நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - தேசியச் சின்னங்களும் தேசியப் பாடல்களும், மீள்பார்வை
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் சுதந்திரத்தைக் காட்டும் சின்னங்களாக தேசியக் கொடியும், தேசிய கீதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டன எனவும், உடலில் ஒரு துளி இரத்தம் உள்ள வரையில் எந்தாய் வாழ்கவென்று இந்த கொடியை ஏந்திப் பிடிக்க வேண்டும் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக தேசியச் சின்னங்களும் தேசியப் பாடல்களும் பற்றியும், நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணியின் மீள்பார்வையையும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- ஜாதிய கீதம்
- டாக்டர் ராஜேந்திர பிரசாத்
- மீள்பார்வை
ஜாதிய கீதம்:
இந்தியாவில் 1905-ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையை எதிர்க்கும் போர்க் குரலாக ஒலித்த ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் இந்தியா முழுவதும் சுதந்திர உணர்வைத் தூண்டும் மந்திரமாகச் செயல்பட்டது. இப்பாடலின் மொழிபெயர்ப்பாகப் பாரதியார் ‘ஜாதிய கீதம்’(1) என்ற பாடலை 1905-இல் வெளியிட்டார்.
தேசிய விழாக்களில் ‘வந்தே மாதரம்’(2) என்ற பாடல் பாடிய பின்னரே விழாவைத் தொடங்கும் மரபு இருந்தது. இப்பாடல் பெரியதாக இருந்ததால் 1931-இல் கூடிய காங்கிரஸ் தேசிய விழாக்களில் இப்பாடலில் முதல் ஆறு அடிகளைப் பாடினால் போதும் எனத் தீர்மானம் செய்தது.
டாக்டர் ராஜேந்திர பிரசாத்:
இந்தியா விடுதலை அடைவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘வந்தே மாதரம்’ பாடல் அதிகாரப் பூர்வமற்ற தேசிய கீதமாகச் செயல்பட்டு வந்தது(3). சுதந்திரமடைந்த பிறகு 1950-ஆம் ஆண்டில் ஜனவரி 24-ஆம் தேதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடிய அரசியல் நிர்ணய சபை இந்திய தேசிய கீதம் பற்றிய ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இதன்படி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘ஜனகனமன’ என்ற பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய உணர்வை உண்டாக்கிய பங்கிம் சந்திரரின் ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் அதற்குச் சமமான தேசிய கீதமாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.
இக்காலத்தில் பெரும்பாலான அரசியல் விழாக்களில் ‘ஜனகனமன’ பாடல் மட்டும் இறுதியில் பாடப்படுகிறது. ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் மறைந்து வருகிறது. நமது நாட்டின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் சுதந்திர உணர்வை உண்டாக்கிய ‘வந்தே மாதரம்’ என்ற பாடலை அனைத்து பொதுக் கூட்டங்களிலும் விழாக்களிலும் ஆரம்பத்தில் பாட முயன்றால் பெற்ற சுதந்திரம் தழைத்து வளர வழி ஏற்படும். ஒவ்வொரு அரசியல் பின்னணியும் கவிஞர்களிடம் கவிதைகள் மலர்வதற்கு சாதகமாக அமைந்திருந்ததை தெளிவாக உணர முடிகிறது.
நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - மீள்பார்வை:
மேல்நாட்டுக் கவிதைகளும், இந்திய மொழிகளில் வெளியான கவிதைகளும் தமிழில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் கவிதைகள் தோன்றச் சாதகமாக இருந்தன. வங்காளப் பிரிவினை தமிழில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் கவிதைகள் தோன்றுவதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. திலகரின் தீவிரவாதப் போக்கும், அதன் விளைவுகளும் விடுதலை உணர்வைத் தூண்டும் கவிதைகள் மலர்வதற்குப் பின்னணியாக அமைந்தன. தீவிரவாதிகளை எதிர்த்துச் செயல்பட்ட மிதவாதிகளைப் பழித்துக் காட்டியும் நாட்டுப்பற்றைக் கவிதைகளில் புலப்படுத்தியுள்ளனர். தீவிரவாதிகளுக்குக் கொடுக்கப்பட்ட தொல்லைகளும், சிறைத் தண்டனைகளும் வீர உணர்வைத் தூண்டும் கவிதைகள் மலர்வதற்குப் பின்னணியாக இருந்தன. தேசபக்தர்களின் வாழ்க்கை வரலாறும், விடுதலை உணர்வும் நாட்டுப்பற்றைத் தூண்டும் கவிதைகளாக உருப்பெற்றன.
முதல் உலகப்போர், ரௌலட் சட்ட எதிர்ப்பு, பஞ்சாப் படுகொலை போன்றவை காந்தியடிகளின் தலைமையில் ஒரு புதிய அறப்போர் முறை தோன்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்கின. இச்சூழ்நிலை பாஸ்கரதாஸ், இராஜகோபால் நாயக்கர், பீர் முகமது சாகீப், இராபயேல் படையாச்சி, மாதவையா, வெங்கட்ராமைய்யர், ரத்னம் ஆகியோர் கவிதைகளை வெளியிடுவதற்குத் தூண்டுதலாக இருந்தது.
காந்தியடிகளின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் செயல்படத் தொடங்கிய நிலையில் தீவிரவாதத் தலைவரான திலகர் இறந்தார். இந்நிகழ்ச்சி திலகரின் மீது பற்றுக் கொண்டிருந்த வைத்தியலிங்கச் செட்டியார், நாராயணசாமி நாயுடு, நாமக்கல் கவிஞர், பாரதியார், சர்மா போன்ற கவிஞர்கள் சோக உணர்வு மூலம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த சாதகமாக அமைந்தது.
காந்தியடிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், நிர்மான இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவையும் அவ்வியக்கங்களால் ஏற்பட்ட விளைவுகளும் அவர் மீது ஈடுபாடு கொண்டிருந்த கவிஞர்கள் கவிதைகளைப் பாடுவதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கின.
இந்தியா விடுதலை அடைவதற்காகக் கவிதைகளைப் பாடிய கவிஞர்கள், பெற்ற விடுதலையின் பெருமையை வெளிப்படுத்திக் காட்டியும் மக்களைத் தூண்ட முயன்றனர்.விடுதலை பெறுவதற்குக் காரணமாக இருந்த தேசபக்தர்களின் சிறப்புகளையும், காங்கிரஸ் கொடியின் சிறப்பையும் விடுதலை நாளில் கவிதைகளாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தியா குடியரசு நாடாக மாறியதையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாடியுள்ளனர்.இந்தியா விடுதலை அடைவதற்கு இந்தியத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும், அதன் விளைவுகளும் கவிஞர்கள் கவிதைகளைப் பாடுவதற்கு பின்னணியாக அமைந்தன.
காந்தியின் சிறப்புகள், காந்தியக் கவிஞர்களின் சிறப்புகள், காந்தியக் கொள்கைகளும் கவிதைகளும், காந்திய இயக்கங்களும் கவிதைகளும் ஆகியவை பற்றி இனிவரும் வலைப்பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. பாரதியார் கவிதைகள், பக்.161-162.
2. மா.பொ.சிவஞானம், வந்தே மாதரம், ப.62.
3. R.K.Bose, Bankim Chandra ChatterJee, pp.l78-79.
Sponsorship




0 கருத்துகள்