இந்திய நாட்டுப்பற்று - பகுதி 35: நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - ஒத்துழையாமை இயக்கமும் தேசியப் பாடல்களின் தோற்றமும்-2

நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - ஒத்துழையாமை இயக்கமும் தேசியப் பாடல்களின் தோற்றமும் - 2

காந்தியடிகளைப் புகழ்ந்து பாடும் மகாத்மா காந்தி பஞ்சகம் என்றப் பாடலையும், மக்களைக் காந்தியப் போருக்கு அழைப்பதாகப் பாரத மாதா நவரத்தினமாலை என்ற பாடலையும் பாடியுள்ளார் பாரதியார் என்பது பற்றியும், காந்தியடிகளின் சத்தியாக்கிரக இயக்கம் சிறந்த போராட்ட வழிமுறை என்பதை வெளிப்படுத்துவதாக புதிய வழி என்ற பாடலை நாமக்கல் கவிஞர் பாடியுள்ளார் என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக ஒத்துழையாமை இயக்கமும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • கள்ளுண்ணாமை
  • கதர் ஆடை உற்பத்தி
  • இந்து – முஸ்லீம் ஒற்றுமை
  • சிறைச்சாலைச் சிந்து

கள்ளுண்ணாமை:

காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் செயல்படத் தொடங்கிய நிலையில் இவ்வியக்கம் வளர்ச்சியடைய கவிஞர்களும் கவிதைகள் பாட முன்வந்தனர். இவ்வியக்கத்தின் ஒவ்வொரு தத்துவத்தையும் பாரதிதாசன் பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளார். அவற்றுள் ‘கதர் ராட்டினப் பாட்டு’(1) மட்டும் இன்று கிடைக்கிறது.

இந்திய நாட்டின் பொருளாதாரம் சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் மக்களை மயக்க உணர்வில் வைத்து விடுதலை உணர்வைத் தடைப்படுத்தும் மதுவை இந்நாட்டிலிருந்து அகற்றவேண்டும் என்ற நிலை உருவாகியபோது கவிஞர்களும் அதற்கு ஆதரவு தர முயன்றுள்ளதை அவர்களின் கவிதைகள் வழி காணமுடிகிறது. ஒத்துழையாமை இயக்கத்தின்போது மது விலக்கும் ஒரு போராட்டமாகச் செயல்படத் தொடங்கிய நிலையில் கள்ளுண்ண வேண்டாம் என்று மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகக் ‘கள்ளுண்ணாமை’ என்ற பாடலைக் கிருஷ்ணசாமி படையாச்சியும், பாமர மக்களுக்கு மதுவின் கொடுமையைக் கும்மிப் பாடல்கள் மூலம் அறிவிப்பதாக ‘மதுவிலக்கு கொம்மி’ என்ற பாடலைப் பெத்தண்ணச் செட்டியாரும், மதுவினால் வரும் கேடுகளை வெளிப்படுத்திக் காட்டி குடிப்பதைத் தடுக்கவேண்டும் என்பதை வெளிப்படுத்துவதாகக் ‘குடிப்பதைத் தடுப்போம்’(2) என்ற பாடலை நாமக்கல் கவிஞரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கதர் ஆடை உற்பத்தி: 

ஆங்கிலேயர்களின் வாணிகத்தை ஒடுக்கவும், இந்திய நாட்டின் பொருளாதாரச் சீரழிவைத் தடுக்கவும் எண்ணிய காந்தியடிகள் அன்னியப் பொருள்களை விலக்குதல் என்ற ஒரு தத்துவத்தை ஒத்துழையாமை இயக்கத்தின்போது செயல்படுத்தினார். அந்நிலையில் சுதேசியப் பொருள்களை உற்பத்தி செய்யவேண்டும் என்ற உணர்வை மக்களிடையே பரப்பினார். அன்னிய ஆடைகளை அகற்றி கதரை உடுத்தும்படி கட்டளை இட்டார். கதர் உற்பத்தியைப் பெருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கங்களில் ஈடுபட்ட கவிஞர்களில் சிலர் கவிதைகளால் கதரின் சிறப்பை வெளிப்படுத்தி மக்களைத் தூண்ட முயன்றனர்.

பாரதிதாசன் எழுதிய ‘கதர் ராட்டினப் பாட்டு’ என்ற நூலும், ரத்னம் என்பவர் எழுதிய ‘தேசிய கீதங்கள்’ என்ற நூலும், சிதம்பரம்பிள்ளை எழுதிய ‘பாரதநாடு கதர்ப்பாட்டு’(3) என்ற நூலும், நாராயணசாமிபிள்ளை எழுதிய ‘கதர்ப்பாட்டு’(4) என்ற நூலும், மைக்கேல் என்பவர் எழுதிய ‘காந்தி ஸ்தோத்திரமும் கதர்ப் பாடல்களும்’(5) என்ற நூலும், வேலுச்சாமிக் கனி எழுதிய ‘கதர்த் துணிப்பாட்டு’(6) என்ற நூலும், முகம்மது ராவுத்தர் எழுதிய ‘கதர் ஆனந்தக் களிப்பு’(7) என்ற நூலும், நாமக்கல் கவிஞர் எழுதிய ‘கதர் விற்பனை’(8) என்ற பாடலும் கதர் உற்பத்தியை பெருக்க மக்களுக்கு அறிவிப்பு விடுப்பதாக அமைந்துள்ளதைத் தெளிவாக உணரமுடிகிறது.

இந்து – முஸ்லீம் ஒற்றுமை:

மத வேறுபாடு ஆங்கிலேயர்களுக்குத் துணையாக இருக்கிறது என்பதை நன்குணர்ந்த காந்தியடிகள் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒன்றாக இணைக்க இந்து – முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார். இந்து–முஸ்லீம் ஒற்றுமையைக் கவிஞர்களும் கவிதைகளால் வெளிப்படுத்த முன்வந்தனர். முஸ்லீம் கவிஞர்களும் இந்து–முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளனர். அப்துல் காதர் ராவுத்தர் என்பவர் ‘இந்து-முஸ்லீம் ஒற்றுமைச் சிங்காரத் தங்கப்பாட்டு’(9) என்ற நூலின் மூலம் மதப்பிளவை நீக்கி ஒருமைப்பாட்டை வளர்க்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

சிறைச்சாலைச் சிந்து:

ஒத்துழையாமை இயக்கம் மக்களியக்கமாக மாறி வன்முறையை மேற்கொள்ளும் சூழ்நிலையில் ஆங்கிலேயரின் கவனம் காந்தியடிகளைக் கைது செய்யவேண்டும் என்ற நிலையை உருவாக்கியது. அதனால் 1922-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி காந்தியடிகளை கைது செய்தனர். இந்நிகழ்ச்சியைக் காந்தியக் கவிஞர்கள் மக்களுக்கு வெளிப்படுத்திக்காட்ட முன்வந்ததை அவர்களின் நூல்கள் தெளிவாக உணர்த்துகின்றன. காந்தியடிகள் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியை சிந்து வடிவில் ‘மகாத்மா காந்தி அரஸ்ட் சிந்து’(10) என்ற நூலாக மாணிக்க நாயக்கரும், கும்மி வடிவில் ‘மகாத்மா காந்தி’(11) என்ற நூலாக பொன்னாண்டிப் பிள்ளையும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது தொடரப்பட்ட வழக்கினையும், அவர் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தையும், அவருக்குக் கொடுக்கப்பட்ட சிறைத் தண்டனையையும் ‘மகாத்மா காந்தி கும்மியும் தெம்மாங்கும்’(12) என்ற நூலாகவும், ‘சிறைச்சாலைச் சிந்து’(13) என்ற நூலாகவும் வெளியிட்டள்ளார் பொன்னுசாமிப் பிள்ளை. சிறையில் காந்தியடிகள் குடல்நோயால் பாதிக்கப்பட்டதால் சிறைத் தண்டனை இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, 1924-இல் விடுதலையானார். இந்நிகழ்ச்சியை ‘மகாத்மா காந்தி விடுதலை’(14) என்ற நூலாக முகமது அலிப் பாவலர் வெளிப்படுத்தியுள்ளார். 

காந்தியக் கொள்கைகளில் ஈடுபட்ட கவிஞர்கள் அவ்வப்போது அவரால் நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவுகளையும் அவ்வியக்கத்தால் அவருக்கு ஏற்பட்ட நிலையையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வு மேலோங்கிய நிலையில் அந்நூல்களைப் படைத்துள்ளனர் எனக் கருதலாம். அக்காலத்தில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் கவிதை நூல்களை வெளியிடுவது எளிதான செயல் அல்ல. ஆங்கிலேயரின் தண்டனைக்கு ஆளாக வேண்டிய நிலையிலும் காந்தியின்மீது கொண்ட பக்தியுணர்வால் இந்நூல்களை வெளியிட்டுள்ளனர். முஸ்லீம் கவிஞர்களும் காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் தன்மையைப் பெற்றிருந்தனர்.

அடுத்த வலைப்பதிவில் காந்தியடிகளின் நிர்மானத் திட்டங்களும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றியும், சைமன் கமிசனும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


அடிக்குறிப்புகள்

1. பாரதிதாசன், கதர் ராட்டினப் பாட்டு, காசி இ.லட்சுமண பிரசாத், (ப.ஆ.), முகவுரை.

2. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.176-177.

3. வி.சி.என். சிதம்பரம்பிள்ளை, பாரத நாடு கதர்ப்பாட்டு, பக்.2-5.

4. நாராயணசாமிப்பிள்ளை, கதர்ப்பாட்டு, பக்.3-6.

5. என்.எம். மைக்கேல், காந்தி ஸ்தோத்திரமும் கதர்ப்பாடல்களும், பக்.1-5.

6. என்.எல். வேலுசாமிக்கவி, கதர்த்துணிப் பாட்டு. பக்.1-5.

7. என். முகமது ராவுத்தர், கதர் ஆனந்தக்களிப்பு, பக்.3-8.

8. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.386.

9. முனகதீன் அப்துல் காதர் ராவுத்தர், இந்து-முஸ்லீம் ஒற்றுமை சிங்காரத் தங்கப்பாட்டு, பக்.1-4.

10. சி.மாணிக்க நாயக்கர், மகாத்மாகாந்தி, அரஸ்ட் சிந்து, பக்.2-5.

11. பி.கே. பொன்னான்டிப்பிள்ளை, மகாத்மாகாந்தி, பக்.2-4.

12. என்.பொன்னுசாமிப்பிள்ளை, மகாத்மாகாந்தி கும்மியும் தெம்மாங்கும், ப.1-10.

13. என்.பொன்னுசாமிப்பிள்ளை, சிறைச்சாலை சிந்து, பக்.1-2.

14. முகமது அலிப்பாவலர், மகாத்மா காந்தி விடுதலை, பக்.1-5.



Sponsorship

This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work

Work Involves:

Content publishing

Content sharing on social media

Time Required: As little as 1 hour a day

Earnings: ₹300 or more daily

Requirements:

Active Facebook and Instagram account

Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob




கருத்துரையிடுக

0 கருத்துகள்