இந்திய நாட்டுப்பற்று - பகுதி 32: நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் - 4

நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் - 4

வீரரைக் கொண்டாடாத தேசத்தில் வீரம் மங்கிப்போகும் என்கிறார் பாரதியார் என்பது பற்றியும், திலகரின் தீவிரச் செயல்களை மேத்தா என்ற மிதவாதத் தலைவர் பழித்துக் கூறுகிறார் என்பது பற்றியும், பிபின் சந்திரரின் பேச்சாற்றலும், பத்திரிகையும் மக்களிடையே விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்தியது என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக சுதந்திர தேவியின் துதி பற்றியும், மறவன் பாட்டு பற்றியும், துருக்கிநாட்டுச் சுதந்திர உணர்வு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • சுதந்திர தேவியின் துதி
  • மறவன் பாட்டு
  • துருக்கிநாட்டுச் சுதந்திர உணர்வு

சுதந்திர தேவியின் துதி:

07.07.1908-இல் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கும், சுப்பிரமணிய சிவாவிற்கும் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் கலவரங்கள் ஏற்பட்டன. அச்சூழ்நிலை விடுதலை உணர்வைத் தூண்டும் தேசபக்தர்களைக் கைது செய்யும் நிலையை உருவாக்கியது. அப்போது பாரதியார் தன் உள்ளத்தில் ஏற்பட்ட சுதந்தர உணர்வை வெளிப்படுத்த ‘இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் சுதந்திர தேவியே நான் உன்னை மறக்கமாட்டேன்’ என்ற கருத்தைக் கொண்ட ‘சுதந்திர தேவியின் துதி’(1) என்ற பாடலைப் பாடினார். 1908-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி போலீஸார் பாரதியாரைக் கைது செய்ய ‘இந்தியா’ பத்திரிக்கை அலுவலகத்தைச் சோதனை செய்தபோது அவர் புதுவைக்குத் தப்பிச் சென்றார்.1909-இல் கொண்டுவரப்பட்ட மின்டோ-மார்லிச் சீர்திருத்தம், முஸ்லீம்களுக்கும், மிதவாதிகளுக்கும் ஆதரவாக அமைந்து இந்தியர்களிடையே பிளவை உண்டாக்கும் நிலையை உருவாக்கியது. மிண்டோ மார்லிச் சீர்திருத்தம் கோபால கிருஷ்ண கோகலேவுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருந்ததைக் கண்ட தீவிரவாதியான பாரதியார் அவரையும் மார்லியின் சீர்திருத்தத்தையும் பழித்துக்காட்டி மக்களை விழிப்புறச் செய்வதாக ‘கோகலே சாமியார் பாடல்’(2) என்ற பாடலை எழுதினார். மிதவாதிகள் விடுதலையுணர்வுக்கு தடையாக செயல்படும் நேரத்தில் அவர்களை கவிதைகளால் பழித்துக்காட்டும் உணர்வு பாரதியிடத்தில் வெளிப்பட்டிருப்பதை தெளிவாக உணரமுடிகிறது.

தேசபக்தர்கள் சிறையில் துன்பப்படும்போது அவர்களுக்கு ஆறுதல் கூறுவதாகவும், மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், பாரதியின் கவிதைகள் வெளிப்பட்டிருத்தலைக் காணமுடிகிறது. வ.உ.சிதம்பரம் பிள்ளை சிறையில் இருக்கும்போது ‘ஸ்ரீ மான் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் கோயமுத்தூர் ஜெயிலும்’(3) என்ற பாடலை எழுதி ‘இந்தியா’ பத்திரிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார். கோயமுத்தூர் சிறையிலிருக்கும் வ.உ.சிதம்பரம்பிள்ளைக்கு அவருடைய எதிர்காலப் புகழைச் சுட்டிக்காட்டிட மனம் தளராமல் இறைவனை மனத்தில்கொண்டு வாழ்க என வாழ்த்துவதாக ‘வ.உ.சிக்கு வாழ்த்து’(4) என்ற பாடலை எழுதி, வ.உ.சி. யை பார்க்கச் சென்ற பரலி சு.நெல்லையப்பரிடம் கொடுத்தனுப்பினார்(5). தேசபக்தருக்குக் கவிதையால் ஆறுதல் கூறும் மரபு அக்காலத்தில் நிலவியதைப் பாரதியார் வழி அறியமுடிகிறது.

மறவன் பாட்டு:

அடிமையாக ஆங்கிலேயருக்கு இழிதொழில் செய்து அவர்களிடம் நம் நாட்டு ரகசியங்கள் வெளிப்படுத்தி வந்த மக்களைக் கண்ட பாரதியார், மனம் வருந்திய நிலையில் அவர்களுக்கு பாரதநாட்டின் பழைய வீரஉணர்வை வெளிப்படுத்திக்காட்ட ‘மறவன் பாட்டு’(6) என்ற பாடலைப் பாடினார் எனக் கருதமுடிகிறது. இப்பாடல் பயங்கரவாதம் வளர்வதற்குத் தூண்டுதலாக இருந்திருக்கிறது. 1911-இல் ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் இப்பாடல் இருந்ததாகத் தெரிகிறது. எனவே, பயங்கரவாதிகளுக்குப் பாரதியாரின் பாடல் தூண்டுதலாக இருந்ததை அறியமுடிகிறது.

பாரதியாரின் ‘மறவன் பாட்டு’ வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் இருந்ததால் இக்கொலைக்குப் பாரதியார் தூண்டுதலாக இருந்தார் என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் புதுவையில் இருந்த பாரதியாருக்குப் பல தொல்லைகள் கொடுத்தனர். இச்சூழ்நிலையில் இவ்வுலகத்திலுள்ள அனைவரும் எதிர்த்து வந்தாலும் எனக்கு அச்சமில்லை என்ற கருத்தை வெளிப்படுத்த ‘அச்சமில்லை’(7) என்ற பாடலை எழுதினார். எந்நிலை வந்தாலும் தளராத மன உறுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை இப்பாடல் தெளிவாக உணர்த்துகிறது.

பாரதியார் புதுவையில் இருந்தபோது அவருடைய பத்திரிகையும், நூல்களும் தடை செய்யப்பட்டன. அவரையும் கைதுசெய்ய ஒற்றர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். தேசபக்தியை வளர்க்கத் தடை ஏற்பட்ட இந்நிலையில் மறைமுகமாக தேசபக்தியை வளர்க்க மகாபாரதக் கதையை பயன்படுத்த விரும்பினர். அக்கதையில் அடிமையிலிருந்து விடுபட பாஞ்சாலி செய்த சபதத்தைபோல் இந்தியநாடு விடுதலையடைய இந்தியர்கள் சபதம் செய்யவேண்டும் என்பதை உணர்த்த ‘பாஞ்சாலி சபதம்’(8) என்ற பாடலை எழுதினார் எனக் கருதலாம். தமிழ்ச் சாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே இந்நூல் தோன்றக் காரணம் என்று 1912-இல் வெளியான இந்நூலின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. ‘பாஷாபிமானிகரும், தேசாபிமானிகரும் அவசியம் படிக்கவேண்டிய நூல்’ என்று சுப்பிரமணிய சிவா இந்நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ளதைக் கொண்டும் தமிழ் மக்களுக்குப் புதிய முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே பாரதியார் இந்நூலை எழுதினார் என்பது தெளிவாகிறது.

துருக்கிநாட்டுச் சுதந்திர உணர்வு:

1912-ஆம் ஆண்டில் கெய்சரின் ஆக்கிரமிப்புச் செயல், பிரெஞ்சு அரசாங்கத்தைப் பலவீனமடையச் செய்தது. இந்நிலையில் பிரெஞ்சுக்காரர்கள் பிரிட்டிஷாரிடம் சமாதானம் செய்துகொண்டு நட்புறவு கொண்டனர். இந்நிலையில் புதுவையில் செயல்பட்ட பிரெஞ்சு அரசாங்கம், புதுவையில் தங்கியிருந்த தேசபக்தர்களை இந்தியாவிற்குள் விரட்டும் நிலையை உருவாக்கியது. தேசபக்தர்கள் அனைவரும் கலக்கமடைந்திருந்த இந்நேரத்தில் அவர்களுக்கு ஆறுதல் கூறுவதாக ‘ஐயமுண்டு பயமில்லை மனமே’ என்ற பாடல் மூலம் தேசபக்தர்களின் பய உணர்வைப் போக்க முயல்கிறார் பாரதியார்.

பால்கன் யுத்தத்தின் போதும், திரிபோலி சம்பந்தமான துருக்கி இத்தாலிப் போரின் போதும் இந்தியாவிலுள்ள மசூதிகளில் துருக்கியின் வெற்றியையும், அதன் கிருஷ்த்துவப் பகைவர்களின் வீழ்ச்சியையும் கோரி பிராத்தனைகள் செய்யப்பட்டன. இப்பிராத்தனைகளின் ஒலி தேசமெங்கும் கேட்டது. இந்நிலையில் பாரதியார், துருக்கி மாந்தர்களின் சுதந்திர உணர்வைப் பாராட்டுவதாகவும், பாரத நாட்டு மக்களின் முயற்சியின்மையை வெளிப்படுத்துவதாகவும் சுதந்திர தேவியை வாழ்த்துவதாகவும்,

  “துருக்கி மாந்தர் நல்ல பெரும்பதம் காணப்

  புரிந்திட்டாய்” 

என்ற பாடலைப் பாடினார். பிறநாட்டுச் சுதந்திர உணர்வை இந்தியர்களுக்குக் கவிதைகளால் உணர்த்தும் நிலை அக்காலத்தில் இருந்ததை பாரதியாரின் இக்கவிதை தெளிவாக்குகிறது. சுதந்திரம் பெறுவது அந்நாட்டு மக்கள் மேற்கொள்ளும் முயற்சியைப் பொறுத்தே அமைகிறது. அவ்வாறு முயல்பவருக்கு சுதந்திரம் கிடைக்கும் என்பதைத் துருக்கிநாட்டுச் சுதந்திர உணர்வு மூலம் வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.

வங்கப் பிரிவினையால் இந்தியாவில் ஏற்பட்ட மாறுதல்கள் தேசிய கவிதைகள் தோன்றுவதற்கான சூழ்நிலையை உண்டாக்கியதைப் பாரதியாரின் கவிதைகள் தெளிவாக உணர்த்துகின்றன. ஒவ்வொரு சூழ்நிலையும் ஒவ்வொரு கவிதை தோன்றக் காரணமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் பாரதியாரின் உள்ளத்தில் தோன்றிய உணர்வு கவிதையாக உருவெடுத்துள்ளது. இவ்வுணர்வு மக்களுக்கும் பரவவேண்டும் என்று பத்திரிகைகளிலும் இப்பாடல்கள் வெளியிடப்பட்டன. வங்கப் பிரிவினையால் தோன்றிய தேசியப் பாடல்கள் அக்கால மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டவில்லையென்றாலும் பிற்காலத்தல் விடுதலை உணர்வைத் தூண்டப் பயன்பட்டன என ஊகிக்க முடிகிறது.

அடுத்த வலைப்பதிவில் முதல் உலகப் போரினால் தேசியப் பாடல்கள் எவ்வாறு தோன்றின என்பது பற்றியும், தன்னாட்சி இயக்கத்தினால் தேசியப் பாடல்கள் எவ்வாறு தோன்றின என்பது பற்றியும், பஞ்சாப் படுகொலை ஏற்படுத்தியத் தாக்கத்தால் தேசியப் பாடல்கள் எவ்வாறு தோன்றின என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்



அடிக்குறிப்புகள்

1. பாரதியார் கவிதைகள், பக்.1478-179.

2. பாரதியார் கவிதைகள், ப.187.

3. சி.சுப்பிரமணிய பாரதியார், இந்தியா, 11.09.1909. 

“ஸ்ரீ மான் வி.ஒ. சிதம்பரம் பிள்ளையும் கோயமுத்தூர் ஜெயிலும்” 

“விந்தைத் திலகர் அரவிந்தரோடு பாலர் மதிசிந்தைச் சிதம்பரமாஞ் செம்மலுமே வந்திலதேல் ஆதாரமா மன்னைவள் நாடெங்கே - வந்தே மாதரமா மந்திரமெங்கே”.

4. பாரதியார் கவிதைகள், ப.213.

5. பாரதியார் கவிதைகள், பக்.652-653.

6. பாரதியார் கவிதைகள், பக்.504-505.

7. பாரதியார் கவிதைகள், ப.98.

8. பாரதியார் கவிதைகள், பக்.354-355.



Sponsorship

This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob

கருத்துரையிடுக

0 கருத்துகள்