அறத்துப்பால் காட்டும் இல்லறநெறி - நன்றி மறவாமை, நடுவுநிலைக் கொள்கை மற்றும் அடக்கப் பண்பு
மனித வாழ்க்கைக்கு சிறப்புடைய அன்பு தேவை. அன்புடையார் பண்புடையவர்களாக இருப்பர் என்பது பற்றியும், தம்மை நம்பி வந்தவரைக் காப்பதே உண்மையான அறம் என்பது பற்றியும், இனிமை அன்பு கலந்ததாய், வஞ்சனை அற்றதாய் விளங்கும். மெய்ப்பொருள் கண்டாரின் வாய்ச்சொல்லே இன்சொல் என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக நன்றி மறவாமை பற்றியும், நடுவுநிலைக் கொள்கை பற்றியும், அடக்கப் பண்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- நன்றி மறவாமை
- நடுவுநிலைக் கொள்கை
- அடக்கப் பண்பு
நன்றி மறவாமை:
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று."
என்ற குறளால் உறுதி செய்யலாம்.
பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தினீங்கும் வாயிலுண்டாம். ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃதில்லை. தன் கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பை தொடரும் பிறவிகள் யாவற்றலும் மரவாது கொண்டு நினைவு கூர்வர் சான்றோர். இன்று ஒருவர் கொல்வது போன்ற துன்பம் செய்தாலும், அன்று அவர் செய்த ஒரு நன்மையை எண்ணிப் பார்க்க இத்துன்பம் மறையும். நான்மணிக்கடிகை செய்நன்றியறிதல் பற்றி கூறும்போது பிறர் செய்த நன்மைகளை மறவாமை வேண்டும் என்பதை
"................................................பிறர் செய்த
நன்றியை நன்றாக் கொளல் வேண்டும்...."
என்ற அடிகளால் புலப்படுகிறது.
நடுவுநிலைக் கொள்கை:
"நடுவு" "நிலைமை" என்னும் இரண்டு சொற்களால் ஆயத்தொடர். "நடுவு" என்பது நடு எனவும், "நிலைமை" என்பது "நிலை" எனவும் வழங்கும். நடுவுநிலைமை என்பது நடுவாக நிற்றல் எனப் பொருள்படும். அஃதாவது உற்றார், நண்பர், நொதுமலர், பகைவர் என்னும் நான்கு திறத்தினர்களுக்கும் நடுவாக நின்று அவர்களில் எத்திறத்தார் பக்கமும் கோடாமல், அவ்வத்திறத்தார்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து ஒழுகுதல் சிறப்புடையதாகும்.
"நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்."
என்ற குறள் புலப்படுத்துகிறது.
செல்வம் குறைவதும் நிறைவதும் உலகத்தில் நிகழாதவையல்ல. எனவே உள்ளத்தால் நடுவுநிலைமை தவறாமை சான்றோர்க்கு அழகு என்கிறார் வள்ளுவர். பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பேணிச் செய்யின் வாணிகம் செய்வார்க்கு நன்றாய வாணிகமாம். நடுவாக நின்று அறத்தின்கண்ணே தங்கினவனது வறுமையை வறுமை என்று கருதார் உயர்ந்தோர்.
அடக்கப் பண்பு:
தான் அடங்கி ஒழுகுதலும், தன்னை அடக்கி ஒழுகுதலுமாம். தன்னை அடக்குதல் என்பது தன் பொறிகள் முதலியவற்றை அடக்குதல் ஆகும். ஒருவனை அடக்கமாகிய பண்பு, தேவர் உலகத்திற்கு கொண்டு சேர்க்கும். அடங்காமையாகிய பாவம் கொடிய நரகத்துள் கொண்டு சேர்த்துவிடும். இல்லற நெறியில் சற்றும் மாறுபடாமல் அடங்கி இருப்பவனது உயர்வு மலையின் தோற்ற அளவை விடவும் மிகப்பெரியது.
தீயினால் சுடுவதோ புண்ணாகி வெளியில் தழும்பாயினும் உள்ளே ஆறிவிடும். நாவினால் சுடுவதோ உள்ளத்தில் ஆறாத தழும்பாய் நிற்கும். கோபத்தைத் தடுத்து கற்பவை கற்று, அடக்கத்தோடு இருப்பவனிடம் சென்றடைய அற இறையானது வழிமேல் விழிவைத்து இருக்கும். ஒருவர் எவற்றைக் காக்க தவறினாலும் நாவினை மட்டுமாவது காக்க வேண்டும். காக்காவிட்டால் சொல் குற்றத்தின்கட் பட்டுத் தாமே துன்புறுவார் என்பதை
"யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு."
என்ற குறள் மூலம் அறியலாம்.
அடுத்த வலைப்பதிவில் அறத்துப்பால் காட்டும் இல்லறநெறியில் ஒழுக்கம் பற்றியும், பிறர் மனைவியை விரும்பாமை பற்றியும், பொறுமை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
Sponsorship
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication



0 கருத்துகள்