இந்திய நாட்டுப்பற்று - பகுதி 34: நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - ஒத்துழையாமை இயக்கமும் தேசியப் பாடல்களின் தோற்றமும்-1

நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - ஒத்துழையாமை இயக்கமும் தேசியப் பாடல்களின் தோற்றமும் - 1

ஆங்கில ஆட்சியை முதல் உலகப்போரின் போதே அகற்ற வேண்டும் எனவும், அச்சூழ்நிலையிலேயே இந்தியாவும் தன்னாட்சி பெறவேண்டும் எனவும், ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்தியர்களிடையே சோக உணர்வை ஏற்படுத்தினாலும் விடுதலைப் போர் உச்ச நிலையை அடையத் தூண்டுதலாகவும் அமைந்தது எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக ஒத்துழையாமை இயக்கமும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • மகாத்மா காந்தி பஞ்சகம்
  • பாரத மாதா நவரத்தினமாலை
  • புதிய வழி

மகாத்மா காந்தி பஞ்சகம்:

காந்தியடிகளின் தலைமைக்குப் பிறகு இந்திய விடுதலைப் போர் மக்களியக்கமாக மாறத்தொடங்கியது. ஒரு சில கவிஞர்களே இந்திய நாட்டுப்பற்றைக் கவிதைகளால் வெளிப்படுத்தும் நிலைமாறி காந்தியக் கொள்கைகள் வழி இந்திய நாடு விடுதலை பெறவேண்டும் என்ற உணர்வைக் கவிதைகளால் வெளிப்படுத்த பல கவிஞர்கள் முன் வந்தனர். இக்கவிஞர்களுக்குக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தார் பாரதியார் என்றும் உணரமுடிகிறது. பாரதியார், காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியாக்கிரகப் போருக்கு நிதி திரட்டி அனுப்பினார். பாரதியார் தீவிர போக்கில் இந்தியா விடுதலை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும் காந்திய கொள்கைகளைப் போற்றும் காந்தியவாதியாகவும் இருந்தார். காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு தேட சென்னை வந்தபோது பாரதியார் அவரை நேரில் சந்தித்து நான் இன்று மாலை நடத்தும் கூட்டத்திற்குத் தலைமை தாங்கவேண்டும் என வேண்டினார். காந்தியடிகள் அடுத்தநாள் வருவதாகச் சொல்லவே பாரதியார் அன்று மாலையே கூட்டத்தை நடத்தினார். அக்கூட்டத்தில் காந்தியடிகளைப் புகழ்ந்து பாடும் ‘மகாத்மா காந்தி பஞ்சகம்’(1) என்ற பாடலைப் பாடி அவருடைய ஒத்துழையாமை இயக்கத்தின் மேன்மையை மக்களிடம் வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் குறித்து யுனைடெட் ஸ்டேட்ஸ், மிஷிகன் மகாணம் தெத்ருவா நகரத்திலுள்ள ஸ்ரீமதி மாட் ரால்ஸ்டன் ஹர்மன் என்ற ஸ்திரி எழுதிய ஆங்கிலக் கவிதையை ‘இந்தியாவின் அழைப்பு’ என்ற தலைப்பில் பாரதியார் மொழிபெயர்த்தார். இப்பாடல் முன்னாளில் அறத்தை நிலைநிறுத்த இராமன், புத்தன், கண்ணன், முகம்மது நபி போன்ற மகான்கள் தோன்றியது போல இந்நாளில் அறத்தை நிலைநிறுத்தத் தோன்றியவரே காந்தி என்பதை உணர்த்துகிறது(2).

பாரத மாதா நவரத்தினமாலை:

காந்தியடிகளின் தலைமையும் ஒத்துழையாமை இயக்கமும் இந்தியாவின் அறத்தை நிலை நிறுத்தத் தோன்றிய புதிய போக்குகள் என்பதை உணர்த்துவதே பாரதியாரின் நோக்கமாக இருந்திருக்கிறது. பாரதத் தாயின் அருளால், அடிமை நீங்கி விடுதலைபெற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையை ஏற்றுள்ளார். இனிமேல் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று வெற்றி கூறுமின் வெண் சங்கதுமின்! என மக்களைக் காந்தியப் போருக்கு அழைப்பதாகப் “பாரத மாதா நவரத்தினமாலை”(3) என்ற பாடலைப் பாடியுள்ளார். இப்பாடல் காந்திய வழி வெற்றியைத் தேடித்தரும் என்பதைப் பாரதியார் முன்கூட்டியே உணர்ந்திருக்கிறார் என்பதனைத் தெளிவாக உணரவைக்கிறது.

காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போர் சத்தியம், ஈகை, அருள், பக்தி போன்ற கருவிகளைக் கொண்டே செயல்படுபவை. எனவே ஆயுதப் போரை நீக்கி அன்பு நெறியைக் கடைப்பிடிக்க மக்களுக்கு அழைப்பு விடுவதாகச் ‘சத்தியப் போர்’ என்ற பாடலை வெளிப்படுத்தியுள்ளார் பாரதியார். காந்தியே ஒத்துழையாமை இயக்கத்தின் தளகர்த்தர் என்பதை சதாசிவதாசும் வெளிப்படுத்தியுள்ளார். திலகரின் தீவிரவாதத்தைப் பின்பற்றி வந்த பாரதியார் காந்தியடிகளின் இயக்கத்தால் கவரப்பட்டு காந்தியவாதியாக மாறி கவிதைகளில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கமே சிறந்தது என மக்களுக்கு உணர்த்த முற்பட்டார்.

புதிய வழி:

காந்தியடிகளின் ஒத்துழையாமைப் போராட்டம் வளர்ச்சியடையத் தொடங்கிய நிலையில் காந்தியடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தீவிரவாதியான திலகர் 1920-ல் இயற்கை எய்தினார். இந்நிலை இந்தியர்களுக்கு பெறும் அதிர்ச்சியைத் தந்தது. திலகரின் தீவிரவாதத்தைப் பின்பற்றிய கவிஞர்கள் அவருடைய புகழையும், தேசத்தொண்டையும் கவிதைகளால் வெளிப்படுத்தி மக்களுக்கு ஆறுதல் கூறவும் விரும்பினார். வைத்திலிங்கச் செட்டியார் “லோக்மான்ய பி.ஜி. திலகர் தெய்வபக்தி சோகம்”(4) என்ற பாடலாகவும், சர்மா ‘திலகிய கீதம்’(5) என்ற பாடலாகவும், நாராயணசாமி நாயுடு ‘உலக மாயை பால கங்காதரத் திலகர் அவர்கள் இரங்கற்பாக்கள்’(6) என்ற பாடலாகவும், பாரதியார் ‘வாழ்க திலகன் நாமம்’(7) என்ற பாடலாகவும், நாமக்கல் கவிஞர் ‘திலகர்’(8) என்ற பாடலாகவும் வெளிப்படுத்தியுள்ளனர். திலகரின் மரணம் இந்தியர்களுக்கு பேரிழப்பைத் தந்தது என்பதை இக்கவிதைகள் வழி உணர முடிகிறது.

இந்தியாவின் விடுதலைக்குத் தீவிரவாதப்போக்கு சிறந்தது என்று கருதி வந்த பெரும்பான்மை மக்கள் காந்தியடிகளின் தலைமையால் மனம் மாறி தீவிரவாதச் செயல்களை நீக்கினர். காந்தியடிகளின் சத்தியாக்கிரக இயக்கம் ஒரு சிறந்த மார்க்கம் என்பதை உணர்ந்தனர். காந்திய பக்தியில் ஈடுபாடு கொண்ட கவிஞர்களும் அவருடைய கொள்கைகளைப் பரப்ப முயன்றனர். காந்தியடிகளின் சத்தியாக்கிரக இயக்கம் சிறந்த போராட்ட வழிமுறை என்பதை வெளிப்படுத்துவதாக ‘புதிய வழி’(9) என்ற பாடலை நாமக்கல் கவிஞர் பாடியுள்ளார். இப்புதிய வழியே சுயாட்சி மலர சிறந்த மருந்து என்பதை அறிவிப்பதாக ‘சத்தியாக்கிரக விண்ணப்பம்’(10) என்ற பாடலைத் திரு.வி.க.வும் வெளிப்படுத்தியுள்ளார். மக்களிடையே காந்திய நெறியைப் பரப்புவது அக்காலக் கவிஞர்களின் நோக்கமாக இருந்திருக்கின்றது.

அடுத்த வலைப்பதிவில் ஒத்துழையாமை இயக்கமும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றி மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


அடிக்குறிப்புகள்

1. பாரதியார் கவிதைகள், பக்.199-200.

2. பாரதியார் கவிதைகள், பக்.704-705.

3. பாரதியார் கவிதைகள், பக்.147-151.

4. வைத்தியலிங்க செட்டியார், லோகமான்ய திலகர் தெய்வ பக்தி சோகம், பக்.3-8.

5. ஈ.சா. சர்மா, திலகிய கீதம், பக்.1-6.

6. வி.கே. நாராயணசாமி நாயுடு, உலக மாயை பாலகங்காதர திலகர் அவர்கள் இரங்கற்பாக்கள், ப.2. 10.

7. பாரதியார் கவிதைகள், ப.209.

8. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.216-217.

9. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.148-149.

10. திரு.வி. கல்யாணசுந்தரம், உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல், பக்.37-38.


Sponsorship

This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work

Work Involves:

Content publishing

Content sharing on social media

Time Required: As little as 1 hour a day

Earnings: ₹300 or more daily

Requirements:

Active Facebook and Instagram account

Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob










கருத்துரையிடுக

0 கருத்துகள்