நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள் - 3
ஒலிக்குறிப்புச் சொற்கள் மூலம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் மரபும் இருந்ததை உணரமுடிகிறது எனவும், சொற்களின் முதற்சீர் வேறாகவும், இறுதிச்சீர் ஒரே மாதிரியாகவும் அமைத்து சொற்களுக்குப் பொருள் மாற்றம் செய்வதன் மூலம் வீர உணர்வையும் விடுதலை உணர்வையும் தூண்ட விரும்பியவர் பாரதியார் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் தொடர் அடுக்கி வருதல் பற்றியும், தொடர் இடைமடக்கு பற்றியும், வினா விடைத்தொடர் பற்றியும், எதிர்பதத் தொடர் பற்றியும், உம்மைத்தொடர் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- தொடர் அடுக்கி வருதல்
- தொடர் இடைமடக்கு
- வினா விடைத்தொடர்
- எதிர்பதத் தொடர்
- உம்மைத்தொடர்
தொடர் அடுக்கி வருதல்:
அன்னியர் ஆடையை அகற்றி கதராடையை உடுத்த வேண்டுமானால் மக்கள் பஞ்சினை உற்பத்தி செய்யவேண்டும் என்ற கருத்தை உணர்த்த ‘பஞ்சு விளைப்பீரே’ என்ற தொடரை அடுக்காக அமைத்து கருத்துக்கு அழுத்தமும் உணர்வும் கொடுக்கிறார் பாரதிதாசன்.
புத்தாண்டு தினத்தன்று நாடு அடிமையிலிருந்து மீளவேண்டும் என்று தமிழகத்தாயிடம் வரம் கேட்டதற்கு இணங்க, ‘தமிழகத்தாய் வரம் கொடுத்ததாக ‘தந்தனனிவ்வரம்’(1) என்ற தொடரை இருமுறை வெளிப்படுத்தியுள்ளார் நாமக்கல் கவிஞர். ‘ஜயபேரிகை கொட்டடா’, ‘இந்தியா உலகிற்களிக்கும்’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ ஆகிய தொடர்களை அடுக்காக அமைத்து பாடலுக்கு உணர்வூட்டுகிறார் பாரதியார்(2). சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்த தங்கவேலு, ‘உள்ளம் மலருதடா தமிழா’ என்ற தொடரையும், ‘சொல்லு பாப்பா’ என்ற தொடரையும் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்கமுடிகிறது.
தொடர் இடைமடக்கு:
ஒரு தொடரில் அல்லது ஒரு பாடலில் முதலில் வந்த எழுத்தையோ, சீரையோ, சொல்லையோ, மீண்டும் மீண்டும் தொடர்களில் அமைப்பது தொடர் மடக்கு. இத்தகைய உத்திமுறையால் உள்ளடக்கம் வலிமையுடையதாகவும் ஒலிநயம் உடையதாகவும் மாறுகிறது. காந்தியின் சிறப்பை வெளிப்படுத்த,
“அடிமையின் அச்சம் போக்கி
அச்சத்தை அடிமையாக்கிக்
குடிகளைக் கோள்களாக்கிக்
கோள்களைக் குடிகளாக்கி
மடமையை மதியாய் மாற்றி
மதிக்கும் ஓர் புதுமை கூட்டித்
திடமுறச் செய்த காந்தி
திருக்கதை மறக்கலாமோ?”(3)
என்ற பாடலில் சொற்களையும் தொடரையும் மீண்டும் மீண்டும் மடக்கு முறையில் காந்தியின் செயலுக்குப் புத்துணர்வு கொடுக்கிறார் நாமக்கல் கவிஞர்.
காந்தியடிகளை மனத்தால் நினைத்தால் உண்டாகும் உணர்வை ‘உள்ளம் உருகுது கள்ளம் கருகுது’(4) என்ற தொடர்மடக்கில் முதல் எழுத்தை மோனையாகவும், மற்ற எழுத்துக்களை எதுகையாகவும் அமைத்துக் காந்திய பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதையும், பாரதம் வெற்றியடைய வேண்டும் என்பதையும், ‘ஜய ஜய பாரத ஜய ஜய பாரத’, ‘எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம்’(5) போன்ற தொடர் மடக்கு மூலம் கருத்துக்கு வலிமை கொடுத்துள்ளார் பாரதியார்.
வினா விடைத்தொடர்:
வினா விடைத்தொடர்கள் மூலம் கருத்துக்கு விளக்கம் தரும் நிலையும் கவிஞர்களிடம் இருந்தது என்பதை அவர்களின் பாடல்கள் தெளிவாக்குகின்றன.
“வீர சுதந்திரம் வேண்டி நின்றார் - பின்னர்
வேறொன்று கொள்ளாரோ?”(6)
என்ற தொடர் மூலம் சுதந்திரத்தின் பெருமையையும்,
“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் கான்கிலையோ?”(7)
என்ற தொடரின் மூலம் தேசபக்தர்களின் அவல நிலையையும் வினாத் தொடர்களாக அமைத்து அதற்குரிய விடையைத் தொடரிலேயே உள்ளுறைப் பொருளாகவும் குறிப்புப் பொருளாகவும் வெளிப்படுத்தியுள்ளார் பாரதியார்.
காந்தியின் சிறப்புக்களை நாமக்கல் கவிஞரும்(8), பாரத மாதாவின் வீர உணர்வைப் பாரதியாரும்(9) வினாவிடைத் தொடர்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளதையும் பார்க்கமுடிகிறது.
எதிர்பதத் தொடர்:
தொடர்களில் எதிர்பதச் சொற்களை அமைத்துக் கருத்தை விளக்கும் நிலையும் கவிஞர்களிடம் இருந்ததைக் காணமுடிகிறது. தமிழகத்தாய், தமிழர்கள் சுதந்திரம் பெற விழிப்புணர்வு பெற்ற நிலையை,
“தரும முணர்ந்தனை கருமமறிந்தனை
தாயென நீ நினைத்தாய்”
“பெருமை யளித்தனை சிறுமையொழித்தனை
பெற்ற மனங் களித்தேன்”
“அச்சமகற்றினை ஆண்மை பெருக்கினை
ஆனந்தம் பொங்குதடா”(10)
ஆகிய கல்வி, கேள்வி, செல்வம் எதிர்ப்பதத் தொடர்கள் மூலம் நாமக்கல் கவிஞர் வெளிப்படுத்தியுள்ளார். திலகரின் பெருமையை வெளிப்படுத்த ‘வாழ்க திலகன் நாமம், வீழ்க கொடுங்கோன்மை’(11) என்ற தொடரில் பாரதியார் உணர்த்தியுள்ளார்.
உம்மைத்தொடர்:
காந்தியடிகளின் செயல், ஒழுக்கம், சிந்தை ஆகியவற்றை வெளிப்படுத்த உம்மைத்தொடரை ராய.சொக்கலிங்கம்(12) பயன்படுத்தியுள்ளார். காந்திய பக்தர்களையும், காந்தியத்தை வெளிப்படுத்தும் சக்திகளையும் நாமக்கல் கவிஞரும்(13) உம்மைத் தொடர்களாக அமைத்துள்ளார்.
எத்தகைய இன்னல்கள் வந்தாலும் சுதந்திரதேவியை மறக்க மாட்டேன் என்பதையும், சுதந்திர தேவியின் பெருமையை அறியாதவர்கள் கல்வி, கேள்வி, செல்வம் ஆகியவற்றில் சிறந்திருந்தாலும் அவர்கள் பிணத்தை ஒத்தவர்கள் என்பதையும், பாரதநாட்டின் பழம்பெருமை புகழ்மிக்கது என்பதையும்(14) உம்மைத் தொடர்களில் அமைத்து கருத்துக்கு வலிமை கொடுக்கிறார் பாரதியார்.
சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியை உவமைத்தொடர் கலந்த உம்மைத் தொடரால் வெளிப்படுத்துகிறார் சுருளியாண்டிப் பாவலர்.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் முற்றெச்சத் தொடர் பற்றியும், வினாத்தொடர் பற்றியும், விளித்தொடர் பற்றியும், உருவகத் தொடர் பற்றியும், கட்டளைத் தொடர் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.435.
2. பாரதியார் கவிதைகள், பக்.103, 160-161.
3. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.62-63.
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.61.
5. பாரதியார் கவிதைகள், பக்.135,161.
8. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.77-78.
9. பாரதியார் கவிதைகள், பக்.142-143.
10. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.435.
11. பாரதியார் கவிதைகள், ப.209.
12. ராய. சொக்கலிங்கம், காந்திக்கவிதை, ப.1.
13. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.56-57.
14. பாரதியார் கவிதைகள், பக்.135, 178.
Sponsorship




0 கருத்துகள்