இந்திய நாட்டுப்பற்று - பகுதி 33: நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - முதல் உலகப்போர், தன்னாட்சி இயக்கம் மற்றும் பஞ்சாப் படுகொலை

நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - முதல் உலகப்போர், தன்னாட்சி இயக்கம் மற்றும் பஞ்சாப் படுகொலை

தேசபக்தர்கள் சிறையில் துன்பப்படும்போது அவர்களுக்கு ஆறுதல் கூறுவதாக பாரதியின் கவிதைகள் இருந்தன என்பது பற்றியும், மனம் வருந்திய நிலையில் அவர்களுக்கு பாரதநாட்டின் பழைய வீரஉணர்வை வெளிப்படுத்திக்காட்ட மறவன் பாட்டு என்ற பாடலைப் பாடினார் என்பது பற்றியும், பிறநாட்டுச் சுதந்திர உணர்வை இந்தியர்களுக்குக் கவிதைகளால் உணர்த்தினார் பாரதியார் என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக முதல் உலகப் போரினால் தேசியப் பாடல்கள் எவ்வாறு தோன்றின என்பது பற்றியும், தன்னாட்சி இயக்கத்தினால் தேசியப் பாடல்கள் எவ்வாறு தோன்றின என்பது பற்றியும், பஞ்சாப் படுகொலை ஏற்படுத்தியத் தாக்கத்தால் தேசியப் பாடல்கள் எவ்வாறு தோன்றின என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • முதல் உலகப்போரும், தேசியப் பாடல்களின் தோற்றமும்
  • தன்னாட்சி இயக்கமும், தேசியப் பாடல்களின் தோற்றமும்
  • பஞ்சாப் படுகொலையும், தேசியப் பாடல்களின் தோற்றமும்

முதல் உலகப்போரும், தேசியப் பாடல்களின் தோற்றமும்:

அக்காலக் கவிஞர்கள் இந்தியாவின் விடுதலையுணர்வை மட்டும் வெளிப்படுத்துபவர்களாக இல்லாமல் உலகத்தில் நடந்த போர்களையும் விடுதலையுணர்வையும் கவிதைகளால் வெளிப்படுத்தும் மனப்பான்மை பெற்றிருந்தனர்.

1914-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட முதல் உலகப்போரின்போது ஜெர்மனி, பிரான்சைத் தாக்குவதற்காக பெல்ஜியத்தின் வழியாகப் படைகளை அனுப்பியது. பெல்ஜியம் தன்நாட்டு எல்லைக்குள் படைகள் வரக்கூடாது என்ற எதிர்த்துப் போரிட்டது. இங்கிலாந்து, பெல்ஜியத்திற்கு உதவிபுரிந்தும் பெல்ஜியப் படைகள் ஜெர்மானியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. இந்நிலையில் தோல்வி கண்ட பெல்ஜியநாட்டிற்கு ஆறுதல்கூற அந்நாட்டினுடைய வீர உணர்வையும் துணிவையும் வெளிப்படுத்துவதாக ‘பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து’(1) என்ற பாடலைப் பாடியுள்ளார் பாரதியார். தோல்வி கண்டவர்களை ஊக்கப்படுத்தி வெற்றிபெறச் செய்ய முயலவைப்பது பாரதியின் நோக்கமாக இருந்ததைக் காண முடிகிறது.

முதல் உலகப்போரின்போது ஆங்கிலேயரைத் தாக்கி இந்தியாவிலிருந்து அவர்களை விரட்டவேண்டும் என்ற நோக்குடன் ‘எம்டன்’ என்ற ஜெர்மானியக் கப்பலில் செண்பகராமன் படையுடன் வந்து சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைத் தாக்கினார். இந்நிகழ்ச்சியை ‘எம்டன் நுழைந்தது’ என்ற நூலாக வெளியிட்டார் சபாபதிப்பிள்ளை. பயங்கரவாதிகளை ஆதரித்துப் பழைய சிந்து வடிவில் கவிதை எழுதி மக்களிடையே பரப்ப முயன்றார் என்பது தெளிவாகிறது. பயங்கரவாதச் செயல்களே இந்தியாவை அடிமையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வு இக்கவிஞரிடத்தில் இருந்ததைத் தெளிவாக உணரமுடிகிறது.

முதல் உலகப்போரின் ஆரம்ப கட்டத்தில் போரில் ஆங்கிலேயருக்கு உதவக்கூடாது என்ற நிலை இந்தியாவில் உருவாகியிருந்தது. இச்சூழ்நிலையிலும் ஆங்கிலேயரை ஆதரித்துப் புகழ்பாடும் கவிஞர்கள் இருந்தனர். ஐரோப்பியச் சண்டையில் ஆங்கிலேயர்கள் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுவதாக ‘இராஜ விசுவாசச் சிந்து’ என்ற நூலை சுந்தரராஜர் செட்டி வெளியிட்டுள்ளார். அடிமைப்படுத்தும் ஆங்கிலேயர்களை ஆதரித்து அவர்களிடம் அடிமையாக வாழ்ந்துகொண்டு விடுதலை உணர்வைத் தடை செய்யும் கவிஞர்களும் அக்காலத்தில் இருந்ததைக் காணமுடிகிறது. கொடுமை செய்யும் ஆங்கிலேயர்களைப் பாதுகாத்துக் கடவுளை வேண்டும் நிலையும் கவிஞர்களிடம் நிலவியிருந்தது என்பது தெளிவாகிறது.

முதல் உலகப்போரின் நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்கள் அறியும் வண்ணம் அக்கால இலக்கிய நடையில் சிந்து, கும்மி போன்ற வடிவில் வெளிப்படுத்தும் கவிஞர்களும் இருந்தனர். இராபயேல் படையாட்சி ‘சண்டைச் சிந்து’ என்ற நூலாகவும், நடேசசாஸ்திரி ‘ஐரோப்பிய யுத்தக்கும்மி’ என்ற நூலாகவும் வெளிப்படுத்தியுள்ளதையும் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.

இந்தியா அடிமையிலிருந்து விடுபடுவது மட்டும் பாரதியின் நோக்கமன்று, அடிமைப்பட்ட அனைத்து நாடுகளும் விடுதலை பெறவேண்டும் என்று அவர் விரும்பினார். ரஷியாவும் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினார். ரஷியா மக்களின் தேசபக்தியையும் ஜார் மன்னனின் கொடுங்கோன்மையையும் ‘இந்தியா’ பத்திரிகை மூலமாக வெளிப்படுத்தி இந்தியர்களையும் தூண்ட முயல்கிறார். 1917-இல் நடந்த ரஷ்யப் புரட்சியால், ரஷியா ஜார்மன்னனின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுபட்டு பொதுவுடைமை ஆட்சியாக மாறியதை வரவேற்று பாரதியார் ‘புதிய ரஷ்யா’(2) என்ற பாடலை வெளிப்படுத்தியுள்ளார். ரஷியாவைப் போன்ற தீவிரப்புரட்சி இந்தியாவில் உருவாக வேண்டும் என்பது பாரதியின் கருத்தாக இருந்ததை இப்பாடல் உணர்த்துகிறது.

முதல் உலகப்போரின்போது ஆங்கிலேயர்களை வாழ்த்தி போரில் வெற்றி பெற கடவுளை வேண்டும் கவிஞர்களும், அதற்கு மாறாக ஆங்கில ஆட்சியை முதல் உலகப்போரின் போதே அகற்றவேண்டும் என்ற மனப்போக்குடைய கவிஞர்களும் இருந்ததை உணரமுடிகிறது.

தன்னாட்சி இயக்கமும் தேசியப் பாடல்களின் தோற்றமும்:

முதல் உலகப்போர் நடைபெற்ற சூழ்நிலையிலேயே இந்தியாவும் தன்னாட்சி பெறவேண்டும் என்று விரும்பியவர்கள் திலகர், அன்னிபெசண்ட் போன்ற தேசியவாதிகளாவர். அவர்களுக்கு ஆதரவு தரவும் அக்கால கவிஞர்கள் முன்வந்தனர். திலகரின் சுய ஆட்சி உணர்வை வெங்கட்ராமையர் ‘பாரதி கீதங்கள்’ என்ற நூலில் வெளிப்படுத்தியுள்ளார். திலகருக்கு முன்பே தன்னாட்சி உணர்வை ‘காமன்வெல்த்’, ‘நியூ இந்தியா’ போன்ற பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்தி மக்களிடையே உரிமை உணர்வை வளர்த்தார் அன்னிபெசண்ட். அன்னிபெசண்டின் சிறப்பையும், அவருடைய தேசபக்தியையும் வெங்கட்ராமையரின் கவிதைகள் தெளிவாக உணர்த்துகின்றன. காலந்தோறும் தலைவர்களை ஆதரிக்க புதிய கவிஞர்கள் மலர்ந்ததையும் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.

பஞ்சாப் படுகொலையும் தேசியப் பாடல்களின் தோற்றமும்:

இந்தியர்களின் சுதந்திர உணர்வை தடைசெய்ய கொண்டுவரப்பட்ட ரௌலட் சட்டங்கள் இந்தியாவில் ஒரு புதிய போர்முறையை உருவாக்கியது. இப்புதிய போர் முறை காந்தியடிகளின் தலைமையில செயல்பட்டது. இப்புதிய போர்முறையால் மக்கள் அடைந்த எழுச்சி ஆங்கிலேயருக்கு வெறுப்பைத் தந்தது. இந்நிலையில் ‘ஜாலியன் வாலாபாக்’ என்ற இடத்தில் ரௌலட் சட்டங்களை எதிர்த்து பொதுக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தைக் களைக்க ஜெனரல் டையர் என்பவர் எந்த முன்அறிவிப்பும் இன்றி திடீர் என்று துப்பாக்கியால் சுட்டார். அதனால் இந்தியர் பலர் மாண்டனர். இந்நிகழ்ச்சி இந்தியர்களிடையே சோக உணர்வை ஏற்படுத்தினாலும் விடுதலைப் போர் உச்ச நிலையை அடையத் தூண்டுதலாகவும் அமைந்தது. இந்நிகழ்ச்சியைக் கவிஞர்களும் கவிதைகளாக்கி மக்களிடையே வெளிப்படுத்த முயன்றனர். ‘பஞ்சாப் படுகொலை பாரிற் கொடியது’ என்ற பாஸ்கரதாஸின் பாடல் அக்காலத்தில் நாடக மேடைகளில் எஸ்.எஸ்.விசுவநாததாஸ் என்பவரால் பாடப்பட்டு மக்களைத் தூண்டும் நிலை உருவானது. பஞ்சாப்பில் நடந்த இக்கொலை நிகழ்ச்சிகளை இராஜகோபால் நாயக்கர் ‘புதிய காங்கிரஸ் பாட்டு என்றும் பஞ்சாப் படுகொலை’(3) என்ற நூலிலும், ரத்னம் ‘தேசிய கீதங்கள்’(4) என்ற நூலிலும், பீர்முகமது ‘காந்தி மாளிகை’(5) என்ற நூலிலும் வெளிப்படுத்தியுள்ளனர். அடிமைநிலையிலும் கொடுமைகளை வெளிப்படுத்திக்காட்டி மக்களைத் தூண்டும் நிலையும், ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையும், அக்கால கவிஞர்களிடத்தில் வலிமை வாய்ந்த சக்தியாகக் கவிதைகள் விளங்கியதைக் காண முடிகிறது.

அடுத்த வலைப்பதிவில்  ஒத்துழையாமை இயக்கமும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்



அடிக்குறிப்புகள்

1. பாரதியார் கவிதைகள், பக்.218-220.

2. பாரதியார் கவிதைகள், பக்.220-221.

3. பி.இராஜகோபால் நாயக்கர், புதிய காங்கிரஸ் பாட்டு என்ற பஞ்சாப் படுகொலை, ப.3.

4. எஸ். ரத்னம், தேசிய கீதங்கள், ப.24.

5. பீர்முகமது சாகிப், காந்தி மாளிகை, ப.9.


Sponsorship

This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work

Work Involves:

Content publishing

Content sharing on social media

Time Required: As little as 1 hour a day

Earnings: ₹300 or more daily

Requirements:

Active Facebook and Instagram account

Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob



கருத்துரையிடுக

0 கருத்துகள்