காங்கிரஸில், காந்தியவாதிகள், இடதுசாரி ஜனநாயகவாதிகள் என்று இரு பிரிவை உருவாக்கியது எனவும், இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்ட பொருள் இழப்பு போர் நிதி திரட்ட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் பிரிவினையும் தேசியப் பாடல்களும் பற்றியும், சுதந்திரமும் தேசியப் பாடல்களும் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- பாகிஸ்தான் பிரிவினை
- இந்துஸ்தானம்
- சுதந்திரம்
பாகிஸ்தான் பிரிவினை:
ஆங்கிலேயர் மேற்கொண்ட பிளவு சக்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது புயலாக மாறியது. முஸ்லீம்கள் ‘பாகிஸ்தான்’ என்ற தனிநாடு கேட்கும் நிலையை உருவாக்கியது. 1945-இல் கொண்டுவரப்பட்ட வேவல் திட்டமும் அதனைச் செயல்படுத்த கூட்டப்பட்ட ‘சிம்லா மாநாடும்’ முஸ்லீம்களுக்குச் சாதகமாக அமையாததால் முஸ்லீம்கள் தனிநாடு கோரி இனக் கலவரங்களை உண்டாக்கினர். இச்சூழ்நிலையில் காந்தியடிகள் இந்து முஸ்லீம்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்க முயன்றார். காந்தியக் கொள்கைகளை பின்பற்றிய கவிஞர்கள் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்திப் பாடியதை அவர்களின் பாடல்கள் தெளிவாக்குகின்றன. ‘என்னரும் இந்து முஸ்லீம்கள்’(1) என்ற பாடலில் ஒரே தாய் வயிற்றில் பிறந்த நாம் சண்டையிடக் கூடாது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறார் சுருளியாண்டி பாவலர்.
முஸ்லீம்களின் பிடிவாதப் போக்கும், ஆங்கிலேயர்களின் பிளவு சக்தியும் இந்தியாவை இரு கூறாக்க வேண்டிய நிலையை உருவாக்கின. காந்தியடிகளின் சமரச உடன்பாடு வலிமை இழந்து கலவரங்களை ஏற்படுத்திய நிலையில் பாரதத் தாய்க்கு பிறந்த ஒரு சிசுவை இரண்டாகப் பிரிக்கமுயலும் ஆங்கில ஆட்சியின் கொடுமையைத் ‘தூண்டிய சிசு’(2) என்ற கதைப் பாடலாக உருவகப்படுத்தியுள்ளார் வாலம்.
இந்துஸ்தானம்:
இந்து-முஸ்லீம்களிடையே ஏற்பட்ட இனக் கலவரங்கள் இந்துஸ்தானம், பாகிஸ்தானம் என்ற இரண்டு நாடுகளை உருவாக்கின. இந்நிகழ்ச்சியை வேறுபாடு இல்லாமல் ஒரே கூட்டில் வாழ்ந்த காகத்தின் குஞ்சும், குயிலின் குஞ்சும் வளர்ச்சியடைந்த நிலையில் பிரிந்து செல்வதை ஒப்புமைக் காட்டி இந்திய நாட்டின் பிரிவினையை வெளிப்படுத்துவதாக ‘காகந்தன் குஞ்சுடனே குயிலின் குஞ்சும்’(3) என்ற பாடலைப் பாடியுள்ளார் கம்பதாசன். பாகிஸ்தான் என்ற பிரிவினை தேசியக் கவிஞர்களின் உள்ளங்களை பாதித்த நிலையை தெளிவாகக் காணமுடிகிறது.
1947-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்ததால் அவர்கள் இந்தியாவை விட்டு பிரிட்டனுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையை,
“மூட்டையது வீட்டினிலே படுத்துறங்கும் - இருள்
மூதேவி தனைக்கடிந்து துறத்தல் போல
நாட்டினிலே குறட்டை விட்ட வெள்ளைக்காரன்
நாடோட நாம் விழித்தோம் பாராய் தம்பி”
என்ற பாடல் மூலம் இந்தியர்களின் விழிப்புணர்வு அடிமைப்படுத்தி குறட்டை விட்டு வாழ்ந்த ஆங்கிலேயர்களை துரத்தியது என்ற ஆங்கிலேயர்களை இழிந்த உவமையுடன் புலப்படுத்துகிறார் கம்பதாசன்(4).
1905-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை நடந்த விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகள் பல தேசியக் கவிஞர்களை உருவாக்கியதைத் தெளிவாகக் காண முடிகிறது. ஒவ்வொரு தேசியக் கவிஞரும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை வெளிப்படுத்திக்காட்டி தூண்டும் நிலை உருவாக்கியதை அவர்களின் கவிதைகளால் அறியமுடிகிறது. விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாடும் நிலை எந்த ஒரு கவிஞருக்கும் அமையவில்லை. தேசியக் கவிஞர்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை இதற்குத் தடையாக அமைந்தது.
சுதந்திரம்:
சுதந்திரம் என்பது நமக்கு எளிதில் கிடைக்கும் பொருளல்ல; அதை வேண்டுமானால் உடல், பொருள், உயிர் அனைத்தையும் துறக்கும் தியாக உணர்வு வேண்டும். அவ்வுணர்வினால் பெற்ற சுதந்திரம் எல்லோர்க்கும் இன்பத்தைத் தரவல்லது என்பதை,
“சுதந்திரம் என்பது சுத்த சன்மார்க்கம்
சூழ்ந்துள யாவர்க்கும் சுகந்தரப் பார்க்கும்”
என்று சுதந்திரத்தின் இலக்கணத்தைச் சுதந்திரம் அடைவதற்கு முன்பே கவிதைகளால் வெளிப்படுத்தியுள்ளார் நாமக்கல் கவிஞர்(5).
‘சுதந்திர வாழ்வே சுவை தரக்கூடியது. அடிமை வாழ்வு அவ வாழ்வு’ என திரு.வி.கவும், ‘சுதந்திரம் இல்லாத நாடு சூழ்புலிகள் வாழும் காடு’(6) என்று நாமக்கல் கவிஞரும், சுதந்திரம் அடைவதற்கு முன்பே சுதந்திரத்தின் சிறப்பையும் அடிமையின் அவல நிலையையும் கவிதைகளாக்கி தங்களின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
‘சுதந்திரம் உள்ள நாட்டில் அச்சம், வறுமை, கொச்சை மொழிகள், கோணல் வழிகள், மடமை, கபடம், அடிமை, கெஞ்சுதல் போன்ற தீச்செயல்கள் நீங்கி அன்பு, அறம், மானம், கடமையுணர்வு, கொடுமையை எதிர்த்தல், தன்மதிப்பு, உயர்வு, தாழ்வின்மை போன்ற நற்செயல்கள் உருவாகும்’ என்கிறார் நாமக்கல் கவிஞர் (7).
அடுத்த வலைப்பதிவில் சுதந்திரமும் தேசியப் பாடல்களும் பற்றி மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. சுருளியாண்டிப் பாவலர், கள்ளும் கவிதையும், பக்.51-52.
2. ஹா.கி.வாலம், மோகனமுறுவர், பக்.26-28.
3. கம்பதாசன், கம்பதாசன் கவிதைகள், ப.232.
4. கம்பதாசன், கம்பதாசன் கவிதைகள், ப.232.
5. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.363.
6. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.135.
7. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.182-183.
Sponsorship
This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
Job Type: Mobile-based part-time work
Work Involves:
Content publishing
Content sharing on social media
Time Required: As little as 1 hour a day
Earnings: ₹300 or more daily
Requirements:
Active Facebook and Instagram account
Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob




0 கருத்துகள்